கீதையை எப்படிப் படிப்பது? ஏன்? – 6 [நிறைவுப்பகுதி]

கீதையை எப்படிப் படிப்பது? ஏன்? – 6 [ நிறைவுப்பகுதி]

ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது

[கோதாவரி நதி]

கீதை ஏன் செயலாற்றுதலை முக்கியப்படுத்த வேண்டும்?

கீதை செயலாற்றுவதை முன்வைப்பதாக உள்ளமைக்கு ஒரு விரிவான தத்துவப் பின்புலம் உள்ளது. அது முத்தத்துவ அமைப்பில் இறுதியானது என்றேன். பிற தத்துவங்களான உபநிடதங்களும் சரி, பிரம்ம சூத்திரமும் சரி வேதாந்தத்தை முன்வைப்பவை. வேதாந்தம் உயர்தத்துவத்தின் சிறப்புண்மையை முன்வைப்பது. ஒட்டுமொத்தமாகப் பிரபஞ்ச இயக்கத்தின் சாரம் நோக்கி கண்திறக்கும் உயர்தத்துவம் எதுவானாலும் அது உடனடியாக நம்மில் நிகழ்த்தும் விளைவு அன்றாட உலகியல் வாழ்வின் சவால்களில் போட்டிகளில் அவநம்பிக்கையை உருவாக்குவதேயாகும். ஆகவே உண்மையை சிறப்புண்மை, பொதுஉண்மை என இரண்டாகப் பிரிப்பது அவசியமாகிறது. உண்மையில் ஆதி உபநிடதங்களில் இப்பிரிவினை தெளிவாக நிகழ்த்தப்படவில்லை. அதைச் செய்தவர்கள் பெளத்தர்கள். குறிப்பாக நாகார்ச்சுனர். விசேஷசத்யம், சாமான்யசத்யம் அல்லது வியவகாரிக சத்யம் பரமார்த்திக சத்யம் என இது குறிப்பிடப்படுகிறது.

இதை இன்று விளக்குவது எளிது, காரணம் நவீன இயற்பியல் இதை சாதாரணமான தகவலாக இன்று மாற்றியுள்ளது. பொருள் என்பது உயர்பெளதிக தளத்தில் என்ன அர்த்தம் கொள்கிறதோ அவ்வர்த்தமல்ல அன்றாட வழக்கில். முதலில் உள்ளது சிறப்புண்மை. இரண்டாவது பொது உண்மை. நாகார்ச்சுனர் சொல்லும் சூன்யம் என்பது சிறப்புண்மை. அவரால் சுவடியில் எழுத்தாணி வைத்தே எழுதமுடியும் மூச்சுக்காற்றால் எழுத முடியாது என்பது பொது உண்மை. கீதை பெளத்தத்துக்கு பிறகு உருவானது. பெளத்தம் ஆதிவேதாந்தத்துக்கு அளித்த சவால்களை எதிர்கொண்டு அடுத்த கட்டத்துக்கு நகர முயன்றது அது.

நாம் தத்துவசிந்தனை இல்லாதவர்கள் என்றாலும்கூட சிறப்புண்மையின் கீற்றை நம் வாழ்வில் அவ்வப்போது அறியத்தான் செய்கிறோம். மரணங்களில், ஆழ்ந்த தனிமையில், ஏன் சிலசமயம் இசைகேட்கும்போதுகூட. கும்பகோணம் விபத்து நிகழ்ந்தபிறகு ஒரு வாசகர் எனக்கு ஒரு மிக நீண்ட கடிதம் அனுப்பியிருந்தார். வாழ்க்கை குறித்தும் கடவுள் குறித்தும் அவருக்கு இருந்த எல்லா நம்பிக்கைகளும் நொறுங்கி ஆழமான அவநம்பிக்கை ஒன்றை அவர் அறிந்த நேரம் அது. ஈழப்பிரச்சினை சார்ந்து அப்படி ‘ஒன்டுக்கும் ஒரு அர்த்தமும் இல்லை ‘ என்று எனக்கு மனமுடைந்து எழுதியவர்களின் பெரிய பட்டியல் உள்ளது. நான் அவர்களிடம் சொல்வது ஒன்றுதான். “நீங்கள் உணரும் அர்த்தமின்மை எளிய உலகியல் தளத்தில் நீங்கள் உருவாக்கியுள்ள விதிகள் மற்றும் காரண காரிய ஒழுங்குகள் ஆகியவை சிதறுவதன்மூலம் தெரியவரும் அர்த்தமின்மையே. அதற்குமேல் இன்னொரு பெருவிதியும் பேரொழுங்கும் ஏன் இருக்கக் கூடாது? அதை நீங்கள் உணர்ந்தால் அதன் அடிப்படையில் இவ்வுலகியல் தளத்தை மேலும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியுமா?” பொதுவாக நான் நூல்களை சிபாரிசு செய்வதில்லை, செய்தால் கீதையையே குறிப்பிடுவேன்.

நான் நாவல் எழுதுகிறேன். அதை ஒரு சாதனையாக எண்ணுகிறேன். அதை பிறர் பாராட்டுகையில் மகிழ்கிறேன். அதில் மேலும் வெற்றிகளுக்கு திட்டமிட்டு முயல்கிறேன். பெரும் கனவுகளுடன் என் உதிரத்தை ஆவியாக்கி உழைக்கிறேன். ஆனால் ஒரு கணம் விலகி இப்பிரபஞ்சப் பெருவெளியை, அதன் ஒரு கொப்புளத்துளியான பூமியை, அதில் குமுறும் உயிர்வாழ்க்கையை, அதன் பிரக்ஞை என்னும் பெரும் பிரவாகத்தை காண்பேன் என்றால் என் செயல் அபத்தமாக, மாயையாகவே தெரியும். அதன் பிறகு நான் எதுவுமே எழுத இயலாது. இந்த உத்வேகம் இல்லாமலாகும். இதுவே உயர்தத்துவ நோக்கு எப்போதும் நிகழ்த்தும் மனநிலையாகும்.

வேதாந்தத்தில் இருந்த முக்கியமான விடுதல் அது உயர்தத்துவ நோக்கை மட்டுமே முன்வைக்கிறது என்பதே. ‘பிரக்ஞையே பிரம்மம்’, ‘நானே பிரம்மம் ‘, ‘இவையெல்லாமே இறைவடிவங்களே’ போன்ற அதன் அடிப்படைத்தரிசனங்கள் ஓர் உச்சநிலைப் பார்வையைச் சார்ந்தவை. அன்றாட உலகியல் வாழ்க்கையில் அவற்றின் இடம் மிகக் குறைவானதேயாகும். மேலே சொன்னபடி பெரும்பாலான உயர்தத்துவ நோக்க்குகளைப்போல அதுவும் செயலின்மைக்குக் கொண்டுசெல்லக் கூடியது. இக்காரணத்தால்தான் வேதாந்தம் தத்துவஞானிகளுக்கு இடையே ஒடுங்கி நிற்கநேர்ந்தது. சமீபகால ஞானியரில் ஜெ கிருஷ்ணமூர்த்தி அத்தகைய ஒரு செயலின்மையை உருவாக்குவார் என்பது என் அவதானிப்பு.

இந்த குறைபாட்டை கீதை களைகிறது. பெளத்தத்திலிருந்து இருவகை உண்மைகள் குறித்த நோக்கை அது பெற்றுக் கொண்டு அவ்விரு உண்மைகளும் ஒன்றை ஒன்று நிரப்பும் முறையை முக்கியப்படுத்துகிறது. ஒரு நுனியில் பிற அனைத்தையுமே அபத்தமாகக் காணும் அளவுக்கு நுட்பமான உயர்தத்துவ தரிசனத்தைக் கொண்டிருக்கிறது அது. மறு நுனியில் அன்றாட வாழ்க்கையின் செயல்பாடுகளை திறம்படச்செய்வதெப்படி என்ற தளத்தில் நிற்கிறது. இரு எல்லைகளையும் அது இணைக்கிறது. அதன் தத்துவார்த்தமான பங்களிப்பே இவ்விணைப்பு தான். உயர்தள தத்துவ தரிசனம் எப்படி உலகியல்வாழ்க்கையை அர்த்தப்படுத்த முடியும் என்ற கோணம் அதில் அழுத்தம் பெறுகிறது. அதேபோல ஒவ்வொரு உலகியல் தருணத்திலும் உயர்தள தத்துவதரிசனம் உள்ளுறைந்திருப்பதை அது காட்டுகிறது. ஆகவேதான் பிரம்மசூத்திரமோ, எந்த ஒரு உபநிஷத்தோ பெறாத முக்கியத்துவத்தை கீதை பெற்றது. கீதை ஒரு வைணவ நூலாக இருந்திருக்கவேண்டும், ஆனால் வேதாந்தநூலாக அறியப்பட்டு பொதுநூலாக முதன்மை பெற்றது.

கீதையின் நாடக அமைப்பும் குறியீடும் இவ்வகையில்தான் முக்கியமானவை. அதைத்தான் முன்பே சொன்னேன். அர்ச்சுனன் உறவினரைக் கொல்வது தவறு என்று உணர்வது அறியாமை அல்ல. உலகியல் நோக்கில் அது ஒரு விவேகம். அவன் சொல்வது ஒரு பொது உண்மை. அதற்கு எதிராக சிறப்புண்மையை முன்வைக்கிறது கீதையின் மையம். இருவகை உண்மைகளின் உரையாடல் அது. உலகியல் உண்மையை முன்வைப்பவனை ஒரு பெருவீரனாக காட்டுவது கவித்துவமானது மட்டுமல்ல கீதை உருவான காலகட்டத்தின் விழுமியத்துக்கு ஏற்றதுமாகும். அதில் “செயலாற்றுக ! செயலாற்றுக ! ” என்று ஊக்கும் பார்த்தசாரதி ஒரு செயலையும் ஆற்றுவதில்லை, செயலாற்றுபவனின் ரதத்தை ஓட்டுவதைத்தவிர. இதுதான் கீதையின் குறியீட்டமைப்பு. சிறப்புண்மையை அறியும்போது தான் அத்தளத்தில் மட்டும்தான் பொது உண்மை உண்மையல்லாததாக ஆகிறது.

செயலூக்கம் கொண்ட உயர்தத்துவ நோக்கை முன்வைத்த காரணத்தினால்தான் பதினெட்டாம் நூறாண்டு இந்துமறுமலர்ச்சியின்போது கீதை பிற நூல்களைக் காட்டிலும் அதிக முக்கியத்துவம் பெற்றது என்பதுதான் உண்மை. செயலூக்கம் கொண்ட நவீன வேதாந்தத்தின் நூலாக அது மாறியது. நவீன வேதாந்திகளான விவேகானந்தர், நாராயணகுரு, தாகூர், நடராஜ குரு போன்றவர்கள் அந்நூலை முக்கியமானதாக எண்ணியமைக்குக் காரணம் அதுவே. திலகர், காந்தி, வினோபா போன்ற அரசியல் செயல்வீரர்களுக்கு அது வழிகாட்டியாகியது. வேதாந்தத்தின் மாயாவாதத்தை கண்டித்து நிராகரிக்கும் பாரதி கீதைக்கு உரை எழுதினான் என்பது புரிந்துகொள்ளக் கூடியதேயாகும்.

எனக்கு கீதை  எப்படி வழிகாட்டியது?

ஒரு பேரிழப்பின் முன் கையாலாகதவனாக நிற்கையில் உயர்தத்துவம் அளிக்கும் பிரபஞ்ச தரிசனம் எத்தகைய ஆறுதல் அளிக்கும் என என் வாழ்க்கையை முன்வைத்து நான் சொல்ல முடியும். என் பெற்றோரின் மரணம் அளித்த மாபெரும் வெறுமையில் இருந்து வேதாந்தம் வழியாகவே மீண்டேன். வேறு எந்நூலும் அந்த ஊக்கத்தை அளிக்கவில்லை. அதே தரிசனம் அன்றாடவாழ்வில் ஊக்கமில்லாமல் ஒதுங்கவும் செய்யும் என்பதையும் நான்காண்டுகால சொந்த அனுபவத்திலிருந்து நான் சொல்ல முடியும்.

அவ்வுயர்தத்துவ தளத்திலிருந்து செயலை நோக்கும்போது உருவாகும் சமநிலை செயலை மேலும் உக்கிரமாகச் செய்யத்தூண்டும் என்பதை கீதை எனக்குச் சொன்னது. சுய உடைவின் எல்லையிலிருந்து மீட்டு என்னை ஆக்கபூர்வமான தளத்துக்குக் கொண்டு வந்தது கீதையே. செயலில் குன்றாத ஆற்றலை எனக்கு அதுவே அளித்தது. நான் கீதையைப்பற்றிச் சொல்வதென்றால் அது மருந்தை உண்டு பயன் கண்டவன் அம்மருந்து குறித்து சொல்வது போன்றதே. குன்றாத செயலூக்கம் பற்றி பேசும் தகுதி கொண்டவர்களில் நானும் ஒருவன் என்பதை அதிகம்பேர் மறுக்கமாட்டார்கள் என்றே எண்ணுகிறேன்.

கீதை நான் செல்லும் பயணத்தில் ஒரு முக்கியமான வழிகாட்டிப்பலகை. எல்லா நூல்களும் வழிகாட்டிப்பலகைகளே. அவற்றையெல்லாம் பெயர்த்தெடுத்துக் கொண்டு நான் நடக்கமாட்டேன். நான் சென்றுசேரும் இடத்தில் வழிகாட்டிகளும் பாதைகளும் இருக்காது. காரணம் அங்கு திசைகளே இருக்காது.

One thought on “கீதையை எப்படிப் படிப்பது? ஏன்? – 6 [நிறைவுப்பகுதி]

  1. T.Duraivel says:

    இத்தொடரை காரணமாக கொண்டு ஆசான் கீதையின் அனைத்து அத்தியாயங்களுக்கும் விரிவுரை எழுதினால் சிறப்பாக இருக்கும். அப்படி அது நிறைவுற்று புத்தக வடிவாகும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
    த.துரைவேல்

பின்னூட்டம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s