குரு சிஷ்ய உறவு – விஷ்ணுபுரத்தை முன் வைத்து – 3 by ஜாஜா

குரு சிஷ்ய உறவு – விஷ்ணுபுரத்தைமுன் வைத்து – 3

[ நிறைவுப் பகுதி]
by
ஜாஜா (எ) ராஜகோபாலன் ஜானகிராமன்

இக்கட்டுரையின் முந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும்

குரு சிஷ்ய உறவின் பிரதான அம்சமே இருவரிடையேயும் நிகழும் உரையாடல்களே. இன்றளவிலும் இந்த முறை தொடர்ந்து வருகிறது. குரு முதலில் ஒரு சிறு வினாவை அல்லது கருத்தினை எழுப்பி தனது சீடனின் பதிலை அல்லது கருத்தினை அறிய விழைகிறார். சீடன் தரும் பதிலில் இருந்து அவன் அறிந்த எல்லையை உணர்ந்து அங்கிருந்து அவனறியா எல்லைக்கு அவனை இட்டுச் செல்கிறார். அறியா இடம் நோக்கி குருவின் உரை பற்றி நகரும் சீடன் தெளிவு வேண்டி அவரிடம் மேலும் கேள்விகளைக் கேட்டு அறிகிறான். குரு, சிஷ்ய உறவின் முதற்படியான ஆச்சார்ய, வித்யார்த்தி உறவு இன்றுவரை அப்படித்தான்.

விஷ்ணுபுரத்தில் ஆயுர்வேத ஞானி கணதேவர் தன் சீடர்களுக்கு பவதத்தரின் உடல் நிலை குறித்து விளக்கும் இடம் சிறந்த உதாரணம். மரணத்தை ஆயுர்வேதம் அறிந்து கொண்ட விதம், உடல் தோன்றும் விதம், வளரும் முறை, செயல்படும் விதம், உடல் மீது மரணத்தின் சாயல் படியும் விதம், உடல் விட்டு படிப்படியாக உயிர் பிரியும் விதம், மரணம் உணர்ந்த நொடி மனித மனம் அடையும் மாற்றங்கள் என ஒரு ஆயுர்வேதிக்குத் தேவையான மொத்தத்தையும் அள்ளித்தருகிறார். இந்த இடம் வரை ஆசிரியராக எண்ணப்பட வேண்டியவர் அதனைத் தாண்டிய நிலைக்குப் போவது இந்த விஷயங்களை விளக்கும் விதத்தில் தனது அனுபவங்களை, தனது தடுமாற்றங்களை , தனது புரிதல்களை தன் சீடர்களறியத் தரும் இடத்தில்தான். Continue reading

குரு சிஷ்ய உறவு – விஷ்ணுபுரத்தை முன் வைத்து – 2 by ஜாஜா

குரு சிஷ்ய உறவு – விஷ்ணுபுரத்தைமுன் வைத்து – 2
by
ஜாஜா (எ) ராஜகோபாலன் ஜானகிராமன்

இக்கட்டுரையின் முந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும்

குரு நிலை என்பது கை விளக்கோடு கூடிய ஒருவனின் பயணமே. சீடன் கைவிளக்கற்று, குருவின் கால் தடம் பற்றித் தொடர்கிறான். பேரன்புடன் குரு தன் கைவிளக்கின் ஒளியால் பாதையினை அவனுக்கும் காட்டியபடியே தொடர்கிறார். ஞானத்தின் பாதையில் குருவும் சக பயணிதானோ?

கை விளக்கின் ஒளி எல்லை, சிறிது தொலைவை மட்டுமே புலனாக்குவது. எல்லை எது வரை என்பதை கைவிளக்கு காட்டுவதில்லை. இந்திர பதவியின் முயற்சிக்கு இடையே ஊர்வசி, மேனகை, ரம்பை உண்டெனில் ஞானத்தின் பாதையில் குரு பீடம். கை விளக்கின் ஒளி எல்லையை , அறிதலின் எல்லையாக்கி பீடம் ஏறி நிற்கும் குருட்டு குருமார்கள்.

தழலாய் மாறத் துடித்து நிற்கும் கற்பூரக் கட்டி போன்ற சிறுவனை , அவனது அறிவின் வீச்சினைக் கண்டு அசூயை கொள்ளும் குரு பீடம். அவனது தகுதியை , படிப்பினை, அறிவினை, வயதினை நிந்தித்துப் பேசும் ஜம்பம். தேடலின் தாகம் கொண்டு நிற்போரை கானல் நீர் காட்டி விரட்டி விடும் குரூரம். தன் அகந்தையைத் தடவி நிற்பவனைத் தழுவி ஏற்று அவனையும் குருடனாக்கப் போகும் நிர்மூடம். அறிந்ததாய் எண்ணி, அடைந்ததாய்க் காட்டி மரணத்தின் முன் கெஞ்சிக் கதறப் போகும் அவல நிலையில் நிற்கும் விஸ்வகரும் குருவாகவே அறியப்படுகிறார். அவரால் குரு பீடத்தை மட்டுமே உருவாக்க இயலும். குரு, சிஷ்ய உறவு அவருக்கு சாத்தியமே இல்லை.

விளக்கின் ஒளியில் பாதை காண மறந்து, திரியின் ஒளியில் பார்வையை லயிக்க விட்டு வெளிச்சக் குருடுகளாய் திரியும் குரு பீடங்கள் முமுட்சுவாய் நிற்பவனுக்கு நிழல் தருமா என்ன? திரும்பி நடந்து போகும் சிறுவன் சுடுகாட்டுச் சித்தனால் ஆட்கொள்ளப்படுகிறான். சீடனின் தகுதி குருவினை இட்டு வருமோ ? சீடன் சரியாய் இருக்கையில் குருவும் தகுதியானவராகவே வந்து அமைவது தற்செயலா என்ன? Continue reading

குரு சிஷ்ய உறவு – விஷ்ணுபுரத்தை முன் வைத்து by ஜாஜா

குரு சிஷ்ய உறவு – விஷ்ணுபுரத்தைமுன் வைத்து
by
ஜாஜா (எ) ராஜகோபாலன் ஜானகிராமன்

நண்பர்களே ! பணி நிமித்தம் வாசிக்க நேர்ந்த “இந்து வாரிசுரிமைச் சட்டம்” வியப்பான ஒன்று. ஒரு இந்துக் குடும்பத்தின் உறவு முறைகள் எந்தெந்த அடுக்குகளில் அமைகின்றன, அவற்றுள் முதன்மை பெறும் வரிசை எது, அடுத்த வரிசைக்கிரமம் என்பனவற்றை ஒரு நாவல் போல விவரித்துச் செல்லும் சட்டம் அது. எண்ணிறந்த உறவு முறைகளையும், அவற்றுக்கிடையே பாவியிருக்கும் தாய்வழி, தந்தைவழி குறுக்குப் பின்னல்களையும், அவற்றின் சொத்துரிமைக்கான அடுக்கு முறைகளையும் காணும்போது இவ்வளவு உறவுமுறைகளா என்று தோன்றும். ஆனால் , ரத்த உறவாலும், திருமண பந்தத்தாலும் அல்லாது இவ்வகைப்பாட்டைத் தாண்டிய ஒரு உறவு முறை நமது மரபில் தோன்றி இன்று வரை இடையறாது நீடிக்கிறது.

கால ஓட்டத்தின் வேக வாகினியை மீறி துளித் துளியாய் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் மானுட ஞானத்தினை பின்வரும் தலைமுறைக்கென தருவதில் இந்த உறவுமுறையின் பங்கு மகத்தானது. எந்த பந்தத்தின் அடிப்படையிலுமல்லாது , தேடலின் துணை கொண்டு மட்டுமே தேர்வு செய்யப்படும் உறவு இது. புல்லின் வேரென இந்தத் தேசம் முழுதும் பரவி, காலந்தோறும் உருவாகி வரும் குரு சிஷ்ய உறவினாலேயே இன்றைய நமது ஞானம் சாத்தியமாகிறது.

வேறெந்த உறவுமுறையையும் வரையறை செய்து, வகைப்படுத்திவிட முடியும். ஆனால், இந்த குரு சிஷ்ய உறவு எந்த இலக்கணத்திற்கும், எந்த வரையறைக்கும் நாலு விரற்கடை தள்ளியேதான் நிற்கும்.எப்படி உருவாகிறது இந்த உறவு என்பதை ஆண்டவனும் அறிய இயலாது போலும். “வா” என்ற குருவின் ஒற்றைச் சொல்லுக்கு, மறு பேச்சின்றி, திரும்பிப் பாராது எழுந்து அவர் பின்னே செல்லும் சீடனை இயக்குவது எது? மாறாக் காதலுடன் குருவின் பாதத்தை பணிந்து நிற்கும் சீடன் மனம் அடைவதுதான் என்ன? தரிசனம் பெற்ற ஒரு நொடியின் பரவசத்தை, தனக்கேற்ற சீடனைக் கண்டபோதும் அடையும் குருவின் உவகைதான் எப்படிப்பட்டது? மரபின் தொடர்ச்சியாய் நீளும் இவ்வுறவிலிருந்து மானுட ஞானம் பெறும் விழுமியம்தான் எது? Continue reading

காலமே உனக்கு வணக்கம் – 2 by சுனீல் கிருஷ்ணன்

விஷ்ணுபுரம்

காலமே உனக்கு வணக்கம் – 2

by  சுனீல் கிருஷ்ணன்

மகத்தான தனிமை

உனது மகத்தான தனிமையில்

கரிய பறவையெனப் பறந்துவரும்.

நீயேண்ணும் சொற்கடலின் அலைகள்

நக்கியுண்ணும் கரைமணலில் எஞ்சும்

நேற்றைய பாதங்களின் சாயலில் இன்று

எங்கு பதிகின்றன சுவடுகள்?

இந்த நாவலை நான் முதல் முறை வாசித்த போது எனக்கு இதன் இலக்கிய நுட்பங்கள் சரிவர புலப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். முதல் வாசிப்பின் முடிவில் நான் இதை ஓர் தத்துவ- ஆன்மீக நூலாகவே அணுகினேன். அதுவரை நான் வாசித்திருந்த தத்துவ- ஆன்மீக நூல்கள் வாழ்வை பற்றி முன்வைத்த நம்பிக்கைகள் அத்தனையும் பொசுங்கி சாம்பலாயின. விஷ்ணுபுரம் வாழ்வை பற்றிய மிக அடிப்படையான கேள்விகளை, வறட்டு தத்துவங்களாக இன்றி உயிர்த்துடிப்புள்ள பாத்திரங்கள் மூலம் எழுப்பியதால் அதன் உக்கிரத்தை பன்மடங்கு அதிகமாக உணர முடிந்தது..

இந்த நாவலின் அடிநாதமாக நான் காண்பது தனிமையும் தவிப்பும், ஆன்மீக தகிப்பும் தான். ஒருவகையில் ஜெ வுடைய தனிமையும் தவிப்பும் அதற்கான தேடலுமே இந்த விஷ்ணுபுரத்தின் மூலக் கூரு என்று எண்ணுகிறேன். விஷ்ணுபுரம் எனும் நாவலை ஒட்டுமொத்தமாக பிணைப்பது தனிமை எனும் இழை தான் என்று எனக்கு படுவதுண்டு. ஆன்மீக அகப் பயணம் என்பது கருந்தூளைக்குள் (black hole வழுக்குமரத்தில் ஏறுவதைப்  போலத்தான். ஒளி என்றேனும் நம் மீது விழக்கூடும் எனும் நம்பிக்கை மட்டுமே எஞ்சும், திசைகள் அற்ற இருளும், வெறுமையும் மட்டுமே சூழ்ந்த பயணம் அது.

அக்னிதத்தனின் வழித்தோன்றலாக விஷ்ணுபுரத்தை கட்டுபடுத்தும் மகாவைதிகர்களுக்கு புத்திர சோகம் மட்டுமல்ல தனிமையும் குலசொத்து தான். அதிகாரத்தின் உச்சாணிக் கொம்பில் இருக்கும் மனிதனுக்கு அந்த அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் எனும் முனைப்பு எப்போதும் இருப்பதுதான். அதற்கு அவன் தன்னை பிறர் அணுகமுடியாத தொலைவில், அகந்தையின் கோட்டைக்குள் புதைத்து வைத்திருக்கிறான். அதிகார நாட்டமும் ஆன்மீக தேடலும் ஒருபோதும் இணைந்திட முடியாது. சூரியதத்தரின் தனிமை இத்தகையதே. ஸ்வேததத்தன் சொன்னது போல் சூரியதத்தனின் தனிமைக்கு காரணம் விஷ்ணுபுரம் அல்ல, மாறாக தன்னையே அவன் விஷ்ணுபுரம் என எண்ணுவதால் விளைந்தது. அகந்தையை ஊதி பெருக்கிக் கட்டப்பட்ட அதிகாரத்தின் மீதான ஐயத்தால், அவரால் அவருடைய மகன் ஸ்வேததத்தனை கூட நெருங்கமுடியவில்லை. மலர்மாலைகளை கருகசெய்யும் நெருங்கமுடியாத நெருப்பாகவே அவர் மரணத்திற்கு பின்பும் நினைவுகூரப் படுகிறார். நிலவின் குளுமையில் அனைவரையும் வசீகரிக்கும் பவதத்தர் உணர்ந்த தனிமை தன் குலத்தின் ஆகச்சிறந்த வாரிசு அக்குலத்தின் மரபிற்கு எதிராக, மகாகாலனாய் உருவெடுத்து அதன் அஸ்திவாரங்களை பெயர்க்க தொடங்கியபோது எழுந்தது. சூரியதத்தரின் தனிமை அதிகாரத்திலும் அகங்காரத்திலும் விளைந்தது, அதை மீறி செல்ல அவர் முனையவும் இல்லை விரும்பவும் இல்லை. பவதத்தர் தனிமையை தன் மேல் அழுத்தும் சுமையாக அறிகிறார், விஷ்ணுபுரத்து சர்வஞர் எனும் பட்டம் தன் பாதையில் அகற்றமுடியாத கரும்பாறையாக அடைத்து நிற்பதை எண்ணி வருந்துகிறார். அதிலிருந்து மீண்டு தன் மகனோடு சேர்ந்து காசியபனைப்போல் குதித்தாட  வேண்டும் என துடிக்கிறார். Continue reading

காலமே உனக்கு வணக்கம் – 1 by சுனீல் கிருஷ்ணன்

விஷ்ணுபுரம்

காலமே உனக்கு வணக்கம் – 1

by  சுனீல் கிருஷ்ணன்

”அனந்த கோடி அடையாளங்கள் கொண்ட காலமே

நீ அன்னையாகி வருக.

காலமே உனக்கு வணக்கம்”

வெண் மணல் நிறைந்த வறண்ட பாலைவனத்தில், பவுர்ணமி நிலவொளியில் பிரம்மாண்டமாக விரியும் அந்த சக்கரம். அந்த மண், நதி புரண்ட மண். காலமெனும் நதி சுழிந்தோடி தன் அடையாளங்களை தொலைத்த மண். தன்னுள் பல நூற்றாண்டு ரகசியங்களை, மானுட தேடல்களை, நிராசைகளை, ஏமாற்றங்களை. என உயிர்த்துடிப்புடன் விளங்கிய அனைத்தையும் விழுங்கிய   மலைப்பாம்பை போல, மானுட ஞானத்தை தன்னுள் புதைத்து வைத்திருக்கும் ஆழமான,வெறுமையான, வெதுவெதுப்பான மண். கூரைகள் இல்லாத வெட்டை வெளியில், நிலவொளியில் எதை தேடுகிறேன்? பிங்கலனும்  சங்கர்ஷணனும் உணர்ந்த அந்த தனிமை, ப்ரேசனரும் காசியபனும் உணர்ந்த அந்த தனிமை, பவதத்தரும், சூரிய தத்தரும், ஆரிய தத்தரும் யுகம் யுகமாக கண்டுணர்ந்த அந்த தனிமை, பாவகனும், பத்மனும், யோக விரதரும் அறிந்து தவித்த அந்த மகத்தான தனிமை, அது என்னையும் குளிர செய்கிறது. . ஆம் இந்த பிரபஞ்சத்தில் நான் தனித்து நிற்கிறேன். ஏன் எனும் கேள்வி மட்டுமே என்னுள் எஞ்சி இருக்கிறது..

விஷ்ணுபுரத்தை முதல் முறை வாசித்த சமயம், அதுவே நான் வாசித்த முதல் பெருநாவல். எந்த ஒரு மகத்தான இலக்கிய ஆக்கமும்  அதை அணுகும்  வாசகனை கலைத்து மீண்டும் கட்டி எழுப்பும். அந்த அனுபவத்தை முதன்முதலாக எனக்கு  விஷ்ணுபுரமே அளித்தது. மலை உச்சியை நோக்கி மூச்சிரைக்க, பதைபதைப்புடன் ஓடி, அதன் சிகர நுனியில் ஏறி நின்று கீழே பார்த்தால் புலப்படும் அந்த ஒட்டுமொத்த காட்சி கொடுக்கக் கூடிய வார்த்தைகளில் அடைபடாத அந்த பிரமிப்பு, திகைப்பு, பீறிட்டு கிளம்பும் அர்த்தமற்ற ஆழ்ந்த துக்கம் போன்றவையே முதல் வாசிப்பில் என்னை நிறைத்தது. Continue reading

விஷ்ணுபுரம் – காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை by ஜடாயு – 4

விஷ்ணுபுரம் – காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை – 4

– ஜடாயு

மதிப்பீடுகள்:

“துயில் கலைந்த பாம்பொன்று வேரில் சுழன்றேறி, மரம் பிணைத்தேறி கிளைகள் படர்ந்தேறி உச்சி நுனியொன்றில் தன் தலைவிழுங்கி சுருண்டு ஒரு வெண்ணிற மலராக விரிந்தது. குறையாத பாத்திரத்திலிருந்து நிரம்பாத பாத்திரத்திற்கு நீர் வழிந்தபடியே இருந்தது”

கலைரீதியாக விஷ்ணுபுரத்தை எப்படி மதிப்பிடலாம்?

மரபார்ந்த செவ்வியல் கலைகள் எப்போதும் மேலும் மேலும் அந்தக் கலைப் பரப்பின் நுட்பங்களுக்குள் சென்று கொண்டே இருக்கும் இயல்பு கொண்டவை. கோயில்களின் உள்மண்படங்களிலும் பிராகாரங்களிலும் முடுக்குகளிலும் என்றோ ஒரு நாள் வந்து பார்க்கப் போகிற ஒரு தீவிர கலாரசிகனுக்காக ஒரு சிற்பி படைத்திருக்கும் செதுக்கல்களை நாம் காண முடியும்.

லட்சண சுத்தமும் நுட்பங்களும் ஒளிச்சிதறல்களின் விளையாட்டால் அந்த கணத்தில் துலங்கி நம்மை பரவசத்தில் ஆழ்த்தும் இருட்டு மூலைகளும் வாய்ந்தது விஷ்ணுபுரம். தாராசுரம், பேலூர், ஹளேபீடு கோயில்களின் சிற்ப அற்புதங்களிலும் அஜந்தா ஓவியங்களிலும் நாம் காண்பது போல.

ஆனால் அது மட்டுமல்ல, நவீன ஓவியங்களுக்கே உரித்தான குறியீட்டுத் தன்மை, பூடகத் தன்மை, சலனம் ஆகிய இயல்புகளும் அதில் உண்டு.  ஒரு இம்ப்ரெஷனிஸ ஓவியத்தையோ க்யூபிஸ ஓவியத்தையோ ரசிக்கும் போது ஏற்படுவது போன்ற “திறப்புகள்” விஷ்ணுபுரம் நாவல் வாசிப்பிலும் சாத்தியம்.

மரபு காலங்காலமாக உருவாக்கி வைத்திருக்கும் குறியீடுகள் ஒருவகையானவை என்றால் நவீன ஓவியங்கள் உருவாக்கும் குறியீட்டு வெளி இன்னொரு வகையானது.  இந்த இரண்டுமே ஒரு கலைப்படைப்பாக, விஷ்ணுபுரத்தில் கைகூடியிருக்கிறது. Continue reading

விஷ்ணுபுரம் – காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை by ஜடாயு – 3

விஷ்ணுபுரம் – காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை – 3

– ஜடாயு

மூன்று மகத்தான கவிதைகள்:

மூன்று பாகங்களிலும் அவற்றின் சாரமாக முத்திரை பதித்து வரும் கவிதைகள். இந்த மூன்று கவிதைகளும்  மிக நுட்பமான, அந்தரங்கமான அக அனுபவங்களை ஆழ்ந்த படிமங்களாக குறியீடுகளாக சொல்லில் வடித்துக் காட்ட முயலும் அமானுஷ்ய முயற்சிகள்.  பிரக்ஞையின் விளிம்பில் நின்று மொழியின் எல்லைகளுக்கும், சாத்தியங்களுக்கும் சவால் விடும் எழுத்து இது என்று உறுதியாகக் கூறலாம்.

முதல் பாகத்தில் வரும் கவிதை சதுப்பு நிலத்துக்குள் புகுந்த திருவடியின் தியானம் (41-வது அத்தியாயம்).  “இசை – வெளி  – நடனம்” என்பது தியான மந்திரம்.

“…. சிலிர்த்த வரிகளில் உன் புரியாத காவியம்

இசைக்கும் வெளி உன் நடனம்

அடி, என் சாகரத் திரைச்சீலை விலக்கிப்

புன்னகைக்கும் பெருமுகம், விண்ணலைகள்

கூடும் பிரிய கோஷம், பிரதிபலித்து

வெளிப்பது உன் விழி  நாதம் ….

….  உன் கூந்தல் மலர் எனப் புலரி

உன் பாதத் தடமென சொற்கள்

எங்கும் விரிந்த  உயிர்ப்பின்

கிளைகளில் ஊசலாடி எழும்

தூய்மையின் புலரி மந்திரம்…

… நீலமெனப் பெருவெளி இள

நீலமெனக் காலம் இள

நீலமென ஓங்காரம்… “ Continue reading

விஷ்ணுபுரம் – காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை by ஜடாயு – 2

விஷ்ணுபுரம் – காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை – 2

– ஜடாயு

தத்துவமாக்கலும் காவியமும்:

விஷ்ணுபுரம் நாவலின் இரண்டாம் பாகம் முழுவதும் தத்துவ விவாதங்களால் நிரம்பியது. ஆனால் அந்த தத்துவ விவாதங்கள் கறாரான தத்துவ மொழியிலேயே முழுவதுமாக இல்லாமல், பெரிதும் கவித்துவமான இலக்கிய மொழியிலேயே உள்ளன.  நாவலில் வரும் இந்திய ஞான மரபுத் தரப்புகளின் சம்பிரதாயமான தத்துவக் கோட்பாட்டு நூல்களை வாசிக்கும்போது நாம் எதிர்கொள்ளும் வறட்டுத் தன்மையும், தூய தருக்கவாதமும் இந்த விவாதங்களில் இல்லை என்பதை தத்துவ நூல்களை நேரடியாகக் கற்றவர்கள் உணர முடியும். தத்துவ விவாதங்கள் கூட அவற்றின் காவியமாக்கப் பட்ட நிலையிலேயே விஷ்ணுபுரத்தில் உள்ளன. ஜெயமோகனே தனது விளக்கங்களில் இதைக் குறிப்பிட்டிருக்கிறார். இது கவனிக்கப் பட்ட விஷயம். ஆனால் கவனிக்கப் படாத இன்னொரு விஷயமும் உண்டு. அதைக் கீழே பார்ப்போம்.

காளிதாசனை “அத்வைத கவி” என்று வேதாந்த ஆசான்களும், உரையாசிரியர்களும் சிலாகித்திருக்கிறார்கள். அவனது காவியங்களில் உவமைகளிலும், சித்தரிப்புகளிலும் அத்வைத தத்துவத்தின் நுட்பமான சிதறல்கள் உள்ளன என்று அவர்கள் ரசனையுடன் சுட்டிக் காட்டுவார்கள். காளிதாச காவியங்களைப் போலவே, ஏன் அதைவிடவும் கூட அதிகமாக இது விஷ்ணுபுரத்திற்கும் பொருந்தும்.  அடிப்படையில் விஷ்ணுபுரம் ஒரு “தத்துவ காவியமும்” தான். எப்படி கௌஸ்துப காண்டத்தில் தத்துவங்கள் காவிய மயமாக்கப் பட்டுள்ளனவோ,  அதே போல ஸ்ரீபாத காண்டத்திலும், மணிமுடிக்  காண்டத்திலும், காவியம் முழுவதும் தத்துவ மயமாக்கப் பட்டுள்ளது. பிங்கலனும் சங்கர்ஷணனும் திருவடியும் லட்சுமியும் லலிதாங்கியும் பிரசேனரும் கொள்ளும் வெறுமையும் தனிமையும் எல்லாம் காலரூபமாக சுழன்று நிற்கும் மகாசூன்யத்தின் மூர்த்திகரணங்கள் அன்றி வேறென்ன?  வேததத்தனும், பாவகனும், பத்மனும் கொள்ளும் உணர்ச்சிகளும், வெண்பறவைகள் தலைசிதறி அழிவதும் வெளியே நிகழும் மகா பிரளயத்திற்கு ஈடாக உள்ளேயும் மனோநாசம் நிகழ்வதற்கான தத்துவப் படிமங்கள் அன்றி வேறென்ன?

நாவல் என்ற நவீன இலக்கிய வடிவத்தில் தத்துவ அம்சங்களுக்கும், தத்துவ சிக்கல்களுக்கும் எப்போதும் ஒரு முக்கிய இடம் உண்டு என்பது இலக்கிய விமர்சகர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் கருத்து. பொதுவாக, பெருநாவல்களில் சித்தரிப்புகள், உரையாடல்கள், கதைப்பின்னல்கள் இவற்றோடு கூட ஒரு சில அத்தியாயங்களில் தத்துவ சிந்தனைகள் அழுத்தம் தரப்பட்டு இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.

ஆனால், விஷ்ணுபுரத்திலோ நாவலின் ஒவ்வொரு இழையிலும் தத்துவத் தேடலுக்கான வெளி உள்ளது. நாவல் முழுவதிலும், ஆழமான தத்துவத் திறப்புகளை சென்று தீண்டாத ஒரு அத்தியாயம் கூட இல்லை எனலாம். இதுவும் விஷ்ணுபுரத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்று.

இவ்வாறு காவியமாக்கல், தத்துவமாக்கல் இரண்டும் ஒன்றுக் கொன்று பின்னிப் பிணைந்து விஷ்ணுபுரம் நூல் நெடுகிலும் விரவியுள்ளன என்று சொல்லலாம்.

கவித்துவ தரிசனம்:

“கவியின் கண் காலத்தின் கண் அல்லவா?“ – சங்கர்ஷணன்.

ஒரு உண்மையான தரிசனம் என்பது  ஒருபோதும் தருக்கத்துக்கு உட்பட்டதாக இருக்க முடியாது..  அது ஒரு கவிதையாகவோ கலையாகவோ மட்டுமே இருக்க முடியும்  என்று அஜிதன் ஓரிடத்தில் சொல்கிறான்.  விவாதத்தின் போது, எந்த எதிர்த் தரப்பையும் அத் தரப்பின் கவித்துவ தரிசனத்திற்கு செல்ல விடாமல் எதிராளியை முற்றிலும் தர்க்கச் சுழல்களில் சிதறடித்து நிலைகுலைய வைத்து, எதிராளி தடுமாறும் தருணம் தனது தரப்பின் கவித்துவ தரிசனத்தால் அதை முறியடிப்பது தான் பவத்த்தரின் உத்தி என்பதையும் சரியாகக் கணிக்கிறான் அஜிதன். இதே உத்தியை பவத்தருக்கு எதிராகப் பயன்படுத்தி வெற்றியும் காண்கிறான்.

தர்க்கமும் அது சார்ந்த வாள் சுழற்றல்களும் அடிப்படையில் வாதிப்பவனின் அகங்காரத்தின் வெளிப்பாடுகளே. ஆனால், கவிதை அப்படியல்ல, அது தன்னை உணர்ந்த ஒரு ஆத்மாவின் வெளிப்படு தருணம், எனவே அது எப்போதும் தர்க்கத்தை விட ஒரு படி உயர்ந்த தளத்திலேயே  உள்ளது.  நேரடியாக சொல்லப் படாவிட்டாலும் கௌஸ்துப காண்டத்தில் உறுதியாக இக்கருத்து கோடிட்டுக் காட்டப் படுகிறது. ஞானத் தேடல் கொண்டு மெய்யுணர்வின் முழுமையை தரிசித்து அதைப் பாடுபவனை ரிஷி, கவி என்ற இரண்டு சொற்களாலும் வேறுபாடின்றியே வேத இலக்கியம் குறிப்பிடுகிறது என்பதையும் இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.

தர்க்கங்களின் தடைகளை உடைப்பது கவிதை. தர்க்கங்களும் எதிர்த் தர்க்கங்களும் உருவாக்கி வைத்திருக்கும் திரைகளை விலக்குவது கவிதை. அதனால் தான் விஷ்ணுபுரத்தின் ஞான தாகிகள் தங்கள் தரப்புக்காக தீவிரமாக பேசும்கூட, எதிர்த் தரப்பின் கவித்துவ தரிசனத்தை நிராகரிப்பதில்லை. அது மட்டுமல்ல, சமயங்களில் அதனை விதந்தோதவும் செய்கிறார்கள்.

“நசிகேத ரிஷி தன் தளிர்க்கரங்களால் மரணத்தின் கதவைத் தட்டினார்” என்கிறார் பௌத்த ஞானி அஜித மகாபாதர். அவர் பேசுவது வேதாந்த மரபைச் சேர்ந்த உபநிஷத ஞானம். “குசப்புல்லில் துளித்துளியாக நீர்மொண்டு கடலை வற்றவைப்பது போன்றது மனக்கொந்தளிப்பை தர்க்கத்தால் பின்தொடர்வது…” மிருகநயனிக்கு அருகில் அஜிதர் தீவிரமாக விசாரம் செய்யும்போது அவர் நினைவில் எழும் இந்தச் சொற்கள் அத்வைத மகா குருவான கௌடபாதர் வாய்மொழியாக வந்தவை.

“நான் என்று கூறூம்போது உன் மனம் பிரபஞ்சம் நோக்கி விரிவடையட்டும். பிரபஞ்சத்தை ஒருபோதும் உன்னை நோக்கி குறுக்காதே” என்று பிங்கலனுக்கு உபதேசிப்பவர் சிரவண மகாப்பிரபு. சுயமைய நோக்கு கொண்டது என்றும் குறுக்கல்வாதம் என்றும் அஜிதனால் குற்றம் சாட்டப் படும் வேதாந்த மரபின் பிரதிநிதி. ஆனால் அவரது இந்தச் சொற்கள் அஜிதன் பகரும் ஆலய விஞ்ஞானத்தின், மகா தர்மத்தின் சாரத்தைத் தான் உண்மையில் எடுத்துரைக்கின்றன.  “கற்றபடி இரு. மனிதர்களை முடிவின்றி மன்னித்தபடி இரு. மனங்களை ஒன்று  சேர்த்தபடி இரு. மகா இயற்கையிலிருந்து ஆசி பெற்றபடி இரு. எளிய உயிர்களுக்கு அந்த ஆசியை அளித்தபடி இரு” – இந்த நாவலின் சாரமாகத் திரண்டு வரும் “ததாகதரின் பெருங்கருணை”யே நம் முன்நின்று உரைப்பது போன்ற சொற்கள். ஆனால் இந்த உபதேசத்தை தன் மரணத் தருவாயில் சீடனுக்கு வழங்குபவரோ விஷ்ணுபுர மகாவைதீகரான பவதத்தர்.

கவிதை:

“இப்போது தான் இந்தக் கனவிலிருந்து விழித்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணினேன். ஆனால் அந்த எண்ணம் கூட அக்கனவின் ஒரு பகுதி எனவே ஆயிற்று… காற்றில் மிதந்தபடி, சிவப்பான  உதய ஒளி படர்ந்த வானத்தின் கீழ்மூலை நோக்கிச் சென்றபோது எங்கோ ஒருவனின் கனவுக்குள் புகுந்து, அவனுடைய நனவில் விழித்தெழ ஆசைப் பட்டேன்..”

இலக்கிய வடிவங்களிலேயே கனவுக்கு மிக நெருக்கமாக உள்ளது கவிதை. விஷ்ணுபுரம் நாவலும் அப்படிப் பட்டதே என்பதால், அதில் கவிதைக் கூறுகள் மிகுதியும் உள்ளன.  நாவலின் உரைநடை நெடுகிலும் கவித்துவம் ததும்பி நிறைந்து வழிகிறது.  லலிதாங்கி போல பூரண ஆபரணங்கள் பூண்டு வசீகர நடனமாடிக் கொண்டிருக்கும் உரைநடை ஜிவ்வென்று அப்படியே ஒரு துள்ளு துள்ளி  வெண்பறவையாக வானில் பறக்கிறது.  கனவு வெளியை அளைந்து களைத்தயர்ந்து மிக லாகவமாக மண்ணில் இறங்கி யானைக் கொட்டிலிலும் கூச்சல் பெருத்த ஊட்டுபுரைகளிலும் சஞ்சரித்து கொட்டமடிக்கிறது.

அது தவிர்த்து, வெளிப்படையான கவிதை வரிகளும் நாவலில் பல இடங்களில் பயின்று வருகின்றன.

“இருட்டால் போர்த்தப் பட்ட வெளி

வேறுபடுத்தும் அடையாளங்களின்மையால்

ஏதுமின்மையாக ஆகிவிட்டிருந்த வெளி

அது நீராக இருந்தது

அதன் பிறப்பு

வடிவமற்ற வெறுமையினால் மூடப்பட்டிருந்தது

தன் சுயமான மகிமையினால்

முதல் முடிவற்ற தவத்தால்

அது சத்தாக மாறியது.. “

ஞானசபை விவாதத்தின் தொடக்கத்தில் ரிக்வேத பண்டிதர்  பாடும் சிருஷ்டி கீதத்தின் சில வரிகள் இவை.  இது போன்று, இன்னும் சில வேத, உபநிஷத மந்திரங்களும் உயிரோட்டம் ததும்பும் கவிதை வடிவில் ஞான சபை விவாதங்களின் பகுதியாக வருகின்றன.  வேத இலக்கியத்தின் அற்புதமான தொல்கவிதைகளை ஒரு நவீனத் தமிழ் வாசகனுக்கு அதன் தூய வடிவில் எடுத்துச் செல்வதற்கு மிகச் சிறந்த வழி இத்தகைய கவிதையாக்கமே என்று எனக்கு உணர்த்தியது விஷ்ணுபுரத்தின் இந்தப் பகுதிகள் தான். எனது சமீபத்திய வேத கவிதையாக்க முயற்சிகளுக்கு உந்துதல் அளித்ததும் விஷ்ணுபுரம் நாவலின் இந்தப் பகுதிகள் தான்.

இன்னொரு வகை மாதிரி தரிசன மரபுகளின் சாரத்தை அழகிய கவிதைகளாக நாவலின் போக்கில் வடித்திருப்பது. கால தரிசன சூத்திரத்தை பிட்சு பாடும் ஓர் அற்புதமான கவிதை –

“வழி தவறிய குழந்தையொன்று

பிஞ்சுக்கால் பின்ன அலைகிறது

அழுத கண்களில் வான் நீலம் கரைகிறது

குழந்தை உனது பெயரென்ன?

பெயரிடப்படாத குழந்தை அது

குழந்தை உனது ஊரென்ன?

அது மண்ணின் உப்பை அறியாதது.

குழந்தை உனது தாய் யார்?

தாயன்றி அது வேறு ஏதும் அறியவில்லை.

அன்ந்த கோடி அடையாளங்கள் கொண்ட காலமே

நீ அன்னையாகி வருக.

காலமே உனக்கு வணக்கம்.”

 பௌத்த ஞானி எழுதியதாக வரும் “தச தர்சன சங்கிரஹம்”, ஜைன முனியின் ஆக்கமான “சத பிரஸ்ன மாலிகா” ஆகிய அத்தியாயங்கள் உயர் தத்துவம் கவிதையாகி வரும் அழகுக்கு சிறந்த உதாரணங்கள்.

தொடரும்..

விஷ்ணுபுரம் – காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை by ஜடாயு – 1

விஷ்ணுபுரம் – காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை – 1

– ஜடாயு

“மௌனம் ஒரு விதையாயிற்று. அதிலிருந்து வேர் முளைத்தது. அது மண்ணைக் கவ்வி உறிஞ்சியது. அதில் அர்த்தம் நிரம்பியது. காவியம் முளைவிட்டது. மண்ணைப் பிளந்து வெளிவந்தது”.

விஷ்ணுபுரம் நாவலும் விஷ்ணுபுரம் கோயிலைப் போன்றே பிரம்மாண்டமானது. திசைக்கொரு கோபுரம். மேகங்களைத் தாண்டி விண்ணில் எழும் அவற்றின் முகடுகள். பூலோகத்தை மட்டுமல்ல, புவர்லோகத்தையும், சுவர்லோகத்தையும் அதன் மேல் உலகங்களையும் உள்ளடக்கிய அதன் வெளி. பிரக்ஞையின் பல அடுக்குகள். இதெல்லாம் சேர்ந்தது விஷ்ணுபுரம்.

நம் கண்ணையும் கருத்தையும் கவர்வது போல பல்வேறு விதமான புடைப்புத் தூண்கள், சுதைகள், நுட்பமான வேலைப்பாடுகள் கொண்ட சிற்ப அற்புதங்கள் எல்லாம் செறிந்தது விஷ்ணுபுரம். இடையறாது ஒலித்து அதிர்வெழுப்பும் சுவர்ணகண்டம் போல, சோனாவின் நீரொழுக்குப் போல, ஒரு இடையறாத தொடர்ச்சி, அதில் பல்வேறு சலனங்கள்.

எல்லாவிதங்களிலும் முழுமையைத் தொட முயலும் ஒரு காவியம்.

விஷ்ணுபுரத்தை வாசிக்கும்போது எனக்கு சில வட இந்தியக் கோயில்களின் கூம்பு வடிவ சிகர விமானம் தான் நினைவுக்கு வருகிறது. நாகர பாணி விமானம். அதில் கீழிருந்து மேலாக,  சிறுசிறு சிகர விமானங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கடுக்காக அமைக்கப் பட்டிருக்கும். அவை ஒவ்வொன்றும் பெரிய சிகர விமானத்தின் சிறுபிரதிகளே போல இருக்கும். அவை எல்லாம் ஒன்றிணைந்து ஒரு  பிரம்மாண்டமான சிகர விமானமாக நம் கண்முன் எழும். அது  போன்றது விஷ்ணுபுரம்  நாவலின் அமைப்பு.

அதன் ஒவ்வொரு அத்தியாயமும்  ஒரு காவியத்தருணம். தன்னளவில் முழுமை கொண்டது.  நாம் இதுவரை படித்து வந்திருக்கும் மற்ற எல்லா நாவல்களிலும் உச்சம் என்பது ஒரு சில இடங்களில் மட்டுமே காணக் கிடைக்கும். நாவலின் மற்ற பகுதிகள் அனைத்தும் அந்த உச்சங்களை நோக்கி இட்டுச் செல்லும் புள்ளிகளாகவோ, அவற்றை நோக்கிச் செலுத்தக் கூடிய இடங்களாகவோ அல்லது இயல்பான கதைத் தொடர்ச்சியாக அமைந்த பகுதிகளாகவோ இருக்கும்.  மிகப் பெரிய நாவல்களில் இத்தகைய தொடர்ச்சிப் பகுதிகள் ஒப்பீட்டில் இன்னும் அதிகம்.  ஜெயமோகனின் மற்ற படைப்புகளான பின் தொடரும் நிழலின் குரல், காடு ஆகிய நாவல்களில் கூட உச்சங்கள் என்று சொல்லக் கூடிய சில இடங்களே உண்டு. காளிதாச காவியங்களில் கூட ஒவ்வொரு சர்க்கத்திலும் உச்சங்கள் நமக்குக் காணக் கிடப்பதில்லை.

Continue reading

நடன மகளுக்கு by அர்விந்த் கருணாகரன்

நடன மகளுக்கு

“ஓய்ந்த என் கால்கள் ஆடி முடிக்காத
அந்த நடனத்தை நீ ஆடத் தொடங்கு”

– சூத்ரதாரி

by அர்விந்த் கருணாகரன்

விஷ்ணுபுரம் நாவலில் பாவகன் ஒரு இடத்தில் சொல்வான். “மகாகாவியங்கள் தொலைதூரத்து மலைகளைப் போல. நம் மனதின் வடிவ கற்பனைகளுக்குள் அவற்றின் வடிவம் அடங்காது. ஒரு பகுதியைப் பார்க்கும்போது அதன் மறுபகுதி மறைந்திருக்கும். நாம் நிற்கும் இடத்திற்கு ஏற்பவும், நம் மனதின் கற்பனைக்கு ஏற்பவும் அது மாறிமாறித் தோற்றம் தரும். எப்போது நமது மனஉருவகங்களை அவற்றின் மீது போட ஆரம்பிக்கிறோமோ, அந்தக் கணத்தில் காவிய தரிசனம் முடிவடைகிறது. பிறகு நாம் பெறுவது வெறும் அகங்கார தரிசனம்தான்” என்று.

Continue reading