ஏன் நாம் அறிவதில்லை? [தொடர்ச்சி]

ஏன் நாம் அறிவதில்லை? [தொடர்ச்சி]

ஜெயமோகன்.இன் ல் இருந்து

07092012443

[நமீபியா பயணத்தின் போது]

நான் நெடுங்காலம் நம் உயர்தொழில்நுட்பக் கல்விக்கூடங்கள் அப்படிப்பட்டவை என்ற எண்ணத்தில் இருந்தேன். ஆனால் இன்று என் வாசகர்களில் பலர் ஐஐடிகளிலும் ஐஐஎம்களிலும் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அங்கும் இதே வகையான தகவல்திணிப்புக்கல்வியே உள்ளது என்கிறார்கள். இன்னும் அதி உக்கிர தகவல்திணிப்பு, அவ்வளவுதான் வேறுபாடு. சிறுவயதிலேயே தகவல்களைத் திணித்துக்கொள்ளப் பழக்கப்படுத்தப்பட்ட மூளைகளே அவற்றுக்குள் நுழைய முடியும். அதிகமான தகவல்களைத் திணித்துக்கொண்டவர்கள் முதன்மைபெற்று அறியாமை மட்டுமே அளிக்கும் அபாரமான சுயபெருமிதத்துடன் வெளியே செல்கிறார்கள்.

அத்தகைய நிறுவனம் ஒன்றின் ஆசிரியர் சொன்னார் ’இங்கே வர்ர பையன்களை விட கிராமத்திலே உள்ள எலிமெண்டரி ஸ்கூல் பிள்ளைங்க இன்னும் கிரியேட்டிவானவங்க. இத நான் சொல்லிட்டே இருந்தேன். ஒருவாட்டி ஒரு செர்வீஸ்புரோகிராமுக்காக உண்மையிலேயே வில்லேஜ் ஸ்கூல்களுக்குப் போனப்ப அது உண்மைன்னு தெரிஞ்சுது’ . நம்மூர் அதிஉயர்அறிவியல் கல்விபெற்று வெளியேறும் பையன்கள் உலக சிந்தனையில் எங்கேதான் இருக்கிறார்கள் என்ற பரிதாபம் நம்மைப்போன்ற வரிகட்டும் பொதுமக்களுக்கு உண்டு. தகவல்களஞ்சியங்கள் குமாஸ்தா வேலைதான் செய்யமுடியும். இவர்கள் உயர்தொழில்நுட்ப குமாஸ்தாக்கள்.

படைப்பூக்கத்தின் அடிப்படைவிதி என்பது கவனிப்பதுதான் [Observation] . இன்னும் குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் அவதானிப்பு [Contemplation]. புறத்தையும் அகத்தையும் கூர்ந்து அவதானிப்பது. அதுதான் மொழியையும் படிமங்களையும் தர்க்கமுறைகளையும் அளிக்கிறது. அதுதான் சிந்தனையிலும் கலையிலும் திறப்புகளை அளிக்கிறது. அதன்வழியாகவே நாம் கருத்துக்களை அறிந்து உள்வாங்கிக்கொள்ள முடியும்.இளமையில் கற்றுக்கொள்ளவேண்டியது அதுதான். ஆனால் நம் கல்விமுறை முழுக்கமுழுக்க மழுங்கடிப்பது இந்த அவதானிக்கும்திறனையே.

இன்று நாம் பரிந்துரைக்கப்பட்ட தகவல்களை, வரையறைசெய்யப்பட்ட எல்லைக்குள் மொத்தமாக மூளைக்குள் ஏற்றிக்கொள்வதையே கல்வி என்று நினைக்கிறோம். அது கல்வி அல்ல. ஒருவகையில் கல்விக்கு எதிரானது. ஒருதுறையின் ஆரம்பத்தைக் கற்றுக்கொள்ளும்போது அந்த மனப்பாடம் ஓரளவு உதவலாம். அப்போதுகூட தீவிரமான விருப்புடன் உள்வாங்கப்படவில்லை என்றால் அவை காலப்போக்கில் மங்கி மறைந்துவிடும். ஆனால் அடுத்தகட்டத்தில் அவை பெரும் சுமைகள்

அவதானிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட விதத்தில் நிகழ்வது அல்ல. எப்போதும் பிரக்ஞை விழித்திருப்பதுதான். உள்ளும் புறமும் அது கவனம்கொண்டிருப்பதுதான். அது ஓர் ஆளுமையின் அடிப்படை இயல்பாக ஆகியிருக்கும். முக்கியமான கலைஞர்கள், சிந்தனையாளர்கள் அனைவரிடமும் இந்த இயல்பைக் காணலாம். அறிவுத்துறையில் செயல்படக்கூடிய அனைவரிடமும் ஏறியோ இறங்கியோ இவ்வியல்பு இருந்தாகவேண்டும்.

இந்த அவதானிப்புநிலையைப்பற்றித்தான் நான் கவனப்படுத்த விரும்புகிறேன். இதை எப்போதேனும் உணர்ந்தவர்களால் நான் சொல்வதைப்புரிந்துகொள்ளமுடியும். மற்றவர்களுக்குச் சொல்லிப்பயனில்லை. இந்நிலை இதற்கான சில விதிமுறைகளையும் ஒழுங்குகளையும் கொண்டது. சில நுட்பமான பாவனைகளால் ஆனது.

உதாரணமாக, இயற்கையை அவதானிக்கும் ஒருவன் அதில் ஒருபகுதியாக தன்னை உருவகித்துக்கொள்வான். அதில் கரைந்து லயிப்பதாக மாறுவான். கூடவே அவனுள் உள்ள ஒரு நுண்ணிய அகப்புலன் அவன் அடைவனவற்றை விலகிநின்று கவனித்துக்க்கொண்டுமிருக்கும். ஒருபோதும் அவன் இயற்கையைக் குலைக்க மாட்டான். அதை ‘நுகர’வும் முயலமாட்டான். இயற்கையில் தன்னைத் துருத்தி நிறுத்திக்கொள்ள மாட்டான்.

அவ்விதம் இயற்கைக்குள் நுழைய ஒவ்வொருவரும் ஒரு வழியைத் தேர்ந்தெடுக்கலாம். ஒருவர் நிலக்காட்சி ஓவியங்களை வரையலாம். ஒருவர் பறவைஆராய்ச்சி செய்யலாம். ஒருவர் மலையேறலாம். ஒருவர் மரங்கள் மேல் குடில்கட்டி வாழலாம். முடிவிலா சாத்தியங்கள்.

அத்தகைய அவதானிப்பு என்பது உண்மையில் பெரும்பரவசநிலை. படைப்பூக்கநிலையே மனிதனின் உச்சகட்ட இன்பம் . அவதானிப்பு என்பது அகவயமான படைப்புநிலைதான். அதை அடைந்தவன் அதையே மீண்டும் இலக்காக்குவான். அந்நிலையில் இயற்கையை அறிந்தவனுக்கு இயற்கையே பேரின்பம் அளிக்கும்.அது அளிக்கும் இன்பத்தை எந்தக் கேளிக்கையும் எந்த போதையும் அளிப்பதில்லை.இயற்கைக்கும் தனக்கும் நடுவே வரும் எதையும் அவன் தொந்தரவாகவே கருதுவான். தன் பிரக்ஞை முழு விழிப்பில் இருந்து அதை ஒரு அணுகூட தவறாமல் அள்ளிவிடவே எண்ணுவான்.

அதை உணரமுடியாதவர்களுக்கு இயற்கையை எப்படி ‘என்ஜாய்’ செய்வதென்று தெரிவதில்லை. ஆகவேதான் இயற்கையின் மடியில் பாட்டு போட்டுவிட்டுக் குத்தாட்டம்போடுகிறார்கள். விரிப்பை விரித்து அமர்ந்து சீட்டாடுகிறார்கள். விதவிதமாக சமைத்து உண்டு ஏப்பம் விடுகிறார்கள். மூக்குமுட்டக் குடித்துவிட்டு சலம்புகிறார்கள் , வாந்தி எடுக்கிறார்கள். கூச்சலிட்டு அரட்டை அடிக்கிறார்கள். விளையாடுகிறார்கள். ஒருவழியாக ’ஹலிடே’ யை ‘எஞ்சாய்’செய்துவிட்ட நிறைவில் திரும்பித் தங்கள் கொட்டடிகளுக்குச் செல்கிறார்கள்.

இங்கே இயற்கை என்று சொல்வதை உலகம் என்றே மாற்றிக்கொள்ளலாம். அன்றாட வாழ்க்கையின் எல்லாத் தளத்துக்கும் நீட்டிக்கலாம். இந்த அவதானிப்புநிலையே ஒருவனின் அகத்துக்குள் அவனுடைய கலைக்கும் சிந்தனைக்குமான கச்சாப்பொருளை நிரப்புகிறது. இது இல்லாதவர்களை நாம் தொடர்ந்து பார்ப்போம். வாசித்துக்குவித்திருப்பார்கள். ஆனால் நான்குவரி எழுதினால் சப்பையாக செத்து கிடக்கும் அந்த மொழி. வெற்றுத்தகவல்களுக்கு அப்பால் எதுவுமே இருக்காது. உள்ளே நுழையாது. அறிவார்ந்த மலட்டுத்தன்மை என்றே இதைச் சொல்லமுடியும்.

நீங்கள் சொல்லும் மூன்றையும் ஒரேசொல்லில் அவதானிப்பு என்று வரையறைசெய்யலாம். அவதானிப்பு உடையவன் அவனுக்கான சில சுயக்கட்டுப்பாடுகள் , சுயமான சில வழிகள் கொண்டவனாக இருப்பான். அவனுடைய அவதானிப்புகளுக்கான வெளியாக ஒரு படைப்புலகைக் கண்டுகொண்டிருப்பான்.

ஆனால் நம் மாணவர்களிடம் இது உருவாவதேயில்லை. அவர்களால் தங்களைக் கூர்ந்து பார்க்கமுடிவதில்லை. எனவே வெளியே இருந்து எதையும் உள்வாங்கவும் முடிவதில்லை. விளைவாகப் புறவியல்பாளர்கள் [Extravert] உருவாகிறார்கள். புறவுலகில் உள்ள அன்றாட விஷயங்களை மட்டுமே உணரக்கூடிய ,அதில் மட்டுமே ஈடுபடும் ஆற்றல்கொண்டவர்கள் இவர்கள். இன்றைய உலகியல்சூழலில் இவர்களுக்கு அதிக பொருளியல் வெற்றிகள் சாத்தியமாகின்றன. இவர்களே இளைஞர்களின் முன்னுதாரணமாக இருக்கிறார்கள்.

சமூகப்பின்னணி காரணமாகவும், சொந்தஆளுமை காரணமாகவும் தொடர்புறுத்தலிலும் பழகும் முறையிலும் குறைபாடுள்ள அகவியல்பாளார் [Introvert] பலர் நம்மிடையே உண்டு. அவர்களும் இந்தப் புறவியல்பாளர்களைக் கண்டு இவர்களை நகலெடுக்க செயற்கையாக முயல்கிறார்கள். பலசமயம் உற்சாகத்திலோ போதையிலோ அதீதமாகப் போகிறவர்கள் இவர்கள்தான். இந்த இருவகையினரைதான் நான் பொதுவாக நம் இளைஞர்களிடம் காண்கிறேன். விதிவிலக்குகள் நம் கண்ணுக்குத்தெரியாத அளவுக்கு மிகச்சிலர்தான்.

வாழ்க்கையைப்பற்றி, சூழலைப்பற்றி எந்த சுயமான அவதானிப்புகளும் இல்லாதவர்கள் பெரும்பாலானவர்கள். ஆகவே இன்னொரு அவதானிப்பை உள்வாங்கிக்கொள்ளும் ஆற்றலும் அற்றவர்கள். கடும் உழைப்பால் நிறைய தகவல்களைக் கற்கிறார்கள். அவற்றைப்பயன்படுத்தி உழைத்துப் பணமீட்டுகிறார்கள். படைப்பூக்கமற்ற உழைப்பு கடும் சலிப்பை உருவாக்குகிறது. ஆகவே அந்தப்பணத்தை அச்சலிப்பைத் தீர்க்கச் செலவழிக்கிறார்கள். அதற்காகக் கேளிக்கைகளை நாடுகிறார்கள். இயற்கை, கலைகள் எல்லாமே அவர்களுக்குக் கேளிக்கைதான். அவற்றை எப்படி அணுகுவதென்பது அவர்கள் அறியாதது. ஆகவே அவற்றில் ஏறி மிதித்துக் கொண்டாடுகிறார்கள்.

கிழக்கின் பழைமையை இழந்து மேற்கின் நவீனத்தையும் அடையாமல் மொண்ணையான லௌகீகமாக மட்டும் ஆகிப்போன நம் சமகாலப் பண்பாடு உருவாக்கிய விளைவுகள் இவர்கள். ஆகவே பரிதாபத்துக்குரியவர்கள்.

பின்னூட்டம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s