விஷ்ணுபுரத்தின் வாசலில்

விஷ்ணுபுரத்தின் வாசலில் ஒரு வாசகனாக – ஸ்ரீபாதம்

எழுதியவர் : ஜெகதீஸ்வரன்

ஜெகதீஸ்வரன் தளம்

பொம்மைகள் விற்கப்படும் மிகப் பெரிய கடையில் ஒரு குழந்தையை மட்டும் முழு சுகந்திரத்தோடு விட்டால் என்ன ஆகும். அந்தக் குழந்தை கடை முழுவதும் ஓடும், கண்ணிகளில் படும் பொம்மைகளையெல்லாம் வாரி அனைத்து விளையாடும், சிலவற்றை தேர்ந்தெடுத்து தன்னுடன் வைத்திருக்கும், சிலவற்றை மதிக்காமல் செல்லும், கைக்கெட்டாத பொம்மைகளை நினைத்து ஏங்கும்,.. விஷ்ணுபுரத்தினை பெரும் பொம்மைக் கடையாக நினைத்துக் கொண்டால், அந்த குழந்தைதான் ஜெயமோகன். ஆம் விஷ்ணுபுரம் என்ற கற்பனை நகரில் ஜெயமோகன் ஓடிக்கொண்டே இருக்கிறார். கண்களில் படுபவனப் பற்றியெல்லாம் விவரிக்கிறார். சில கதைமாந்தர்களை புறக்கணிக்கிறார், சிலரை தொடர முடியாமல் தவிக்கிறார். விஷ்ணுவின் பாதத்தின் அழகிலிருந்து இருந்து தொடங்கி, தேவதாசி யோனியின் வலி வரை எல்லாவற்றையும் தன் எழுத்துகளில் வடித்திருக்கிறார்.  ஐம்பது அத்தியாங்களை ஸ்ரீபாதம் எனும் முதல் பகுதியில் படிக்கும் வரை இப்படிதான் தோன்றியது. அடுத்த சில அத்தியாங்கள் இது வரை நினைத்தவற்றை எல்லாம் நொறுக்கி எறிந்தன. நாவலின் மிகவும் அழகிய கட்டுமானம் விளங்கியது. அதுவரை தனித்தனியாக இருந்த கதாபாத்திரங்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்பு பெற்று அட்டகாசம் என்று சொல்ல வைக்கும். ஸ்ரீபாதத்தின் கடைசி வரிகளை படித்து முடித்தபின் புத்தகத்தினை மூடிவைத்துவிட்டு சிந்தனைக்குள் ஆழ்ந்தேன்.

விஷ்ணுபுரம்

விஷ்ணுபுரம்

அப்பப்பா,.. விஷ்ணுபுரத்தில்தான் எத்தனை செய்திகள், எத்தனை சாஸ்திரங்கள், எத்தனை கதாபாத்திரங்கள், எத்தனை நிகழ்வுகள்,… தொடக்கம் முதல் இறுதிவரை நடப்பவைகள் எல்லாம் கட்டுக்குழையாமல் இருக்கின்றன. சிறிது பிசங்கியிருந்தாலும் எழுத்தாளனை கேலி செய்ய வைத்துவிட்டு வாசகன் சென்றிருப்பான். ஆனால் இங்கு நாவல் வாசகனான என்னை பல இடங்களில் எள்ளி நகையாடியது.  பழங்கால இசைக் கருவிகளைப் பற்றி நாவல் சொல்லும் போது அவைகள் எப்படியிருக்கும், எந்த இசையை வெளிவிடும் என்பதெல்லாம் தெரியவில்லை, நகைகள் பற்றி கூறும்போதும், குதிரை, யானை சாஸ்திரங்களைப் பற்றி கூறும் போதும் கற்பனை வறட்சி ஏற்பட்டது. “தம்பி நீ சென்று இதையெல்லாம் பற்றி ஓரளவேனும் தெரிந்து கொண்டு வா”, பிறகு என்னைப் படிக்கும் போது சிறந்த அனுபவம் ஏற்படும் என்று சொல்லவது போல இருந்தது. ஒரே ஒரு ஆறுதல் நாவல் இந்து மதத்தினை தழுவி செல்வதுதான், அதனால் நாவல் கருடன், இந்திரன், ஸ்ரீசக்கரம் பற்றியெல்லாம் குறிப்படும் போது வர்ணனைகள் தேவைப்படாமலேயே அவைகளின் அமைப்பினை உணரமுடிந்தது. பௌத்தம் பற்றிய குறிப்புகள் வரும் போது மறுபடியும் பழைய நிலையே. இனி விஷ்ணுபுரம் ஸ்ரீபாதத்திற்கு உங்களையும் அழைத்துச் செல்கிறேன்.

வானளவு பெரிய கோபுரங்களும், அதில் புதைந்திருக்கும் தேவர்களும் யட்சிகளும், செந்நிற சோனா நதியும், முகம், உடல், பாதம் என மூன்று பாகமாய் காட்சிதரும் மூலவரும், காற்றில் ஒலியெழுப்பும் காடா மணிகளும் நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத அளவு பெரியது இந்த விஷ்ணுபுரம், என்ற எண்ணத்தை மனதில் நிறுத்திவிட்ட பின்பே விஷ்ணுபுரத்திற்குள் பிரவேசிக்கின்றோம். தொடக்கத்தில் விரிந்திடும் விஷ்ணுபுரத்தின் உருவகங்கள் எல்லாம் ஓரிடத்திற்கு மேல் பிரம்மாண்டத்தின் உச்சத்தினை கூற முடியாமல் எச்சமாக தொக்கி நிற்கின்றன. எல்லா பிரம்மாண்டமும் நமக்கு ஒருவித பயத்தினை தரும், அதை விஷ்ணுபுரமும் கொடுக்க தவறவில்லை. பிரம்மாண்டத்தின் கூறுகளை சிறு சிறு இடுகைகளாக பகிர எனக்கு விருப்பம். விஷ்ணுபுரத்தின் கட்டமைப்பை கதாபாத்தரங்களாக பிரித்து கூறுகிறேன். இது விஷ்ணுபுரத்தினை பிரித்து தனி தனி கதைகளாக்க இயலும் என்ற எண்ணமே காரணம். மாபெரும் இதிகாசமான மஹாபாரதம் போல எண்ணற்ற குறுங் கதைகளுக்கு விஷ்ணுபுரம் தளம் அமைத்து தருகிறது. நலன் தமயந்தி போல ஒரு காவியம் எழுத கூட பின்னால் வரும் எழுத்தாளர்களுக்கு விஷ்ணுபுரம் வாய்ப்பு தருகிறது. ஒரே சீர் நடையில் விஷ்ணுபுரத்தை விவரித்தால் நிறைய விசங்களை நான் தவற விடக்கூடும் எனவே பொறுத்தருள்க.

வீரன் –
விஷ்ணுபுரத்தின் வீதிகளில் தெருநாய்களைப் போல யானைகள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. அதிலும் வீரன் என்ற யானை மிக எளிதாக மனிதில் பதிந்துவிடுகிறது. குறும்பு செய்யும் குட்டிநாயின் மீதும், குழந்தை மீதும் ஊற்றெடுக்கும் அன்பு அதன் மீது படுகிறது. நாம் வாஞ்சையும் அதனை தடவ நினைக்கையில், நவீன திரைப் படங்களின் முன்பாதியில் காதல் மிக அழுத்தமாக இருந்தால், காதலனோ, காதலியோ இறந்துவிடுவார்களே அது போல வீரனுக்கும் மரணம் நிகழ்கிறது. தேர்சக்கரத்தில் வீரனின் தும்பிக்கை அடிபட, வலி பொறுக்க இயலாமல் வீதியில் அது ஓட, கலவரத்தினை அடக்க வீரன் வீரபைரவன் என்ற யானையால் கொல்லப்படுகிறது. ரத்த சகதியில் அது மிதக்கின்ற தருனத்தில் நெஞ்சம் கனத்து புத்தகம் கையிலிருந்து விலகியது. எதற்காக வீரன் இங்கே கொல்லப்பட வேண்டும், ஜெயமோகன் நினைத்திருந்தால் அதை தவிர்த்திருக்கலாமே என்று தொன்றியது. அதன் பின் வீரனை கொன்ற வீரபைரவனுக்கு கொடுக்கப்படுகின்ற பாராட்டுதல்கள் வேதனையை மேலும் அதிகப்படுத்தியது. வீரனின் கால்களில் மிதிபட்டு இறந்த இருபது பேரைப் பற்றி சிந்திக்கவோ, பரிதாபம் கொள்ளவோ ஏன் மனம் தயாராக இல்லை. இதைத்தான் எழுத்தாளனாக அவர் எதிர்ப்பார்த்திருக்க வேண்டும். வீரனை வளர்த்து வைரவன் எனும் பாகன் அழுது புலம்புகையில் அவனோடு நாமும் சேர்கிறோம். ஸ்ரீபாதத்தில் வீரனின் மரணம் தவிர்க்க முடியாத விபத்தாகிறது. அதன் பின்வரும் அத்தியாயங்களில் வீரனின் மரணம் நிகழ்வதால் ஏற்படும் விளைவுகளை காண்கிறோம்.

சங்கர்ஷணன் –

அனிருத்தன், சுதா என்ற இரண்டு குழந்தைகளுடன் சங்கர்ஷணன், லட்சுமி தம்பதிகள் விஷ்ணுபுரத்திற்கு வருகின்றார்கள். சங்கர்ஷணன் ஒரு படைப்பாளி. லட்சுமி குடும்பப் பெண். அனிருத்தன் குறும்புக்காரச் சிறுவன். சுதா?.  காவியத்தை அரங்கேற்ற சங்கர்ஷணன் விழையும் போது சபையில் அவமானப்பட்டு திரும்புகிறான். தன்னுடைய ஆணவம் தன் முன்னாலேயே நிர்வாணமாக்கப்பட்டது கண்டு துயர்கொள்கிறான். பணம் வேண்டும் என்பதற்காக தாசிகளைப் புகழ்ந்து கவிதை எழுதவும் முடிவெடுத்து பத்மாட்சி என்பவளிடம் செல்கிறான். அவளிடம் இருந்து கொண்டே காவியத்தை மீண்டும் எழுத தொடங்குகிறான். இதற்கிடையே அனிருத்தன் கோபுரமொன்று சரிந்து விழுகின்ற விபத்தில் இறந்துவிடுகிறான். அதன் பின் சங்கர்ஷணன் லட்மியிடம் செல்லாமல், பத்மாட்சியுடனேயே தங்கிவிடுகிறான். லட்சுமியும் சுதாவும் தெருக்களில் பஜனை செய்யும் கோஸ்டியுடன் இணைந்துவிடுகின்றார்கள். காவியம் முழுமை பெற்றதும், சபையில் பத்மாட்சியை அருகில் வைத்துக் கொண்டு காவியத்தை இயற்றுகிறான். அதன் பின் அவனுக்கு ஒன்றுமேயில்லை என தோன்ற பத்மாட்சியிடமிருந்து வலகி மீண்டும் லட்சுமியுடன் சேர்கிறான். இருவரும் விஷ்ணுபுரம் இனி வேண்டாம் என முடிவெடுத்து, தூங்கிக் கொண்டிருக்கும் சுதாவுடன் விஷ்ணுபுரத்தை விட்டு வெளியேறுகிறார்கள்.

வீரன், சங்கர்ஷணனோடு இந்த இடுகையை முடித்துக் கொள்கிறேன். அடுத்த இடுகையில் மற்றவர்களைப் பற்றி பார்ப்போம்.

நன்றி.

பின்னூட்டம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s