பதஞ்சலி யோக சூத்திரம் எளிய விளக்கம் – 3

பதஞ்சலி யோக சூத்திரம் எளிய விளக்கம் – 3

[ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது]

சூத்திரம் ஆறு

ப்ரமாண விபர்யாய விகல்ப நித்ரா ஸ்ம்ருதய:

[ அவையாவன, யதார்த்தம், பொய்யறிவு, திரிபு , துயில்நிலை , நினைவுகூர்தல் ]

மனச்செயல்பாடுகளை ஆறுவகையாக பிரித்துப் பார்க்கின்றது யோகம். இங்கே பிரமாணம் என்ற சொல் வகுத்து அறியப்பட்டது என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. புலன்களாலும் தர்க்கத்தாலும் நாம் அறியக்கூடிய அனைத்துமே பிரமாணம் என்பதில் அடங்கும். யதார்த்த அறிவு என்று இதை சொல்லலாம்.

இது சிறகுகள்கொண்டிருக்கிறது வானில் பறக்கிறது ஆகவே இது பறவை . இது சிறியதாக உள்ளது, சிறகுகள் நீலச்சாம்பல் நிறம். நீலச்சாம்பல் நிறமுள்ள சிறகுகள் கொண்ட சிறிய பறவை மைனா எனப்படும். ஆகவே இது மைனா. இவ்வாறு நாம் கண்டு கேட்டு யோசித்து அறிகிற செயல்பாடுதான் பிரமாணம். இது நம்மில் இடையறாது நடந்து கொண்டிருக்கிற மனச்செயல்பாடு . Continue reading

பதஞ்சலி யோக சூத்திரம் எளிய விளக்கம் – 2

பதஞ்சலி யோக சூத்திரம் எளிய விளக்கம் – 2

[ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது]

சூத்திரம் மூன்று

ததா த்ருஷ்ட்டு: ஸ்வரூபே அவஸ்தானம்

[அப்போதே பார்ப்பவன் தன்னிலையில் உறைகிறான்]

இந்தச் சூத்திரத்தில் மூன்று சொற்கள் உள்ளன. மூன்று தன்னிலைகள் என இதை வகுக்கலாம். திருஷ்டு என்றால் பார்ப்பவன், அவதானிப்பவன், உணர்பவன். மனதை உணரும் தன்னிலை என்று இதைச் சொல்லலாம். இரண்டாவது சொல் ஸ்வரூபம். தன்னுடைய உண்மையான அகநிலை. அல்லது தூய தன்னிலை. இங்கே இன்னும் அது ஒரு உருவகம்தான். மூன்றாவது அவஸ்தை. அந்த தூய நிலையில் உறைதல் என்ற நிலை. தான் என தன்னை உணர்பவன் அந்த உணர்தல் மூலம் உருவாகும் அலைகள் அனைத்தையும் அடக்கி இல்லாமலாக்கிக் கொண்டால் மட்டுமே தூய தன்னிலையாக தன்னை உணர்ந்து அந்நிலையில் அமைய முடியும் என்று இச்சூத்திரத்தை விளக்கலாம்

இச்சூத்திரத்தில் அவஸ்தானாம் என்ற சொல்லை சுட்டிக்காட்டுவது மரபு. அதாவது தூய தன்னிலை என்பது ஒரு அறிதல் அல்ல. அது நிலை. ஒரு அமைதல்தான்.

ஓர் உவமை மூலம் விளக்கலாம். நான்குபக்கமும் நிலைக்கண்ணாடிகள். நடுவே ஒரு சுடர் விளக்கு. நாம் காண்பது விளக்குகளினாலான ஒரு மாபெரும் வெளி. இதுவே நம் மனம். சுடரைக் காண நாம் முதலில் செய்ய வேண்டியது ஆடிகளை களைதல். அப்போது சுடர் மட்டும் எஞ்சுகிறது. Continue reading

பதஞ்சலி யோக சூத்திரம் எளிய விளக்கம் – 1

பதஞ்சலி யோக சூத்திரம் எளிய விளக்கம் – 1

[ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது]

சூத்திரம் ஒன்று

”அத யோக அனு சாசனம்”

[ஆதலால் யோகத்தை வகுத்துரைப்போம் ]

அத என்ற இந்த சொல்லாட்சி குறித்து இந்து மெய்ஞான மூலநூல்களை ஆய்வுசெய்தஅறிஞர்கள் பலர் பலவாறாக பேசியுள்ளார்கள் . அத என்றால் ஆதலால் என்றோ , இனிமேல் என்றோ பொருள் கொள்ளலாம். இதை நமது சூத்திரங்கள் பல ‘என்ப’ என்று முடிவதுடன் நாம் ஒப்பிட்டு பார்க்க முடியும். அதாவது பதஞ்சலி முனிவர் யோகத்தைப்பற்றி பேசும் முதல் அறிஞர் அல்ல. ஏற்கனவே விரிவாக பேசப்பட்டுள்ளது. அவர் அதை வகுத்தும் தொகுத்தும் உரைக்க மட்டுமே முற்படுகிறார் .

பெரும்பாலான சூத்திர நூல்களில் இந்த அமைப்பு காணப்படுகிறது . உதாரணமாக வேதாந்த சூத்திரம் ” அதாதோ பிரம்ம ஜிக்ஞாஸா ” என்று துவங்குகிறது. [ ஆதலால் பிரம்ம ஞானம் தேடுபவனே…] இதற்கு இரு வகை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது அந்த தளத்தின் ஞானியால் முன்வைக்கப்படும் அதிகாரபூர்வ குரல் ஆதலால்தான் ‘ஆதலால்’ என துவங்குகிறது என்கிறார்கள்.

அதனுடன் சங்கரர் வேறுபடுகிறார் . பிரம்ம ஞானத்தை அடைவதற்கு முன்பு பலவிதமான பயிற்சிகளை செய்யவேண்டியுள்ளது. ஞானத்தில் பக்குவபப்ட்ட பிறகே யோகம் பயில வேண்டும். ஞானமில்லா யோகப்பயிற்சி வெறும் பழக்கமாகவே ஆகும். ஆகவே தத்துவ ஞானம் கனிந்தபின் பிரம்மஞானத்தை பெற முன்வரும் மாணவனை அழைத்து பேசுவதனாலேயே இந்த சொல்லாட்சி வந்துள்ளது என்கிறார் அவர். Continue reading

முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை.6

முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை.6

[ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது]

தந்திரமும் யோகமும்

இத்தகைய ஓர் ஆய்வுக்கு முன் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம் உள்ளது. தாந்திரீக மரபு உருவாக்கியிருக்கும் தியான, உபாசனை முறைகளுக்கும் பதஞ்சலிக்கும் நேரடித் தொடர்பு இல்லை. அவை வேறு வேறு. பல ஆசிரியர்களின் யோக முறைகளில் இந்த மயக்கம் நிகழ்ந்து பலவகையான புரிதல் இடர்களை உருவாக்கியிருக்கிறது. பலர் பதஞ்சலி யோகசூத்திரத்தையே தாந்திரீக பாணியில் விளக்குவதையும் நான் வாசித்திருக்கிறேன்.

நெடுங்காலமாகவே யோகமரபும் தாந்த்ரீக மரபும் இரு தனிப்போக்குகளாக செயல்பட்டு வந்துள்ளன. இரு மரபுகளும் கொண்டும் கொடுத்தும் வளர்ந்தவை என்பதனால் அவற்றுக்கு இடையே பல பொதுக்கூறுகளும் உண்டு என்பதை மறுக்கமுடியாது. இந்து தாந்த்ரீக மதங்களும் சரி, பௌத்தத்துக்குள் உள்ள வஜ்ராயனம் போன்ற தாந்த்ரீக பிரிவுகளும்சரி, யோகத்தை தங்களுக்காக மறு ஆக்கம் செய்து கையாண்டன என்பதையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டும். ஆனாலும் அவை இரண்டும் வேறு வேறுதான்.

என்ன வேறுபாடு? அடிப்படையே வேறு வேறு என்பதுதான். யோகம் தன் மனத்தை அவதானிப்பதில் தொடங்குகிறது. அதை கட்டுப்படுத்தி அதன் ஆழங்களை அறியும் ஒரு தொடர்செயல்பாடு அது. மனத்தின் வெளிப்பாடுகளில் அதற்கு ஆர்வம் இல்லை. அதன் மூலத்தை நோக்கிச் செல்வதையே அது இலக்காகக் கொள்கிறது. அதற்காக பலவகையான பயிற்சிகளை அது உருவாக்கிக் கொள்கிறது. அத்தனை பயிற்சிகளுக்கும் நோக்கம் அகத்தை அறிந்து கடந்து சென்று அதன் சாரத்தில் அமர்தல் மட்டுமே. Continue reading

பதஞ்சலி யோகம்: ஒரு கடிதம்

பதஞ்சலி யோகம்: ஒரு கடிதம்

[ஜெயமோகன்.இன் ல் இருந்து]

திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்கள் பதஞ்சலி யோகம் கட்டுரை படிக்கும் சூழல் ஏற்பட்டது. மிக அருமையான விளக்கம். ஒரு எழுத்தார்வலர் பதஞ்சலியை படிப்பது என்பது அரிதான ஒன்று.பதஞ்சலி யோக சூத்திரம் என்பது மதம், இனம் மற்றும் ஆன்மிகம் கடந்த விஷயம் என நீங்கள் விளக்கியதிலிருந்து உங்கள் புரிதல் மற்றும் அதன் ஆழம் உணர முடிகிறது.

கட்டுரையில் சில முரண்பட்ட தகவல்களை காண முடிந்தது. பாராட்ட விருப்பம் கொண்ட எனக்கு இதை சுட்டிக்காட்டவும் உரிமை உண்டு என நினைக்கிறேன்.

“பகவத் கீதை இயற்றப்பட்ட ஐந்தாம் நூற்றாண்டில்தான் அதை ஆன்மீக மரபுகள் எடுத்தாள ஆரம்பித்தன” என்று கூறுவது எதன் அடிப்படையில்?

ஐந்தாம் நூற்றாண்டில்தான் என்பதற்கு ஆதாரம் என்ன? Continue reading

முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை.5

முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை.5

[ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது]

யோகத்தின் நவீனவாசிப்பு

இன்றைய உலகளாவிய சிந்தனைச் சூழலில் யோகத்தை நாம் எப்படி வாசிப்பது? வழக்கமாக செய்யப்படும் இரு வகை வாசிப்புகள் உண்டு. ஒன்று மத ரீதியான வாசிப்பு. பண்டைய ரிஷிகள் கண்டடைந்த மெய்ஞானத்தின் இறுதி வடிவம் அது என்று எடுத்துக்கொண்டு அதை வழிகாட்டிக் கட்டளைகளாக மட்டும் காண்பது. இரண்டு, பண்டைய சிந்தனைகளை தெரிந்துகொள்ளும் வரலாற்று ரீதியான ஆர்வம். இரண்டுக்கும் அவற்றுக்கான பங்களிப்பு உண்டு.

அவற்றுக்கும் அப்பால் ஒரு வாசிப்புச் சாத்தியமும் உண்டு என்பதைச் சுட்ட விரும்புகிறேன். கிரேக்க தத்துவ நூல்கள் கிரேக்க மதம் மற்றும் கிரேக்கப் பண்பாட்டின் விளைவுகள். ஆனால் மேலைத்தத்துவம் அவற்றை தத்துவமூலநூல்களாகக் கண்டு காலந்தோறும் வளர்ந்து வரும் தத்துவசிந்தனைகளுடன் தொடர்பு படுத்தி விவாதித்துக்கொண்டே இருக்கிறது. அத்தகைய ஒரு வாசிப்பு பதஞ்சலி யோக சூத்திரம் போன்ற நூல்களின் அடிப்படை மெய்யறிதல்களை மானுடப்பொதுவாக ஆக்கவும், மானுடசிந்தனையின் அனைத்து தளங்களுடனும் இணைத்து விரிவாகப்புரிந்துகொள்ளவும் உதவக்கூடியதாகும். அதுவே இன்றைய அடிப்படைத்தேவை என்பது என் எண்ணம். Continue reading

முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை.4

முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை.4

[ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது]

 

யோகத்தின் இன்றைய முகம்

பதஞ்சலி யோக சூத்திரம் முன்வைக்கும் யோக தரிசனத்தை நாம் சாங்கியதரிசனத்தின் துணைத்தரிசனமாகவே கற்கவேண்டும். இந்து ஞானமரபின் அனைத்து குருகுல அமைப்புகளிலும் கபில முனிவரின் சாங்கிய காரிகையும் பதஞ்சலி யோக சூத்திரங்களும் சேர்த்தே கற்பிக்கப்பட்டன. சொல்லப்போனால் ஆறுதரிசனங்களையும் ஒன்றாகவே கற்பது சிறந்தது. நாராயண குருவின் உவமையை இங்கே நினைவுகூரலாம். ஐந்து தரிசனங்களும் ஐந்து விரல்களைப் போன்றவை. அவை ஒன்றுசேர்ந்து செயல்பட்டாக வேண்டும். அந்த ஐந்துவிரல்களில் வேதாந்தம் சுட்டு விரல் என்றும் யோகம் கட்டைவிரல் என்றும் சொல்லப்படுவதுண்டு.அதாவது பிற அனைத்துத் தரிசனங்களுடனும் இணைந்து செயல்படும் தன்மை யோகத்துக்கு உண்டு. யோகம் ஒரு தரிசனத்துடன் இணையும்போது அது செயல்வடிவம்கொள்கிறது.

ஆனால் கடந்த ஐம்பதாண்டுகளாக யோகம் உலகளாவ பெற்ற கவனம் காரணமாக யோகசூத்திரம் மைய இடத்துக்கு வந்துவிட்டிருக்கிறது. பல குருகுலங்களில் பதஞ்சலி யோகசூத்திரம் மட்டுமே கற்பிக்கப்படுகிறது. பதஞ்சலி யோகசூத்திரம் பிற தரிசனங்களின் துணை இல்லாமலேயே நிற்கக் கூடிய ஒரு சுதந்திரமான பிரதி என்ற கௌரவம் அதற்கு கைவந்திருக்கிறது. ஆகவே இன்று அதை சாங்கியதரிசனத்தின் ஒரு பகுதியாக கருதவேண்டியதில்லை. எங்காவது சூத்திரங்கள் புரியாமல் ஆகுமென்றால் மட்டும் சாங்கிய தரிசனக் கருத்துக்களை தொட்டுக்கொண்டால்போதும்.

இத்தகைய மாறுதல் மரபுக்கு உகந்ததா என்ற கேள்வி எழலாம். இதன் மூலம் நாம் எதையாவது இழக்கிறோமா என்பது இன்னும் பொருத்தமான கேள்வி. காலமாறுதல்கள் பல விஷயங்களை தவிர்க்க முடியாதவையாக ஆக்குகின்றன என்பதே அதற்குப் பதில். நாம் இன்று கல்வி கற்கும் முறையும்சரி, சிந்திக்கும் முறையும் சரி, விவாதிக்கும் முறையும் சரி, நம் மரபு சார்ந்தவை அல்ல. நம்முடைய மரபான அறிவியங்கியல் இப்போது ஒரு பழைய விஷயமாக ஆகிவிட்டிருக்கிறது.

பண்டைக்காலத்தில் கருத்துக்களை நியாய சாஸ்திர அடிப்படையில் விவாதித்தார்கள். உண்மையை புறவயமாக வகுத்துக்கொள்வதற்கும் விவாதிப்பதற்குமான தர்க்க அடிபப்டைகளை வகுத்துச் சொல்லும் சிந்தனைமுறையே நியாயம். ஆறுதரிசனங்களில் ஒன்றாகவும், வைசேஷிக தரிசனத்தின் கிளையாகவும் விளங்கிய நியாயம் பின்னர் தனித்த வளர்ச்சியை அடைந்தது. அது வைசேஷிகத்தில் இருந்து முழுமையாகவே பிரிக்கப்பட்டது. நியாயம் ஒரு பிரபஞ்ச தரிசனம் என்ற நிலையில் இருந்து எல்லா பிரபஞ்சதரிசனங்களையும் வகுத்துக்கொண்டு விவாதிப்பதற்கான அடிப்படைத் தர்க்கக் கட்டுமானமாக ஆகியது.

இந்த வளர்ச்சிக்கு பௌத்தம் ஆற்றிய பங்களிப்பு மிக மிக முக்கியமானதாகும். பௌத்த ஆசிரியர்களில் அஸங்கர், வசுபந்து, நாகார்ஜ்ஜுனர், திக்நாகர், தர்மகீர்த்தி போன்று பெரும்பாலானவர்கள் நியாயத்துக்கு தங்கள் உரை ஒன்றை வழங்கியிருக்கிறார்கள். இந்த உரைகள் வழியாக நியாயம் மீண்டும் மீண்டும் பிறவி கொண்டு வளர்ந்தது. சென்ற நூற்றாண்டுவரைக்கும் நியாயமே நம்முடைய விவாத அரங்குகளை தீர்மானித்தது. நியாயம் கற்பதென்பது அறிவுச்செயல்பாட்டின் அடிப்படையாகக் கருதப்பட்டது.

இன்றும்கூட நாம் பழைமையான குருகுலங்களில் மரபான தத்துவக் கல்வி கற்றவர்களிடம் நம்முடைய அறிதல்களைப் பகிர்ந்துகொள்ள முடிவதில்லை. அவர்களின் கல்வி நியாய அடிப்படையில் அமைந்ததாக இருக்கிறது 1988 ல் விஷ்ணுபுரம் எழுதுவதற்காக பாலக்காட்டில் ஒரு மீமாம்சை அறிஞரைப் பார்க்கச்சென்றேன். அவருக்கு நான் சொன்னது புரியவில்லை. மீமாம்சை குறித்து மேலைநாட்டு அறிஞர்களின் எந்தக் கருத்தும் புரியவில்லை. காரணம் முற்றிலும் வேறான ஒரு அறிவியங்கியல் சார்ந்து நான் சிந்தித்துக்கொண்டிருந்தேன்.

ஆங்கிலக் கல்வி இந்தியாவில் பரவியபோது மேலைநாட்டு அறிவியங்கியல் நம்மிடையே செல்வாக்கு பெற்றது. ஐரோப்பிய சிந்தனைகள் அனைத்துமே கிரேக்க தர்க்கவியலை அடிபடையாகக் கொண்டவை. ஆங்கிலக் கல்வி இந்தியாவில் பரவிய ஆரம்ப நாட்களில் தர்க்கவியல் [லாஜிக்] மிக முக்கியமான ஒரு கல்வியாக இருந்தது. தர்க்கவியலின் ஒரு பகுதியாகவே மேலைத்தத்துவம் கற்பிக்கப்பட்டது. தர்க்கவியலில் பட்டப்படிப்பும் பட்டமேற்படிப்பும் படிப்பதும் ஆதாரமான கல்வியாகக் கருதப்பட்டன.

காரணம் அன்றைய பிரிட்டிஷ் அரசால் முன்னிறுத்தப்பட்ட சட்டம், அறிவியல் என்ற இரு துறைகளும் கிரேக்க தர்க்கவியலில் வேரூன்றியவை. அவையே நம் இன்றைய நவீன வாழ்க்கையை உருவாக்கின. ஆகவே மெல்லமெல்ல நியாயத்தின் அறிவியங்கியல் காலாவதியானது.

அக்காலத்தில் இந்தியவியல் [இண்டாலஜி] உருவாகியது. இந்திய மூலநூல்கள் ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழிகளில் மொழியாக்கம்செய்யப்பட்டன. ‘இந்திய ஞானத்தை கிரேக்க தர்க்கவியல் சார்ந்து புரிந்துகொள்ளும் பெருமுயற்சி ‘ என்று நாம் இந்தியவியலை வகுத்துக் கொள்ளலாம்.

இந்தியவியல் வழியாகவே நாம் அனைவரும் இந்திய ஞானமரபை புரிந்துகொண்டிருக்கிறோம். இது ஒருவரலாற்று விபத்து. பலநூற்றாண்டுக்கால இடைவெளியால் நம் மரபான கல்வியமைப்புகள் அழிந்தன. நம்முடைய பொதுக்கல்வியும் மரபான முறையை அறவே மறந்து மேலைக்கல்விமுறையை சார்ந்ததாக ஆகியது. எனவே வேறு வழியில்லை

விவேகானந்தருக்கும் ராமகிருஷ்ணபரமஹம்ஸருக்கும் இடையேயான உரையாடலில் இந்த முரண்பாடு மீண்டும் மீண்டும் மேலெழுந்து வந்ததை விவேகானந்தர் பலவாறாகப் பதிவுசெய்திருக்கிறார். குறிப்பாக உருவ வழிபாடு சார்ந்து அவருக்கும் ராமகிருஷ்ணருக்கும் நிகழ்ந்த உரையாடலையும், பின்னர் விவேகானந்தர் ராமகிருஷ்ண பரமஹம்ஸரைப்புரிந்து கொண்டதையும் உதாரணமாகச் சொல்லலாம்.

ராமகிருஷ்ணர் வேதாந்தி. ‘பிரம்மமே நான்’ என உணர்ந்து சமாதியோகத்தில் அமர்பவர். ஆனால் கிருஷ்ணபக்தியிலும் காளிபக்தியிலும் ஆடிப்பாடி நெகிழ்ந்து கண்ணீர் விட்டு திளைக்கவும் செய்தார். அதை ஏற்க விவேகானந்தரால் முடியவில்லை. ஒன்று இன்னொன்றை மறுப்பது என்று அவர் புரிந்துகொண்டார். நீண்ட ஒரு ஆன்மீகப் பரிணாமத்திற்குப் பின்னரே அதிதூய ஆன்மீக அனுபவமும் உருவவழிபாடு சார்ந்த பக்தியும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள் என்று உணர்ந்தார்.

இதே முரண்பாட்டை நாராயணகுருவுக்கு நடராஜகுருவுக்கும் இடையேயான உரையாடல்களிலும் நாம் காணமுடியும். விவேகானந்தர் பிற்பாடு ஆற்றிய பெரும்பணி என்பது இந்தியவியல் உருவாக்கி அளித்த மேலைத்தர்க்கரீதியான இந்தியசிந்தனைக் கட்டுமானத்த்தில் உள்ள இடைவெளிகளை கீழைத்தர்க்கத்தின் அறிதல்கள் மூலம் நிரப்புவதைத்தான். அதையே நடராஜ குருவும் செய்தார் என்று சொல்லலாம்.

நியாயத்தைப்போலவே யோகமும் அதன் மூலத்தரிசனமாகிய சாங்கியத்தில் இருந்து பிரிந்து தனியான வளர்ச்சியை அடைந்தது. அதை நிகழ்த்தியவர்களும் பௌத்தர்களே. பௌத்த யோகாசார மரபுக்குப் பின்னர் யோகம் என்பதே முற்றிலும் இன்னொன்றாக ஆகிவிட்டது. பின்னர் அந்த யோகமரபையே அத்வைதம் போன்ற பிற்காலத்தைய வேதாந்த மரபுகள் எடுத்தாண்டன.

இன்று நாம் காணும் யோகம் என்பது உண்மையில் இவ்வாறு பல படிகளிலாக பரிணாமம் கொண்டு வளர்ந்துவந்த ஒன்று. அந்த ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் மூலநூலாக நின்றுகொண்டிருக்கிறது பதஞ்சலி யோக சூத்திரம். இந்திய மரபில் ஒரு சிறப்பியல்பு உண்டு என்பதை நாம் காணலாம். பெரும்பாலும் மூலநூல்களை மறுவாசிப்பும் மறுவிளக்கமும் கொடுப்பதன் மூலமே சிந்தனை பரிணாமம் கொள்கிறது. பதஞ்சலி யோக சூத்திரமும் அவ்வாறு வளர்ந்ததுதான். இந்த உரை வரை.

ஆக, இந்த நூற்றாண்டில் நாம் பதஞ்சலி யோக சூத்திரத்தை அணுகும்போது அணுகும் அறிவுச்சூழலும் மாறிவிட்டிருக்கிறது. அந்நூலைப் பொருள்கொள்ளும் முறையும் மாறியிருக்கிறது. மேலைத்தருக்கப்பின்னணியில் பௌத்தம் வழியாக வளர்ந்து வந்த யோகத்தை நாம் இன்று வாசிக்கிறோம். ஆகவே அதை ஆறுதரிசனங்களில் ஒன்றாக வாசிக்க ஆரம்பிப்போம் என்றால் அது அதைச் சுருக்குவதாகவே அமையும்.

தொடரும்..

முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை.3

முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை.3

[ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது]

யோகத்தின் வரலாற்றுப் பின்னணி

யோகத்தின் வரலாற்றுப்பின்னணி என்ன என்று புரிந்துகொள்வது யோகத்தை புரிந்துகொள்வதற்கு மட்டுமல்ல யோகத்தை புரிவதற்கும் அவசியமானது. தற்காலத்தில் யோக சாதனைகளில் பலவகைகளிலும் ஈடுபடுபவர்களிடம் அப்படிப்பட்ட புரிதல் ஏதும் இல்லை என்பது நாமறிந்ததே. யோகத்தை ஒருவிதமான பக்தியாக ‘ காதலாகி கசிந்து கண்ணீர் மல்கும்’ நிலையாக இவர்களில் சில விளக்கும் அபத்தமும் நமது சூழலில் நடந்துகொண்டுதான் உள்ளது. யோகம் எவ்விதமான மன எழுச்சிக்கும் எதிரான ஒன்று என்பதை அவர்கள் உணராமைக்கு காரணம் அதன் வரலாற்று இடத்தைப்பற்றிய அறிதல் இல்லாமையே.

பாரத தத்துவ மரபின் தொடக்கப்புள்ளி என்று வேதங்களை சொல்வது வழக்கம். குறிப்பாக ரிக் வேதம் .அதிலும் குறிப்பாக ரிக்வேதத்தில் உள்ள பத்தாம் மண்டிலம். அதில்தான் ஆன்மீக சிந்தனைக்கு அடிப்படையாக அமையக்கூடிய கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன . ஆதி தரிசனங்கள் பேசப்பட்டுள்ளன. வேதங்களில் பெரும்பகுதி தோத்திரப்பாடல்கள் மற்றும் பிரார்த்தனைகள் அடங்கியதே. அவற்றில் தத்துவத்துக்கு மிக குறைவாகவே பங்கு உள்ளது .அனுஷ்டானங்கள் , அதாவது வேள்வி மற்றும் வழிபாட்டுச் சடங்குகளுக்கு பாடப்படவேண்டிய மந்திரங்களாகவே அவை உள்ளன. அச்சடங்குகளின் நோக்கம் திட்டவட்டமான சில நன்மைகளே. அதிகாரம் ,செல்வம், வெற்றி, புகழ் முதலியவையே வேதங்களில் வேண்டப்படுகின்றன ஆகவேதான் கீதை முதலிய பிற்கால தத்துவ நூல்கள் வேதங்கள் உலகியல் நோக்கங்களை [சம்சாரத்தை] முன்வைப்பவை என்று சொல்லி நிராகரிப்பின் தொனியில் பேசுகின்றன. வேதங்கள் தத்துவ விவாதங்களுக்கு அடிப்படைகளாக அமைவதைப்பார்க்கிலும் வேள்வி மந்திரங்களாகவே பெரிதும் கருதப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வந்தன. Continue reading

முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை.2

முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை.2

[ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது]

யோகம் மத வழிபாடா ?

தியானமே மதத்துடனும் கடவுளுடனும் பிரிக்கமுடியாத தொடர்பு உடையதல்ல என்றோம் .அப்படி இருக்க யோகம் மதத்துடனோ , கடவுளுடனோ தொடர்புடையது என்று சொல்ல வாய்ப்பே இல்லை .யோகம் முழுக்க முழுக்க உடல் , மனப்பயிற்சி மட்டுமே . யோகம் இந்தியமரபின் ஆறு தரிசனங்களில் ஒன்று . அடிப்படையில் இது நாத்திக தரிசனமாகும் . வெகுகாலம் யோகம் லௌகீக தரிசனமாகவே கருதப்பட்டது .பிற்காலத்தில் , குறிப்பாக சொல்லப்போனால் பகவத் கீதை இயற்றப்பட்ட ஐந்தாம் நூற்றாண்டில்தான் அதை ஆன்மீக மரபுகள் எடுத்தாள ஆரம்பித்தன. அதை விரிவாக பிறகு காணலாம் .யோகத்தின் மூல நூல்கள் எதிலுமே கடவுளுக்கு இடமில்லை . பதஞ்சலி யோக சூத்திரத்தில் கூட யோகப் பயிற்சியாளன் தன்னை தயாரித்துக்கொள்ள மேற்கொள்ளும் மனப்பயிற்சிகளில் ஒன்றாக மட்டுமே இறைவணக்கம் சொல்லப்பட்டுள்ளது . மேலும் யோகம் தத்துவ அடிப்படையிலே கூட கடவுள் என்ற கருதுகோளுக்கு எதிரானதாகவே இருக்கிறது . அது ஆதி இயற்கை என்ற கருதுகோளை பிரபஞ்சத்தின் மூலகாரணமாக வைத்த சாங்கிய மெய்ஞான மரபின் ஒரு பகுதி. Continue reading

முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை.1

முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை.1

[ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுத்தது]

பதஞ்சலி யோக சூத்திரம் போன்ற ஒரு புராதன நூலுக்குள் நுழைவதற்கு முன்பு வாசகர்களுக்கு வரக்கூடிய முக்கியமான ஐயங்கள் சிலவற்றை களைய வேண்டியுள்ளது. யோக சாதனை என்று கேட்ட உடனேயே அதை ஆன்மீகத்துடனும் கடவுளுடனும் தொடர்புபடுத்திக் கொள்வது பெரும்பாலோருக்கு இயல்பாக உள்ளது. யோகத்தை பற்றிய மிகத் தவறான புரிதல் அது.

நாம் வாழும் இச்சூழலில் இன்று தொடர்பு ஊடகங்கள் மிகவும் மலிந்துள்ளன. ஏராளமான விஷயங்களை தினமும் கேள்விப்பட்டபடி இருக்கிறோம். ஆனால் எவற்றையுமே உள்ளே சென்று ஆழத்தில் அறிவதற்கு நம்மால் முடிவதில்லை. அதற்கான அவகாசம் நமக்கில்லை. நம்முடைய லௌகீக ஆசைகள் முடிவற்றவை. அவற்றை நிறைவேற்றிக் கொள்ள செய்யவேண்டிய உழைப்பு ஒரு நாளும் ஓயாதது. ஆகவே அன்றாட அலுவல்கள் மற்றும் நாம் ஈடுபடும் தொழில் ஆகியவை தவிர அனைத்து விஷயங்களைப்பற்றியும் நாம் மேலோட்டமான சில பொதுப்புரிதல்களையே கொண்டுள்ளோம். அவற்றையே உண்மை என்று நம்பவும் செய்கிறோம். நமது வாழ்க்கையை உடனடியாக பாதிக்கும் ஆரோக்கியம் சம்பந்தமான விஷயங்களில் கூட நமது புரிதல்கள் பலசமயம் அபத்தமானவையாகவும், ஆபத்தான அளவுக்கு அரைகுறையானவையாகவும் உள்ளன. இந்நிலையில் ஆன்மீகம், தத்துவம், மதம் குறித்த விஷயங்களில் நமது புரிதல்கள் மிக மேலோட்டமானவையாக இருப்பதில் வியப்பில்லை . Continue reading