10. தரிசனங்களின் பின்னணி – பிற்கால வேதாந்தங்களின் காலகட்டம்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

தரிசனங்களின் பின்னணி

பிற்கால வேதாந்தங்களின் காலகட்டம்

பெளத்த, சமண மதங்களின் வெகுஜனத்தன்மைக்கு எதிரான பேரியக்கமாக பக்தி காலகட்டம் உருவாயிற்று என்றோம். பெளத்த சமண மதங்களின் தத்துவார்த்தமான அறைகூவலுக்கு எதிராக உருவான வைதிகத் தத்துவ தரிசனங்கள்தான் பிற்கால வேதாந்தங்கள். இவை அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்ட்வைதம் என்று மூன்று தனிப்போக்குகளாக உள்ளன.

வேதாந்தம் என்ற சொல்லுக்கு வேதத்தின் இறுதி என்று பொருள். வேதங்களின் விரிவாக்கமான உபநிஷதங்களே உண்மையில் வேதாந்தங்கள். அவை முற்காலக் கட்ட வேதங்கங்கள் எனலாம். இவை தருக்கப்பூர்வமானவை. வேதாந்தம் என்ற சொல் தருக்கம் என்ற பொருளில் அன்றாட வழக்கில் பயன்படுத்தப்படுகிறது.

பெளத்த, சமண மதங்கள் தருக்க முறையை பிரம்மாண்டமாக வளர்த்தெடுத்தன. குறிப்பாக பெளத்த மெய்ஞானம் நியாய மரபின் தருக்க முறைகளை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டது. நாகார்ச்சுனர், அசங்கர், வசுபந்து, திக்நாகர், தர்ம கீர்த்தி முதலிய முக்கியமான பெளத்த ஞானிகள் அனைவருமே நியாய இயலுக்கு உரை எழுதியுள்ளனர். Continue reading

9.தரிசனங்களின் பின்னணி – பக்தி காலகட்டம்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

தரிசனங்களின் பின்னணி

பக்தி காலகட்டம்

அவைதிக மதங்களான பெளத்தமும் சமணமும் இந்தியா முழுக்கப் பரவின. அவற்றை எதிர்த்து வைதிக மதங்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டன. அதன் விளைவாக அவை தங்கள் அமைப்பை மாற்றி அமைத்துக்கொண்டன. இதன் விளைவாக உருவானதே பக்தி காலகட்டமாகும்.

பெளத்த, சமண மதங்களுக்கு முன்பு வைதிக மதம் என்பது வேள்வி முதலிய சடங்குகளிலானதாக இருந்தது. அது மன்னர்கள், வணிகர்கள் பிராமணர்கள் சம்பத்தப்பட்டதாக இருந்தது. அதற்கும் கீழே உள்ள மக்கள் தங்கள் குல மரபுக்கு உரிய தெய்வங்களைத் தங்கள் வழக்கப்படி வணங்கினர். அவர்களுக்கும் வைதிக மரபுக்கும் உறவே இருக்கவில்லை.

பெளத்த, சமண மதங்கள் முதலில் ஏழை, எளிய மக்கலுக்கு இடையே ஊடுருவிச் சென்றன. புத்த பிச்சுக்களும் சமண முனிகளும் ஊருக்குள் தங்கக்கூடாது என்ற விதியே இருந்தது. ஆகவே அவர்கள் விலக்கபட்ட எளிய மக்களை அணுகினார்கள். அவர்கள் பள்ளிகள் அமைத்து கல்வி கற்பித்தனர். Continue reading

குரு சிஷ்ய உறவு – விஷ்ணுபுரத்தை முன் வைத்து by ஜாஜா

குரு சிஷ்ய உறவு – விஷ்ணுபுரத்தைமுன் வைத்து
by
ஜாஜா (எ) ராஜகோபாலன் ஜானகிராமன்

நண்பர்களே ! பணி நிமித்தம் வாசிக்க நேர்ந்த “இந்து வாரிசுரிமைச் சட்டம்” வியப்பான ஒன்று. ஒரு இந்துக் குடும்பத்தின் உறவு முறைகள் எந்தெந்த அடுக்குகளில் அமைகின்றன, அவற்றுள் முதன்மை பெறும் வரிசை எது, அடுத்த வரிசைக்கிரமம் என்பனவற்றை ஒரு நாவல் போல விவரித்துச் செல்லும் சட்டம் அது. எண்ணிறந்த உறவு முறைகளையும், அவற்றுக்கிடையே பாவியிருக்கும் தாய்வழி, தந்தைவழி குறுக்குப் பின்னல்களையும், அவற்றின் சொத்துரிமைக்கான அடுக்கு முறைகளையும் காணும்போது இவ்வளவு உறவுமுறைகளா என்று தோன்றும். ஆனால் , ரத்த உறவாலும், திருமண பந்தத்தாலும் அல்லாது இவ்வகைப்பாட்டைத் தாண்டிய ஒரு உறவு முறை நமது மரபில் தோன்றி இன்று வரை இடையறாது நீடிக்கிறது.

கால ஓட்டத்தின் வேக வாகினியை மீறி துளித் துளியாய் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் மானுட ஞானத்தினை பின்வரும் தலைமுறைக்கென தருவதில் இந்த உறவுமுறையின் பங்கு மகத்தானது. எந்த பந்தத்தின் அடிப்படையிலுமல்லாது , தேடலின் துணை கொண்டு மட்டுமே தேர்வு செய்யப்படும் உறவு இது. புல்லின் வேரென இந்தத் தேசம் முழுதும் பரவி, காலந்தோறும் உருவாகி வரும் குரு சிஷ்ய உறவினாலேயே இன்றைய நமது ஞானம் சாத்தியமாகிறது.

வேறெந்த உறவுமுறையையும் வரையறை செய்து, வகைப்படுத்திவிட முடியும். ஆனால், இந்த குரு சிஷ்ய உறவு எந்த இலக்கணத்திற்கும், எந்த வரையறைக்கும் நாலு விரற்கடை தள்ளியேதான் நிற்கும்.எப்படி உருவாகிறது இந்த உறவு என்பதை ஆண்டவனும் அறிய இயலாது போலும். “வா” என்ற குருவின் ஒற்றைச் சொல்லுக்கு, மறு பேச்சின்றி, திரும்பிப் பாராது எழுந்து அவர் பின்னே செல்லும் சீடனை இயக்குவது எது? மாறாக் காதலுடன் குருவின் பாதத்தை பணிந்து நிற்கும் சீடன் மனம் அடைவதுதான் என்ன? தரிசனம் பெற்ற ஒரு நொடியின் பரவசத்தை, தனக்கேற்ற சீடனைக் கண்டபோதும் அடையும் குருவின் உவகைதான் எப்படிப்பட்டது? மரபின் தொடர்ச்சியாய் நீளும் இவ்வுறவிலிருந்து மானுட ஞானம் பெறும் விழுமியம்தான் எது? Continue reading

8.தரிசனங்களின் பின்னணி – தரிசன, அவைதீக மதங்களின் காலகட்டம்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

தரிசனங்களின் பின்னணி

தரிசன மற்றும் அவைதீக மதங்களின் காலகட்டம்

தரிசன காலகட்டம்

உபநிஷத காலகட்டத்தில் தருக்கப் பிரக்ஞை வலுவடைந்தது. ஞான தரிசனங்கள் விரிவாக விவாதிக்கப்படவேண்டும் என்ற எண்ணம் எற்பட்டது. இதன் விளைவே தரிசனங்களின் காலகட்டமாகும்.

அவைதீக மதங்களின் காலகட்டம்

இந்திய ஞான மரபினை வைதிகம், அவைதிகம் என்று இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்துவிடலாம். வேதங்கள்ளை மூலநூல்களாக கருதும் மரபு வைதிகம். அப்படிக் கருதாமல் வேதங்களை மறுக்கும் மரபு அவைதிகம்.

இந்த இருபாற் பிரிவினையை நிகழ்த்துவதில் பல சிக்கல்கள் உள்ளன என்பதை இங்கு குறிப்பிட்டு பேசவேண்டும். வேதங்கள் ஒற்றைப்படையான ஒரு தரப்பை முன் வைப்பவை அல்ல. பிற்காலத்தில் வளர்ந்து வந்த எல்லா ஞான மரபுகளின் மூல விதைகளும் அவற்றுக்குள் உள்ளன. உதாரணமாக சார்வாக மரபு வேதங்களை மறுப்பது; புரோகித மரபுக்குப் பரம எதிரி; முழுமையான உலகியல் தன்மை உடையது. இம்மரபின் தொடக்கப்புள்ளியும் வேதங்களில் தான் உள்ளது. வேதரிஷிகளான ‘பிரகஸ்பதி’, ’அஜித கேசம்பளன்’ முதலியோர்தான் இம்மரபின் ஆதிகுருநாதர்கள்.

ஆகவே இந்தியாவில் உள்ள எந்த ஒரு ஞானமரபினையும் முற்றிலும் வேதம் சாராதது என்று கூறிவிட முடியாது. அப்படி என்றால் வைதிகம், அவைதிகம் என்ற பிரிவினை எதனடிபடையில் நடத்தப்படுகிறது.? Continue reading

விஷ்ணுபுரம் வாசிப்பனுபவம்: கடிதங்கள் – 4

தேடல்,விஷ்ணுபுரம்–ஒரு கடிதம்

ஜெயமோகன்.இன் இல் இருந்து

[விஷ்ணுபுரம் வாசிப்பரங்கு. காரைக்குடி]

அன்பு நண்பர் ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்களின்  நித்ய சய்தன்ய நிதி நினைவு கூட்ட  உரை படிக்க நேர்ந்தது…  ஒரு மிக நல்ல வாசிப்பு அனுபவமாக உணர்ந்தேன்.. நன்றி..

இருத்தல்  குறித்த தீராத கேள்விகள் எப்போதும் என்னுள் உள்ளன. இதனால் என்ன,இதன் அர்த்தம் என்ன? கேள்விகள் எப்போதும் கேள்விகளை மட்டுமே தருகின்றன.. சலித்து உலகியல் வாழ்விற்கு திரும்பும் போது அதன் போதை போதுமெனக்கு என்று சுகப்படுகிறேன்.. யோகிகள் ஞானிகள் இவர்கள் எல்லோரும் எதை அடைந்தார்கள்? எண்ணிலடங்கா தத்துவங்கள், அவற்றை மறுத்த எண்ணிலடங்கா  தத்துவங்கள் இவற்றால் இந்த குறு கோளம்  என்ன அடைந்தது?உண்மை என்பது நம் எண்ணத்தின் பிம்பமன்றி  வேறொன்று தனியாய் நம்மை சுற்றி உள்ளதா என்ன? என்னால் உணர முடிகிறது இவை எனது புதிய கேள்விகள் அல்ல என்று .. பன்னெடுங்காலமாய் மனிதனின் ஆதி கேள்விகளாய் இவை இருந்து உள்ளன.. ஆனால் இவற்றால் நாம் நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோமோ என்ற எண்ணம்..

தர்க்கத்தால் உணர முடியாதவற்றை ஒரு மாபெரும் உண்மையாக கற்பித்து கொண்டு ஒன்றும் இல்லாத ஒன்றை தேடி ஒடுகிறோமோ என்ற சங்கடம் அல்லது பயம். ஒரு உயிரியலாளனாய் என்னால் எப்போதும் மானுடத்தின் ஆக பெரிய அர்த்தம் வாழுதல் மற்றும் இனம் பெருக்குதல் என்ற விதியே என்று தோன்றுகிறது.. எல்லா மிக பெரிய தத்துவங்களும் சமூக தளத்திலும் ஆச பாச தளத்திலும் எல்லாவற்றையும் விட முக்கியமாய் மனித மனம் என்ற வட்டத்திலும் மட்டுமே பெருமளவு செயல்படுகின்றன.. இவை சார்ந்த எண்ணங்கள் இவை சார்ந்த கேள்விகள் இவை சார்ந்த உண்மைகள் அல்லது நிராகரிப்புகள்.. வைரஸ் எனப்படும் உயிருக்கு என்ன தத்துவம் என்ன உண்மை. பேரண்டத்தை யோசிப்பவர்கள் உயிர் துணுக்கை யோசிக்கிறார்களா? யோசித்து இருக்கலாம்.. ஆனால் அவை ஒரு மையப்புள்ளியில் குவிந்து தத்துவம் மலர்ந்ததா?  புத்தன் கண்ட உண்மையால் என்ன தான் நிகழ்ந்தது? Continue reading