கீதையை எப்படிப் படிப்பது? ஏன்? – 4
ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது
[கோதாவரி]
கீதை ஏன் மக்களை பகுக்கிறது?
கீதை ஒட்டுமொத்த மானுடகுலத்துக்கும்,காலமுழுமைக்கும், பொருந்தக்கூடிய ஒரே மாறா வழிமுறையைச் சுட்டும் மதநூல் அல்ல. அது பிரபஞ்சத்தையும், வாழ்க்கையையும், மனிதர்களையும் விளக்க முயலும் தத்துவநூல். மனிதர்கள் தங்கள் இயல்பிலேயே பன்மைத்தன்மை கொண்டவர்கள் என்பதும், எந்த ஒரு விஷயமும் ஒருவருக்கு சரியாக இருப்பது பிறருக்கு சரியாக இருக்காது என்பதும் இந்துஞான மரபின் எல்லா கிளைகளுக்கும் எல்லா அறிவியல் கோட்பாடுகளுக்கும் பொதுவாக உள்ள கருத்து. ஆகவே எல்லா தளத்திலும் பன்மைத்தன்மையை வலியுறுத்துவதும் எல்லா கூறுகளையும் பொதுவாக உள்ளடக்க முயல்வதும் இந்துஞானமரபின் எல்லா சிந்தனைகளிலும் காணப்படும் அம்சமாகும். கீதை மட்டுமல்ல பிரம்மசூத்திரமும் உபநிடதங்களும் கூட அப்படித்தான். ‘எல்லா ஆறுகளும் கடலையே சேர்கின்றன எல்லா அறிதல்களும் பிரம்மத்தை ‘ என்ற சாந்தோக்ய உபநிடத தரிசனம் நாம் அறிந்ததே
ஓர் ஆயுர்வேத அல்லது சித்த மருத்துவரிடம் நாம் சென்றால் அவர் முதலில் நம் உடலை அடையாளப்படுத்த முயல்வார். பித்த உடல், வாத உடல், கப உடல் என்று. அதன் பிறகு நம் தொழிலையும் சூழலையும். ஆயுர்வேதியான என் பெரியப்பா நோயாளியின் இடம் கடற்கரை நிலமா மலைநிலமா வயலா என்ற கேள்வி கேட்காமல் சிகிழ்ச்சையை ஆரம்பிக்கவே மாட்டார். இப்பிரிவினை போன்ற ஒன்றே இயல்பு, செயல் ஆகியவற்றின் அடிப்படையில் கீதை பிரிக்கும் பிரிவினையும் கீதை காட்டும் வழிகள் பலவாறாகப் பிரிந்து கிடப்பதை இந்நோக்கிலேயே புரிந்துகொள்ள முடியும். கர்ம யோகம் ஒருவருக்கு சரியாகுமென்றால் பக்தியோகம் இன்னொருவருக்கு உவப்பாகும். மோட்ச சன்யாஸ யோகமன்றி எதிலும் முழுமைபெறாதவராக ஒருவர் இருக்கக் கூடும். இது முழுக்க முழுக்க ஒருவரின் இயல்பு மற்றும் அவர் ஈடுபட்டு வரும் துறை ஆகியவற்றைச் சேர்ந்தது. அடங்காத உத்வேகம் கொண்ட ஒரு மன்னனுக்கு மோட்ச சன்யாச யோகம் பொருந்தாது. கீதை வழிகளை ஆணையிடவில்லை, கட்டாயபப்டுத்தவில்லை. சிபாரிசு செய்கிறது. துல்லியமான வழிமுறைகளை அளிக்கிறது. ஏன், அதற்குரிய உணவுமுறை குறித்துகூட அது விளக்குகிறது. இப்படிப்பட்ட மாறுபட்ட வழிகளை சுட்டும்பொருட்டே ; மனிதர்கள் மாறுபட்டவர்கள், அவர்களின் தேவைகளும் மாறுபட்டவை என்று விளக்கும் முகமாகவே, அந்த சூத்திரம் வருகிறது.அங்கிருந்து கீதையின் விவாதம் மிக மிக விரிவாகப் பரந்துசெல்வதைக் காணலாம்.
கண்டிப்பாக இந்த சூத்திரம் சாதிய மனநிலை கொண்டவர்களால் சாதியை நியாயப்படுத்தும் வரியாக விளக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்படி விளக்கப்படாத நூலே உலகில் இல்லை. ‘ அந்தணர் என்போர் அறவோர் ‘ என்ற வரியும் அதேபோல சாதியவரியாக விளக்கப்பட்டுள்ளது.கீதையின் ஒட்டுமொத்தத்தில் அவ்வரி பெறும் அர்த்தத்தையும் முக்கியத்துவத்தினைக் கொண்டுதான் நாம் அதைப் புரிந்துகொள்ளவேண்டும். அதுவே எந்நூலுக்கும் உகந்ததாகும்.
இன்னொன்றும் சொல்லவேண்டும். இந்தியாவின் பண்டைய நூல்கள் பல்லாயிரம் வருடப்பழக்கம் உள்ளவை. அவை மீண்டும் மீண்டும் எழுதி பிரதியெடுக்கப்பட்டு சேமிக்கப்பட்டவை. அச்சும் நூலாக்கமும் உருவான பிறகு வந்த நூறுவருடப் பழக்கம் கொண்ட நூல்களிலேயே [உதாரணம் பாரதி பாடல்கள்] இடைச்செருகல்கள் திரிபுகள் உள்ளன என்னும்போது பண்டைய நூல்களின் ஒருவரியைப்பிடுங்கி ஒட்டுமொத்தமாக நிராகரிப்பது ஆபத்தானது.
மேலும் இவை எவையுமே ‘ ஒருவரிகூட மாற்றப்படக் கூடாத ‘ இறைவனின் சொற்கள் அல்ல. ஆகவே இவற்றில் ஒருவர் தனக்கு பொருந்துவதை எடுத்துக் கொள்ளலாம். பிறிதை நிராகரிக்கலாம். ஒட்டுமொத்தமாகக் கூட நிராகரிக்கலாம். ஆனால் வாசித்து ஆராய்ந்து அறிந்தபிறகு அதைச்செய்யவேண்டும் அவ்வளவுதான். கீதைக்கும், பாதராயணரின் பிரம்மசூத்திரத்துக்கும், ஆதிசங்கரரின் விவேகசிந்தாமணிக்கும், உபநிடதங்களுக்கும் உரைகள் எழுதிய நித்ய சைதன்ய யதி கணிசமான இடங்களில் மூல ஆசிரியர்களை மறுத்து வாதாடுவதையும் சில கருத்துக்களை முற்றாக நிராகரிப்பதையும் காணலாம். இந்துஞானமரபு நித்யாவை இன்னொரு குருவாகவே கொண்டாடுகிறது. அவர் கருத்தை சற்றும் ஏற்காத வைதிகர்கூட அவரை அங்கீகரிக்கிறார்கள்.
கீதை ‘ஆயுதமேந்தியபிரதி’யா? [Text with weapon]
தெளிவாக அடையாளங்களையும் நெறிகளையும் வரையறை செய்யும் ஒரு நூல் ஒரு தரப்பினரால் முக்கியமான நூலாகக் கருதப்படும்போது அது ஆயுதமேந்திய நூலாக ஆகிறது. மாற்றுத்தரப்புக்கு எதிராக அது அழிவை உருவாக்குகிறது. உலகில் இன்றுவரை உருவான எல்லா மத நூல்களும் ஆயுதமேந்திய நூல்களே. எல்லா நெறிமுறை நூல்களும் ஆயுதமேந்திய நூல்களே. குர் ஆன், மூலதனம், பைபிள், மனுஸ்மிருதி, காபாலா எல்லாமே ஆயுதமேந்திய பிரதிகளே. பூமி மீது அவை பெரும் மானுட அழிவை உருவாக்கியுள்ளன. கருணையை மட்டுமே சொன்ன புத்தரின் தம்மபதம் கூட ஆயுதமேந்துவதை நாம் இலங்கையில் காண்கிறோம்.
ஆனால் அது அந்நூல்களின் நேரடி விளைவல்ல. திட்டவட்டமாக ஓர் அடையாளம் அல்லது அமைப்பு உருவாக்கப்படுமென்றால் அதை உடனடியாக அதிகாரசக்திகள் பயன்படுத்திக் கொள்கின்றன. தங்களை ஒருங்கிணைக்கவும் பிறரை வெறுக்கவும் பயன்படும் கருவிகளாக அந்நூல்களை ஆக்குகின்றன. அழிவு தொடங்கிவிடுகிறது. இந்நூல்கள் உருவாக்கும் ஆக்கம் போலவே அழிவும் முக்கியமான சிந்தனைப்பொருளே. ஆகவே அடையாளங்களை வகுத்துரைக்கும் நூல்களை, விதிகளையும் தண்டனைகளையும் குறிப்பிடும் நூல்களை இந்த ஜனநாயக யுகத்தில் கவனமாகவே அணுகவேண்டியுள்ளது.
நீதிநூலாக இருப்பினும் திருக்குறள் அடையாளங்களை உருவாக்குவதல்ல. விதிகளை வகுப்பதுமல்ல. ஆகவேதான் அதை நான் உலகப்பொதுமறை என்று எண்ணுகிறேன். கீதையை நீங்கள் படிக்கலாம். அது ஏற்பவர்கள் ஏற்காதவர்கள். நம்புகிறவர்கள் நம்பாதவர்கள் என்ற இறுதி அடையாளம் எதையேனும் வகுக்கிறதா என்று ஆராயலாம். அது மாறா நெறிகளையும் விதிகளையும் வகுக்கிறதா என்று கவனிக்கலாம். அது சொல்வதெல்லாம் மனிதர்களின் இயல்புகளைப்பற்றியும், வழிமுறைகளைப் பற்றி மட்டுமே. அதில் உள்ளவை தத்துவ அவதானிப்புகள் மட்டுமே. அப்படி ஏதாவது அடையாளப்படுத்தல் கீதையில் இருந்தால் அதை நிராகரிகக்லாம். நெறிகள் சொல்லப்பட்டிருந்தால் நீங்கள் விரும்பாவிட்டால் மறுக்கலாம். நிராகரிக்கும் உரிமையை அளிக்கும் நூல் அது.
கீதை என்றுமே ஒரு ஆயுதமேந்திய பிரதியாக இருந்தது இல்லை. அது உயர்தத்துவ தளத்தில் மட்டுமே புழங்கியது. அர்ச்சுனனுக்கு ஏற்பட்டதுபோல உண்மையான ஒரு தத்துவவச்சிக்கல் [விஷாத யோகம்] உருவாகி, தேடி வருபவர்களுக்கு மட்டுமே அது கற்பிக்கப்பட்டது. தமிழ் உள்ளிட்ட பல இந்தியமொழிகளில் அது பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் மொழியாக்கம் செய்யயப்ட்டது, அதாவது இந்து மறுமலர்ச்சியின்போது. இந்து மதமரபுகளில் பல கீதையை நிராகரிப்பவை. உதாரணமாக சாக்தேய மததைச்சேர்ந்த என்குடும்பம் கீதையை ஏற்கக் கூடியதல்ல.
நிராகரிக்கும் உரிமையை வழ்ங்கும் ஒரு நூல் எப்படி ஆயுதமேந்திய நூலாக ஆக முடியும் ? இந்து ஞானமரபில் ஆயுதமேந்திய நூல்கள் நெறிமுறைநூல்களே. அர்த்த சாஸ்திரம். மனுஸ்மிருதி போன்றவைதான்.
தொடரும்..