கீதையை எப்படிப் படிப்பது? ஏன்? – 5

கீதையை எப்படிப் படிப்பது? ஏன்? – 5

ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது

[கோதையின் மடியில்]

கீதை கொலையை நியாயப்படுத்தும் நூலா?

உலக இலக்கியத்தில் இன்றுவரை எழுதப்பட்ட மாபெரும் படைப்புகளில் பெரும்பாலானவற்றை கொலையை வலியுறுத்துபவை என்று நிராகரிிக்க முடியுமென்றால்தான் இக்கேள்வியை சாதாரணமாகக் கூட கேட்க இயலும். வீரம் என்றுமே பண்டையவாழ்வின் மாபெரும் விழுமியமாக இருந்துவந்துள்ளது. ஒரு மனிதனின் உச்சகட்ட சாத்தியம் வெளிப்படுவது வீரத்திலேயே என்பதனால்தான் அது அத்தனை முக்கியப்படுத்தப்பட்டுள்ளது. தாந்தேயின் ‘டிவைன் காமெடி ‘யை நினைவுகூருங்கள். துறக்கத்தையும் நரகத்தையும் ஆழக்காணச் செல்வது முற்றும் துறந்த ஞானி அல்ல, கையில் வாளும் நெஞ்சில் தீரமும் கொண்ட பெளராணிக வீரனான யுலிஸஸ்தான். இன்று வீரம் என்பதன் பொருள் மாறுபடக் கூடும். கீதையின் முதல்தளம் அக்கால விழுமியங்களில் வேரூன்றி நிற்கிறது. அது ‘எக்காலத்துக்கும் உரிய வரிகள் மட்டுமே கொண்ட’ மதநூல் அல்ல.

போரைப்பற்றிச் சொல்வதனால் நிராகரிப்பதென்றால் முதலில் முற்றாக நிராகரிக்கவேண்டிய நூல் குர் ஆன் தான். அதில் ஏராளமான வரிகள் போரைப்பற்றியவையே. நபி தாமே ஒரு மாபெரும் போராளியாக இருந்தவர். அப்போர் கூட ஒரே இனத்துக்குள் ஒரே இனக்குழுவுக்குள் நிகழ்ந்த போர்தான். ஏசுகூட ” பூமிக்கு சமாதானத்தைக் கொண்டுவந்தேன் என்று எண்ணாதேயுங்கள். சமாதானத்தையல்ல பட்டயத்தையே [பட்டாக்கத்தி] கொண்டுவந்தேன்.எப்படியெனில் மகனை தந்தைக்கும் சகோதரனை சகோதரனுக்கும் எதிராக திருப்பவந்தேன்” என்று பைபிளில் சொல்கிறார். வாழ்க்கையை ஒரு பெரும்போராக உருவகிக்கும் நோக்கு அக்காலகட்டத்துக்கு உரியது.

போரைப் பற்றிப் பேசாத பெரும் ஞானநூல்கள் இரண்டே மதங்களில்தான் உள்ளன. பெளத்த சமண மதங்களில். ஆனால் அவை ஒருவகையில் வாழ்க்கையின் யதார்த்தத்தை நிராகரிப்பவை. மெய்ம்மையை துறவின்மூலமே அறிய முடியும் என்று அவை கூறியது இதனாலேயே போலும்.

கீதை அதன் அமைப்பில் உபநிடதங்களைச் சார்ந்தது. உபநிடதங்கள் ஓர் அழகிய கதையை முன்னிலைப்படுத்தி அதில் நாடகத்தனமான ஒரு தருணத்தை உருவாக்கி அங்கு தங்கள் தத்துவ விவாதத்தைப் பொருத்தியுள்ளன என்பதைக் காணலாம். போர்முனையில் ஆழ்ந்த தர்மசங்கடத்துக்கு ஆளான பெருவீரனுக்கு கீதை சொல்லப்படுவது என்பது அத்தகைய ஒரு நாடகச் சந்தர்ப்பமே. கீதையை பயிலும் ஒருவர் அதன் மிகச்சிக்கலான, நுட்பமான தத்துவ விவாதத்தை அத்தகைய ஒரு நாடகத் தருணத்தில் பொருத்துவதன் அவசியத்தை புரிந்துகொள்ள முடியும். அதை பிறகு சொல்கிறேன்.

உபநிடதங்கள் ஏற்கனவே சொல்லப்பட்ட வாய்மொழிக்கதைகளில் இருந்து தங்கள் நாடகத்தருணங்களைக் கண்டடைகின்றன. அக்காலத்தில் இதிகாசங்கள் அத்தனை முக்கியத்துவத்துடன் இருந்திருக்காது என்று படுகிறது. கீதையின் காலகட்டம் குறைந்தது ஐந்து நூற்றாண்டு பிந்தையது.அப்போது இதிகாசங்கள் ஆழ வேரூன்றிவிட்டிருந்தன. குறிப்பாக மகாபாரதக்கதை கிராமம்தோறும் நிகழ்த்துகலையாக கொண்டுசெல்லப்பட்டிருக்கக் கூடும். ஆகவே கீதை மகாபாரதத்தின் தருணத்தை எடுத்துக் கொண்டிருக்கிறது. மகாபாரதத்தில் கீதைபோலவே பீஷ்மகீதை, விதுர நீதி போல பத்துக்கும் மேற்பட்ட தனித்தனி தத்துவ நூல் இணைப்புகள் உள்ளன. அவற்றில் செளனகன் சொல்லும் நாத்திக நூலும் அடக்கம்.. இந்த உத்தி மிக வெற்றிகரமானது என்பதில் ஐயமில்லை. கீதை இன்று இந்தியாவெங்கும் வேரோடிப் பரவியுள்ளமைக்கு அந்த மகாபாரதச் சந்தர்ப்பம் ஒரு முக்கியமான காரணம்.

உபநிடதங்கள் பொருத்தப்பட்டுள்ள கதைகள் அனைத்துமே அவை பேசும் தத்துவத்துக்கு ஏற்ப குறியீட்டுத்தன்மை கொண்டவை என்பதை சாமானிய கதைகேட்பாளர்கள் கூட அறிந்திருப்பதை நான் நேரில் அறிந்திருக்கிறேன். அச்சந்தர்ப்பத்தின் கவித்துவத்தை உணர்வதற்கு இலக்கிய அறிமுகம் இல்லையென்றால் குறைந்தபட்சக் கற்பனைவளமாவது தேவை. அதை ‘அப்படியே’ எடுத்துக் கொண்டு விவாதிக்கும் நம் ‘அறிவுஜீவி’கள்’ ஏதாவது ஒரு பேரிலக்கியத்தையாவது அதன் செவ்வி உணர்ந்து அனுபவித்தமைக்குத் தடையம் உண்டா என்ன ? கம்பராமாயணத்தை விடுங்கள், திருக்குறளை அவர்கள் அணுகிய விதம் என்ன ? அவர்களிடம் இதைமட்டும் எப்படி எதிர்பார்க்க இயலும் ?

ஒரு விழியிழந்தவனுக்கு ஒரு சொல்வல்லுநன் உருவாக்கிய ‘சொல்நிலக்காட்சி ‘ யே கீதை என்பதே அதன் முக்கியமான கவித்துவம். இருபக்கமும் விரியும் கோபம் கொண்டு கொந்தளிக்கும் பெரும்படைகளின் சந்திப்பு எல்லைக்கோட்டில் அது சொல்லப்படுகிறது என்பது இன்னொரு முக்கிய படிமம். அந்த ரதம் [அதை ஓட்டுபவன் எதிலும் எப்போதும் ஈடுபடாதவன், செயலாற்றுபவனுக்கோ ரதம் மீது கட்டுப்பாடே இல்லை] இன்னொரு படிமம். இப்படிமங்கள் அந்நூலின் மையமான நோக்குக்கு எந்த வகையில் ஆழத்தை அளிக்கின்றன என்பது சிறிதளவு இலக்கிய ரசனை இருந்தால்கூட அறிய முடியும்.

கீதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் ‘கொலை’ என்பதை இப்பின்னணியில் ஒரு கவித்துவ உருவகமாகவே கொள்ள முடியும். ஆகவேதான் அகிம்சையை முன்வைத்த காந்திக்கும் வினோபாவேக்கும் அந்நூல் வழிகாட்டியாக ஆனது. கீதை சொல்லும் கொலை உண்மையில் என்ன என்பதைப்பற்றி எல்லா கீதை உரைகளிலும் மீண்டும் மீண்டும் பேசபட்டுள்ளது. சுவாமி சித்பவானந்தரின் கீதை உரையில் ‘கொலை நூலா?’ என்ற தலைப்பில் ஒரு கிளைத்தலைப்பே உள்ளது. அவற்றை விடுவோம். கீதையிலேயே மீண்டும் மீண்டும் ‘செயல்’ [கர்மம்] என்றே அர்ச்சுனனிடம் சொல்லப்படுகிறது. பொதுவாக மானுடன் செய்யவேண்டிய செயல் என்பதையே அக்கவித்துவச் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப ‘போர் புரிதல்’ என்று அது சொல்கிறது என்பதை அறிய கீதையை சாதாரணமாகப் புரட்டிப்பார்த்தாலே போதும்.

மேலும் மானுடன் தன் வாழ்வில் ஆற்றியாகவேண்டிய பல்லாயிரம் செயல்களில் இந்த விவாதத்துக்கு குறியீடாகப் போர் எடுத்துக் கொள்ளப்பட்டிருப்பது இரண்டு காரணங்களினால் என்பதை பொதுப்புத்தியினாலேயே உணரமுடியும். போர் ஒரு மனிதனின் உச்சமும் சாரமும் வெளிப்படும் தருணம். கோழைத்தனமோ வீரமோ. மகாபாரதமும், ராமாயணமும், புறநாநூறும், இலியட்டும், ஒடிஸியும் போரை பற்றி பேசுவது இதனாலேயே. போர் என்ற செயலின் விளைவுகள் உடனடியானவை. தீவிரமானவை. வாழ்வா சாவா என்ற தளத்தைச்சேர்ந்தவை. ஆகவே அது ஒட்டுமொத்தமாக செயலாற்றுதலின் குறியீடாக ஆக ஏற்றது.

இரண்டாவதாக போர் என்பதே குறியீட்டு அளவில் முடிவற்ற வாழ்க்கைப்போராட்டத்தின் குறியீடு. உலகின் எல்லா மொழியிலும் வாழ்க்கைப் போராட்டம் இந்த ஜனநாயக யுகத்தில்கூட போர் சார்ந்த தனிச்சொற்களாலேயே குறிப்பிடப்படுகிறது. கீதையை படிக்கும் ஒருவன் செயல் என்று அது குறிப்பிடுவது எந்தெந்த தளங்களில் விரிவுகொண்டு அதன் தரிசனத்தை விளக்குகிறது என்பதை தெளிவாகவே காணமுடியும். அது ஒரு வாசகன் தன் அனுபவங்களை முன்வைத்து சிந்தித்து அறியவேண்டிய ஒன்றாகும்.

பின்னூட்டம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s