தீராநதி நேர்காணல்- 2006 : 1

தீராநதி நேர்காணல்- 2006

ஜெயமோகன்.இன் ல் இருந்து

IMG_5508-1[தெங்குமராட்டா பயணம்]

எழுத்தாளர் ஜெயமோகன் தற்காலத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான ஒரு ஆளுமை. இவரது ”விஷ்ணுபுரம்” நாவல்,தமிழ் நாவல் உலகத்தைப் புதிய திசையில் திருப்பிய ஒரு படைப்பு. இந்தியக் காவிய மரபின் வளமைகளையும் அழகுகளையும் உள்வாங்கி எழுதப்பட்ட பெரும் நாவல். பெரும் சர்ச்சைகளுக்கும் உள்ளான நாவல் இது. ”ரப்பர்”, ”பின்தொடரும் நிழலின் குரல்”, ”கன்னியாகுமரி”, ”ஏழாம் உலகம்” ஆகியவை ஜெயமோகனின் மற்ற குறிப்பிடத்தகுந்த நாவல்கள். நாவல்கள் மட்டுமல்ல. ஜெயமோகனின் சிறுகதைகளும் விமர்சனக் கருத்துகளும்கூடத் தற்கால இலக்கியப் பரப்பில் தவிர்க்க முடியாதவை. இவரது சிறுகதைகள் மற்றும் குறுநாவல்களின் மொத்தத் தொகுப்பை ”உயிர்மை” பதிப்பகம் வெளியிட்டுள்ளது. விமர்சன நூல்களை ”தமிழினி” பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இனி ஜெயமோகனுடனான நேர்காணல்.

தீராநதி:- புதிதாக நீங்கள் எழுதி வெளிவரவிருக்கும் ”கொற்றவை” காப்பியம் குறித்துச் சொல்ல முடியுமா? அது செய்யுள் நடையில் எழுதப்பட்டுள்ளதா என்ன?

ஜெயமோகன்:- ”கொற்றவை” காப்பியம் அல்ல. புதுக்காப்பியம் அது நான் சூட்டிய அடையாளம் அல்ல. அப்படி அடையாளமிடுவது எனக்கு உவப்பானதுமல்ல. அது என் பதிப்பாளர் ”தமிழினி” வசந்தகுமார் சூட்டிய அடையாளம் .அதை நாவல் எனக்கருதி வாசிக்க ஆரம்பிக்கும் வாசகன். அதன் மொழியை எதிர்கொள்வதில் குழப்பத்தை அடையக்கூடும் என்பதனால், அப்படி ஒரு தனி அடையாளம் தேவைப்படுவதாக அவர் எண்ணுகிறார்.

அது புதுக்காப்பியம் ஆதலினால், கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் இடையேயான இடைவெளியும் உறவும்தான் அதற்கும் காப்பியத்திற்கும் இடையே உள்ளது. ”கொற்றவை” செய்யுள் வடிவில் அமைந்த நூல் அல்ல. செய்யுள் வடிவம், அச்சு ஊடகம் வந்ததுமே காலாவதியாகிவிட்டது என்றே நான் எண்ணுகிறேன். செய்யுள் வடிவங்கள், இலக்கியம் அதிகமும் ”கேட்கப்பட்ட” ஒரு காலகட்டத்திற்கு உரியவை. உலகமெங்கும் அப்படித்தான். முன்னரே வகுக்கப்பட்ட தாளத்தில் அமைந்த வரிகள். பாடுவதற்கும் நினைவில் நிறுத்திக் கொள்வதற்கும் உகந்தவை என்பதனால், அவ்வடிவம் உருவாகி நிலைபெற்றது. இது நம் மரபில் தெளிவாகவே காணக்கிடைக்கிறது. இன்றைய வாசிப்பு செவிநுகர்வு அல்ல. அக வாசிப்பு. கண்ணே இன்றைய வடிவத்தைத் தீர்மானிக்கிறது. அச்சுத்தொழில் நுட்பம் வடிவங்களை உருவாக்குகிறது. புதுக்கவிதையின் இன்றைய வடிவம் அச்சுமுறையால் வடிவமைக்கப்பட்டது என்பதைக் காணலாம். பத்தி விடுதல், வரிகளை இடைவெளி விடுதல், சரிந்த எழுத்துக்கள், தடித்த எழுத்துக்கள் என பற்பல வடிவக்கூறுகள் இப்போது உருவாகியுள்ளன. நாளை மின் ஊடகங்கள் முக்கியத்துவம் பெறுமானால் அதற்கேற்ற வடிவங்கள் உருவாகலாம். இப்போதே சுட்டி கொடுத்தல். படங்களை இணைத்தல் போன்றவை மூலம் செறிபிரதி (Hyper Text) வடிவங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன.

”சிலப்பதிகாரம்” காப்பியம் செய்யுளில் அமைந்தது. செவிக்கு இன்பம் அளித்து கருத்தைக் கவர்வது அது. ஆனால் புதுக்கவிதையைப் போலவே ”கொற்றவை”யும் அச்சு ஊடகத்தின் மூலம் உருவாக்கப்பட்ட வடிவம். இது செவிநுகர் கனி அல்ல. கண்ணில் புகுந்து கருத்தைத் தீண்டுவது.

தீராநதி:- அப்படியானால் ஏன் அதை நாவல் என்று சொல்லக்கூடாது? ஏன் காப்பியம் எனவேண்டும்?

ஜெயமோகன்:- நாவல் என்ற பொது வடிவத்தில் இதை தாராளமாகப் பொருத்தலாம். நாவல்கள் இன்று எத்தனையோ வடிவங்களில் வருகின்றன. வாழ்க்கை வரலாறு வடிவ நாவல்கள். ஆய்வுக்கட்டுரை வடிவ நாவல்கள். அகராதி வடிவ நாவல்கள்…. ”கொற்றவை”க்கும் அவற்றுக்கும் இடையேயான தூரம்தான். அவை புனைவின் மொழியில் உள்ளன. ”கொற்றவை” புதுக்கவிதையால் உருவாக்கப்பட்ட மொழியில் உள்ளது. அதாவது கவிதைக்குரிய தனிமொழியில் (meta language) உள்ளது.

இவ்வேறுபாட்டை நாம் ஓரளவு வகுத்துக் கொள்ள முடியும். ஒரு படைப்பின் புனைவு மொழியானது, ஒன்றை சொல்லும்போது ஒட்டு மொத்தமாக ஒரு மனப்பதிவை உருவாக்குகிறது. இதை நாம் பிரதி (text) என்கிறோம். அம்மனப்பதிவின் வழியாக நாம் அதற்கு அடுத்த கட்டங்களை ஊகிக்கிறோம். இவ்வாறு ஊகிக்கும் அர்த்த தளங்களையே நாம் ஆழ்பிரதி (Sub text) என்கிறோம். நாவலின் ஆழ்பிரதி அதன் கூற்றுகளுக்கு அடியில் உள்ளது. ஆனால் கவிதையின் ஆழ்பிரதி அதன் சொற்களுக்கு இடையே மறைந்துள்ளது. சொற்களையெல்லாம் குறியீடுகளாக ஆக்கிவிடுகிறது கவிதை. உருவகங்கள், படிமங்கள் மற்றும் பிற குறிப்புறுத்தல்கள் மூலம் இதைச் செய்கிறது. ஆகவேதான் புனைவின் மொழியைவிடக் கவிதை மொழி செறிவானதாக உள்ளது. இதைக் கவிதையின் தனிமொழி (meta language) என்கிறோம். அதாவது, புனைவுமொழியை அது எதைச்சொல்கிறது என்பதற்கு முதன்மைக்கவனம் கொடுத்து வாசிக்கிறோம். கவிதைமொழியை அது எப்படிச்சொல்கிறது என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வாசிக்கிறோம்.

”கொற்றவை” கவிதையின் தனிமொழியில் எழுதப்பட்டது. அதை புனைவாக எண்ணி வாசிக்கும்போது அதன் உண்மையான ஆழ்பிரதிகளைத் தவறவிட்டுவிடுவோம். ஆகவேதான் அதைப் புதுக்காப்பியம் என்று சொல்லவேண்டிய தேவை உருவாகிறது. கவிதை என எண்ணி இதை வாசியுங்கள் என்ற விண்ணப்பம்தான் அந்த அடையாளப்படுத்தல்.

தீராநதி:- இன்றைய நவீன இலக்கியச்சூழலில் ஒரு புதுக்காப்பியம் எழுதும் எண்ணம் ஏற்படக் காரணம் என்ன? இது பின்னால் திரும்பிச் செல்லும் முயற்சியா?

ஜெயமோகன்:- இல்லை. இது முன்னால் செல்லும் முயற்சி. நவீனத்துவம் நமக்கு சில இலக்கிய வடிவங்களை உருவாக்கி அளித்துள்ளது. சிந்தனையாலும் உள்ளுணர்வாலும் உணர்ச்சிகளாலும் செறிவூட்டப்பட்ட, அழுத்தமான வரிகளால் ஆன, கச்சிதமான வடிவமே நவீனத்துவம் முன்வைக்கும் இலட்சிய இலக்கியப் படைப்பாகும் அசோகமித்திரனின் ”விடுதலை.” ”இன்னும் சில நாட்கள்” போன்ற குறு நாவல்கள். ஜி நாகராஜனின் நாவலான ”நாளை மற்றும் ஒரு நாளே. சுந்தர ராமசாமியின் ஜே. ஜே. சிலகுறிப்புகள் போன்றவை தமிழில் இதற்குச்சிறந்த உதாரணங்கள்.

நவீனத்துவத்திற்குப் பின்பு அவ்வடிவம் உருவாக்கிய வட்டத்துக்கு வெளியே உள்ள விஷயங்கள் என்னென்ன என்ற தேடல் ஏற்பட்டது. இருவகையில் மீறல்கள் முயற்சி செய்யப்பட்டன. ஒன்று செறிவே இல்லாமல் முடிந்தவரை தட்டையான மொழியில் கதைகளை உருவாக்குவது. வெற்று மொழிபு [Zero point narration] என இது அழைக்கப்படுகிறது. இதழியல் அறிக்கை போலவோ. நாட்குறிப்பு போலவோ எழுதும் முயற்சிகள் உருவாயின. இதில் பலவகை எழுத்துக்களைக் கலந்து பார்ப்பது முயற்சி செய்யப்பட்டது தமிழில் பிரேம் – ரமேஷ் இவ்வகைப் புனைவை முயன்றிருக்கிறார்கள். இன்னொன்று நவீனத்துவத்தில் இருந்த கட்டுப்பாட்டை உதறி கற்பனையில் கட்டற்று சஞ்சரிப்பது. கற்பனை மூலம் வரலாற்றையும் மரபிலக்கியங்களையும் தொன்மங்களையும் புராணங்களையும் எல்லாம் மீண்டும் புனைந்து பார்ப்பது இவ்வகையில் பலவிதமான முயற்சிகள் தமிழில் நடந்துள்ளன. கோணங்கி நாட்டார் கதைகளை மறுபுனைவு செய்திருக்கிறார். நான் விஷ்ணுபுரத்தில் புராணமரபை மறுபுனைவு செய்திருக்கிறேன். எஸ்.ராமகிருஷ்ணன் உபபாண்டவத்தில் அதைச் செய்திருக்கிறார். கொற்றவையும் இப்படிப்பட்ட ஒரு முயற்சியே.

தீராநதி:- அதற்குக் காப்பிய வடிவத்தை ஏன் தேர்வு செய்தீர்கள்?

ஜெயமோகன்:- நான் புதிய வடிவங்களுக்காக முனைந்து தேடுவதும் சோதனை செய்து பார்ப்பதும் இல்லை. அதில் எனக்கு நம்பிக்கை இல்லை.என் மனம் இயல்பாகவே மனித வாழ்க்கையின் அடிப்படைக் கேள்விகளைச் சார்ந்து இயங்குவது.அன்றாட வாழ்க்கையைப் பற்றிப்பேசும்போதும் எப்போதைக்கும் உரிய வினாக்களாக அதை மாற்றியபடியே நான் எழுதுகிறேன். ஆகவே முழுமை, அறம், உறவு, மரணம் என சில மையங்களைத் தொட்டு நகர்பவை என் ஆக்கங்கள். அவற்றை நாம் இன்றை மட்டும் கணக்கில் கொண்டு பேசிவிடமுடியாது. அவை நம் இறந்த காலத்தில் இருந்து நமக்கு அளிக்கப்பட்டவை. நம்மால் அடுத்த தலைமுறைக்குக் கொடுக்கப்படுபவை. இவ்வாறு அடிப்படைக் கேள்விகளை முக்காலத்துக்கும் விரித்துக் கொள்ளும்போது தத்தவமும் வரலாறும் உள்ளே வந்துவிடுகிறது. தத்துவமும் வரலாறும் ஊடாடாத பெரும்படைப்பு இருக்க இயலாதென்றே நான் எண்ணுகிறேன்.

நம் மரபில் தத்துவம் வரலாறு உள்மன எழுச்சி ஆகியவை ஒருங்கிணையும் புள்ளி என்பது காப்பியமேயாகும். சங்கக் கவிமரபில் இவை தனித்தனித் துளிகளாக வெளிப்பட்டன. பௌத்தம், சமணம் மூலம் பெரும் தத்துவங்கள் இங்கு வந்தபோது ஒட்டுமொத்தமாகத் தொகுத்து நோக்கும் முறை உருவாயிற்று. காப்பியங்கள் அவற்றின் விளைவுகள், அவற்றில் தத்துவம், அரசியல், அறிவியல், வரலாறு ஆகியவை வாழ்க்கையுடன் சேர்த்து தொகுத்து ஆராயப்படுகின்றன.

இன்று மீண்டும் அடிப்படை வினாக்களை ஒட்டுமொத்த மானுடவாழ்க்கையைக் கணக்கிலெடுத்துக் கொண்டு ஆராயும்போது காப்பியம் போன்ற வடிவங்கள் தேவையாகின்றன. ஆனால் ஒரு வேறுபாடு உள்ளது. ஒரு மையத்தை ஆழமாக வலியுறுத்துபவை காப்பியங்கள். சிலம்பு,அறம் கற்பு என்ற மையங்களை நிலைநாட்டும் காவியம்.இன்றைய இலக்கியம் எதையும் வலியுறுத்துவதில்லை. ஏற்கனவே வலியுறுத்தப்பட்டவற்றைப் பிரித்து ஆராய்கிறது அதற்குரிய வடிவம்தான் புதுக்காப்பியம் என்று சொல்லலாம் அது காப்பியத்தையே பிரித்து ஆராய்ந்து புதுவகையில் அடுக்கிப்பார்க்கும் முயற்சி.

பின்னூட்டம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s