அலையறியா கடல்:சாங்கிய யோகம்-3 [நிறைவுப் பகுதி]

அலையறியா கடல்:சாங்கிய யோகம்-3 [நிறைவுப் பகுதி]

ஜெயமோகன்.இன் ல் இருந்து

DSC01192

[கவி மழைப்பயணம்]

இரண்டு மனிதர்கள் எப்போது கூடிவாழ ஆரம்பிக்கிறார்களோ அப்போதே உளக்கட்டுப்பாடு தொடங்கி விடுகிறது. கூட்டாக வாழும் எல்லா உயிர்களும் உளக்கட்டுப்பாடும் படிக்க வரையறையும் அச்சமூகத்தால் வலியுறுத்தப்படுகின்றன. ஜேன் குடால் போன்ற நவீன ஆய்வாளர்கள் சிம்பன்ஸி சமூகத்தில் பலவிதமான பாலியல் கட்டுபாடுகள் உள்ளதை எடுத்துக்காட்டியுள்ளனர். பாலியல் கட்டுபாடு இல்லாத பழங்குடிச் சமூகம் ஏதும் கண்டடையப்பட்டதில்லை. அப்படியானால் •பிராய்டியக் கோட்பாடுகளை சிம்பனிஸிக்களுக்கும் போட்டுப் பார்க்கலாமா என்ன?

மனித மனம் இச்சையே வடிவானது, ஓயாது சிதறிப் பரப்பது என்று கீதை கூறுகிறது. பரந்து பரவி எல்லா முலை முடுக்குகளையும் முகர்ந்து இன்பம் இன்பம் என்று தவிக்கிறது அது. அதைக் கட்டுப்படுதாமலிருக்க மண்ணில் எந்த உயிரினத்தாலும் இயலாது. முதல் கட்டுப்பாடு உயிர்களின் உடல் விடுப்பதேயாகும். உள்ளத்தின் இச்சையில் ஒரு சிறு பகுதியைக் கூட உடலால் அடைய இயலாது. உடலுக்கு அதற்கான எல்லைகள் உள்ளன. •பிராய்ட் கூற்றுப்படிப் பார்த்தால் உள்ளத்தைக் கட்டுப்படுத்துவதைத் தவிர்க்கவே முடியாது என்பதனால் பூமியில் உள்ள எல்லா உயிர்களும் உளச் சிக்கலுக்குள் ஆழ்ந்துதான் தீரவேண்டும். இரண்டாவது தடை புறச்சூழல். ஒரு மனத்தின் இச்சை எதுவானாலும் அதன் ஈடேற்றம் என்பது பல்லாயிரம் புறக்காரணிகளைச் சார்ந்து உள்ளது. சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளாமல் எந்த உயிரும் வாழ இயலாது. மூன்றாவது கட்டுப்பாடு கூடிவாழும் பொருட்டு உருவாக்கப்படுவது.

இன்றுவரை உலகமெங்கும் புழக்கத்தில் உள்ள ஒழுக்கச் சட்டங்கள் இத்தகைய சமூகக் கட்டுபாட்டின் பல்வேறு வடிவங்களேயாகும். உலகம் முழுக்க செல்லுபடியாகும் சில ஒழுக்கங்கள் உள்ளன – உதாரணம் தாய் மகன் புணர்ச்சியை அனுமதிக்கும் சமூகமே இல்லை. சில சட்டங்கள் அந்தந்த சமூகத்திற்கு உரியவை. உதாரணம் தாய்மாமன் மருமகளை மணப்பது தமிழ்நாட்டில் பல சாதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் அது பெரும்பாபம். ஆக, ஏதோ ஒரு வகை ஒழுக்கச் சட்டம் இல்லாத சமூகம் இல்லை. ஒரு மக்கள் திரளை சமூகமாக ஆக்குவது அது தனக்கென விதித்துக்கொண்ட கட்டுப்பாடுகள் மற்றும் தன் புழக்க நெறிகள் மூலமே.

பாலியல் நெறிகளை மனித மனம் மீதான தளைச்சங்கிலிகளாகப் பார்க்கும் பார்வை மேலைநாட்டில் உருவாகி நவீனத்துவ இலக்கியம் மூலம் பிரபலமாகி, அதன் விளைவாக அந்நெறிகளைத் தளர்த்திக் கொண்ட பல சமூகங்கள் ஐரோப்பிய நாடுகளில் உள்ளன. அங்கு பாலியல் கட்டற்றதாகவும், உளச்சிக்கல்கள் அற்றதாகவும் மாறிவிட்டதா என்ன? நேர் எதிரான பதிலையே சமூகவியலாளர் அளிப்பார்கள்.

மேலை நாடுகளில் உருவான இந்த சிந்தனைப் போக்குகளை அங்குள்ள வரலாற்றுப் பின்புலத்தில், சிந்தனைப் பரிணாமப் பின்புலத்தில் வைத்துப் பார்ப்பதே சிறந்த வழிமுறையாகும். கிறிஸ்தவ மத அமைப்பு ஒழுக்க நெறிகளை இறைவனின் சட்டங்களாக பிரகடனப்படுத்தி அவற்றைக் கடுமையாக செயல்படுத்தி வந்தது. இவ்வாறு மொத்தச் சமூகமே மதத்தால் கட்டுப்படுத்தப்பட்டிருந்த மத்திய காலகட்டம் ஐரோப்பிய வரலாற்றின் இருண்டகாலம் என்று அழைக்கப்படுகிறது.

இக்காலகட்டத்தில் தனிமனிதனின் சுயசிந்தனை, ஆன்மிகமான தேடல் அனைத்தும் மதத்திற்கு எதிரான பெரும்பாலம் என்று முத்திரை குத்தப்பட்டு ஒடுக்கப்பட்டன. இதற்கு எதிராக உருவான சிந்தனை எழுச்சியே ஐரோப்பிய மறுமலர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. ஐரோப்பிய மறுமலர்ச்சி கலை, இலக்கியம், அரசியல் என்று பல தளங்களில் நிகழ்ந்த ஒரு ஒட்டுமொத்த மாற்றமாகும். தத்துவத்தில் நிகழ்ந்த ஐரோப்பிய மறுமலர்ச்சியை சுதந்திர இச்சை (free will) இயக்கம் மூலம் அடையாளப்படுத்தலாம்.

ஒரு தனிமனிதனுக்கு சுயமாகச் சிந்திக்கவும் முடிவுகள் எடுக்கவும் அதன்படி செயல்படவும் உரிமை உண்டு என்பதே சுதந்திர இச்சை இயக்கத்தின் மையக்கருத்தாகும். எந்த அடிப்படையில் அவன் தன் முடிவுகளை எடுப்பான் என்னும் வினாவுக்கு இயல்பிலேயே நலம்நாடிச் செல்லும் ஒரு தனித்தன்மை மனித அகத்தில் உறைகிறது என்றும் அதுவே மனிதப் பண்பாட்டை பல தளங்களில் வளரச் செய்து இன்று வரை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது என்றும் பதில் கூறப்பட்டது.

இவ்வாறு மனித மனத்தில் இருந்து அவனை வளர்த்து பரிணாமம் கொள்ளச் செய்யும் அடிப்படை விருப்பு என்ன என்ற வினாவுக்குப் பதிலாகவே பல்வேறு கருத்துமுதல்லாத தத்துவத்தரப்புகள் விரிவான விவாதத்தில் ஈடுபட்டன. அந்த அடிப்படை விருப்பு என்பது ஒரு தூய கருத்துநிலை என்றும் மனிதர்கள் வழியாக அது தன்னை நிகழ்த்திக் கொள்கிறது என்றும் வாதிடப்பட்டது. புறப்பொருட்களின் மாற்றம் பரிணாம வாதம் மூலம் விளக்கப்பட்டபோது இந்த அக்கருத்தின் பரிணாமமும் அதேபோல விளக்கப்பட்டது. மேலும் மேலும் மேலான ஒரு பண்பாடு நோக்கி, இன்றும் சிறந்த மானுட நிலை நோக்கி, அந்தக் கருத்து மனிதனை பரிணாமம் கொள்ளச் செய்கிறது என்று கூறப்பட்டது.

இமானுவேல் கண்ட், ஹெகல், கிர்கேகாட் பெனடிக்ட் குரோச்சே, ஹென்றி பெர்க்ஸன் என்று இந்தக் கருத்து முதல்வாதத் தரப்பை விரிவாக விவாதித்த தத்துவ அறிஞர்கள் ஏராளமானவர்கள் உண்டு. இந்த மாபெரும் தத்துவ இயக்கமே மேலை நாடுகளில் அசைக்க முடியாதபடி வேரோடியுள்ள ‘தனிமனித சுதந்திரம்’ என்ற கருதுகோளின் பின்னணிப் புலமாகும். தனிமனித சுதந்திரம் என்ற கருத்துநிலையின் அதிகமாக இழுக்கப்பட்ட அதீத நிலையே ‘கட்டற்ற புலனின்ப சுதந்திரம்’ என்பது.

இக்கோட்பாட்டை நம்புபவர்கள் ஒரு தனிமனிதனின் சுதந்திரத்தில் அரசோ, மதமோ, சமூகமோ தலையிடக்கூடாது என்றும் பிறருக்கு அது தீங்கிழைக்காத வரை தன் இன்ப வேட்கையை அவன் தனக்குப் பிரியமான விதத்தில் தீர்த்துக் கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் வாதிடுகிறார்கள்.. இன்று பல ஐரோப்பிய நாடுகளில் ஒழுக்கச்சட்டங்களுக்கு அடிப்படையாக உள்ளது இந்த நோக்கே. இது சரியா தவறா என்பதை வாசகர் தன்நோக்கில் விரிவாகச் சிந்தித்துப் பார்க்கலாம்.

என் நோக்கில் ஒரு தனிமனிதனின் இன்ப நாட்டத்தில் அரசோ, மதமோ, சமூகமோ, தலையிடக்கூடாது என்ற தனிமனிதச் சுதந்திர கோட்பாடானது தன் இன்ப நாட்டத்தை எவ்வகையிலும் அவன் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை என்ற நிலையாக விளக்கப்பட்டுவிட்டது என்பதே முக்கியமான பிழை என்று படுகிறது. விளைவாக புலன்கள் மீதான கட்டுப்பாடு குறித்துப் பேசுவதேகூட பத்தாம்பசலித்தனம் என்ற நிலை உருவாகிவிட்டது.

நித்யாவிடம் ஒரு வாகரும் நானும் நடத்திய உரையாடலை இங்கு நினைவு கூர்கிறேன். அந்த வாசகர் சிறந்த இலக்கியப்பயிற்சி உடையவர். ஐரோப்பிய இலக்கியத்தில் தனி ஈடுபாடும் ஐரோப்பிய தத்துவத்தில் ஆராய்ச்சிப்பட்டமும் உடையவர். ‘புலன் இன்பங்களை நான் ஏன் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்?’ என்று அவர் கேட்டார். ”எனக்கு  அவற்றில் தடையே இல்லை. பிறரை நான் தொந்தரவு செய்வதும் இல்லை. நான் மகிழ்ச்சியாக இருக்கும் வரை என்ன தவறு உள்ளது?”

“முதலில் உன் கேள்விக்கு ஒரு வைத்தியனாக என் பதில்” என்றார் நித்யா. “கிட்னி கெட்டுப் போய்விடும்.” நண்பர் புன்னகை செய்ததும் நித்யா தொடர்ந்தார். “இனி உளவியலாளனாக என்பதில் தவறே இல்லை. ஆனால் காம உறவில் உன்னுடைய தன்னகங்காரம் கலக்கவே கலக்காது என்று நீ உறுதி செய்துகொள்ளவேண்டும். முடியுமா?”

நண்பர், “அதெப்படி?” என்றார்.”அங்கேதான் பிரச்சினையின் வேர் உள்ளது. இதோ போகும் இந்த நாயிடம் போய் புலன்களை கட்டுப்படுத்து என்று கூறவேண்டியதில்லை. அதன் புலன்கள் அதன் உடலின் எல்லைகளாலும், சூழலாலும், பருவங்களாலும் இயல்பாகவே கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. மனிதனின் புலன் நாட்டம் இயல்பானது அல்ல. அது தன்னகங்காரத்துடன் இணைந்துள்ளது. உன் அந்தரங்கப் பகற்கனவுகளை எடுத்துப்பார். அவை காமம் மூலம் உனக்கு மகிழ்ச்சியளிக்கின்றனவா, இல்லை உன் தன்னகங்காரத்தை வருடிவிடுவதன் மூலம் மகிழ்ச்சியளிக்கின்றனவா என்று கவனி. உலகில் எழுதப்பட்ட எல்லா பாலியல் இலக்கியங்களிலும் தன்னகங்காரத்தையே சீண்டி கிளுகிளுப்பு அடைய வைக்கின்றன. அகங்காரம் காற்று. காமம் தீ. இரண்டும் இணைந்த காட்டுத்தீதான் மனிதனின் வேட்கை.”

“சிங்கத்திடம் போய் வன்முறையை தவிர்க்கும்படி உபதேசிக்கவேண்டிய தேவை இல்லை. அதன் பசிக்கு அது கொல்லும். பசியாறிய பிறகு அதன்மீது மான்குட்டி ஏறிவிளையாடினாலும் ஒன்றுமில்லை. மனிதனின் இயல்பான வன்முறையை அகங்காரம் எல்லையில்லாமல் பெருக்கி வளர்க்கிறது. இதோபோகும் இந்த விவசாயிக்கு ஹிட்லருக்குக் கிடைத்த வாய்ப்பு கிடைத்தால் இவரும் நாற்பது லட்சம் பேரை கொல்லக் கூடும்…”

நித்யா தொடர்நதார் ”மனிதனின் இச்சைகளுடன்  அவனது தன்னங்காரம் இணையும்போது அது எல்லையின்றி பெருகிவிடுகிறது. அது ஒர் அழிவு சக்தி. இச்சையைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் அதனுடன் இணைந்துள்ள தன்னங்காரத்தைக் கட்டுப்படுத்தியாக வேண்டும். கீதையில் கிருஷ்ணன் கூறுவது அதையே.”

நாங்கள் ஊட்டி குருகுலத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தோம் அப்போது. நித்யா கூறினார், ”உன்னால் பிறரது தன்னகங்காரத்தை சீண்டாமல் ஒரு உறவையாவது மேற்கொள்ள முடிந்திருக்கிறதா? கீதையில் கிருஷ்ணன் புலனடக்கம் தேவை என்று கூறுவது எதற்காகத் தெரியுமா? அது புனிதமான இறைவனின் சட்டம் என்பதற்காகவோ மூதாதையர் சொன்னது என்பதற்காகவோ அல்ல, அது மனதை அலையவிடாமல் ஒரு முகப்படுத்தவும் செயல்களைச் சிறப்பாக செய்யவும் இன்றியமையாதது என்பதற்காக மட்டும்தான்.”

புலனடக்கம் குறித்து கீதை குறிப்பிடுவதை கூர்ந்து அவதானித்தால் இவ்வாறு தொகுத்துக் கொள்ளலாம். புலன்கள் மனதை ஒருமை குலைத்து சிதறவைக்கும் இயல்புடையவை. காரணம் அவை புற உலகில் இன்பம் தேடிப் பறந்தலைகின்றன. புலன்கள் மீது கட்டுப்பாடு உருவாவதற்கு புலனறிதல்களில் இருந்து புலன்களை தடுத்தலும் விலக்கலும் முக்கியமான வழியாகும். ஆயினும் புலன்கள் அடங்குவதில்லை. ஏனெனில் புலன்கள் ஆத்மாவின் வெளிப்பாடுகள். ஆத்மாவில் அகங்காரம் குடிகொள்வது வரை புலன் இச்சைகளும் இருக்கும். புலன்களை வெல்வதற்குரிய வழி ஆத்மாவை அறிந்து ஆத்மாவில் நிலைபெற முயல்தலே.

புலன் அடக்கம் குறித்த கீதையில் கருத்தை வாசகர்கள் தங்கள் சொந்த அனுபவங்களில் இருந்து ஊகிக்கலாம். ஒரு பத்தாம் வகுப்புத் தேர்வை வெல்வதற்குக்கூட அந்த அளவிற்க்கு புலன்களை அடக்கி வென்றாக வேண்டிய நிலை உள்ளது. புலன்கள் மீது கட்டுபாடில்லாதவர்களுக்கு எதையும் செய்யக்கூடிய மன ஒருமை கைகூடுவதில்லை. என் சொந்த அனுபவத்தில் எல்லா தளங்களிலும் புலன்களை என் கட்டுக்குள் வைத்திருப்பதில் வெற்றி பெற்றிருப்பதாகவே எண்ணுகிறேன். என் வாழ்வில் பிற்பாடு நினைத்து வருந்தத்தக்க ஏதும் செய்ய நேரிடவில்லை என்பதற்கும் என் துறையில் எனக்கு கிடைத்த வெற்றிக்கும் அது காரணம் என்றும் எண்ணுகிறேன்!

பின்னூட்டம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s