தீராநதி நேர்காணல்- 2006 : 3

தீராநதி நேர்காணல்- 2006

ஜெயமோகன்.இன் ல் இருந்து

IMG_5553[தெங்குமராட்டா]

தீராநதி:- தற்கால தமிழ்க் கவிதைப் போக்கு குறித்த உங்கள் விமரிசனம்?

ஜெயமோகன்:- கவிதை, என் நோக்கில் உலகியலுக்கு அப்பாற்பட்ட ஒரு மன எழுச்சி. அன்றாடவாழ்க்கையை நாம் நம் உணர்வுகள் மற்றும் தேவைகள் சார்ந்து துண்டுதுண்டுகளாக அறிகிறோம். கவிதை, ஒட்டுமொத்தமான முழுமையான ஓர் அறிதலுக்காக முயல்கிறது. கைவிளக்கின் ஒளியால் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் காட்டை, மின்னலின் ஒளியால் காட்டித் தருகிறது. இதையே ஆன்மீகக் கூறு என்கிறேன். கவிதையின் ஆன்மீகமே அதை கவிதையாக ஆக்குகிறது. ஆகவே உலகியல் சார்ந்த மன எழுச்சிகளை நான் முக்கியமான கவிதையாக எண்ணுவதில்லை. உலகியல் சார்ந்த மனத்தூண்டல்களைக்கூட நல்ல கவிதை ஆன்மீக தளத்துக்குக் கொண்டுபோகும். ஒரு பெண்ணின் உதடுகளின் அழகைப் பற்றிய ஒரு கவிதை தன் கவித்துவ உச்சத்தை அடைகையில் பெண் மீதான ஆணின் ஈர்ப்பை, பூமி முழுக்கப் படர்ந்திருக்கும் உறவுகளின் வலையை அழகு என்ற கருத்தாக்கத்தை, அழகைத்தேடும் மனதின் உள்ளார்ந்த தாகத்தை எல்லாம் தொட்டு விரிந்தபடியே செல்லும்.அப்போதுதான் அது கவிதை.

நான் கவிதையை நேற்று இன்று எனப் பிரித்துப் பார்ப்பதில்லை. என் நோக்கில் இன்றைய கவிதை கபிலனுக்கும் பரணருக்கும் தொடர்ச்சிதான். நம் மாபெரும் மரபுடன் இணையும் தகுதிகொண்ட கவிதையை நாம் அப்படி எளிதாக எழுதிவிட இயலாது. அது நம் வழியாக நிகழ வேண்டும். நாம் நம்மை அதற்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்.

நம் புதுக்கவிதையில் பெருமை கொள்ளத்தக்க சாதனையாளர்கள் உள்ளனர். பிரமிள், தேவதேவன் ஆகியோர் அவர்களில் முதன்மையானவர்கள் என்பது என் விமர்சன முடிவு. அதை விரிவாக விவாதித்தும் உள்ளேன். அபி, கலாப்ரியா, ஞானக்கூத்தன், ஆத்மாநாம், சுகுமாரன், ராஜ சுந்தரராஜன் போன்று பலர் முக்கியமான கவிதைகளை எழுதியிருக்கிறார்கள். கவிஞர்கள், பொதுவாக சுடர்விட்டுத் தங்கள் எரிபொருள் தீர்ந்ததும் அணைவது வழக்கம். அது எங்குமே அப்படித்தான். இன்றைய கவிஞர்களில் பிரேம், மனுஷ்யபுத்திரன், எம்.யுவன் போன்றவர்கள் முக்கியமானவர்கள். யூமா வாசுகி போன்றோர் தொடங்கி எரிந்து அணைந்துவிட்டனர். அமலன் ஸ்டேன்லி, பிரான்ஸிஸ் கிருபா, மோகனரங்கன் போன்றோர் அவ்வப்போது ஒளிர்கின்றனர்.

நம் கவிதைக்கு ஓர் அழியாத் தொடர்ச்சி உள்ளது. ஆனால் அது சில காலங்களில் மட்டுமே கொழுந்துவிட்டெரிந்துள்ளது. மற்றகாலங்களில் கைக்குள் அகல்சுடர் போலத்தான் இருக்கிறது. ஒரு சூழலில் நல்ல கவிதை உருவாவது என்பது உண்மையில் கவிஞர் கைகளில் இல்லை. அச்சமூகத்தின் ஒட்டுமொத்தமான ஆன்மீக எழுச்சியின் ஒரு திவலையே கவிதையாக வெளிப்படுகிறது. கவிதை பெரும்பாலும் தன்னெழுச்சியான நிகழ்வு என்பதனால்தான் இப்படி.

இன்று கவிதையில் அலை என ஏதுமில்லை. ஆனால் உயிருள்ள நீட்சி இருந்துகொண்டிருக்கிறது என்றும் படுகிறது.

தீராநதி:- உங்கள் விமர்சன அளவுகோலின் அடிப்படையாக தொடர்ந்து சுந்தர ராமசாமியை நீங்கள் சொல்லி வந்திருக்கிறீர்கள். அவருடையது ரசனையை அடிப்படையாகக் கொண்ட விமரிசனம் க.நா. சு.வின் தொடர்ச்சி. உங்கள் ”இலக்கிய முன்னோடிகள் வரிசை”யும் ரசனை விமரிசனத்தை அடிப்படையாகக் கொண்டது என்று சொல்லலாம். தற்காலத்தில், நவீன விமர்சன முறைகள் பல தமிழில் அறிமுகமாகியுள்ள நிலையில், ரசனை அடிப்படையிலான விமர்சனம் எந்த அளவுக்கு முக்கியமானது என்று நினைக்கிறீர்கள்?

ஜெயமோகன்:- என்னுடைய ”இலக்கிய முன்னோடிகள் வரிசை” நூலின் முதல்பகுதியிலேயே இதற்கு விரிவான பதிலைச் சொல்லியிருக்கிறேன். ஒரு படைப்பு ரசிப்பதற்காகவே எழுதப்படுகிறது. அதன் முதன்மை நோக்கம் அதுவே. ஆராய்ச்சி அடுத்த படிதான். ரசனைவிமர்சகன் படைப்பின் முன் ஒரு வாசகனாகத் தன்னை நிறுத்திக் கொள்கிறான். அப்படைப்பை ரசிக்கிறான். தன் ரசனையை அளவாகக் கொண்டு அதை மதிப்பிடுகிறான். இதுவே இயல்பான முதல்படியாகும்.

ரசனை விமரிசகனின் கருவிகள் இரண்டு. ஒன்று, அவனது நுண்ணுணர்வு (Sensibility). இரண்டு அவனது பொதுப்புத்தி (Commonsense) நுண்ணுணர்வானது பேரிலக்கியங்களை வாசிப்பதன் மூலம் உருவாகக் கூடியது. நான் கம்பனையும், ஷேக்ஸ்பியரையும், ராபர்ட் ஃப்ராஸ்டையும் வாசித்ததால் இன்றைய கவிதையை அறிந்து மதிப்பிடுவதற்கான நுண்ணுணர்வை அடைகிறேன். வாழ்க்கையை கவனிப்பதன் வழியாகவும் பொது அறிவைக் கற்பதன் மூலமாகவும் எனக்கு பொதுப்புத்தி வலிமை பெறுகிறது. ஒரு நல்ல வாசகனிடமிருந்து ஓர் இலக்கியப்படைப்பு எதிர்பார்ப்பது இவை இரண்டையும் மட்டுமே.

கோட்பாடுகள், படைப்பை ஆராய்வதற்குரியவை. அங்கே ரசனை இல்லை. பலசமயம் கோட்பாடுகள் நல்ல ரசனைக்குத் தடையாகவே அமைகின்றன என்பதைக் காணலாம். ரசனைவிமரிசனம் சொல்லாத இடத்துக்குத் தன் கோட்பாட்டுக் கருவிகள் மூலம் செல்பவனே நல்ல ஆய்வாளன். அதாவது ரசனை விமரிசனமே அடிப்படை.உலகமெங்கும் அப்படித்தான் உள்ளது. பல்லாயிரம் படைப்புகள் வருகின்றன. சிலவற்றை முக்கியப்படுத்துவதே ரசனை விமரிசனம்தான். காரணம் அது வாசகனுக்கு மிக அருகே நின்றபடி வாசகன் குரலில் பேசுகிறது.

இப்படி ரசனை விமரிசனத்தின் மூலம் முக்கியமாகும் படைப்புகளையே கோட்பாட்டு ஆய்வுகள் எடுத்துக் கொள்கின்றன என்பதைக் காணலாம். ரசனைவிமரிசனத்தின் இடைவெளிகளை நிரப்புவதே பிற விமரிசனங்களின் பணி. உதாரணமாக நான் கம்பராமாயணத்தை என் அனுபவம் மூலம் உள்வாங்கி மதிப்பிடுகிறேன். ஒரு வரலாற்றுக் கோட்பாட்டாளன். குலோத்துங்கன் காலத்து அரசியல் எப்படி கம்பராமாணத்தில் வெளிப்படுகிறது என, தன் வரலாற்று ஆய்வுமுறை மூலம் கண்டறிந்து சொல்லும்போது, என் அறிதலில் உள்ள ஓர் இடைவெளி நிரப்பப்படுகிறது. இப்படி பல ஆய்வுகள் வரலாம். தமிழைப்பொறுத்தவரை ரசனை விமரிசனத்துக்கு அப்பால் செல்லும் கோட்பாட்டு விமரிசனம் அனேகமாக இல்லை. ஒரு வாசகனாகப் பாருங்கள். என் ”இலக்கிய முன்னோடிகள் வரிசை” அளவுக்கு நம் இலக்கியப் படைப்பாளிகள் மீதான புதிய அவதானிப்புகளை முன்வைத்த கோட்பாட்டு விமரிசன நூல் எது?

தீராநதி:- இலக்கிய முன்னோடிகள் வரிசை புத்தகத்தை எழுதுவதற்கான எண்ணம் எப்படி உருவானது?

ஜெயமோகன்:- ரசனை விமரிசனத்துக்கு நம் சூழலில் ஒரு வலிமையான தொடர்ச்சி இருக்கிறது. ஆகவேதான் நம் சூழலில் வாசகர் எண்ணிக்கை எவ்வளவு குறைவாக இருந்தாலும் நல்ல படைப்புகளுக்கு எப்படியோ ஓர் அங்கீகாரம் கிடைத்துவிடுகிறது. தொடர்ந்து தீவிர இலக்கிய மரபு அறுபடாமல் இருக்கிறது. கோட்பாடுகள் அரசியல் ஆகிய புறச்சக்திகளால் தூக்கிக் காட்டப்படும் படைப்புகள் உடனேயே சரிக்கப்பட்டு உண்மையான ஆழம் உள்ள படைப்புகள் நீடிக்கின்றன. மார்க்ஸியத் திறனாய்வாளரான கைலாசபதி,செ. கணேசலிங்கனின் ”செவ்வானம்” நாவலைத் தமிழின் முக்கியமான நாவலாகத் தூக்கிப் பிடித்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா? அ. மார்க்ஸ் போன்றோர் ஒரு கட்டத்தில் கே. டானியலின் நாவல்களை முதல்தரப் படைப்புகளாக முன்வைத்தனர். உடனுக்குடன் ரசனைமரபு அத்தகைய குரல்களை வென்று முன்னகர்ந்தபடியே உள்ளதனால்தான் இப்போது இதை உங்களுக்கு ஒரு வரலாற்றுத் தகவலாகச் சொல்ல வேண்டியுள்ளது.

நீங்கள் குறிப்பிட்டதுபோல முதல் தலைமுறையில் க.நா. சுப்ரமணியமும் இரண்டாவது தலைமுறையில் வெங்கட் சாமிநாதனும், சுந்தர ராமசாமியும் ரசனை மரபின் மையங்களாக இருந்தனர். நான் எழுதவந்தபோது ரசனைமரபின் அடுத்த காலகட்டம் வந்துவிட்டிருந்தது. ஆனால் சுந்தர ராமசாமி உருவாக்கிய முடிவுகளே பெரும்பாலும் நீடித்திருந்தன. நான் சுந்தர ராமசாமியிடம் தொடர்ந்து விவாதித்து வந்தேன். அவ்விவாதங்களை நூலாக ஆக்கவேண்டிய அவசியம் இருப்பதாக தமிழினி வசந்தகுமார் சொன்னார். ஆகவே அவை எழுதப்பட்டன.

தீராநதி:- உங்கள் விமர்சனங்களை மொத்தமாகப் பார்க்கும் போது, நீங்கள் சில படைப்பாளிகளைக் கறாராகவும் சிலரை மென்மையாகவும் அணுகுகிறீர்கள் என்று தோன்றுகிறது. உதாரணமாக மௌனியைக் கறாராகவும் ஜெயகாந்தன், அழகிரிசாமி, கி. ராஜநாராயணன் போன்றோரை மென்மையாகவும் அணுகுகிறீர்கள். இந்த முரணுக்கு என்ன காரணம்?

ஜெயமோகன்:- இப்படி ஓர் ஐயம் எழ வாய்ப்பிருப்பது உண்மையே. ஆனால் அதற்குரிய காரணங்கள் வேறு. நான் ஏற்கனவே சொன்னேன். நான் சுந்தர ராமசாமிக்குப் பின் விவாதத் தொடர்ச்சியாக அவற்றை எழுதினேன் என. சுந்தர ராமசாமியின் ரசனையும் மதிப்பீடும் நவீனத்துவம் சார்ந்தது. நவீனத்துவத்தின் அளவுகோலின்படி இலக்கிய ஆக்கம் கச்சிதமாக, உள்ளடங்கிய குரல் கொண்டதாக, மனிதமனத்தின் இருண்ட ஆழங்களை முன்வைப்பதாக, மன எழுச்சிகளை ஐயப்படுவதாக இருக்க வேண்டும். இந்நோக்கு இங்கே நிறுவப்பட்டு அதுவே இயல்பானதாகக் கருதப்பட்டது. அதுதான் கு.ப.ராஜகோபாலன், மௌனி, ஜி. நாகராஜன் போன்றோரை முன்னுக்குத் தள்ளியது. ஜெயகாந்தன், கு. அழகிரிசாமி, ப.சிங்காரம் போன்றோரைப் பின்னுக்குத் தள்ளியது.

நான் எழுதவரும்போது நவீனத்துவமும் முடிந்துவிட்டது என்றே உணர்ந்தேன். எனக்குக் கற்பனாவாத எழுத்தும் சரி, இலட்சியவாத எழுத்தும் சரி, நவீனத்துவ எழுத்தும் சரி, ஒரேபோல வரலாற்றுப் பதிவுகள் மட்டுமே.அனைவருக்கும் ஒரே அளவுகோல்தான். ஆகவே என் நோக்கில் நவீனத்துவம் சிலருக்கு அளித்து வந்த சலுகைகள் ரத்தாயின. அப்போது என்ன ஆகிறதென்றால் மௌனிக்கு நவீனத்துவம் அளித்துவந்த முதன்மை இடம் ரத்தாகி, அவர் பின்னுக்குத் தள்ளப்படுகிறார். அழகிரிசாமிக்கு நவீனத்துவம் அளித்துவந்த புறக்கணிப்பு இல்லாமலாகி அவர் சற்று முன்னகர்கிறார். இதுதான் உண்மையில் நடக்கிறது. இது பொதுப்பார்வையில் மௌனி கடுமையாகவும் அழகிரிசாமி மென்மையாகவும் நோக்கப்பட்டிருப்பதாகப் படுகிறது.

பாருங்கள். அழகிரிசாமியின் எல்லாக் குறைகளும் என்னால் சுட்டப்படுகின்றன. அவருக்கு வடிவ உணர்வு இல்லை. அவரது மொழிக்கு செறிவு இல்லை. அவை ஏற்கனவே சொல்லப்பட்டவை. அத்துடன் அவரது விவேகம் மிகுந்த கவித்துவமான அக உலகமும் சுட்டப்படுகிறது. அது நவீனத்துவம் காண மறுத்த ஒன்று. அதேபோல மௌனியின் எல்லா சாதனைகளும் குறிப்பிடப்படுகின்றன. அவரே கவித்துவத்தைப் புனைவுக்குள் கொண்டுவந்த முதல் எழுத்தாளர். மனம் நிகழ்வதை மொழியில் காட்டியவர். அவை நவீனத்துவத்தால் சொல்லப்பட்டவை. அதேசமயம் மௌனியின் குறைகள் விவாதிக்கப்படுகின்றன. அவர் மேலைக் கற்பனாவாதக் கவிமரபைப் பயிற்சியற்ற உரைநடையில் சொல்ல முயன்றவர் என்கிறேன். இவை நவீனத்துவத்தால் சொல்லப்படாதவை. ஆக, நவீனத்துவமரபின் மதிப்பீடுகளையே கண்டுவளர்ந்த இளம் வாசகனுக்கு அழகிரிசாமியின் நிறைகளும் மௌனியின் குறைகளும் சொல்லப்படுகின்றன என்று தோன்றலாம். அது ஒரு தோற்றம் மட்டுமே.

பின்னூட்டம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s