அலையறியா கடல்:சாங்கிய யோகம்-2
ஜெயமோகன்.இன் ல் இருந்து
[கவி மழைப்பயணம்]
நிலைபெற்றவன்
ஆத்மவான் என்ற சொல்லின் செயல்தள விரிவாக்கம் ‘ஸ்திதப்பிரதிக்ஞன்’ என்ற சொல்லாகும். ஆத்மாவாக தன்னை உணர்ந்து தத்துவார்த்தமான தெளிவை அடைந்தவன் செயல்களில் ஈடுபடும்போது சிதறாத உள்ளம் கொண்டவனாக நிலைத்த பிரக்ஞை கொண்டவானக இருப்பான். அவனே நிலைபெற்றவன். கீதையில் உள்ள இக்கலைச் சொல் இந்து ஞானமரபில் பலதளங்களில் மீளமீள விவாதிக்கப்படும் ஒன்றாகும்.
இச்சொல்லுக்கு நம் மரபில் அளிக்கப்படும் இருவகை விளக்கங்களை கூர்ந்து ஆராய வேண்டியுள்ளது. நிலைபெற்றவனின் சிந்தனை நிலைபெற்றிருப்பது எதில்? வழக்கமாக கீதையில் இருந்து உதிரி வரிகளை மேற்கோளாகக் காட்டி ‘இறைவன் நிலைபெற்றிருக்கும் மனம் கொண்டவனே நிலைபேறுடையவன்’ என்று விளக்குவது நம் பக்தி மரபு.
செயல்கள் இறைவனால் விதிக்கப்பட்டவை, செயலின் விளைவுகள் இறைவனால் அளிகக்ப்படுபவை என்று தெளிந்து அனைத்துச் செயல்களையும் இறைவனுக்கு அர்ப்பணித்து செயல்படுபவனின் சிந்தனை தடுமாற்றம் கொள்ளாது, அதில் விருப்பு வெறுப்புகள் மூலம் உருவாகும் அலைபாய்தல்கள் இருக்காது. ஆகவே அவள் செயல்களும் சிறக்கும் என்று கீதை கூறுவதாக இவர்கள் கூறுவார்கள். அது உண்மை. கீதையின் செய்தியை எளியதளத்தில் அப்படி எடுத்துக் கொள்ளவும் முடியும்.
ஆனால் கீதையின் ஒட்டுமொத்த விவாதத்தை கணக்கில் கொண்டு பார்த்தால் கீதை ஆத்மாவானின் ஸ்திதப்பிரதிக்ஞை பற்றியே பேசுகிறது என்பது புரியும். மனம் நிலைபெற்றிருப்பது எதில் என்று கேட்டால் ‘ஆத்மாவே நான்’ என்ற எண்ணத்தில் என்று சுருக்கமாகக் கூறமுடியும். கீதையின் வரிகளை கூர்ந்து படிக்கும்போது வாசகர்கள் இதை அறியலாம்.
இரண்டு மையப்புள்ளிகள்
கீதையின் இந்த அத்தியாயத்தை இரு பாடல்களாக மட்டும் சுருக்குவது எளிது. சாங்கிய ஞானத்தின் மையம் பதினாறாவது பாடலில் உள்ளது. ‘இல்லாதது இருப்பாவதில்லை. இருப்பது இல்லாமலாவதில்லை’ என்பது முக்கியமான ஆப்தவாக்கியமாகும். ஒவ்வொரு களமும் பிறப்பையும் இறப்பையும் ஆக்கத்தையும் அழிவையும் காணும் மானுட மனம் அந்த முதல் தோற்றத்தில் இருந்து மேலெழுந்து ஆழத்தைக் காண்பதற்கான வழி இவ்வரி. அ¨லகளை வைத்து கடலை அகத்தில் உருவகித்துக் கொள்வது போன்றது இது.
அதேபோல யோகச் செயல்பாட்டை ஒரே பாடலாகச் சுருக்கினால் 69ஆவது பாடலை எடுத்துக்காட்டலாம். உயிர்களெல்லாம் தூங்கும் போது யோகி விழித்திருக்கிறான். உயிர்களெல்லாம் விழித்திருக்கம் இடத்தில் அவன் துயில்கிறான். விரித்துப் பேசி இவ்வழகிய வரியின் கவித்துவத்தை இல்லாமல் ஆக்க விரும்பவில்லை. யோகி வாழும் உலகமே வேறு. பிறருடன் கலந்து அவர்கள் பார்வையில் அவர்களில் ஒருவனாக அவன் வாழ்கிறான். ஆனால் அவர்கள் அன்றாடம் காணும் ஒர் உலகை அவன் காண்பதில்லை. அன்றாடம் அவர்கள் உழலும் ஒர் உலகில் அவன் உழல்வதுமில்லை. அவர்கள் அறியாத ஒர் உலகில் அவன் விழித்திருக்கிறான்.
யோகி என்ற சொல்லை அதன் உச்சகட்ட பொருளில் எடுத்துக் கொள்ளாமல் சாதாரணமாக எடுத்துக் கொண்டால் கூட இவ்வரிகளின் அர்த்தம் தொடர்ந்து விரிவடைவதைக் காணலாம். உலகின் கோடானுகோடி சாதாரண மக்களில் இருந்து வேறுபட்டு ஒருவன் சற்று தீவிரமான செயலை செய்ய ஆரம்பித்தால் கூட அவனுக்கு உரித்தான ஒர் உலகம் உருவாக ஆரம்பிக்கிறது. நாம் காணும் மாபெரும் கலைப்படைப்புகள், அறிவியல் கண்டு பிடிப்புகள் இலக்கிய நூல்கள் எல்லாம் அதன் ஆசிரியர்கள் ‘உலகம் உறங்கும்போது தான் விழித்திருந்து’ படைத்துக் கொண்ட தனி உலகில் பணியாற்றி உருவாக்கியவைதான். பிறர் வாழும் சாதாரண உலகில் அவர்கள் தூக்கத்தில் நடப்பது போலவே நடமாடுகிறார்கள். யோகம் என்பது ஒரு தூக்கமும் ஒரு விழிப்பும் கலந்த ஒன்றுதான்.
புலன் வெல்லல்
கீதையில் இப்பகுதியில் புலன்கள் மீதான கட்டுப்பாடு பெரிதும் வலியுறுத்தப்படுவதைக் காணலாம். இது ஸாங்கிய யோகம் என்பதனால் வெற்றிகரமான நடைமுறை வாழ்வுக்கு இன்றியமையாத பயிற்சியாகவே புலனடக்கம் வலியுறுத்தப்படுகிறது.
இருபதாம் நூற்றாண்டில் •பிராய்டிசம் (Frauidsm) முன்வைக்கப்பட்ட பிறகு புலன்சார் இச்சைகள் சுதந்திரமானவை என்றும், அவையே மனிதனின் இயல்புநிலை என்றும், அவற்றை கட்டுபடுத்துவதன் மூலம் மனிதனின் அகமும் ஆழமும் அழுத்தப்பட்டு அவனுடைய ஆளுமை சிதைவடைந்தது என்றும், அதன் மூலமே மனிதன் அன்னியப்பட்டு பற்பல உயிர்ச்சிக்கல்களுக்கு ஆளானான் என்றும் கூறப்படுகிறது. இக்கருத்து கிட்டதட்ட ஒரு ‘நிரூபிக்கப்பட்டு விட்ட’ உண்மை போலவே இன்று அறிவுத்துறைகளில் முன்வைக்கப்படுகிறது.
•பிராய்டிசத்தின் நம்பகத்தன்மை சார்ந்த விவாதங்களுக்குள் புக இது இடமில்லை. இருந்தாலும் இதை வாசகர் சிந்தித்துப் பார்க்கலாம். •பிராய்ட் உட்பட •பிராய்டிசக் கோட்பாடுகளைப் பற்றிப் பேசிய எவருமே புலன்சார் நுகர்வுகளை தன்போக்கில் செயல்பட முழுமையாக அனுமதித்தவர்கள் அல்ல. ஆகவே அவர்கள் மனத்திரிபுகொண்டவர்களா? மனத் திரிபுதான் பிராய்டிசம் உருவாகவே காரணமா?
நவீன இலக்கியவாதிகளில் •பிராய்ட்ய நம்பிக்கை என்பது ஒருவனாக மத நம்பிக்கை போல வேரோடியுள்ளது. குறிப்பாக என் ஆரம்பகால வழிகாட்டியாக இருந்த சுந்தரராமசாமி •ப்¢ராய்டிசம் ‘மனித மனங்களுக்குள் அடிக்கப்பட்ட வெளிச்சக்கீற்று’ என்று நம்பியவர். ‘மனச் சுதந்திரம்’ என்ற சொல்லாட்சியை அவர் அடிக்கடி பயன்படுத்துவது உண்டு. மனிதனின் உள்ளுணர்வுகள் இயல்பாக வெளிப்பாடு கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அதன்மூலம் அவளது ‘விகாசம்’ நிகழ முடியும் என்றும் அவர் கூறுவார். ஆனால் தனிவாழ்வில் புலன்கள் மீது கட்டுப்பாடு கொண்ட ஒழுக்கவாதியாகவே அவர் இருந்தார்.
பின் நவீனதத்துவ காலகட்டத்தில் சுந்தர ராமசாமி போன்ற நவீனத்துவ எழுத்தாளர்கள் •பிராய்டிசம் மீது கொண்டிருந்த கண்மூடித்தனமான பற்று குறைந்து விட்டது. பின்-நவீனத்துவ சிந்தனையாளரான ழாக் லக்கான •பிராய்டின் கோட்பாடுகளை குறியீட்டு ரீதியால்தான் காணவேண்டும் என்று கூறி விரிவான விளக்கங்கள் அளித்திருக்கிறார். ஆயினும் இன்றும் புலன்கள் மீது கட்டுப்பாடில்லாத உளச்சுதந்திரம் என்ற கோட்பாடு மீது எழுத்தாளர்களுக்கு மோகம் உள்ளது. கட்டுப்பாடுகள் அனைத்துமே தடைகள் என்றும் மீறிச் செல்லவே படைப்பூக்கம் என்றும் அவர்கள் வாதிடுகிறார்கள். தனி வாழ்வில் அப்படி மீறிச்சென்ற எந்த எழுத்தாளரும் இல்லை என்பதும் உண்மை.
தொடரும்…