அம்பேத்கரின் தம்மம்- 4 [தொடர்ச்சி]

அம்பேத்கரின் தம்மம்- 4 [தொடர்ச்சி]

ஜெயமோகன்.காம் ல் இருந்து

மேலே சொன்ன நிலையின்மை,சாரமின்மை,அறியமுடியாமை என்ற மூன்றும் ஒன்றுடனொன்று தொடர்புடையவை என்பதை சிந்தித்தால் அறியலாம். சாரமின்மையே நிலையின்மையை உருவாக்குகிறது. நிலையின்மை அறியமுடியாமையை உருவாக்குகிறது.

மனிதனின் இந்த அறியமுடியாமையை முன்னிறுத்தி மேலே சிந்தனைசெய்த பௌத்த ஞானிகள் சூனியவாதம் என்ற பௌத்ததரிசனத்தை உருவாக்கினார்கள். அதன் முதல்குரு நாகார்ஜுனர். சூனியவாதம் என்பது வெறுமைவாதம் அல்ல. அது அறியமுடியாமைவாதம்தான். தன்னை தானே விளங்கிக்கொள்ளமுடியாத நிலையையே சூனியம் என்ற சொல்லாம் பௌத்தம் சுட்டிக்காட்டுகிறது

அம்பேத்கர் இந்த அத்தியாயத்தில் மூன்று வகை நிலையின்மையை பற்றிச் சொல்கிறார்

  1. நம்மைச்சுற்றியிருக்கும் பொருளுலகின் பொருண்மையின் நிலையின்மை.
  2. நம்முடைய இருத்தலின் நிலையின்மை.
  3. நம்மைச்சுற்றியிருக்கும் அனைத்தின் தன்னிலையின் நிலையின்மை

பொருண்மையின் நிலையின்மையைப் பற்றி யோகாசாரபௌத்தத்தின் முதல்ஞானிகளில் ஒருவராகிய அசங்கர் சொல்லும் ஒரு விளக்கத்தை அம்பேத்கர் எடுத்து அளிக்கிறார். பொருண்மை என்பது ஒரு உண்மையில் ஒரு சுயநிலை அல்ல. அது ஒரு கூட்டுநிலை . நாம் இங்கே காணும் அத்தனை பொருட்களும் பல்வேறு விஷயங்களின் கலவைதான். அந்தக்லப்பின் ஒரு தருணத்தையெ நாம் பொருள் என்று கண்டுகொண்டிருக்கிறோம். அந்தக்கலவை தொடர்ச்சியாக நிகழ்ந்துகொண்டே இருக்கும் ஒன்று. ஆகவே எந்தப்பொருளும் நிறைநிலையில் இல்லை. எவையும் நிலையானவை அல்ல.

இங்குள்ள எல்லா பொருட்களும் நான்கு தனிபருப்பொருட்களின் கூட்டினால் ஆனவை. நிலம்,நீர்,காற்று, அனல். [பௌத்தம் வானத்தை ஒரு பருப்பொருளாகக் கொள்வதில்லை] அவை வானத்தின் வெளியில் ஒரு நோக்கத்துக்காக இணைந்து பொருளாகின்றன. அந்நோக்கம் அழியும்போது மீண்டும் பிரிந்து மறைகின்றன. பொருட்கள் எல்லாமே தொகைநிலைகள் மட்டுமே என்கிறார் அசங்கர்

[இங்கே நால்வகை அடிப்படைப் பருப்பொருட்களை சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும். நிலம், நீர், காற்று,அனல் என்பவற்றை பூமிமீது நாம் காணும் நான்கு பொருட்களாக புரிந்துகொள்ளக்கூடாது. பலசமயம் நம் விளக்கங்கள் அப்படித்தான் அமைகின்றன. பொருள் இருக்கச்சாத்தியமான நான்கு நிலைகளைத்தான் அவை சுட்டுகின்றன.நிலம், நீர், காற்று ,அனல் என்பவற்றை முறையே திடவடிவம், திரவ வடிவம், வாயு வடிவம், ஆற்றல்வடிவம் கொண்ட பொருண்மை என பொருள்கொள்ளவேண்டும்]

ஓர் உதாரணம் சொல்லலாம். மனிதர்கள் கூடி நிற்பதை கூட்டம் என்று சொல்கிறோம். அதை ஒரு பொருள் என்போமா? இல்லை அது ஓர் நிகழ்வு. கூட்டம் ஓர் இடத்தில் ஓரு காலத்தில் ஒரு நோக்கத்துக்காக ஒன்றுசேர்ந்திருக்கிறது. அது கூடுதல் என்ற நிகழ்வே. கூட்டம் மாறிக்கொண்டே தான் இருக்கும்.

ஆனால் அக்கூட்டத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனையும் நாம் பொருள் என்போம். யோசித்துப்பாருங்கள் , அந்த மனிதன்கூட பொருள் அல்ல. அங்கே உயிரும் உடலும் இணைந்திருக்கிறது. உடம்பின் உறுப்புகள் இணைந்து இயங்குகின்றன. ஆகவே மனிதனும் ஒரு கூட்டம்தான். ஒரு கால இடத்தில் ஒரு நோக்கத்துக்காக சேர்ந்த ஒரு நிகழ்வுதான் அவன்

அப்படியானால் அவன் உடம்பு ஒரு பொருளா? இல்லை. அது பல்வேறு செல்களின் கூட்டம். செல்கள் பொருளாகுமா? இல்லை அவை பல ரசாயனங்களின் கூட்டம். ரசாயனங்கள் பொருளாகுமா? இல்லை அவை பல்வேறு அணுக்களின் கூட்டம். அணுக்கள் பொருளாகுமா? இல்லை, அவை பல்வேறு துகள்களின் கூட்டம். துகள்கள் பொருளாகுமா? இல்லை , அவை நிக்ழ்வுகள் மட்டுமே. ஆகவே பொருண்மைநிலையாமை என பௌத்தம் சொல்வது ஏறத்தாழ பொருண்மைஇன்மை என்றுதான் என விளக்குகிறது யோகாசார பௌத்தம்.

நம்முடைய இருத்தலின் நிலையின்மையை இன்னும் நுட்பமாக விளக்குகிறது பௌத்தம். நமது நிகழ்காலத்தில் நாம் இருந்தோம், ஆனால் இப்போது இல்லை. நம்முடைய எதிர்காலத்தில் நாம் இருக்கலாம், ஆனால் இப்போது இல்லை. இப்போது நம்முடைய நிகழ்காலத்தில் மட்டுமே நாம் இருக்கிறோம். அப்போது எதிர்காலமும் இறந்தகாலமும் இல்லை.

ஆனால் நிகழ்காலமும் இல்லை. நிகழ்காலம் என்பது நிகழ்வதை நாமுணரும் ஒரு கணம் மட்டுமே. மறுகணமே அது இறந்தகாலம். எதிகாலம் இறந்தகாலமாக ஆகிக்கொண்டே இருப்பதை நாம் உணரும் ஒரு நிலை மட்டுமே நிகழ்காலம். நிகழ்கணம் என்று அதைச் சொல்லலாம். அது ஒரு சலனமாக., ஒரு நிலையின்மையாக மட்டுமே நம்மால் உணரத்தக்கது. ஒரு மனிதன் இரு கணங்களில் ஒருவனாக இருப்பதில்லை.

பொருண்மையும் மனித இருப்பும் ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டே இருப்பதன் விளைவாகவே சூழ்ந்திருக்கும் ஒவ்வொன்றிலும் நிலையின்மையில் இருக்கின்றன. ஒரு மனிதன் தான் என உணரும் தன்னிலையும் அந்த தன்னிலையைக்கொண்டு வெளியே உணரும் ஒவ்வொரு பொருளின் தன்னிலையும் மாறிக்கொண்டே இருக்கின்றன

ஜென்பௌத்தம் அற்புதமான ஒரு படிமம் வழியாக அதை விவரிக்கிறது. நதியோட்டத்தில் பிரதிபலிக்கும் வான்மேகத்தின் பிம்பமே உலகக் காட்சி.. நதி ஒரு பெரிய தொடர்மாறுதல். அந்த தொடர்மாறுதலில் கணம்தோறும் மாறிக்கொண்டிருக்கும் மேகம் பிரதிபலிக்கிறது. இரு தொடர்மாறுதல்கள் ஒரு நிலைத்த காட்சியை அளிக்கின்றன. கணநேரத்துக்கு!

உலகியலில் வாழும் சாமானியனால் இதை எளிதாகப்புரிந்துகொள்ள முடியாது என்கிறார் அம்பேத்கர். உண்மைதான். ஒரு வேடிக்கையான உருவகம் மனதிலெழுகிறது. சினிமாவில் வரும் இரு கதாபாத்திரங்கள் சினிமாத்திரையில் பேசிக்கொண்டன. ஒன்று சொன்னது “நாம் நிலையானவர்கள் அல்ல. நிமிடத்துக்கு இருபத்துநான்கு படங்கள் ஓடும் ஒரு ஓட்டத்தால் உருவாக்கப்பட்டவர்கள்”. இன்னொரு கதாபாத்திரம் பீதியுடன் சொல்கிறது. ‘அய்யோ….அதெப்படி.. நான் இதோ உன்னை என் கண்முன்னால் நிலையாகத்தானே பார்க்கிறேன்!”. கொஞ்சம் கஷ்டம்தான்!

இந்த அறியமுடியாமைதான் நாகார்ஜுனர் முதலியோரால் முன்வைக்கப்பட்ட சூனியவாதத்தின் பிறப்பிடம் என்கிறார் அம்பேத்கர். பௌத்த சூனியவாதம் என்பது மறுப்புவாதம் அல்ல. வெறுமைவாதமல்ல. அது நேர்நிலையான, ஆக்கபூர்வமான ஒரு பார்வை. அறிதலின் எல்லையை உணரும் ஒரு நிலை என அதைச் சொல்லலாம்.

ஆரம்பகால ஐரோப்பிய அறிஞர்கள் சூனியவாதத்தை வெறுமைவாதம் என விளக்கினர். அந்த விளக்கத்தை உடைத்து சரியான விளக்கத்தை அளித்தவர் ஜெர்மானிய பௌத்த மெய்ப்பொருளியளார் பேராசிரியர் குந்தர். அந்த விளக்கத்தையொட்டியே அம்பேத்கரின் சொற்களும் அமைந்துள்ளன.

அம்பேத்கர் இரண்டு முக்கியமான வரிகளைச் சொல்கிறார். சூனியம் என்ற சொல்லை வெறுமை என புரிந்துகொண்டால் மிகப்பெரிய சிக்கல்கள் உருவாகும். அது வெறுமை அல்ல. நிலையின்மையை முழுதுணரும் நிலை மட்டுமே. நிலையின்மையை உணர்வதனூடாக கிடைக்கும் வாழ்வியல் நெறி என்ன? எதனுடனும் முழுமையான பற்றுடன் இல்லாமலிருக்கவேண்டும் என்பதே.

அப்படியென்றால் அறச்செயல் என்றால் என்ன? எச்செயல் இவையனைத்தும் இவற்றை அறியும் ந்ம் தன்னிலையும் நிலையற்றவை என்ற உணர்வுடன் ஆற்றப்படுகிறதோ அதுதான். எது அந்த அறிதலின் விளைவாக உருவாகும் பற்றின்மையை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளதோ அதுதான்.

தொடரும்…

பின்னூட்டம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s