ஒரு அதிர்வு இருக்குதுங்க!.1

ஒரு அதிர்வு இருக்குதுங்க!.1

ஜெயமோகன்.இன் ல் இருந்து

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம். இந்து மதத்தைப் பற்றிய உங்கள் பல ஆக்கங்கள் என் மதத்தைப் பற்றி ஓரளவு புரிந்து கொள்ளப் பெரிதும் உதவி இருக்கிறது. அதற்கு என் நெஞ்சார்ந்த நன்றி. சில விஷயங்களைப் பற்றி உங்கள் கருத்துகளைத் தெளிவுபடுத்தினால் வசதியாக இருக்கும். உங்கள் இணையதளம் முழுவதும் தேடிப்பார்த்து பதில் கிடைக்கவில்லை என்பதாலேயே இங்கே கேட்கிறேன். நீங்கள் பொதுவாகவே வைதீகம் சம்பந்தப்பட்ட பழக்கங்களைத் தேவையற்றதென ஒதுக்குவதாகவே புரிந்துகொள்கிறேன். கோவில்களை இந்து மதத்தின் குறியீடுகளாக நீங்கள் பார்க்கிறீர்கள். அங்கு நடக்கும் பூசைகளிலேயோ வழிபாட்டு முறைகளிலேயோ எந்தவிதத் திட்டவட்டமான பயன்களும் இல்லை, ஆனால் ‘அவை நம் பண்பாட்டின் நுட்பமான பன்மைத்தன்மையின் சின்னங்கள், அவை தொன்மங்கள், குறியீடுகள், அவை அளிக்கும் ஆழ்மனப்பதிவு முற்றிலும் தனித்தன்மை கொண்டது’ என்பதாகவே நீங்கள் சொல்கிறீர்கள். வீட்டில் சடங்குகளின்போது கடைப்பிடிக்கப்படும் ஆச்சாரங்களைப் பற்றியும் உங்கள் கருத்து இதுவே என நான் நினைக்கிறேன்.

தமிழ்ப் பாரம்பர்ய அறக்கட்டளையில் உங்களுக்கு அடுத்த நாள் பேசிய உமாபதி ஆச்சார்யா பேசும்போது கோவில் கட்டுமானத்தின் அடிப்படை விதிகளின்படி, கோவிலில் எந்த மூலையில் இருக்கும் சக்தி, தரை வழியாகவும், விமானம் மூலமாகவும், நேராக கர்பக்ருஹத்தில் இருக்கும் மூலவருக்கு வருவதாகவும், அதனாலேயே மூலவருக்கு அபிஷேகம் செய்த நீர் விசேஷமானது என்றார். ஜக்கி வாசுதேவின் சில புத்தகங்களில், முன்னாட்களில், கோவிலுக்குப் போன காரணமே, அங்கிருக்கும் சக்தி மூலம் நம்மை recharge செய்து கொள்வதற்கே என்ற தொனியில் எழுதப்பட்டுள்ளது. ரெய்க்கி நிபுணர்கள் இந்த சக்தியைக் கையாள்வதைப் பெரிதும் பிரபலப்படுத்துகின்றனர். கண்ணுக்குத் தெரியாத இந்த சக்தியை பற்றி, positive energy/negative energy என்பதைத் தாண்டிப் புரியவில்லை. ஒரு ரெய்க்கி நிபுணரிடம் இதைப் பற்றிக் கேட்டபோது, வீட்டில் நடைமுறையில் இருக்கும் சில ஆச்சார வழக்கங்களும், இந்த சக்தியின் தன்மைகளை அனுசரித்தே அமைக்கப்பெற்றதாகக் கூறினார். உதாரணமாக, எங்கள் வீட்டில் நெய், மற்றும் தயிர்ப்பாத்திரத்தைத் தொடுவதற்கு முன்னரும், தொட்ட பின்னரும், தண்ணீர் விட்டுக் கையைக் கழுவும் வழக்கம் இருந்தது. எந்த ஒரு பயனும் இல்லாத வெற்று ஆச்சாரமாக இது தெரிந்ததால் காலப்போக்கில் இது கை விடப்பட்டது. ஆனால் ஆச்சாரம் என்ற பெயரில் விளக்கம் கூற முடியாத பல பழக்கங்கள் இன்னும் புழக்கத்திலேயே இருக்கிறது. நல்ல நாட்களில் மாவிலை நீர் தெளிப்பது போல.

உங்கள் கருத்துக்கு இவை முரண்பட்டு இருப்பதாகவே தோன்றுகிறது. அல்லது என் புரிதலில்தான் தவறா? சடங்குகள் எல்லாமே மிஞ்சிப்போனால் வெறும் குறியீடுகள் மட்டும்தானா? எவை பயனுள்ள பழக்கங்கள், எவை ஆழ்ந்த குறியீடுகள், எவை இடைச்செருகல்களான வெற்று வைதீக ஆச்சாரங்கள் என்று பிரித்தறியக் குழப்பமாக உள்ளது. தெளிவுபடுத்த முடியுமா ?

நன்றி
கோகுல்

அன்புள்ள கோகுல்,

ஒருமுறை நித்யா கீதை பற்றிய விவாதத்தில் சொன்னதை இங்கே நினைவுகூர்கிறேன். கீதை பல யோகங்களாக வளர்ந்து செல்வது. ‘சாங்கிய யோகம் முன்வைக்கும் உலகியல்சார்ந்த விடுதலைக்குப் பல தளங்களுக்கு மேலே உள்ளது மோட்சசன்யாச யோகம். மோட்ச சன்யாச யோகத்தைத் தனக்கான பாடமாகக் கொள்ளவேண்டிய நிலையில் உள்ள சாதகனுக்கு சாங்கிய யோகத்தால் என்ன பயன்?’ என ஒரு வினா வந்தது.

‘தனிப்பட்ட முறையில் அந்தச்சாதகனுக்கு சாங்கியயோகம் தேவையில்லை. ஆனால் சாங்கிய யோகம் முதல் விரியும் பதினெட்டு நிலைகளையும் ஒன்றின் பதினெட்டு முகங்களாகப் பார்க்க அவனால் முடியவில்லை என்றால் அவனுக்கு மோட்ச சன்யாசயோகமும் புரியப்போவதில்லை’’ என்றார் நித்யா.

என்னுடைய கருத்துக்கள் இருவகையில் வெளிப்படுபவை என நான் சொல்வேன். ஒன்று, அவை என்னுடைய சொந்த வாழ்க்கை, என் சொந்தப்பயணம் சார்ந்தவை. நான் என் ஆன்மீக நம்பிக்கைக்கு, என் வழிகளுக்கு சடங்குகளை நம்பியிருக்கவில்லை. ஆசாரங்களைக் கடைப்பிடிப்பதில்லை. எனக்கு பக்திமார்க்கத்தின் சின்னங்களும் குறியீடுகளும் தொன்மங்களும் பக்திமார்க்கம் கூறும் வழியில் தேவையாகவும் இருக்கவில்லை. ஆனால் அவை ஒட்டுமொத்தமாக வகிக்கும் பங்கை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அவற்றையும் சேர்த்துத்தான் நான் செல்லும்பாதை உருவாகியிருக்கிறது என உணர முடிகிறது.

ஆகவே நான் ஒரு சந்தர்ப்பத்திலும் அவை ‘தேவையில்லை’ என்றோ ‘பயனில்லாதவை’ என்றோ சொல்வதில்லை. அவ்வாறு நீங்கள் புரிந்துகொண்டிருந்தால் அது பிழை. நேர்மாறாக அவற்றைப்புரிந்துகொள்ளும் கோணத்தில்தான் நிறையவே எழுதியிருக்கிறேன்.

இந்நிலையைப்பற்றி சுவாமி விவேகானந்தர் சொல்லியது நினைவுக்கு வருகிறது ‘நான் உருவ வழிபாடு செய்பவனல்ல. ஆனால் உருவ வழிபாடுசெய்த ஒருவரின் காலடியில் அமர்ந்தே என் ஞானத்தை முழுக்க நான் கற்றுக்கொண்டேன்’ என்றார் அவர்.

நம் மரபில் மாபெரும் ஞானிகளும் யோகிகளும் உருவ வழிபாடு வழியாக, ஆசாரங்கள் தொன்மங்கள் வழியாகவே அந்த நிலையை அடைந்தனர் என்னும்போது அதை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பவனுக்கு என்ன புரிதல் இருக்கமுடியும்? நம்மாழ்வாரையும் நாராயணகுருவையும் விட மேலானவனாக நான் என்னைக் கருதிக்கொண்டால் அதன்பின் எனக்கு என்ன மதிப்பு?

அந்த வழிமுறைகள் என்னுடையவை அல்ல என்பதே என் விளக்கம். ஒருவேளை நான் இன்னொரு காலகட்டத்தில் பிறந்திருந்தால் அவை என்னுடையவை ஆகியிருக்கலாம். இன்னொரு குருமரபை சென்றுசேர்ந்திருந்தால் அப்படி நிகழ்ந்திருக்கலாம். நான் வாழும் சூழலும் வாசிக்கும் நூல்களும் என் அடிப்படை இயல்பும் சார்ந்துதான் இந்த வழிமுறையை என்னுடையதாக ஆக்கியிருக்கிறது.

சடங்குகளும் குறியீடுகளும் தொன்மங்களும் இல்லாமல் எந்த மதமும் இல்லை. சொல்லப்போனால் ஒரு தரிசனமானது ஒரு மதமாக நிறுவப்படுவதே அவற்றின் மூலம்தான். ஒரு மதத்தை நம்புவதென்பது அச்சடங்குகள் குறியீடுகள் தொன்மங்களை நம்புவதுதான். அந்த மதத்தின் உள்ளுறையாக உள்ள தரிசனமும் தத்துவமும் அழகியலும் அவற்றில்தான் உள்ளன.

உதாரணமாக நடராஜர் சிலை இல்லாமல் சைவத்தின் பிரபஞ்ச தரிசனத்தை அல்லது சைவசித்தாந்தத்தை அல்லது சைவ அழகியலை உள்வாங்கிக்கொள்ள முடியுமா என்ன? பழங்குடி உள்ளுணர்வில் முளைவிட்டுப் பல்லாயிரம் வருடங்களாக வளர்ந்து கிளைத்து விழுதுவிட்டு வாழும் அனைத்து மெய்ஞானங்களும் தொன்மங்களாகவும் குறியீடுகளாகவும் சடங்காசாரங்களாகவும்தான் நமக்கு வந்துசேர்கின்றன. ஒருபோதும் அவற்றை நிராகரித்துவிடமுடியாது.

அவற்றை எதிர்கொள்வதில் பல கோணங்கள் உள்ளன. அவற்றை அறிவார்ந்த முறையில் அணுகி ஞானமாக உள்வாங்கிக்கொள்வது ஒரு வழி. அதையே நான் செய்ய முயல்கிறேன். அவற்றை நம்பிக்கையுடன் அணுகி அப்படியே நேரடியாக மனத்துக்குக் கொண்டுசெல்வது இன்னொரு வழி. அதையே பக்திநோக்குள்ளவர்கள் செய்கிறார்கள்.அவற்றை நுண்ணிய சடங்குகள் மூலம் அன்றாடச்செயல்களாக ஆக்கி நேரடியாக ஆழ்மனத்துக்குக் கொண்டு செல்வது தாந்த்ரீகர்களின் வழி.

ஒட்டுமொத்தமாக சடங்குகள் ஆசாரங்கள் தொன்மங்கள் குறியீடுகள் அனைத்தையும் சேர்த்து விக்ரகம் என்று சொல்வது மரபு. இப்படிச்சொல்லலாம். ஞானத்தின் வழி விக்ரகத்தை நம் மனதின் மேல்பகுதியான ஜாக்ரத் தளத்துக்கு கொண்டு செல்கிறது. பக்தியின் வழி அதை அடுத்த தளமாகிய ஸ்வப்னத்துக்கு கொண்டுசெல்கிறது. தாந்த்ரீகர்கள் அதை நேராக சுஷுப்தியுடன் உரையாடச்செய்யமுடியுமா என பார்க்கிறார்கள்.

ஆகவே விக்ரகங்கள் முதன்மையாக தாந்த்ரீகர்களுக்கே உரியவை. நம்முடைய சிலைகளும் வழிபாட்டுச்சடங்குகளும் புராணங்களும் பெரும்பாலும் தாந்த்ரீகத்தால் உருவாக்கப்பட்டவை. நம்முடைய சிற்பமரபுக்கு தாந்த்ரீகத்துடன் நெருக்கமான உறவுண்டு. சிற்பிகளும் தச்சர்களும் இன்றும்கூட பல தாந்த்ரீக மறைச்சடங்குகளைச் செய்பவர்களாகவே இருக்கிறார்கள்.

இந்த மூன்று போக்குகளும் ஒன்றுடனொன்று தொடர்பற்றவை அல்ல. சொல்லப்போனால் இந்தப்பிரிவினையே சாத்தியமில்லை என்ற அளவுக்கு அவை ஒன்றுடன் ஒன்று கலந்து ஒன்றை ஒன்று வலுப்படுத்தியிருக்கின்றன. ஞானவழியையும் தாந்திரீகவழியையும் ஓரளவு பிரித்துப்பார்க்க முடியும். பக்திவழி என்பது பிற அனைத்தையும் தன்னுள் இழுத்துத் தனக்கேற்ப மாற்றிக்கொள்ளும் ஒன்றாகவே இருந்திருக்கிறது. ஒருகோணத்தில் பார்த்தால் ஞானமரபின் நூல்களும் தாந்த்ரீக மரபின் சிலைகளும் சடங்குகளும் சேர்ந்துதான் பக்திமரபே உருவாகிவந்திருக்கிறது.

ஞானமரபைப் பொறுத்தவரை தாந்த்ரீகத்தின் சிருஷ்டிகளான விக்ரகங்கள்தான் அவர்களின் ஞானத்தை உள்வாங்குவதற்கும் விவரிப்பதற்குமான குறியீடுகளை அளிக்கின்றன. அவற்றைத் தவிர்த்து ஞானமரபின் எந்த விஷயத்தையும் சொல்லிவிட முடியாது.

சென்ற பதினைந்து நூற்றாண்டுகளாக இந்திய மண்ணில் நிகழ்ந்துகொண்டிருக்கும் மதப்பரிணாமம் என்பது பக்திமரபின் வளர்ச்சிதான். பக்திமரபு தாந்த்ரீகத்தை முழுமையாக உள்ளிழுத்துக்கொண்டது. வழிபாட்டுமுறைகளை நெறிப்படுத்தும் ஆகமங்கள், நிகமங்கள் என்னும் வகையான எல்லா நூல்களும் தாந்த்ரீகஞானத்தை பக்திக்குள் பொருத்திக்கொள்வதற்காக உருவாக்கப்பட்டவைதான்.

தாந்த்ரீகம் இடத்துக்கு இடம் காலத்துக்குக் காலம் வேறுபடக்கூடியது. பலநூறு உள்போக்குகள் கொண்டது. ஆகவே ஆகமங்கள் பெருகின. அவற்றை ஒன்றாகத் தொகுத்துப் பொதுநூல்களாக ஆக்கிக்கொண்டே இருந்தனர். இவ்வாறாக மைய ஆகமங்களும் துணை ஆகமங்களும் உருவாகின.

தாந்த்ரீக மரபு உருவாக்கிய பல்லாயிரம் குறியீட்டுச்சிலைகளும் ஆசாரங்களும் ஆகமங்கள் வழியாக பக்திமரபுக்குள் வந்தமர்ந்தன. தாந்த்ரீக தெய்வங்கள் பெரும்பாலும் பழங்குடி மரபில் உருவாகி தாந்த்ரீகத்தால் எடுத்துக்கொள்ளப்படுபவையாக இருக்கும்.பழங்குடி வழிபாட்டுமுறையில் இருந்தே தாந்த்ரீகம் முளைத்தது என்பதே அதற்கான காரணம். குமரிமாவட்டத்தில் மலைக்குடிகள்தான் தாந்த்ரீகவழிபாடுகளைச் சென்ற பல நூற்றாண்டுகளாகச் செய்து வருகிறார்கள். அவர்களுடைய குளிகன், மாதி போன்ற மலைத்தெய்வங்கள் சென்ற நூறாண்டுகளில் தாந்த்ரீகம் வழியாக பக்தி மரபுக்குள் வந்துவிட்டன. இன்றுகூட இந்தச்செயல்பாடு நடந்துகொண்டே இருக்கிறது.

இங்கே முக்கியமான சிக்கல் ஒன்று நிகழ்கிறது. நீங்கள் கேட்கும் கேள்விக்கு அடிப்படையான நம்பிக்கைகள் பிறக்கும் புள்ளி என்பது இதுவே. தாந்த்ரீக மரபு என்பது மூடுண்டது. அதை நூல்கள் வழியாக அறியமுடியாது. குருமரபாகவே அதன் ஞானம் பகிரப்படுகிறது. மிக நுட்பமான சடங்குச்செயல்பாடுகள் மற்றும் யோகவழிமுறைகள் கொண்டது அது. எல்லாவற்றையும் குறியீடாக ஆக்கிக்கொள்ளமுயல்வது அதன் வழிமுறை. தாந்த்ரீக மரபை முழுமையாகப் பின்பற்றுபவர்கள் அதற்கான தகுதியுடன் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்லது அம்மரபிலேயே தலைமுறைகளாக வாழ்பவர்கள் மட்டுமே.

நேர்மாறாக பக்தி மரபு அனைவருக்கும் உரியது. சொல்லப்போனால் பெரும்பாலும் லௌகீகத்துக்கு அப்பால் ஏதுமறியாத எளியமக்களால் ஆனது. தாந்த்ரீக மரபை பக்திமரபு உள்வாங்கிக்கொள்ள முயன்றபோது தாந்த்ரீக மரபின் குறியீடுகளும் நம்பிக்கைகளும் ஆசாரங்களுமெல்லாம் எளிமைப்படுத்தப்பட்டன.பக்தி சார்ந்த விளக்கங்களுக்கு ஆளாயின. லௌகீகமான அர்த்தங்கள் அளிக்கப்பட்டன.

தொடரும்..

பின்னூட்டம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s