கீதையை எப்படிப் படிப்பது? ஏன்? – 1

கீதையை எப்படிப் படிப்பது? ஏன்? – 1

ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது

[கோதையில்…]

அன்புள்ள ஜெயமோகன்,

 பகவத் கீதையைப்பற்றி இப்போது நடந்துவரும் விவாதங்களை கவனித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இந்துமதத்தின் பிரதான நூலான பகவத் கீதை ஒரு சாதிவெறிபரப்பும் நூலா ? சுயநலத்துக்காக கொலை செய்வதை அது வலியுறுத்துகிறதா ? என்னைப்போன்றவர்களுக்கு இந்தவகையான சர்ச்சைகள் மிக்க குழப்பத்தை அளிக்கின்றன. கீதையைப்பற்றி இப்போது தமிழில் மிகவும் எதிர்மறையான பார்வையை அளிக்கும் நூல்கள் பல வந்துள்ளன. அவற்றைப்படித்துவிட்டுச் சிலர் ஏளனமும் கண்டனமும் செய்கிறார்கள். பகவத் கீதை உரைகளில் அதற்கான பதில் உண்டா ? அவற்றில் எது சிறப்பானது ? எப்படி அவற்றைப் படிப்பது ? வழிமுறைகள் என்னென்ன ? உங்கள் பதில் எனக்கு தனிப்பட்டமுறையில் உதவியாக இருக்கும் என்று படுகிறது. ‘இந்துஞானமரபில் ஆறுதரிசனங்கள் ‘ தெளிவான மொழியில் திட்டவட்டமான பார்வையை அளிப்பதாக இருந்தது, அதேபோல விளக்கமாக எதிர்பார்க்கிறேன்.

எஸ். விவேகானந்தன்

சென்னை

அன்புள்ள நண்பர் விவேகானந்தன் அவர்களுக்கு,

உங்களை தனிப்பட்டமுறையில் எனக்கு தெரியாதென்றாலும் வாசகனாக நீங்கள் என் மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு நன்றி. இந்த நம்பிக்கையானது என் படைப்புமொழிக்கு கிடைக்கும் அங்கீகாரம் மட்டுமே என்று எடுத்துக் கொள்கிறேன். இவ்விஷயத்தில் என் கருத்துக்கள் பெரும்பாலும் நான் முன்னோடிகளாகவும் வழிகாட்டிகளாகவும் கொண்ட மனிதர்களின் சிந்தனைகளின் கண்டடைதல்களின் நீட்சிகள் அல்லது வளர்ச்சிகளே. நான் கற்றவற்றை என் மொழியில் தொகுத்துக் கொள்கிறேன். என் மொழியை மிகுந்த உத்வேகத்துடன் பழகியிருப்பதனால் என்னால் நான் எண்ணுவதை வார்த்தை வரிசையால் பின்தொடர இயல்கிறது. என் எண்ணங்களில் நான் என் தேடலுக்கு அந்தரங்கமாக விசுவாசமாக இருக்கிறேன். என் ஆழத்தை திருப்திசெய்யாத ஒரு விடையை அக்கணமே தூக்கிவீசவும், அதில் ஏற்படும் அனைத்து இழப்புகளுக்கும் தயாராக இருக்கவும் முயல்கிறேன். இந்தப் பின்னணியில் என் சிந்தனைகள் முக்கியத்துவமுள்ளன என்பதே என் எண்ணமாகும்.

தங்கள் வினாவைப்போன்ற இருபத்திமூன்று கடிதங்கள் எனக்கு வந்துள்ளன. இது ஒட்டுமொத்தமான பதில். ஆகையினால் இப்பதில் சற்று நீளமாக, தாங்கள் கேட்காத சிலவற்றையும் அடக்கியவையாக இருப்பதைப் பெரிதாக எண்ணமாட்டார்கள் என்று என்ணுகிறேன். முதலில் இப்போது வந்துள்ள இவ்வார்வம் நம் செய்திஊடகங்களுக்கும் நாம் அளிக்கும் மிதமிஞ்சிய முக்கியத்துவத்தையே காட்டுகிறது. இத்தனை முக்கியத்துவம் அளிக்கப்படும் அளவுக்கு அவை தரமானவையா, நல்ல நோக்கங்கள் கொண்டவையா, பொறுப்பானவையா என்பது நாம் சிந்திக்கவேண்டிய விஷயமாகும். நமது அடிப்படையான வினாக்களைக்கூட, அதற்கான தேடல்களைக்கூட நாம் அன்றாடச் செய்திஊடகப் பரபரப்புகளை ஒட்டி வந்தடைவது சரியானதாகுமா ?

சரி, இவ்விஷயங்களைப்பற்றி பேசுவதற்கு இது ஒரு முகாந்திரம் என்றே கொள்வோம்.

நான் என் கீதையை நியாயப்படுத்த முயலவேண்டும்?

அவசியமே இல்லை. ஒரு சிந்திக்கும் தனிமனிதனாக நான் தூக்கிச்சுமக்கவேண்டிய நூல் என்று ஏதும் இல்லை. நான் நியாயப்படுத்தியாகவேண்டிய எந்தநூலும், எந்த தத்துவமும் இல்லை. இந்தச் சுதந்திரத்தையே சிந்திக்கும் ஒருவன் அடிப்படையான விதியாக தனக்கு விதித்துக் கொள்ளவேண்டும். உலகிலுள்ள எந்த நூலைச்சார்ந்தும் என் இருப்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கவில்லை. எதன் மீதும் நான் விட இயலாத பிடிப்பு கொண்டிருக்கவில்லை. அந்தரங்கமாகச் சொல்லப்போனால் என் சொந்த படைப்புகள், இன்னும் குறிப்பாக ‘விஷ்ணுபுரம் “பின்தொடரும்நிழலின் குரல் ‘ என்ற இருநாவல்கள் ஆகியவற்றைச் சார்ந்தே எனக்கு அப்படி ஒரு பிடிப்பு உள்ளது. அது அசட்டுத்தனமானது என நான் அறிவேன். ஆனால் மனம் அதை ஏற்க மறுக்கிறது. இன்னும் சற்று வயதாகும்போது அப்பிடிப்பும் என்னிடமிருந்து போய் நான் மேலும் சுதந்திரம் அடையலாம்– ஜெயகாந்தனைப்போல. அது ஒரு நம்பிக்கை.

அதைப்போல ஓர் இந்துவாக நான் நியாயப்படுத்தியாகவேண்டிய நூல் அல்லது தத்துவம் அல்லது ஆளுமை என எதுவும் இல்லை. ஓர் இந்துவாக நான் இருப்பதற்குக் காரணம் இந்த சுதந்திரமே. வேதங்களோ, உபநிடதங்களோ, கீதையோ, மகாபாரதமோ, சைவத்திருமுறைகளோ, ஆழ்வார் பாடல்களோ எவையுமே ஓர் இந்துவுக்குக் கடைசிச் சொற்கள் அல்ல. இவையெல்லாம் முற்றாக அழிந்தாலும், நித்ய சைதன்ய யதி வரையிலான ஆசிரியர்களின் அனைத்துச் சொற்களும் முற்றாக அழிந்தாலும் இந்துஞானமரபு அழிவடையாது.

இந்துஞானமரபு என்பது இரு அம்சங்களினால் ஆனது. ஒன்று : அது தனிமனிதனும் சமூகமும் தனித்தனியாகவும் கூட்டாகவும் தன் ஆன்மீகமான தேடலை நிகழ்த்துவதற்கான ஏராளமான சாத்தியங்களை உருவாக்கி திறந்து வைக்கிறது. இரண்டு : ஆன்மீகத்தேடலை நிகழ்த்துவதற்கு அவசியமான உருவகங்களை,படிமங்களை ஏராளமாக நம் முன் திறந்து வைக்கிறது. அவ்வம்சங்களே இம்மரபின் அடிப்படைகளை ஆக்குகின்றன. ஏராளமான நூல்களோ, தத்துவத்தரப்புகளோ, மாறுபட்ட வழிபாட்டுமுறைகளோ அல்ல.

இன்றுவரை இந்துஞானமரபு உருவாக்கிய அனைத்தையும் முழுமையாக நிராகரித்து நான் எனக்கென ஒரு தனிமதத்தை உருவாக்கிக் கொள்ள முடியும், அதன் மூலம் என் நிறைவையும் விடுதலையையும் அடைய இயலுமென்பதே இக்கணம்வரையிலான இம்மரபின் வரலாறு காட்டும் உண்மையாகும். அதற்கான சாத்தியங்களினாலான ஒரு பெரும் வெளியையே நாம் இந்துஞான மரபு என்கிறோம்.

இந்துஞானமரபை ஒரு மதமாக எண்ணுவது முதல் பிழை. அதை மதங்களும் தத்துவங்களும் அடங்கிய ஒரு தொகையாகவே காணவேண்டும். அப்படித்தான் அது எக்காலத்திலும் காணப்பட்டும் வந்தது. அம்மரபு ஒரு மதமாக அடையாளம்காணப்பட்டதும் சட்டபூர்வமாக வகுக்கப்பட்டதுமெல்லாம் மிகவும் பிற்காலத்தைச் சேர்ந்தவை. ஆகவே பகவத்கீதையை ஒட்டுமொத்த இந்துஞானமரபின் மூலநூலாகக் கருதுவதும் சரி, அதை பிற மதமூலநூல்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதும் சரி, முற்றிலும் தவறானது.

அப்படியானால் கீதை ஒரு சாதாரண நூலா ? அல்ல. அது தத்துவ நூல்களில் அடிப்படையானது. அதாவது ஆதாரநூல். அதிலிருந்து சிந்தனைகளை வளர்த்தெடுக்க இயலும். சிந்தனைகளுக்கு அது மூலமும் ஆகும். ஆனால் அது சொல்வதனால் மட்டுமே ஒன்று உண்மை ஆகிவிடாது.

இந்துஞானமரபில் பகவத் கீதையின் இடம் என்ன?

இந்து என்ற சொல் மிகப்பிற்காலத்தையது என்பதை நாம் அறிவோம். முன்பு சனாதன தர்மம் [தொன்மைக்கால வழி] என்றும் பிற சொற்களாலும் இது வழங்கப்பட்டது. பண்டைய நூல்களை அடிப்படையாகக் கொண்டும், இன்றும் வழங்கும் சைவ வைணவ குருகுல அமைப்புகளை அடிப்படையாகக் கொண்டும் இதன் கூறுகள் கீழ்க்கண்டவாறு வரையறைசெய்யப்பட்ட்டிருப்பதைக் காணலாம். சுருதிகள் அல்லது வேதங்கள் பொதுவாகச் சொல்லப்படும் அடிப்படைகள். அதற்கு மேல் 1] ஷன்மதம் 2] ஷட் தர்சனம் 3] பிரஸ்தானத்ரயம். அதாவது ஆறுமதங்கள், ஆறு தரிசனங்கள், மூன்று தத்துவஇயக்கங்கள் ஆகியவை. [பிரஸ்தானம் என்றால் இயக்கம், அமைப்பு, பயணம் ஆகிய பொருட்கள் உண்டு]

சைவம், வைணவம், சாக்தம், கெளமாரம், செளரம், காணபத்யம் ஆகியவையே ஆறுமதங்கள். சாங்கியம் யோகம் நியாயம் வைசேஷிகம் பூர்வ மீமாம்சை உத்தர மீமாம்சை ஆகியவை ஆறு தரிசனங்கள். உபநிஷதங்கள், பிரம்ம சூத்ரம், கீதை ஆகியவை அடங்கியது மூன்று தத்துவங்கள்.

இன்றும் எந்த ஒரு மரபான குருகுலத் தத்துவக் கல்வியிலும் இவற்றை கற்றுத்தேறியபிறகே கல்வி முழுமையாக ஆனதாகக் கருதப்படுகிறது. அதன் பிறகு கற்றவற்றை ஏற்கவும் மறுக்கவும் செய்யலாம். ஒரு சைவ மடம் கீதையை முழுக்க நிராகரிக்கவே கற்பிக்கும் என்பது ஆச்சரியமல்ல. எனக்கு கீதையை முதலில் அறிமுகம் செய்த என் பெரியப்பா கடுமையான நாத்திகர். [ஜடவாதி].

இந்துஞானமரபின் மூலநூல் உண்டா?

மூலநூல் [Canon] என்ற கருதுகோள் செமிட்டிக் மதங்களில் மிக முக்கியமான ஒன்று. மூலநூல் ஒரு மதத்தை தெளிவாக வரையறை செய்கிறது. அதையும் அம்மதத்தையும் பிரிக்க இயலாது. அம்மதத்தில் உள்ளவர்களுக்குமுன் திட்டவட்டமாக இது சரி இது தவறு, இது உண்மை இது பொய் என்று வகுத்து அவற்றை மாற்றமில்லா விதிகளாக முன்வைக்கிறது அது. பல மதங்களுக்கு அது இறைவைனின் வார்த்தை. அல்லது இறைவனிடமிருந்து அம்மத நிறுவனர் நேரடியாகப் பெற்றுக்கொண்டது. ஆகவே அதை மாற்றவோ மறுபரிசீலனை செய்யவோ ஆராய்ந்து பார்க்கவோ அம்மதத்தை ஏற்பவர்களுக்கு உரிமை இல்லை. அவர்கள் அதை முழுமையாக நம்பி ஏற்கவேண்டும். கிறித்தவர்களுக்கு பைபிளும் இஸ்லாமியர்களுக்கு குர்- ஆனும் மூலநூல்கள்.

மூலநூல் இருவகைப்படுகிறது. ஒரு நிறுவனரால் உருவாக்கப்பட்ட மதங்களுக்கு அந்நிறுவனரின் சொற்கள் மூலநூலாகின்றன. யூதமதம் போன்ற காலப்போக்கில் திரண்டுவந்த மதங்களுக்கு மரபிலிருந்து திரண்டுவந்த காபாலா போன்ற தொகைநூல்கள் மூலநூலாகின்றன.

இந்துஞானமரபில் மூலநூல்வாதத்தை முன்வைக்கக் கூடிய தரப்பு ஒன்றே. அதை பூர்வமீமாம்சை என்று ஆறுதரிசனங்களில் ஒன்றாக வரையறை செய்திருக்கிறார்கள். அவர்கள் வேதங்களை மட்டுமே மூலநூலாகக் கொள்கிறார்கள். வேள்விச்சடங்குகளை முதன்மைப்படுத்துவது இம்மரபு. இந்துஞானமரபில் தத்துவார்த்தமாக இதற்கு முக்கியத்துவம் ஏதும் இல்லை என்பதை வாசிக்க ஆரம்பித்ததுமே அறியலாம். இந்திய நிலப்பரப்பில் காலப்போக்கில் பெரும் செல்வாக்குபெற்று ஒரு சக்தியாக எழுந்த புரோகிதவர்க்கத்தின் மதம் இது.

பூர்வமீமாம்சை இந்திய நிலப்பரப்பெங்கும் பரவி, இந்துமெய்ஞானமரபின் பல தளங்களுக்குள் ஊடுருவியது. அதற்கு பல அரசியல் காரணங்கள் உள்ளன. அத்துடன் பிறதரப்புகளை எதிர்க்காமல் அவற்றில் ஊடுருவுகிற அதன் உத்தியும் ஒருகாரணம்.

வேறு எந்நூலும் இந்துஞானமரபில் மூலநூல்களாகச் சொல்லப்பட்டதில்லை. வேதங்களை பிற இந்துமதத்தரப்புகள் மூலநூலாகக் கொள்ளவுமில்லை. பல உபநிடதங்கள் வேதங்களை நிராகரிக்கின்றன. வேதங்களை அடியோடு வெட்டிவீழ்த்தும்படி கீதையில் கிருஷ்ணர் அர்ச்சுனனுக்குச் சொல்கிறார். அக்குரலை காந்தி எதிரொலிப்பதைக் காணலாம். பின்னர் காலப்போக்கில் புரோகிதர்கள் பெற்ற மத அதிகாரம் காரணமாக வேதங்கள் ஒரு முக்கியமான ஞானமையமாக பல மதங்களால் ஏற்கப்பட்டது.

பலசமயம் இது திரிபுகள், வலிந்த விளக்கங்கள் மூலம் நிகழ்த்தப்பட்டது. உதாரணமாக சாங்கியம், வைசேடிகம் ஆகியவை மூன்றுவகை அடிப்படை அறிதல்முறைகளை [பிரமாணம்] அடிப்படையாகக் கொள்கின்றன. அவை புலன்வழியறிதல் [பிரத்யட்சம்] ஊகம் [அனுமானம்] சுருதி [சொல்லிகேட்டது] என மூன்று. இவற்றில் சுருதி என்று அவை முன்னோர் சொல்லையே உத்தேசிக்கின்றன. பிற்பாடு இது விளக்கங்கள் மூலம் வேதங்களாக மாற்றிப் பொருள் கொள்ளப்பட்டது. விளைவாக சாங்கியம் வேதத்தை ஒப்புகிற தரிசனமாக ஆயிற்று. இது பல நூற்றாண்டுக்காலம் நடந்த ஒரு பெரும் இயக்கம். இதன் விளைவாகவே வேதம் மூலநூல் என்ற பிரமையை இந்துஞானமரபு மேலோட்டமான நோக்கில் அளிக்கிறது. சற்று உள்ளே சென்று நோக்கினால்கூட அப்படி இல்லை என்று அறியலாம்.

இந்தியாவில் உருவான நிறுவப்பட்ட மதங்களான பெளத்தம்,சமணம் ஆகியவை கூட அந்நிறுவனரின் சொற்களை மூலநூலாகக் கொள்ளவில்லை. பெளத்த மரபில் ஆதார நூல்களாக புத்தரின் சொற்களின் தொகைகளான சுத்த பிடகம் வினய பிடகம் [ஞானத்தொகை, நெறிமுறைத்தொகை] ஆகியவை முன்வைக்கப்பட்டாலும்கூட அவை மூலநூல்களாகக் கருதப்படவில்லை. அவை தொடக்கப்புள்ளிகள் மட்டுமே. குறிப்பாக சுத்த பிடகம் முற்றிலும் தத்துவார்த்தமான கூற்றுகள் அடங்கியது. புத்தர் நம்பும்படி ஆணையிட்டவரல்ல, சிந்திக்கும்படி அறைகூவினவர் என்பதே இதற்குக் காரணம்.

இந்துஞானமரபுக்கு என்று ஒரு மூலநூல் இல்லை. அதன் முக்கிய நூல்கள் அனைத்துமே விவாதத்துக்குரிய தத்துவநூல்களோ பக்திநூல்களோ மட்டும்தான். அவை நெறிமுறைகளைச் சொல்பவை அல்ல. நெறிமுறைகளை முன்வைப்பவை ‘ஸ்மிருதிகள் ‘ எனப்பட்டன. அவற்றுக்கு இரண்டாமிடமே அளிக்கப்பட்டது. அவை மாறும் உண்மைகளைச் சொல்லும் உலகியல் நூல்கள், ஆகவே காலத்துக்கு ஏற்ப மாற்றப்படவேண்டியவை என்பதே மரபு வகுத்தமுறை. மனு ஸ்மிருதி அவற்றில் கடைசியானது. [அம்பேத்கர் வகுத்த இந்திய அரசியல்சட்டம் அதற்கு அடுத்தது என்று ஓர் உரையில் ஸ்வாமி சித்பவானந்தர் சொல்லியிருக்கிறார்] அதற்கு முன் நாரத ஸ்மிருதி அதற்கும் முன் யம ஸ்மிருதி என பல நெறித்தொகைகள் இருந்திருக்கின்றன. அவை மூலநூல்களாகக் கருதப்படவில்லை. காலமாற்றத்தில் சாதாரணமாக அவை வழக்கொழிந்தன.

தொடரும்..

பின்னூட்டம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s