விஷ்ணுபுரம் – மற்றுமொரு விமர்சனம்
எழுதியவர் : பாஸ்கர் [பாஸ்கி]
விஷ்ணுபுரத்தின் மீதான விமர்சனங்களையும் விவாதங்களையும் தொகுத்தாலே தனியாக ஒரு பெரிய புத்தகம் போடலாம் போலிருக்கிறது. இதோ, அதன் தாக்கத்தால் உருவான மற்றுமொரு வாசகர் சண்முகம் (ஹ்யூஸ்டன்) அவர்களின் விமர்சனம்…
காலத்தின் பெருவெளியில் உயரத்திலிருந்து, விஷ்ணுபுரம் எனும் ஊரை மையமாக கொண்டு, மூன்று வெவ்வேறு கால கட்டங்களில் வாழ்ந்த மானுடர்களின் ஞானத்தேடலைப் பற்றிய தரிசனமே விஷ்ணுபுரம். பலர் தேட, வெகு சிலரே கண்டடைய, தத்துவங்களைச் சுற்றி மதங்களும், அரசியலும் அதிகாரம் செலுத்த, ஆதி தெய்வ வழிபாட்டை வைதீகம் அபகரிக்க, வைதீகத்தை பௌத்தம் வெற்றி கொள்ள, வைதீகம் மீண்டும் மீள என மதங்கள் ஒன்றை ஒன்று ஆக்கிரமிக்க, ஒரு காலத்தில் நடக்கும் அதர்மங்களும் அபத்தங்களும் பின்னர் ஐதீகங்களாய் மாற – என பன்முகமாய் பிரம்மாண்டமாய் விரிகிறது.