விஷ்ணுபுரம் ஆச்சரியங்களை அளிக்கத் தவறுவதே இல்லை!
எழுதியவர் R.கோபி
விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல் நாவல்களைப் படித்துக் கொண்டிருந்தபோது, அவற்றைப் பற்றிய பதிவுகள் எழுதியபோது எனக்குத் தோன்றிய ஒரே விஷயம் இதுதான். இது முழுமையான வாசிப்பு இல்லை. இந்த நாவல்களில் மேலும் பல விஷயங்கள் உள்ளன. காலப்போக்கில் ஒவ்வொன்றாக எனக்குப் பிடிபடலாம். இவை வாலியைப் போல வரம் வாங்கி வந்தவை. நம் பலத்தில் பாதியை எப்போதுமே எடுத்துக்கொள்பவை. எந்தக் காலக் கட்டத்திலும் நூறு சதவீதம் புரிந்துகொண்டு விட முடியாது.
வேரை மறுத்தலும் சார்ந்திருத்தலும்
சமீபத்தில் புதுக்கோட்டை சென்றுவந்தேன். அப்பாவின் சொந்த ஊர். நாங்கள் பிறக்குமுன் அப்பா கும்பகோணம் வந்துவிட்டார். பின்னர் தொடர்புகள் அற்றுப்போய் இப்போது அங்கே யார் இருக்கிறார்கள் என்பதுகூடத் தெரியாமல் இருக்கிறது. வருடத்திற்கு ஒருமுறையாவது குலதெய்வமான தண்டாயுதபாணி குடிகொண்டிருக்கும் குமரமலைக்குப் போய் வந்திருக்கவேண்டும். பல்வேறு நிர்ப்பந்தங்கள் காரணமாகக் கும்பகோணத்திற்கு அருகிலிருக்கும் சுவாமிமலையிலேயே எல்லா வேண்டுதல்களையும் செய்து வந்துகொண்டிருந்தோம்.