தீராநதி நேர்காணல்- 2006 : 5

தீராநதி நேர்காணல்- 2006

ஜெயமோகன்.இன் ல் இருந்து

IMG_5510

[தெங்குமராட்டா]

தீராநதி:- உங்களுக்கு மத நம்பிக்கை உண்டா?

ஜெயமோகன்:- இல்லை. மதம் வாழ்க்கை சார்ந்த கவலைகளும், ஆன்மீகமான குழப்பங்களும் கொண்டவர்களுக்கு, திட்டவட்டமான விடைகள் மூலம் ஆறுதலும் வாழ்க்கைநெறிகளும் அளிக்கும் ஓர் அமைப்பு. நம்பிக்கை, சடங்குகள், முழுமுற்றான சில கோட்பாடுகள் ஆகியவை கலந்தது மதம். அது சிந்திப்பவர்களுக்கு நிறைவு தராது. உண்மையான ஆன்மீகத்தேடல் கொண்டவன், அத்தேடல் தொடங்கிய கணமே, மதத்தைவிட்டு வெளியே செல்ல ஆரம்பித்துவிடுவான். என் பதினைந்து வயது முதலே நான் மதம், கடவுள், சடங்குகள் அனைத்திலும் முற்றாக நம்பிக்கை இழந்துவிட்டேன். எனக்கிருப்பது ஆன்மீகத்தேடல், ஆன்மீக நம்பிக்கை அல்ல. நான் யாரையும் எதையும் வழிபடவில்லை. நித்ய சைதன்ய யதியைக் கூட ! நான் உரையாடுகிறேன் உள்வாங்க முயல்கிறேன்.

ஆனாலும் மதத்துடன், சிந்திப்பவனுக்கு ஓர் உறவு இருந்தபடியேதான் இருக்கும். ஏனெனில் மதம், ஆன்மீகமான தேடல் கொண்டவர்களை நெருக்கமாகப் பின் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. அவர்கள் அடையும் தரிசனங்களை அது தத்துவ விடைகளாக மாற்றித் தன்னுடைய அமைப்புக்குள் இழுத்தபடியே இருக்கும். சில நாட்களுக்கு முன் யோகி ராம் சுரத் குமார் ஆசிரமம் சென்றிருந்தேன். அவர் இருக்கையில் அவரைச் சந்தித்து விரிவாக உரையாடியிருக்கிறேன். அவர் தன் போக்கில் தேடி தான் தேர்ந்த பாதையில் தனித்துச்சென்றவர். பிச்சைக்காரன் என தன்னைச் சொல்லிக் கொண்டவர். சுருக்கமான உரையாடலே அவரது வழி; உபதேசம் அல்ல. வாழ்நாள் முழுக்க மதத்துக்கு வெளியேதான் வாழ்ந்தார். கோயில் அருகே வாழ்ந்தும் கோயிலுக்குள் சென்றவரல்ல. இன்று அவரை இந்துச் சிலையாக ஆக்கிவிட்டார்கள். கோயில்கட்டி, சிவலிங்கம் நிறுவி, பூசை செய்து பிரசாதம் தருகிறார்கள். இப்படித்தான் எண்ணற்ற ஞானிகள் மதத்துக்குள் இருக்கிறார்கள். மதம், மெய்ஞானத்தை உறையவைத்து சிலையாக்கி வைத்திருக்கிறது. உண்மையான தேடல்கொண்டவன் அதை மதத்துக்குள் சென்று மீட்டு, தன் அகத்தில் உயிர் கொடுத்து உள்வாங்கிக் கொள்ளவேண்டியுள்ளது. ரமணரை, நாராயணகுருவை, ராமகிருஷ்ண பரமஹம்சரை, சங்கரரை, ராமானுஜரை, சித்தர்களை, நாகார்ஜுனரை, தர்ம கீர்த்தியை, வாத்ஸ்யாயனரை, கபிலரை….. அப்படித்தான் அவன் தனக்கு முன்னால் சென்றவர்களை அறிய முடிகிறது.

இரண்டாவதாக மதத்துக்குள்தான் நம் மரபின் ஞானமும் கலைகளும் சேமிக்கப்பட்டுள்ளன. அவை படிமங்களாக, இலக்கியங்களாக உள்ளன. அவற்றை சிந்திக்கும் பழக்கமுள்ள ஒருவன் புறக்கணித்துவிட இயலாது. ஆண்டாளின் மகத்தான கவிதை அவனுக்குப் பெரும் புதையல். ஆகவே ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் அவனுக்கு முக்கியமான இடம். அங்கே சென்று பெண்ணுக்குக் கல்யாணமாகவில்லை என்று வேண்டிக்கொள்பவர்களுக்கும் அவனுக்கும் வேறுபாடு உள்ளது. இந்த வேறுபாட்டைத் தமிழ்நாட்டில் எளிய மனிதர்களுக்கு சொல்லிப் புரியவைத்துவிடமுடியும். அவர்கள் அதை ஏற்கெனவே அறிவார்கள். பொத்தாம் பொதுவாக யோசிக்கும் அறிவுஜீவிகள் புரிந்துகொள்ளக் கஷ்டப்படுகிறார்கள். பாமரர், மத நம்பிக்கையை ஆன்மீகம் என்கிறார்கள். நம் அறிவுஜீவிகள் ஆன்மீகத்தை மதநம்பிக்கை என்கிறார்கள். இவர்கள் வேறுவகைப் பாமரர்கள்.

தீராநதி:- நீங்கள் ஏற்றுக் கொள்ளும் தரப்பு என்ன?

ஜெயமோகன்:- ஏதுமில்லை. ஏற்றுக் கொண்டால் அங்கே நின்றுவிடுகிறேனே. எனக்கு வழிகாட்டிப் பலகைகளும் ஆய்வுக்கருவிகளுமே உள்ளன. நித்யா வழியாக எனக்கு அத்வைதம் அறிமுகமாயிற்று.நாராயணகுருவின் அத்வைதம். அது சங்கர அத்வைதத்தில் இருந்து பலவழிகளில் வேறுபட்டது. ஒரு வளர்ச்சி நிலை. அது புறவுலகை முற்றாக நிராகரிப்பது அல்ல. அத்வைதம் தத்துவ அடிப்படையில் பிற்கால பௌத்தத்தின் நீட்சி. அவ்வாறு பௌத்த ஞானமரபில் ஆர்வம் ஏற்பட்டது. இப்போது நமக்கு கிடைக்கும் பிரபஞ்ச ஞானத்தின் ஆகச்சிறந்த தளங்கள் இங்குதான் உள்ளன என்றுதான் எண்ணுகிறேன்.

தீராநதி:- உங்கள் எழுத்தில் அவற்றை வலியுறுத்துகிறீர்களா?

ஜெயமோகன்:- வலியுறுத்த வேண்டுமென்றால் நான் அவற்றில் தெளிவுடன் இருக்க வேண்டும். தெளிவை அடைந்தால் நான் எழுதுவதை நிறுத்திவிடுவேன். என் தேடலையும் தத்தளிப்புகளையுமே முன்வைக்கிறேன். அவற்றையே உலகப் பேரிலக்கியங்கள்கூட சொல்லிக் கொண்டிருக்கின்றன. இலக்கியத்தின் பணி அதுதான். தெளிவு, அந்தக் கொந்தளிப்புள் சாரமாகத் திரண்டு வருவது. ஆனால் அது அந்த ஆசிரியனால் உருவாக்கப்படுவது அல்ல. சமானமான மனம் கொண்ட வாசகன் ஒருவன், தன் கற்பனையை மத்தாக்கிக் கடைந்து அதை அடைகிறான். நமக்கு தஸ்தயேவ்ஸ்கி நாவல்களில் ஞானத்தின் ஒளி கிடைக்கிறது. அவர் வாழ்நாள் முழுக்க இருளின் கொந்தளிப்புடன் அலைந்தார். தல்ஸ்தோய் எப்போது ஞானத்தைத் தொட்டாரோ அதன் பின் எழுதவில்லை. குட்டிக்கதைகள்தான் எழுதினார்; எழுதியவற்றை நிராகரித்தார். தேடலே இலக்கியமாகிறது. கண்டடைதல் மௌனத்தையே உருவாக்கும்.

நன்றி: தீராநதி 2006

[தீராநதி இதழில் தளவாய்சுந்தரம் எடுத்த பேட்டி. 2006ல் வெளிவந்தது. இப்போது தொகுப்புகள் என்ற தளத்தில் மறுபிரசுரம் ஆகியிருக்கிறது. இலக்கியம் பற்றிய கட்டுரைகளைப் பல்வேறு இணையதளங்களில் இருந்து தொகுத்தளிக்கும் இணையப்பக்கம் இது]

பின்னூட்டம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s