விஷ்ணுபுரம்
காலமே உனக்கு வணக்கம் – 2
by சுனீல் கிருஷ்ணன்
மகத்தான தனிமை
உனது மகத்தான தனிமையில்
கரிய பறவையெனப் பறந்துவரும்.
நீயேண்ணும் சொற்கடலின் அலைகள்
நக்கியுண்ணும் கரைமணலில் எஞ்சும்
நேற்றைய பாதங்களின் சாயலில் இன்று
எங்கு பதிகின்றன சுவடுகள்?
இந்த நாவலை நான் முதல் முறை வாசித்த போது எனக்கு இதன் இலக்கிய நுட்பங்கள் சரிவர புலப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். முதல் வாசிப்பின் முடிவில் நான் இதை ஓர் தத்துவ- ஆன்மீக நூலாகவே அணுகினேன். அதுவரை நான் வாசித்திருந்த தத்துவ- ஆன்மீக நூல்கள் வாழ்வை பற்றி முன்வைத்த நம்பிக்கைகள் அத்தனையும் பொசுங்கி சாம்பலாயின. விஷ்ணுபுரம் வாழ்வை பற்றிய மிக அடிப்படையான கேள்விகளை, வறட்டு தத்துவங்களாக இன்றி உயிர்த்துடிப்புள்ள பாத்திரங்கள் மூலம் எழுப்பியதால் அதன் உக்கிரத்தை பன்மடங்கு அதிகமாக உணர முடிந்தது..
இந்த நாவலின் அடிநாதமாக நான் காண்பது தனிமையும் தவிப்பும், ஆன்மீக தகிப்பும் தான். ஒருவகையில் ஜெ வுடைய தனிமையும் தவிப்பும் அதற்கான தேடலுமே இந்த விஷ்ணுபுரத்தின் மூலக் கூரு என்று எண்ணுகிறேன். விஷ்ணுபுரம் எனும் நாவலை ஒட்டுமொத்தமாக பிணைப்பது தனிமை எனும் இழை தான் என்று எனக்கு படுவதுண்டு. ஆன்மீக அகப் பயணம் என்பது கருந்தூளைக்குள் (black hole வழுக்குமரத்தில் ஏறுவதைப் போலத்தான். ஒளி என்றேனும் நம் மீது விழக்கூடும் எனும் நம்பிக்கை மட்டுமே எஞ்சும், திசைகள் அற்ற இருளும், வெறுமையும் மட்டுமே சூழ்ந்த பயணம் அது.
அக்னிதத்தனின் வழித்தோன்றலாக விஷ்ணுபுரத்தை கட்டுபடுத்தும் மகாவைதிகர்களுக்கு புத்திர சோகம் மட்டுமல்ல தனிமையும் குலசொத்து தான். அதிகாரத்தின் உச்சாணிக் கொம்பில் இருக்கும் மனிதனுக்கு அந்த அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் எனும் முனைப்பு எப்போதும் இருப்பதுதான். அதற்கு அவன் தன்னை பிறர் அணுகமுடியாத தொலைவில், அகந்தையின் கோட்டைக்குள் புதைத்து வைத்திருக்கிறான். அதிகார நாட்டமும் ஆன்மீக தேடலும் ஒருபோதும் இணைந்திட முடியாது. சூரியதத்தரின் தனிமை இத்தகையதே. ஸ்வேததத்தன் சொன்னது போல் சூரியதத்தனின் தனிமைக்கு காரணம் விஷ்ணுபுரம் அல்ல, மாறாக தன்னையே அவன் விஷ்ணுபுரம் என எண்ணுவதால் விளைந்தது. அகந்தையை ஊதி பெருக்கிக் கட்டப்பட்ட அதிகாரத்தின் மீதான ஐயத்தால், அவரால் அவருடைய மகன் ஸ்வேததத்தனை கூட நெருங்கமுடியவில்லை. மலர்மாலைகளை கருகசெய்யும் நெருங்கமுடியாத நெருப்பாகவே அவர் மரணத்திற்கு பின்பும் நினைவுகூரப் படுகிறார். நிலவின் குளுமையில் அனைவரையும் வசீகரிக்கும் பவதத்தர் உணர்ந்த தனிமை தன் குலத்தின் ஆகச்சிறந்த வாரிசு அக்குலத்தின் மரபிற்கு எதிராக, மகாகாலனாய் உருவெடுத்து அதன் அஸ்திவாரங்களை பெயர்க்க தொடங்கியபோது எழுந்தது. சூரியதத்தரின் தனிமை அதிகாரத்திலும் அகங்காரத்திலும் விளைந்தது, அதை மீறி செல்ல அவர் முனையவும் இல்லை விரும்பவும் இல்லை. பவதத்தர் தனிமையை தன் மேல் அழுத்தும் சுமையாக அறிகிறார், விஷ்ணுபுரத்து சர்வஞர் எனும் பட்டம் தன் பாதையில் அகற்றமுடியாத கரும்பாறையாக அடைத்து நிற்பதை எண்ணி வருந்துகிறார். அதிலிருந்து மீண்டு தன் மகனோடு சேர்ந்து காசியபனைப்போல் குதித்தாட வேண்டும் என துடிக்கிறார். Continue reading