தீராநதி நேர்காணல்- 2006
ஜெயமோகன்.இன் ல் இருந்து
தீராநதி:- ”தமிழில் நாவல்களே இல்லை” என்பதில் தொடங்கி, ”கருணாநிதி இலக்கியவாதி இல்லை” என்பது வரை உங்கள் கருத்து தொடர்ந்து சர்ச்சைக்குள்ளானதாகவே இருந்து வந்துள்ளன. இதனை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?
ஜெயமோகன்:- உலக இலக்கியத்தில் இன்றுவரை எழுதிய திறனாய்வாளர்களில் விவாதங்களை உருவாக்காத ஒருவருடைய பெயரை நீங்கள் சொல்ல முடியுமா? இலக்கியச்சூழலில் ஒருவகைக் கருத்துக்கட்டமைப்பு நிலவுகிறது. அதைநோக்கியே விமரிசகன் பேசுகிறான். அதை மாற்ற முயல்கிறான். அப்போது அது எதிர்வினையாற்றுகிறது. ஒரு விவாதம் உருவாகிறது. மெல்ல மெல்ல அவனுடைய கருத்தின் முக்கியப்பகுதி அக்கருத்துக் கட்டமைப்பால் ஏற்கப்படுகிறது. அப்போது அந்த விவாதம் சரித்திரத்தின் ஒருபகுதியாக மாறிவிடுகிறது. அடுத்த விவாதம் நிகழ்கிறது. இப்படித்தான் கருத்தியக்கம் முன்னகர்கிறது.
சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், க.நா.சுப்ரமணியம் ஆகியோர் என்னைவிடப் பெரிய விவாதங்களைத் தமிழ்ச்சூழலில் உருவாக்கியுள்ளனர். அவ்விவாதங்கள் மூலமே நாம் இன்று நம்பும் பல கருத்துக்கள் உருவாகி வந்தன.
தீராநதி:- ”சொல்புதிது” என்ற சிற்றிதழைத் தொடங்கி சிறிதுகாலம் நடத்தினீர்கள். பத்திரிகை நடத்திய அனுபவத்தின் அடிப்படையில், ஒரு படைப்பாளி பத்திரிகை ஆசிரியராக இருப்பது குறித்த உங்கள் எண்ணம் என்ன?
ஜெயமோகன்:- உலகம் முழுக்க எழுத்தாளர்கள் சிறந்த இதழ்களை நடத்தியுள்ளனர். சில சிக்கல்கள் உண்டுதான். முதலில் அந்தப் படைப்பாளியின் நேரம் சிதறி அழிகிறது. இரண்டு, சில சமயம் அப்படைப்பாளியின் படைப்புக் கோணமே அப்பத்திரிக்கையின் கொள்கையாக ஆகி இதழின் விரிவைத் தடுத்துவிடுகிறது. வேறுவகை ஆக்கங்கள் அதில் வரமுடியாமலாகின்றது. ஆனால் பல சாதகக் கூறுகளும் உள்ளன. படைப்பாளி பிறரைவிட நல்ல படைப்பை நுட்பமாக அடையாளம் காணமுடியும். இலக்கியத்தில் ஒரு புதிய முளை தளிர் விடும்போது அதைக் கண்டறிந்து மேலெடுக்க முடியும். இந்த நிறை குறை இரண்டுக்குமே டி.எஸ்.எலியட்டின் ”கிரைடீரியன்”. சி.சு.செல்லப்பாவின் ”எழுத்து” இரண்டும் உதாரணங்களாகும்.
தீராநதி:- உங்கள் திரைக்கதையில், ”கஸ்தூரிமான்” திரைப்படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. திரைக்கதை எழுதுவது பற்றிக் கடுமையான விமரிசனத்தை நீங்கள் முன் வைத்திருக்கிறீர்கள். இப்போது ஏற்பட்டுள்ள மாற்றத்துக்கு என்ன காரணம்?
ஜெயமோகன்:- முதல்விஷயம், ”கஸ்தூரிமான்” – சினிமாவின் திரைக்கதை என்னுடையதல்ல. அது லோகிததாஸ் ஏற்கனவே மலையாளத்தில் எழுதியது. இரண்டாவது விஷயம். திரைக்கதை எழுதுவது பற்றி நான் எங்கும் கடுமையாக விமரித்தது இல்லை. மாறாக மலையாளத்தில் உறூப், பஷீர், தகழி, எம்.டி.வாசுதேவன்நாயர். பி.பத்மராஜன் போல இங்கும் முக்கிய படைப்பாளிகள் சினிமாவில் எழுதவேண்டும் என்றே எழுதிவந்துள்ளேன். அதற்கான சூழல் தமிழில் இல்லை என அறிவேன். அப்போதுகூட ஓர் எழுத்தாளன் வெறும் ஒரு தொழிலாக சினிமாவில் ஈடுபடுவதில் தவறில்லை என்றே எழுதியுள்ளேன். இங்கே எழுத்தைத் தொழிலாகக் கொள்ள இயலாது. வேறு ஒரு துறையில் வாழ்க்கையைப் பணயம் வைத்து எழுதமுடியாமல் அடிமையாவதை விட சினிமா மேல். லோகிததாஸ் என் நண்பர். கஸ்தூரிமானுக்கு எழுதும்படி சொன்னார். எழுதினேன்.
தீராநதி:- உங்கள் அனுபவத்தில், திரைப்படத்தைப் பொறுத்தவரைக்கும், ஒரு எழுத்தாளருக்கு எந்த அளவுக்கு அதில் இடம் இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?
ஜெயமோகன்:- சினிமாவில் மூன்று கலைகள் கலந்துள்ளன. இலக்கியம், நடிப்பு, புகைப்படம்.இசையும் ஓரளவுக்கு உண்டு. இதில் முதல் கலையை இலக்கியவாதி திறம்பட அளிக்க இயலும். இன்றைய தமிழ் சினிமாவில் தமிழக வாழ்க்கை இல்லை. இலக்கியவாதிகள் சினிமாவில் நுழைந்தால் ஓரளவு அதை உருவாக்க இயலும். சினிமாவுக்கு இயக்குனரே மையம். மூன்று கலைகளையும் தொகுத்து ஒன்றாக்குபவர் அவர். நமக்கு நல்ல இயக்குனர்கள் உள்ளனர். ஆனால் அவர்களுக்குத் தமிழிலக்கியம் மீது அறிமுகமும் மதிப்பும் இல்லை. ஆகவே தமிழ் இலக்கியத்தை உள்ளே கொண்டுவருவதில் நம்பிக்கையும் இல்லை. இங்குள்ள சினிமாவில் இலக்கிய அம்சம் மேலை சினிமாவில் இருந்து எடுக்கப்படுகிறது. பிறகு விவாதித்து வளர்க்கப்படுகிறது. அபூர்வமாக சில இயக்குனர்கள் இலக்கியக்கூறைத் தாங்களே உருவாக்கிக் கொள்கிறார்கள்.
சினிமாவில் எழுத்தாளனின் இடம் இயக்குனரின் விருப்பப்படி இலக்கிய அம்சத்தை அளிப்பதுமட்டுமே. அவன் சினிமாவின் ஆசிரியன் அல்ல. பங்களிப்பாளன்தான். ஒளிப்பதிவாளரின் அதே இடம்தான் அவனுக்கும். இயக்குனர் அவனை சுதந்திரமாக இயங்கவிட்டு முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டால் நல்ல படங்கள் வரும்.
தீராநதி:- வெகுஜனப் பத்திரிக்கையில் எழுதுவதில்லை. எழுதக்கூடாது என்று சமீபகாலம் வரை சிறுபத்திரிகை சார்ந்த எழுத்தாளர்களிடையே ஒரு அணுகுமுறை இருந்தது. இப்போது அனேகமாக எல்லா எழுத்தாளர்களுமே எழுத முன்வந்துள்ளார்கள். இந்த மாற்றத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
ஜெயமோகன்:- வெகுஜனப்பத்திரிகையில் சமீபகாலத்தில் வந்த நல்ல படைப்பு என்ன சொல்லுங்கள்? சென்ற வருடம் வந்த முக்கியமான ஆக்கங்கள்-ஏதோ ஒருவகையில் கவனம் பெற்றவை-”ஆழிசூழ் உலகு” (ஜே.டி.க்ருஸ்), ”மணல்கடிகை” (எம். கோபாலகிருஷ்ணன்.). ”இரண்டாம் சாமங்களின் கதை” (சல்மா) ”ம்” (ஷோபா சக்தி) ”பகடையாட்டம்” (எம்.யுவன்)”கூகை” (சொ.தருமன்) எவற்றுக்கும் பெரிய இதழ்களுடன் தொடர்பில்லை. சென்ற வருடம் எந்த நல்ல கதையும் பெரிய இதழ்களில் வரவில்லை. இன்றும் இங்கே பெரிய இதழ்களில் இலக்கியத்துக்கு இடமில்லை.
என்ன நடக்கிறது? எழுத்தாளர்களில் ஒருசாரார் பெரிய இதழ்களின் சில பக்கங்களைப் பெற்று இலக்கியத்தை அறிமுகம் செய்கிறார்கள். அவ்வளவுதான் நடந்துள்ளது. மேலே சொன்ன நாவல்களைப் போன்றவை எண்பதுகளில் வெளிவரவே இயலாது. வந்தாலும் விற்றுத் தீர ஐந்து வருடம் ஆகும். இன்று பேரிதழ்கள் வழியாக அவை பரவலாக அறிமுகமாகி ஒரே வருடத்தில் விற்றுத் தீர்கின்றன. இன்று, இலக்கியத்துக்கு, சிற்றிதழ்களுக்கு வெளியே ஒருவாசகத்தளம் உருவாகியுள்ளது. அவர்கள் தான் இப்போது நிறைய நூல்களைப் படிக்கிறார்கள். அவர்களால் பதிப்புத்துறையில் மெல்லிய வளர்ச்சி உள்ளது. அவ்வாசகர்களிடம் சென்றுசேர பிரபல இதழ்கள் உதவுகின்றன. அவ்வளவுதான்.
சிற்றிதழ் இயக்கம் பொதுக்கலாச்சாரத்துக்கு எதிரான ஒரு இயக்கமாக எண்பதுகள் வரை நடந்தது. அன்றைய எதிர்ப்பு அந்த நோக்கில்தான். பெரும்போக்குகளில் கரையாமல் தங்கள் தனித்தன்மையைத் தக்கவைத்துக் கொள்வதற்கான போராட்டம் அது. அன்று அந்த வீம்பு ஓர் ஆயுதமாக இருந்தது. தொண்ணூறுகளில் சிற்றிதழ்களின் போராட்டம் பலன் தந்தது. சிற்றிதழ் எழுத்தாளர்கள் மேலும் விரிந்த வாசகர் வட்டத்தை அடைந்தனர். அவ்வாசகர்களுடன் உரையாடலைத் தொடர்வதே இன்றைய பணி. அதற்குத்தான் இடைநிலை இதழ்கள் முக்கியமாகத் தேவையாகின்றன. ”சுபமங்களா”வில் தொடங்கிய இப்போக்கு இன்று ”உயிர்மை”. ”காலச்சுவடு”. ”புதியபார்வை, ”தீராநதி” என வளர்ச்சி கண்டுள்ளது. அவற்றை நோக்கி மேலும் வாசகர்களை ஈர்க்க பேரிதழ்களின் சில பக்கங்களை பயன்படுத்துகிறோம். பொதுக்கலாச்சாரம் தீவிர இலக்கியத்துக்கு அளித்துவந்த புறக்கணிப்பு இன்று இயலாமல் ஆகிவிட்டது. இன்று தீவிர இலக்கியமும் ஒரு தரப்பாக ஆகியுள்ளது. இதை முக்கியத்தரப்பாக ஆக்குவதே இனியுள்ள சவாலாகும். அதற்கு இணையத்தையும் பயன்படுத்துகிறோம்.
தீராநதி:- வெகுஜனப் பத்திரிகைகளில் தீவிர எழுத்தாளர்கள் எழுத முடிவதற்குக் காரணம், தீவிர எழுத்தாளர்களின் தரம் குறைந்துள்ளதுதான் என்றும் ஒரு விமரிசனம் வைக்கப்படுகிறது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?
ஜெயமோகன்:- இப்படிச் சொல்பவர்களின் தரம் பற்றித்தான் எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. இவர்களுக்குத் தமிழிலக்கிய வரலாறு தெரியுமா? தமிழின் முக்கியப்படைப்பாளிகளில் எழுபது எண்பதுகளில் எழுதிய சிலர் மட்டுமே, சிற்றிதழ்களில் மட்டும் எழுதியவர்கள். புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன் காலத்தில் சிற்றிதழ் என்ற கருத்தே இல்லை. அவர்கள் எழுதிய இதழ்கள் ”மணிக்கொடி”. ”கலைமகள்” போன்ற பெரிய இடைநிலை இதழ்களே. லா.ச.ராமாமிர்தம், கி.ராஜநாராயணன், தி.ஜானகிராமன். கு.அழகிரிசாமி. அசோகமித்திரன் போன்ற படைப்பாளிகளின் சில கதைகள் மட்டுமே சிற்றிதழ்களில் வந்தவை. தமிழின் முதல் சிற்றிதழ் ”எழுத்து”தான். எழுபதுகளில்தான் சிற்றிதழ் ஓர் இயக்கமாக ஆகியது. பெரிய இதழ்களைப் புறக்கணிக்கும் நோக்கு வலுப்பெற்றது. அதன் முக்கிய கோட்பாட்டாளர் சுந்தர ராமசாமிதான். அவரும் எழுபதுகளில்தான் சிற்றிதழ்களுக்கு வந்தார். அதற்கு முன் ”சரஸ்வதி”, ”கல்கி” போன்ற இதழ்களிலேயே எழுதினார். தொண்ணூறுகளில் சுந்தர ராமசாமியும் பேரிதழ்களுக்குச் சென்றுவிட்டார்.
சிற்றிதழ் இயக்கம் தமிழில் நவீனத்துவத்தை உருவாக்கிய ஒரு கலாச்சார நிகழ்வு. தன் இலக்கை எய்தியதும் அது நின்றுவிட்டது. இன்றும் ஒரு புதிய கோட்பாட்டை படைப்பியக்கத்தைக் கொண்டுவர சிற்றிதழ்களையே தொடங்கவேண்டும். ”சொல்புதிது” அப்படிப்பட்ட இதழ்தான். எப்போதும் அறிவியக்கத்தின் ஒருபகுதியாக சிற்றிதழ் இயக்கம் இருக்கும். ஏற்கெனவே சொன்னதுபோல, இன்றும் எந்தத் தீவிர எழுத்தாளரும் பெரிய இதழ்களில் அவற்றின் தேவைக்கு ஏற்பத் தங்கள் படைப்புகளை எழுதவில்லை. அவர்களின் ஆக்கங்கள் இடைநிலை இதழ்களிலோ, நூல்களாகவோதான் வருகின்றன.