கீதையை எப்படிப் படிப்பது? ஏன்? – 3

கீதையை எப்படிப் படிப்பது? ஏன்? – 3

ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது

[கோதைக்கரை]

கீதையை இப்போது படிப்பது எப்படி ?

தொடர்ந்து என் வாசகர்களில் ஒரு சாரார் கீதையை படிக்க ஆரம்பித்து ஐயங்களை எனக்கு எழுதுவதுண்டு என்பதனால் அவற்றிலிருந்து நான் உருவாக்கிய ஒரு பொதுவான வாசிப்புமுறைமையைச் சொல்கிறேன். கீதை பலவாறாக பல நோக்கில் விளக்கப்பட்டுவரும் நூல். அதற்கான இடம் அதில் உள்ளது. காரணம் அது ஒரு தத்துவநூல். விவாதத்துக்கு உரியது. உங்கள் வாழ்க்கைநோக்கில் ஆராய்வதற்குரியது. ஆகவே ஏதேனும் ஓர் உரையை நம்பி வாசிப்பது தவறானதாக ஆகக் கூடும். உதாரணமாக ஜெயதயால் கோயிந்தகா வின் கொரக்பூர் உரை மிக மிக வைதிக, சாதிய நோக்கு கொண்ட ஒன்று. அதை நான் நிராகரிக்கிறேன். ஹரே ராம ஹரே கிருஷ்ண இயக்கத்தின் நிறுவனரான பிரபுபாதரின் உரை கீதையை ஒரு மூலநூலாக, கிட்டத்தட்ட பைபிள் போல மேலைநாட்டு ருசிக்காக விளக்க முயல்வது. அவரை ஒரு ஞானி என்றே எண்ணுகிறேன். ஆனால் அவரது உரை எனக்கு ஏற்புடையது அல்ல. வைணவ அறிஞர்களில் பலரும் கீதையை வெறும்பக்தியை சரணாகதியைச் சொல்லும் நூல் என்று விளக்குவதுண்டு. அதுவும் எனக்கு ஏற்புடையதல.

தமிழில் முதலில் வாசிக்க ஆரம்பிக்க வேண்டிய நூல் சுவாமி சித்பவானந்தரின் பெரும்புகழ்பெற்ற கீதை உரைதான். [கவனிக்க அது ராமகிருஷ்ண மடம் வெளியீடல்ல. சித்பவானந்தரின் மடம் வெளியீடு. திருச்சி [திருப்பராய்த்துறை] மதுரை [திருவேடகம்] மடங்கள் வெளியிடுகின்றன. கூடவே பாரதி அல்லது கண்ணதாசனின் உரையையும் வைத்து கொள்ளுங்கள். முன்னது விளக்குவதற்கு பயன்படும். சித்பவானந்தர் நூலில் உள்ள ராமகிருஷ்ண பரம ஹம்சரின் உதாரணகதைகள் கீதையை மிகத்துல்லியமான முறையில் புரியவைப்பவை. பாரதி,கண்ணதாசன் போன்ற கவிஞர்கள் நம் நினைவில் தங்கும் அரிய சொல்லாட்சிகளை அளிப்பார்கள். இன்னும் ஏதேனும் ஒரு கீதை உரையை, அன்றாட வாழ்விலிருந்து கீதையை அணுகும் ஒருவரின் உரையை சேர்த்துக் கொள்வது நல்லது. என் நோக்கில் வினோபாவின் கீதைப்பேருரை. ஒரே சூத்திரத்தை அனைத்திலும் படியுங்கள். உங்கள் வாழ்க்கையை ஒட்டி சிந்தியுங்கள். ஒருநாள் ஒரு சூத்திரம் போதும்.

அதன் பின் கூடவே ஓஷோவின் கீதை உரையை படியுங்கள். அந்தப் பெரும் கலகக்காரன் நீங்கள் எப்படியெல்லாம் சிந்திக்கிறீர்களோ அதையெல்லாம் உடைத்து கலக்கிவிடுவார். ‘ஆன்மீக ‘ உரை நடுவே நான்கு செக்ஸ் ஜோக்குகள் இருப்பது ஒரு நல்ல விடுதலை. அது உங்களை புதிய இடங்களுக்கு கொண்டுசெல்லும். மரபான எந்த முறையில் நீங்கள் சிந்தித்தாலும் ஓஷோ தடுத்துவிடுவார். எளிய முடிவுகளுக்கு வர அவர் விடமாட்டார். மெல்ல நீங்களே உங்கள் சொந்த உரையினை அடைவீர்கள். அதுவே உங்களுக்கு உரிய உரை. காரணம் பிற எவருக்கும் இல்லாத ஒன்று உங்களிடம் உள்ளது — உங்கள் வாழ்க்கை. பிறநூல்களுக்கும் கீதைக்கும் உள்ள வேறுபாடே இதுதான். அவை ‘மக்களை ‘ நோக்கி பேசுகின்றன. கீதை மனிதனை, ஒரு தனி மனதை நோக்கிப் பேசுகிறது.

ஆங்கிலத்தில் பலநூல்கள் உள்ளன. என் தேர்வு நடராஜகுருவின் கீதை உரை. அவரது மறுதரப்பான டாக்டர் ராதாகிருஷ்ணனின் உரை. நவீன உரையான சுவாமி சின்மயானந்தரின் உரை. நடைமுறைத்தளத்தில் காந்தியின் கீதை உரையாடல்கள். பிறகு ஓஷோ.

கீதையை படிப்பது ஆராய்வதற்காகவே. வணங்குவதற்கல்ல. பக்திப்பரவசமாகப் படிக்கவேண்டியதில்லை. ஓஷோ சொன்னதுபோல கமோட் மேடையில் அமர்ந்து படித்தால் இன்னும் மேலாகப் புரியக்கூடும்.

கீதை வருணாசிரமத்தை முன்வைக்கும் நூலா?

எந்த ஒரு நூலையும் இப்படி ஒற்றைவரியில் குறுக்குவது என்பது அறிவார்ந்த நாணயமின்மையே. ஈ.வே.ரா. தொடங்கிய திராவிட இயக்கம் கடந்த ஐம்பது வருடங்களாக நூல்களை குறுக்குவது, திரிப்பது, வாசிக்காமல் வசைபாடுவது என்ற அளவிலேயே தன் இயக்கத்தை நடத்திவந்துள்ளது. தன் சார்பில் வலுவான ஒரு நூலைக்கூட உருவாக்க முடியாத மலட்டு இயக்கமாக அது ஆனமைக்குக் காரணமும் இதுவே. தனக்கு சற்றும் தெரியாத விஷயங்களை வசைபாட தனக்கு உரிமை இருப்பதாக எண்ணியவர் ஈ.வே.ரா. அவர் உருவாக்கிய அந்த மரபு இன்றுவரை தொடர்ந்து தமிழ்ச்சூழலில் ஆக்கபூர்வமான விவாதங்கள் ‘தலைமறைவாகவே ‘ நிகழ முடியும் என்ற நிலையினை உருவாக்கியுள்ளது.

இதேபாணியில் குறளை ஏன் குறுக்கக் கூடாது? ” தெய்வம் தொழாஅள் கணவன் தொழுதெழுவாள் பெய்யென பெய்யும் மழை” ஆகவே குறள் ஓர் ஆணாதிக்க வெறி பரப்பும் நச்சு நூல். இழிசினரை இலக்கணம் வகுத்து சமூகவாழ்வில் இருந்தே விலக்கிய சாதிவெறி நூல் தொல்காப்பியம். உடன்கட்டையேறுவதையும் போர்வெறியையும் வலியுறுத்தும் நூல் புறநானூறு. விபச்சாரத்தைப் பரப்புபவை அகத்துறை நூல்கள். பெண்ணடிமை நூல் சிலப்பதிகாரம். இதெல்லாம் சரியா? ஏற்க இயலுமா ? உண்மையில் ஈ.வே.ரா இப்படித்தான் பேரிலக்கியங்களைப் பார்த்தார். அவரைத் தொடர்ந்து இப்படியெல்லாம் கருதும் பலர் நம்மிடையே உள்ளனர் என்பதையும் நாம் அறிவோம். ஆனால் இவையெல்லாம் குறுக்கல்நோக்குகள் மட்டுமே.

ஒரு நூலை அதன் ஒட்டுமொத்தத்தை வைத்து, அது உருவான காலகட்டத்தை வைத்து, பண்பாட்டுக்கு அதன் பங்களிப்பை வைத்து மட்டுமே அளவிடவேண்டும் என்பதே அறிவார்ந்த நாணயமாகும். அரசியல் நோக்குடன் வெறுப்பை உருவாக்கும்பொருட்டு சொற்களை திரித்தும் உள்நோக்கம் அளித்தும் கிளப்பப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அறிவுத்தேடல்கொண்டவன் எந்தவிதமான மதிப்பும் அளிக்கமாட்டான். இக்குற்றச் சாட்டுகளை கிளப்புபவர்களிடமுள்ள அப்பட்டமான பாரபட்சமே அவர்களை வெளிக்காட்டும் அடையாளமாகும்.

வருண அமைப்பும் சாதியமைப்பும் ஒன்றுதான் என்பது ஆரம்பகட்ட இந்தியவியலாளர்கள் போதிய அளவுக்கு நூல்களையோ இந்தியச் சூழலையோ ஆராயாமல் உருவாக்கிய முதிர்ச்சியற்ற கருத்தாகும். வெள்ளையன் கருத்தை உணடு கக்குவதே சிந்தனை என்று நம்பும் நம்மில் பலர் இன்றும் அதை ஒரு மாறாமந்திரம்போலச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அக்கருத்து ஐம்பதுவருடம் முன்பே அறிவுத்தளத்தில் முற்றாக மறுக்கப்பட்டுவிட்டதை அவர்கள் பொருட்படுத்துவதில்லை. குறைந்தபட்சம் டி டி கோசாம்பி போன்ற ஒரு மார்க்ஸிய சிந்தனையாளரின் கருத்துக்களைக் கூட அவர்கள் அறிந்திருப்பதாகத் தெரியவில்லை. அவ்விவாதங்களுக்குள் செல்ல நான் இங்கு முயலவில்லை.

வருணம் என்பது ஆரியர்கள் தங்களை தொழில்முறை சார்ந்து பிரித்துக் கொண்ட அடையாளம். மனு ஸ்மிருதிக்கு முந்தைய யம ஸ்மிருதியில் சூத்திரனுக்கும் வேதம் ஓதும் உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது என்பதிலிருந்து வருணம் என்பது ஒடுக்குமுறை சார்ந்த ஒரு பகுப்பாக இருக்கவில்லை, வசதிகருதிய அமைப்பாகவே இருந்திருக்கிறது என்று ஊகிக்கலாம். அது பிறப்படையாளமாக எப்படி எப்போது ஆயிற்று என்பதெல்லாம் சிக்கலான வினாக்கள்.

சாதி என்பது வருணங்கள் மேலும் மேலும் பிரிந்து உருவான ஒன்றல்ல. ஆகவே அது மேலிருந்து கீழ்நோக்கி செலுத்தப்பட்ட கருத்தியலால் உருவாக்கப்பட்ட ஒன்றும் அல்ல. இந்தியாவில் உள்ள ஆயிரக்கணக்கான ஜாதிகளையும் உள்சாதிகளையும் வருணக் கொள்கை மூலம் புரிந்துகொள்ள இயலாது என்பதே உண்மையாகும். அப்படி ஒரு இனக்குழுவின் கருத்தியல் இத்தனை பெரிய அமைப்பை உருவாக்கி இத்தனை வருடம் நிலைநிறுத்தியதென்றால் அவ்வினக்குழு மனிதர்களே அல்ல கடவுள்கள், உலகை ஆள்வதற்கு அவர்களே தகுதிபடைத்தவர்கள் என்பார் கேரள வரலாற்றசிரியர் பி.கெ.பாலகிருஷ்ணன் கிண்டலாக.

உலகமெங்கும் உள்ள இனக்குழு என்ற அமைப்பின் இந்திய வடிவமே சாதிகள். முதலில் குலம், அது தொகுக்கப்பட்டு குலக்குழுக்கள், பிறகு இனக்குழுக்கள் என வளரும் சமூக அலகுகள்தான் சாதி ஆகின்றன. உண்மையில் இந்தியாவில் சாதி என்பது ஒரு பொது உருவகமே. நான் தேவர் என்று ஒருவர் சொன்னால் அடுத்த வினா தேவரில் யார் என்பதே. மறவர் என்றால் அதற்குள் என்ன கூட்டம் என்ற வினா எழும். கொண்டையன்கோட்டை என்றால் அதற்குள் எந்த குடும்பம் என்று கேள்வி உருவாகும்.

சமூக உருவாக்கம் நடப்பதற்கேற்ப அதிகாரப்படிநிலை உருவாகிறது.அது சாதிகளை மேல்கீழாக அடுக்கிக் கட்டுகிறது. இதுவே டி. டி. கோஸாம்பி அளிக்கும் சித்திரமாகும். இந்த அதிகாரப் படிநிலையை உருவாக்கும் பல கூறுகளில் ஒன்றாக பிராமணியம் வருணக் கொள்கையை வளர்த்தெடுத்தது என்று கோஸாம்பி சொல்கிறார். இன்றைய நாட்டரியல் ஆய்வுகள் சாதிகளின் சமூகநிலையில் பொருளியல் மற்றும் வரலாற்றுக் காரணங்களுக்கு ஏற்ப ஏற்ற இறக்கங்கள் தொடர்ந்து நிகழ்வதையும், சிறிய சாதிகள் இணைந்துபெரியசாதிகள் உருவாவதையும் தெளிவாகவே அடையாளம் காட்டுகின்றன.

ஆகவே வருணம் என்ற சொல்லை உடனடியாக சாதி ஒடுக்குமுறையுடன் தொடர்புபடுத்திக் கொள்வது மிக மிக முதிராத நோக்கேயாகும். வருணம் என்ற கருத்து ஆரம்பகட்ட நூல்களில் மனிதர்களுக்கு இடையே அடிப்படை இயல்பு சார்ந்து உள்ள வேறுபாட்டை சுட்டவே பெரிதும் கையாளப்பட்டுள்ளது. வைதிகமரபைச் [வேதங்களை அடிப்படையாகக் கொண்டது வைதிக மரபு] சேர்ந்த நூல்கள் மட்டுமல்ல வைதிக மரபை கடுமையாக எதிர்க்கும் உலகியல் நோக்குள்ள சாங்கியம் வைசேடிகம் முதலிய மரபுகளின் நூல்களும்கூடத்தான் இவ்வாறு சுட்டுகின்றன. சத்வ குணம் [செம்மைத்தன்மை] கொண்டவர்கள் பிராமணர்கள் என்றும் ராஜஸ குணம் [செயலூக்கம்] கொண்டவர்கள் ஷத்ரியர்கள் என்றும் தாமஸகுணம் [ஒடுங்கும்தன்மை] கொண்டவர்கள் சூத்திரர்கள் என்றும் ராஜஸ தாமஸ குணங்களின் கலவை வைசியர்கள் என்றெல்லாம் இந்நூல்களில் நாம் காண்கிறோம்.

இந்நோக்கை சாதி உருவாக்க நோக்கு என்று ஒருவர் சொல்லலாமென்றால் ‘அந்தணர் என்போர் அறவோ மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான்’ என்ற குறளை ‘பிராமணர்கள் எல்லாரும் பிற உயிர்களுக்கு கருணை காட்டி வாழும் அறவோர் ஆவர்’ என்று நான் வாசித்து குறளை ஏன் ஒரு ‘பார்ப்பனிய நச்சு’ நூலாகச் சொல்லக் கூடாது? இப்பகுப்பானது மனித இயல்பின் சிக்கலைப் புரிந்துகொள்வதற்கான ஒரு கருவியாக இந்து ஞான மரபில் பலகோணங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சாங்கியம் போன்ற உலகியல் தத்துவங்கள் முக்குணங்களின் விளையாட்டாகவே இயற்கையின் பெரும் இயக்கத்தினை விளக்குகின்றன. நாதம், ருசி, உடலியக்கம் [வாதம், பித்தம்,கபம்] ஆகியவை கூட இவ்வாறே விளக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

கீதை இந்நோக்கிலேயே “நான்கு வருணம் என் ஆக்கம். இயல்பு செயல் ஆகியவற்றின் அடிப்படையில் பகுக்கப்பட்டது” [சதுர் வர்ணம் மயா சிருஷ்டம் குணகர்ம விபாகஸ] என்று வகுத்துரைக்கிறது. கடந்த அரை நூற்றாண்டாக இச்சூத்திரத்தின் முதல் வரி மட்டுமே இங்கு மேடைமேடையாக முழங்கப்பட்டு கீதையில் கிருஷ்ணன் சாதிகளை அவரே உருவாக்கியதாகச் சொல்கிறார் என்று காட்டப்பட்டுள்ளது. ‘தமிழ் காட்டுமிராண்டி பாஷை ‘ என்று ஈ.வே.ரா சொன்னாரே என்று கேட்டால் அவர் சொன்ன நோக்கம், தருணம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் அதைப் பார்க்கவேண்டும் என்பவர்கள் மறுதரப்பை அணுகிய முறை இது. இரண்டாம் வரி திட்டவட்டமாக பிறப்புசார்ந்த சாதிப்பிரிவினைக்கு எதிரானது என்பதை எவரும் உணரலாம்.

தொடரும்..

பின்னூட்டம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s