அயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறு-1

அயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறு-1

ஜெயமோகன்.இன் ல் இருந்து

jm-3

இளம் வயதில் நான் கேட்டுப்பிரமித்த மேடைப்பேச்சாளர் என்றால் கேரள சிந்தனையாளரும் மார்க்ஸியருமான பேராசிரியர் எம்.என். விஜயன்தான். கண்ணனூரில் அவரை நான் ஒருமுறை நேரிலும் சந்தித்திருக்கிறேன். விஜயன் ஒருமுறை சொன்னார் ‘மிக அதிகமான புல் தின்று மிகக் கொஞ்சமாக பால் கொடுக்கும் ஒரு பசுதான் அழகியல் என்பது’

மாடு வளர்த்தவர்களுக்கு இந்த வரி இன்னும் புரியும். மாடு பகலெல்லாம் மேய்ந்துகொண்டே இருக்கிறது. மாலையில் கைகளைக்க புல் பறித்து, கழுத்தொடிய புல் கொண்டுவந்து போட்டால் அதை அரைமணிநேரத்தில் தின்று முடித்துவிடுகிறது. இரவெல்லாம் வைக்கோல் மெல்வதும் உண்டு. தின்னாமலிருக்கும் கொஞ்சநேரத்தில் தின்றதை அசைபோட்டுக்கொண்டிருக்கும். இவ்வளவும் காலையிலும் மாலையிலுமாகக் கறக்கும் இரண்டுலிட்டர் பாலுக்காக. சின்ன வயதில் நானே பிரமித்திருக்கிறேன் அவ்வளவு பாலுக்காகவா இவ்வளவு புல்?

புல் செரித்து உடலாகி ரத்தமாகி பசுவின் ஆன்மாவாக ஆகி அதன் மடியில் கசிந்திறங்க வேண்டியிருக்கிறது. அழகியல் என்பது அதைப்போன்றதுதான். உலகவாழ்க்கை அனைத்தையும் அது அறிந்து உள்வாங்கிக்கொள்ளவேண்டும். பல்லாயிரம் உலகியல்செய்திகள், பலவகைப்பட்ட உணர்ச்சிநிலைகள், முரண்படும் கருத்துக்கள் அனைத்தையும் உண்டு செரித்து உடலாக்கி உதிரமாக்கி கொள்ளவேண்டும். அதன்பின்னரே பால் ஊறும். ஒவ்வொரு எளிய அழகியல் கொள்கைக்கு அடியிலும் மிகப்பிரம்மாண்டமான வாழ்க்கை அவதானிப்பு இருக்கிறது.

நான் பின்னர் ஒருமுறை யோசித்தேன். அப்படியென்றால் ஆன்மீகம்? நானறிந்த ஆன்மஞானிகள் பலர் மிகக்குறைவாகவே வாசித்தவர்கள். மிகமிகக் குறைவாகவே வாழ்க்கையை அறிந்தவர்கள். ஆன்மீகம் பசு அல்ல என்று நினைத்துக்கொண்டேன். அது பட்டாம்பூச்சி. மிகக்குறைவாக உண்டு மிக அதிகமாகப் பறக்கும் உயிர் அது.

ஏனென்றால் பசு செடியையே உண்கிறது. பட்டாம்பூச்சி அச்செடியில் பூத்த மலரில் ஊறிய தேனை மட்டுமே உண்கிறது. வாழ்க்கையின் சாராம்சத்தை மட்டுமே அறிந்து வண்ணச்சிறகுகளாக அதை மாற்றிக்கொள்பவரே ஆன்மீகவாதியாக ஆகிறார்.

இலக்கியத்திற்குத் தகவல்கள் கருத்துக்கள் உணர்ச்சிகள் என எல்லாமே தேவையாகின்றன. செடியின் வேரும் தண்டும் இலைகளும் என அவற்றைச் சொல்லலாம். அச்செடியில் முளைத்த மலர் என்பது அதன் கனவு. அக்கனவின் தேன் மட்டுமே போதும் ஆன்மீகத்துக்கு. அதை நாம் படிமம் என்று சொல்லலாம்.

ஆன்மீகம் வெறுமே படிமங்கள் வழியாகவே செயல்படுகிறது. அதற்கு ஒட்டுமொத்தப் பண்பாடோ, வரலாறோ, வாழ்க்கையோ தேவையில்லை. அவற்றிலிருந்து திரண்டுவந்த ஒரு படிமம் போதும். பௌத்தப்பண்பாடும் வரலாறும் சடங்குகளும் ஒரு பௌத்தமெய்ஞானிக்குத்தேவையில்லை. ஒரு வெண்தாமரையே போதும்.

ஆன்மீகத்தின் மொழி படிமங்களே. மொழியில் விளக்கப்படும் படிமங்கள் அல்ல அவை. மனதிலிருந்து மனதுக்கு, கனவிலிருந்து கனவுக்கு நேரடியாகக் கைமாறப்படும் அகத்தின் துளிகள் அவை. அவற்றுக்கு அர்த்தமளிப்பது ஆன்மீகவாதியின் கனவும் தியானமும் மட்டுமே. கல்வி அல்ல.

அந்தப்புரிதலை மறுக்கும் ஒரு வரியைக் கேரளச் சிந்தனையாளரும் வரலாற்றாசிரியருமான பி.கே.பாலகிருஷ்ணன் எழுதிய ’நாராயணகுரு- தொகைநூல்’ என்ற முக்கியமான நூலில் வாசித்தேன். ’வரலாற்றுரீதியான ஆன்மீகம்’ என்ற சொல்லை அதில் பாலகிருஷ்ணன் பயன்படுத்தியிருந்தார். நான் ஆச்சரியத்துடன் அவரிடம் கேட்டேன். அதென்ன வரலாற்று ரீதியான ஆன்மீகம், வரலாற்று ரீதியான பொருள்முதல்வாதம் போல? Historical Materialism போல Historical Spritualism என ஒன்றை முன்வைக்கிறீர்களா என்ன?

உரக்கச்சிரித்துக்கொண்டு பாலகிருஷ்ணன் சொன்னார், ‘ஆமாம்…ஆன்மீகப்பாட்டாளிகளே , உங்களுக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை, கடவுள்களைத்தவிர’ நானும் சிரித்தேன். அதன்பின் சட்டென்று தீவிரமாகி பாலகிருஷ்ணன் ஆன்மீகத்தின் வரலாற்றுப்புலம் பற்றி பேச ஆரம்பித்தார்.

ஆன்மீகம் என்பது மதம்சார்ந்ததல்ல. நெடுங்காலமாக மதங்கள் ஆன்மீகத்தைக் கையாண்டு வருகின்றன என்று சொல்லலாம். ஆன்மீகம் என்ற சொல்லை ’முழுமைநோக்கு’, ’சாராம்ச நோக்கு’ என்ற இரு அடிப்படைக்கூறுகள் கொண்டது எனலாம். வாழ்க்கையைப்பற்றிய ஒட்டுமொத்த நோக்கு ஆன்மீகத்தின் அடிப்படை. சமூகத்தை,மனிதகுலத்தை, உயிர்க்குலத்தை, பிரபஞ்சத்தை முழுக்கக் கருத்தில்கொண்டு சிந்திப்பது அது.

அச்சிந்தனையின் விளைவாக அடைந்த சாராம்சமான தெளிவையே ஆன்மீக தரிசனம் என்கிறோம். அதனடிப்படையில் வாழ்க்கையின் எல்லாக் கூறுகளையும் புரிந்துகொள்ள விளக்க ஆன்மீகம் முற்படுகிறது. ஆன்மீகத்தின் உலகியல் லாபம் என்பது அறம் என்கிறார் அம்பேத்கர், அவரது புத்தரும் அவரது தம்மமும் என்ற மகத்தான நூலில்.

ஆன்மீகத்தைப்பற்றிப் பேசுபவர்கள் இரண்டு முன்முடிவுகளின் அடிப்படையில் பேசுவதை பாலகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார். ஒன்று, ஆன்மீகம் என்பது முழுக்கமுழுக்கத் தனிநபரின் அகம் சார்ந்தது. இரண்டு, ஆன்மீகம் என்பது உலகியல் விஷயங்களுடன் தொடர்பற்றது, அல்லது அதற்கு எதிரானது. உலகியல் சார்ந்த சிந்தனைகள் மற்றும் உணர்ச்சிகளுக்கு அப்பால் ஆன்மீகம் அதன் தூய படிமங்கள் வழியாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்பார்கள் அவர்கள்.

அவ்விரு முன்முடிவுகளும் முற்றிலும் பிழையானவை என மறுத்த பாலகிருஷ்ணன் அவ்வகையான பிழைநம்பிக்கை கொண்டவர்கள் ஆன்மீகத்திற்கான தேடலில் ஆன்மீகம் மாதிரியான இன்னொன்றைக் கைதவறுதலாக எடுத்துவிடுகிறார்கள் என்றார். அதற்காகவே ஆன்மீகம் பற்றிய வரலாற்றுணர்வை முன்வைப்பதாகச் சொன்னார்.

முதல் விஷயம் ஆன்மீகம் ஒருபோதும் ஒரு தனிநபருக்குள் நிகழ்வது அல்ல. அது மனிதகுலம் தோன்றியநாள் முதலே உருவாகி வந்த அடிப்படை வினாக்களால் ஆனது.அவ்வினாக்களுக்கு மனிதகுலம் இதுகாறும் அடைந்த விடைகள் பண்பாட்டில் நிறைந்திருக்கின்றன. அவை தரிசனங்களாகவும் படிமங்களாகவும் ஒவ்வொரு தனிமனிதனைச்சுற்றியும் பரவியிருக்கின்றன. அந்தப் பெரும்பரப்பின் ஒரு துளியாக நின்றுகொண்டுதான் ஒவ்வொருவரும் தங்கள் ஆன்மீகத்தை அடைகிறார்கள்.

அந்தப் பெரும்பரப்பைக் கடல் என்று சொல்லலாம். தனிமனித அகம் என்பது அந்தக்கடலில் உள்ள மீன். அக்கடலிலேயே பிறந்து அக்கடலையே உண்டு அதிலேயே நீந்திவாழ்கிறது அது. அந்த மீனுக்குள்ளும் கடல்தான் இருக்கிறது.

இரண்டாவதாக, ஆன்மீகம் என்பது எப்போதும் மனிதவாழ்க்கையின் வினாக்களில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. ஒருபோதும் அது வாழ்க்கைக்கு அப்பால் தன் வினாக்களை எழுப்பிக்கொள்வதில்லை. பண்பாட்டிலும் வரலாற்றிலும் உள்ள வினாக்களுக்காக அது தேடுகிறது. சாராம்சப்படுத்தியும் நுண்மைப்படுத்தியும் பார்க்கும் போக்கில் அது கொஞ்சம் கொஞ்சமாக அன்றாட யதார்த்தங்களில் இருந்து விலகிச்செல்கிறது. எப்போதைக்குமான விடைகளைப்பற்றி மட்டும் பேசுகிறது. ஆனால் அதன் விடைகள் மீண்டும் அன்றாட வாழ்க்கையை நோக்கியே வருகின்றன. எந்த ஆன்மீக தரிசனமும் அறத்தரிசனமாக உருமாறி மக்களின் வாழ்க்கைக்கு வரத்தான் வேண்டும்.

பறவை மண்ணில் இருந்துதான் மேலே செல்கிறது. விண்ணின் ஒளியில் அது சுற்றிவரலாம். ஆனால் அதன் உணவு மண்ணில்தான். அதன் கூடும் குஞ்சும் மண்ணில்தான். ஆகவே அது மண்ணைத்தான் மேலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறது.

ஆகவே ஆன்மீகத்தை மண்ணில் இருந்து பிரித்து நோக்கவேண்டியதில்லை. அதை எப்போதும் பண்பாட்டின், வரலாற்றின் ஒரு நுண்ணிய நிலையாக மட்டுமே எண்ணி ஆராயவேண்டும் என்று வாதிட்டார் பாலகிருஷ்ணன்.

ஆன்மீகம் படிமங்களால் நிகழ்வது. ஆன்மசாதகனின் ஆழ்மனதில் விளைவது அது. அவனுடைய கனவாலும் தியானத்தாலும் அறியப்படவேண்டியது. ஆனால் அது ஓர் உச்சநிலையில்தான். அதற்கு முன் அவன் தன் அகத்தைப் படிமங்களால் நிறைத்துக்கொள்கிறான். அந்தப்படிமங்களை அவன் எப்படி அடைகிறான் என்பது மிகமிக முக்கியமானது

அந்தப்படிமங்களை அவன் தேர்வுசெய்கிறானா இல்லை தன்னிச்சையாக அவனுக்குள் அவை வந்து சேர்கின்றனவா என்பது முக்கியமான கேள்வி. பெரும்பாலான மனிதர்களின் அகப்படிமங்கள் அவர்களின் பிறப்புச்சூழலால், வளர்ப்பால் தன்னிச்சையாக வருபவைதான். ஒருவன் இந்துவாக கிறித்தவனாக இஸ்லாமியனாக இருப்பது பெரும்பாலும் அவனுடைய தேர்வல்ல.

ஆனால் ஓர் உண்மையான ஆன்மீகசாதகன் தன்னுடைய அகத்துக்குள் வந்து நிறையும் படிமங்களை தானே தேர்வுசெய்வான். ஓர் அறிவியலாளன் தன் சோதனைச்சாலையின் பொருட்களை எந்த அளவுக்கு கவனமாக தேர்வுசெய்வானோ , எந்த அளவுக்கு நுட்பமாக அவற்றை அறிந்திருப்பானோ அந்த கூர்மையை நாம் ஆன்மீகசாதகனிடமும் எதிர்பார்க்கவேண்டும்.

அவ்வாறு ஒருவன் தனக்குள் இருக்கும் ஆழ்படிமஅச்சுக்களையும் தன்னுள் வந்து நிறையும் படிமங்களையும் சரியாக மதிப்பிட்டு அறியவேண்டுமென்றால் அவனுக்கு அவற்றைப்பற்றிய வரலாற்றுப்புரிதல் தேவை. அந்தத் தெளிவு உடைய ஆன்மீகத்தையே வரலாற்றுரீதியான ஆன்மீகம் என்கிறேன் என்றார் பாலகிருஷ்ணன்.

ஆமாம். பட்டாம்பூச்சி தேனை அருந்துகிறது. ஆனால் தேனை அது தேடித்தேடி சேகரிக்கிறது. தேன் என அது சர்க்கரைக்கரைசலைக் குடிப்பதில்லை. தேனை மட்டும் தேடும் அந்தப் பிரக்ஞையை வரலாற்றுணர்வு என்று சொல்லலாம்

அப்படிப்பார்த்தால் நாம் நம்முடைய ஆன்மீகத்தை சரியான வரலாற்றுணர்வுடன் புரிந்துகொண்டிருக்கிறோமா என்ன? நம்முடைய பொருளியலைப்பற்றி நாம் கவலை கொள்கிறோம். அரசியலைப்பற்றி கவனமாக இருக்கிறோம். ஆன்மீகத்தைப்பற்றிப் பொருட்படுத்துவதில்லை

ஆன்மீகம் தேவையில்லை என்று நினைக்கிறோம். அப்படி ஒன்று நம்மில் இல்லை என்று எண்ணுகிறோம். ஆனால் வாழ்க்கையைப்பற்றி ஒட்டுமொத்தமாக அணுகி சாராம்சப்படுத்திக்கொண்ட ஒரு நோக்கு இல்லாத மனிதனே இல்லை. அதுவே அவனுடைய ஆன்மீகம். அந்த ஆன்மீகத்தில் இருந்தே நம்முடைய கனவுகளும், இலட்சியங்களும், அறமும் உருவாகின்றன.

அந்த ஆன்மீகம் நம்மில் எப்படி நுழைகிறது எப்படி வளர்கிறது என நாம் அறிந்திருக்கவேண்டும். அதைப்பற்றிய விவாதங்கள் நம் அறிவுச்சூழலில் மிக அரிதாகவே நிகழ்ந்துள்ளன.

தொடரும்..

பின்னூட்டம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s