செயல்தரும் முழுமை:ஸாங்கிய யோகம்.2

செயல்தரும் முழுமை:ஸாங்கிய யோகம்.2

ஜெயமோகன்.இன் ல் இருந்து

[கங்கைக்கரையில் நண்பர்களுடன்]

ஆத்மா எனும் கருத்துருவம்

ஆத்மா என்ற சம்ஸ்கிருதச் சொல்லின் பொருள் என்ன? அது (அத:) என்ற மூலச்சொல்லில் இருந்து கிளைத்தது அச்சொல் என்பது ஏற்கத்தக்க ஒருவாதம். ”அதோ அது” என்று சுட்டிக்காட்டப்படுவது எதுவோ அதுவே ஆத்மா. இன்னொரு அர்த்தம் ‘சாராம்சம்’ என்பது. நாம் காணும் ஒவ்வொன்றிலும் உறையும் மையமான, சாரமான, ஒன்றுதான் ஆத்மா.

இந்து ஞான மரபில் பொருள்முதல்வாதிகளான சாங்கிய, யோக, வைசேஷிக, நியாய தரிசனத்தைச் சேர்ந்தவர்களும் ஏதோ ஒருவகை ஆத்மாவை உருவகம் செய்துள்ளனர். இந்திய ஞானமரபில் இரண்டு எல்லைகள் இதில் காணக்கிடைக்கின்றன. சமணர்கள் சர்வாத்மாவதம் என்ற கோட்பாட்டை முன்வைக்கிறார்கள். அனைத்திற்கும் ஆத்மா உண்டு என்பது இதன் கருத்து. மனிதர்கள் விலங்குகள் புழுப்பூச்சிகள் தாவரங்கள் மட்டுமல்லாது கல் மண் காற்று நீர் போன்ற அனைத்துக்குமே ஆத்மா உண்டு என்கிறார்கள். இவர்கள் கூறும் ஆத்மா என்பது சாராம்சமே. நீருக்கு நீர்த்தன்மையை அளித்து அதை நீராக நிலைநிறுத்துவது எதுவோ அதுவே அதன் ஆத்மா.

இன்னொரு எல்லையில் பெளத்தர்கள் ‘அனாத்தம்’ (இது பாலி மொழிச் சொல். சமஸ்கிருதத்தில் அனாத்மம். ஆத்மா இன்மை) என்ற கருத்தை முன்வைக்கிறார்கள். அநித்தம் (அநித்யம், நிலையின்மை) அநாத்தம், துக்கம் (அறியமையின் துயரம்) ஆகியவையே பெளத்த தத்துவத்தின் மூன்று அடிப்படைகள். பெளத்தர்களைப் பொருத்தவரை எப்பொருளுக்கும் நிலையான மாறாத இயல்பு என்று ஏதும் கிடையாது. பொருட்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள் மட்டுமே. மாறா இயல்பு இல்லை என்பதனால் அவ்வியல்புகளை நிலைநாட்டும் மாறாத சாராம்சமும் இல்லை. பொருட்களை நிகழ்த்தும் விதி (அல்லது நியதி) மட்டுமே உள்ளது. அதை அவர்கள் தர்மம் என்கிறார்கள்.

இந்து ஞானமரபில் ஆத்மா என்ற கருதுகோளின் வளர்ச்சியை ரிக்வேதம் முதல் காணலாம். ‘பருப்பொருளாகிய மனித உடலில் நுண்ணிய இருப்பாக எஞ்சுவது அது’ என்ற அடிப்படை உருவகம் பலவாறாக வளர்ந்து உபநிடதங்களில் கிட்டத்தட்ட முழுமை வடிவம் அடைந்து இன்றுவரை அதுவே முன்வைக்கப் படுகிறது. உபநிடதங்கள் ஆத்மா என்று கூறுவது எதை, அதன் இயல்புகள் என்ன என்பது மிக விரிவாகப் பேச வேண்டிய ஒரு தலைப்பு. இந்நூலின் பிற்பகுதியில் அது குறித்த விவாதங்கள் விரிவாக வரும். ஒருவகையில் இந்து தத்துவ ஞானத்தின் சாரமான அடிப்படை விவாதமே அது சார்ந்ததுதான். இங்கு ஒரு எளிய சித்திரத்தை மட்டும் அளித்து மேலே செல்லலாம்.

எல்லா புலன்களையும் மூடிவிட்டு தனித்திருக்கும் ஒருவனில் ‘நான் இருக்கிறேன்’ என உணர்வது எதுவோ அதுவே ஆத்மா என்பதே உபநிடதங்கள் அளிக்கும் முதல்கட்ட விளக்கம். அதாவது பருப்பொருட்களால் ஆன உடலுக்குள் ஒரு ‘தன்னிலை’ குடியிருக்கிறது. தன்னை அது உணர்கிறது. ஒவ்வொரு புலனும் ஒன்றை உணர்கிறது. வெளிச்சத்தை கண்ணும், ஒலியை காதும் உணர்கின்றன.  ஆனால் இந்தத் தன்னிலையானது தான் இருப்பதை தானே உணர்கிறது. அதற்கு அதுவே புலன் ஆக உள்ளது. ஆகவே அது ‘தன்னொளி’ உடையது (சுயம்பிரகாசம்.)  என்று உபநிடதங்கள் சொல்கின்றன.

நாமே இதை உணரலாம். நமக்கு ஒருவிபத்து நிகழும்போது நம் மனம் பதறுகிறது, தப்பமுயல்கிறது. ஆனால் அந்த பதற்றம் எதிலும் பங்கேற்காமல் நம்முடைய அகம் ஒன்று அந்நிகழ்வை வேடிக்கை பார்க்கவும் செய்கிறது. ஆகவேதான் கணநேரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை நம்மால் மணிக்கணக்காக துல்லியமாகச் சொல்ல முடிகிறது. கடும் துயர் உறும்போதும், கடும் அச்சத்திற்கு ஆளாகும் போதும் மனிதன் அதையெல்லாம் அனுபவிப்பது அவனுக்கே தெளிவாகத் தெரிகிறது. அதாவது அவற்றை அனுபவிக்காமல் அவற்றை பார்த்துக் கொண்டிருக்கும் ஒன்று அவனில் உள்ளது. அதாவது அது உலக அனுபவங்களில் ஈடுபடும்போதும் கூட உலக அனுபவங்களால் பாதிப்படையாததாக உள்ளது. தன் இருப்பை தானே அது உணர்கிறது. அந்த தன்னிலை என்ன என்ற வினாவே தொன்று தொட்டு இன்றுவரை தத்துவத்தின் பெருவினாவாகும்.

அன்னையின் வயிற்றில் ஒரு சிறு தசைத்துளியாக உருவாகும் மானுட உடலானது தன்னைத்தானே உருவாக்கிக்கொண்டு தன்வழியை தானே கண்டடைந்து வெளிவருகிறது. அதாவது அந்த தசைத்துளிக்குள் கருத்து வடிவில் உள்ள அதன் சாராம்சமான ஒன்றுக்கு தன்னை உருவாக்கிக் கொள்ளும் இச்சை உள்ளது. மாபெரும் ஆலமரம் சின்னஞ்சிறு ஆலமரத்தின் விதையின் கருவில் ஒரு கருத்து வடிவில் இருப்பது போல என்று சாந்தோக்ய உபநிடதம் இதைக் குறிபிபடுகிறது. அதாவது தன்னை இப்புவியில் நிகழ்த்திக் கொள்ளும் விருப்பமும் தன்னை தான் என உணரும் தன்மையும் அதற்கு உள்ளது. இவையே கன்மமலம் என்றும் ஆணவமலம் என்றும் முறையே குறிப்பிடப்படும் இயல்புகள். இவை கருவடிவிலேயே அந்த சாரத்துக்கு உள்ளன. இவ்வியல்புகள் உடைய அதை ‘சாரமானது’ ‘அதுவானது’ என்ற பொருளில் ஆத்மா என்றனர்.

ஒர் உடலுக்குள் இருந்து கொண்டு தன்னை ‘தான்’ என உணரும்போது (அதாவது ஆணவமலம் கொள்ளும்போது) அது ஜீவாத்மா ஆக உள்ளது. இவ்வாறு பூமியில் அனைத்து உயிர்களிலும் பற்பல வடிவில் பரவி இருக்கிறது அது. அவ்வாறு பிரபஞ்சம் முழுக்க பரவியிருக்கும் ஆத்மா உண்மையில் ஒன்றே. அந்த ‘தான்’ தன்னையே பலவாக உணர்கிறது. சங்கரரின் உவமை இது. குடத்திற்குள் உள்ள வானம் சிறியது என்றும் உருண்டையானது என்றும் நமக்குப் படுகிறது. வெளியே விரிந்துள்ள எல்லையற்ற வானம் மாபெரும் வெளி என்று படுகிறது. உண்மையில் இரண்டும் ஒன்றுதான். குடம் உடைந்தால் குடத்துள் உள்ள வானம் (குடாகாசம்) பெருவெளி (மடாகாசம்) ஆகிவிடுகிறது. குடமே அதை தனியாக உணரச் செய்கிறது.

உயிர்கள் அனைத்திலும் உறையும் அதுவே பிரபஞ்சம் அனைத்திலும் உறைகிறது. பிரபஞ்சம் என்பதே அதுதான். பிரபஞ்சம் என்பதும் ஆத்மா என்பதும் அதன் பலவித தோற்ற நிலைகள் மட்டுமே. அது பிரம்மம். புகழ்பெற்ற உபநிடத ஆப்த வாக்கியங்கள் இந்த தரிசனத்தின் பல்வேறு படிநிலைகளை விளக்குகின்றன 1. பிரக்ஞையே பிரம்மம். 2. நானே பிரம்மம் 3. அது நீதான் 4. இவையனைத்திலும் ஈசன் உறைகிறான். (பிரக்ஞானம் பிரம்மாஸ்மி, அஹம் பிரம்மாஸ்மி, தத்வமஸி, ஈஸோவாஸ்யம் இதம் சர்வம்)

ஆத்மா குறித்த கிரேக்க சிந்தனை

ஆத்மா குறித்த கோட்பாடுகளில் நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டியது முதன்மையாக கிரேக்கக் கோட்பாடுகளையாகும். விரிவான ஆய்வுக்கு இது இடமல்ல எனினும் முதல் நூலான பிளேட்டோவின் குடியரசு நூலில் இருந்து சில கருத்துக்களை மட்டுமே கூறலாம். குடியரசு பத்தாம் நூலில் 473 முதலான வசனங்களில் கிளாக்கனும் சாக்ரடீசும் உரையாடும்போது சாக்ரடீஸ் நீண்ட அறவிவாதத்தின் முடிவை நெருங்குகிறார். ‘இவ்விவாதத்தால் நான் தெளிவுற்றேன் யாவருமே தெளிவு பெற்றிருக்க வேண்டும்’ என்கிறான். (கீதை பதினெட்டாம் அத்யாய இறுதியில் ஏழாம் பாடலில் கிருஷ்ணனிடம் அர்ஜுனன் இதே வசனத்தை கூறுவது கவனிக்கத்தக்கது.)

அதற்குப் பதிலாக சாக்ரடீஸ் ‘அறம் அடையும் மிக உயர்ந்த பரிசு பற்றி இதுவரை நாம் பேசவில்லை’ என்கிறார். ஆச்சரியத்துடன் ‘என்ன அதைவிட மேலானது ஒன்று உண்டா? அப்படி இருப்பின் அவையனைத்துமே நினைத்தற்கரிய பெருமையுடையதாயிருக்குமே?’ என்கிறார் கிளாக்கன். அதற்கு சாக்ரடீஸ் ‘மனிதனின் ஆத்மா அழியாயதது – அழிக்க முடியாதது என்பதை மறந்து விட்டாயா?’ என்கிறார். பெரு வியப்பு அடைந்த கிளாக்கன் ‘இல்லை! கடவுள் மீது ஆணையாக! இதை கடைசிவரை ஊர்ஜிதம் செய்ய தயாராக இருக்கிறீர்களா?’ என்று கூவுகிறார். சாக்ரடீஸ் ‘ஆம் நான் செய்தாக வேண்டும். நீயும் கூடத்தான்’ என்று கூறி மீண்டும் விவாதத்தைத் தொடர்கிறார்.

இதன் பிறகு சாக்ரடீஸ் உருவாக்கும் தர்க்கத்தின் அழகை குடியரசை வாசித்துத்தான் தெரிந்தது கொள்ள வேண்டும். சுருக்கமாக இப்படிக் கூறலாம். மண்ணில் உள்ளவை அனைத்துமே அழிகின்றன. அதற்கு காரணம் ஒவ்வொன்றிலும் உறையும் ஒரு தீய இயல்புதான். தானியத்தில் காளான் போல, இரும்பு துருப்பிடிப்பது போல, ஒரு பொருளின் அழிவானது அதிலேயே பொறிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஒரு பொருளில் அதன் அழிவுக்கான தீமை உறையாவிடில் பிறிதொன்றால் அதை அழிக்க இயலாது என்கிறார் சாக்ரடீஸ்.

உடலுக்குள் உறையும் நோய் உடலை அழித்துவிடக்கூடும். இவ்வாறு ஆத்மாவை அழிக்கும் தீங்கு உண்டா என்று சாக்ரடீஸ் வினவ கிளாக்கன் ”நேர்மையற்ற தன்மை, மிதமின்மை, கோழைத்தன்மை, அறியாமை ஆகியவை ஆத்மாவுக்குத் தீங்குகளே” என்கிறார். ”அவை ஆத்மாவை பாழடித்து உடலில் இருந்து பிரித்து விடுமா?” என்கிறார் சாக்ரடீஸ். ”நிச்சயமாக இல்லை” என்று கிளாக்கன் மறுக்கிறார். ”’ஆம், உடலை ஒரு புறப்பொருள் அழிக்கும்; அது ஆத்மாவை அழிக்க முடியாது’ என்று வாதாடுகிறார் சாக்ரடீஸ்.

”சுரமோ அல்லது மற்ற நோய்களோ, அல்லது தொண்டையில் வைத்த கத்தியோ அல்லது உடலை சுக்குநூறாக வெட்டுவதோ ஆத்மாவை அழித்துவிட முடியாது. ஆன்மாவே உடலுக்கு நேர்ந்த இக்கதியினால் அது புனிதமிழந்து போய்விட்டது என்று எண்ணிக்கொண்டால் ஒழிய” என்கிறார் சாக்ரடீஸ். ஆத்மாவைப் பீடிக்கும் வியாதிகள் உண்டு, கிளாக்கன் கூறியதுபோல. ஆனால் அவை ஆத்மாவை அழிப்பதில்லை. அப்படி அழிக்குமெனில் அந்த களங்கம் உடையவர்கள் தாங்களே அழியவேண்டுமல்லவா? ”ஆத்மாவின் இயல்பாகக் காணப்படும் இயற்க்கைக் குற்றம் அல்லது தீமை ஆத்மாவை கொல்லவோ அழிக்கவோ முடியாதெனில் மற்ற ஏதாவது ஒன்றை அழிப்பதற்காக ஏற்பட்ட எதுவும், அது எதை அழிப்பதற்காக அமைக்கப்பட்டதோ அதைத்தவிர ஆத்மாவையோ பிறிது ஒன்றையோ அழித்துவிட முடியாது” என்று சாக்ரடீஸ் வாதிடுகிறார்.

”உள்ளேயிருப்பதாயினும் சரி வெளியில் இருந்து வந்ததாயினும் சரி தீமையினால் அழிக்க முடியாத ஆத்மா எப்போதும் நிலையான ஒன்றாகும். அது எப்போதும் இருக்க வேண்டும் என்பதனாலேயே அது அழியாத ஓன்றாக இருக்க வேண்டுமல்லவா?” என்று கூறும் சாக்ரடீஸ் ”ஆம் அதுதான். உண்மையில் ஆத்மாக்கள் எப்போதும் ஒன்றாக ஒற்றைப்பேரும் விரிவாக இருக்க வேண்டும். அவை அழியாவிடில் எண்ணிக்கையில் குறையா. அவை அதிகரிக்கவும் செய்யா. ஏனெனில் அழியாத் தன்மையின் வளர்ச்சி அழியும் தன்மையில் இருந்து வரவேண்டும்…” என்கிறார்.

இவ்வாறு தர்க்கபூர்வமாக நாம் காணும் ஆத்மாவை கடற்கடவுள் ‘கிளாக்கஸ் (Glaucus)’ உடன் ஒப்பிடலாம் என்கிறார் சாக்ரடீஸ். அவரது வடிவம் அலைகளால் சிதறடிக்கப்பட்டு பாறைகளாலும் கடற்பாசிகளாலும் மூடிக் கிடப்பதனால் அவரது உண்மை உருவத்தை காண்பது மிக அரிது. நாம் காணும் ஆத்மாவும் இவ்வண்ணம் பல்லாயிரம் ‘நோய்களால்’ உருவழிக்கப்பட்டு தென்படுகிறது என்று சாக்ரடீஸ் கிளாக்கனுக்கு விளக்குகிறார்.

ஆத்மாவின் உண்மையான இயல்பை எப்படி அறிவது? இங்கு சாக்ரடீஸ் கவித்துவம் மிக்க உருவகத்திற்குப் போகிறார். ”அறிவின் மீது அந்த அணங்கு கொண்ட காதலில் நாம் அவள் இயல்பைக் காணவேண்டும். அழியாமை, முடிவின்மை, தெய்வீகத்தன்மை ஆகியவற்றுடன் உள்ள தனது உறவின் காரணமாக எந்தக் கூட்டத்தை, எந்த உரையாடலை அவள் நாடுகிறாள் என்பதைக் கொண்டு அவளை அறியவேண்டும். மேலும் உயர்ந்த கொள்கையை கடைப்பிடிக்கும் போது அவள் எப்படி ஒரு தெய்வீக உணர்வுடன் முற்றிலும் மாறுபடுகிறாள் என்றும் மகத்தான முறையில் இப்போது அவள் இருக்கும் அலைகடலில் இருந்து எப்படி வெளிப்பட்டு எழுகிறாள் என்றும் கற்கள் கிளிஞ்சல் இன்னும் அவளைச் சுற்றிப் பரவிய உலகப் பொருட்களில் இருந்தும் பாறைகளில் இருந்தும் விடுபட்டு இவ்வாழ்வின் அற்புதப்பொருட்களால் சூழப்பட்டு எப்படி நிற்கிறாள் என்றும் காணவேண்டும். அப்போதுதான் அவளது இயல்பான தன்மையைக் காணலாம்…” என்று வருணனை செய்கிறார் சாக்ரடீஸ்.

இதைத் தொடர்ந்து அர்மேனியல் என்பவனின் மகனான ‘எர்’ என்பவள் இறந்து போய் அவளது ஆத்மா சொற்கத்துக்குப்போய் அங்கு ஆத்மாக்கள் என்ன ஆயின என்பதைப் பார்த்த கதையைக் கூறி ஆத்மாக்கள் இயல்பிலேயே நன்மையை நாடுபவை. ஆனால் தீங்குகளால் பீடிக்கப்பட்டவை. அவற்றின் தீங்குகள் அவற்றை மேலும் தீங்குகளுக்கு இட்டுச் செல்கின்றன என்று விளக்குகிறார் சாக்ரடீஸ். ‘குடியரசு’ கிட்டத்தட்ட முடியும் இடம் இது. இங்கு கவனத்திற்குரியது இந்து ஞானமரபைப் போலவே அழிவற்றதும் விளக்க முடியாததுமான ஆத்மாவைப்பற்றி பேசிய அதே சாக்ரடீஸ் தொடர்ச்சியாக அதை விளக்க ஆத்மா ‘சொர்க்க’த்துக்குப்போன புராணக்கதையையும் பயன்படுத்துகிறார். ஏற்கனவே கூறியதைப் போல புராணக் கதைகளை உருவகங்கள் என்ற அளவிலேயே எக்காலமும் தத்துவ மதங்கள் கையாண்டு வந்துள்ளன.

தொடரும்..

பின்னூட்டம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s