அயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறு-2
ஜெயமோகன்.இன் ல் இருந்து
நான் அயோத்திதாசரை வாசித்த நாட்களில் அவரது முக்கியத்துவம் ஏதும் என்னை வந்தடையவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அவரது ஒட்டுமொத்த எழுத்துக்களில் இருந்து ஒவ்வொரு தளத்திலும் அவரது கருத்து என்ன என்பதை தனித்தனியாக தொகுத்து அளிக்காத வரை எந்த பொதுவாசகரும் அவரது கருத்துநிலைகளை எளிதில் புரிந்துகொள்ளவும் முடியாது. அந்நாட்களில் நானும் எம்.வேதசகாயகுமாரும் இணைந்தே அயோத்திதாசர் நூல்களை வாசித்தோம். அவர் அனேகமாக தினமும் மாலை என் வீட்டுக்கு வருவார். நெடுநேரம் எங்கள் வாசிப்புகளை பகிர்ந்துகொள்வோம்
அக்காலகட்டத்தில் அயோத்திதாசர் சமணம் பௌத்தம் இரண்டும் தனித்தனி மதங்கள் அல்ல, ஒரேமதமே என்று சொல்வதைப்பற்றிய பேச்சுவந்தது. அயோத்திதாசர் காலகட்டத்தில் விரிவான வரலாற்றாய்வுகள் நிகழவில்லை. தனக்குக்கிடைத்த குறைவான தரவுகளைக்கொண்டு அவர் அப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார் என்பதே என்னுடைய கருத்தாக இருந்தது. அதை வேதசகாயகுமாரும் ஏற்றுக்கொண்டார்.