இங்கிருந்து தொடங்குவோம்

கொஞ்சநாள்முன்னர் நானும் நண்பர்களும் வட தமிழ்நாட்டில் ஒரு சிறிய கிராமத்தில் பயணம் செய்துகொண்டிருந்தோம். அப்போது ஒரு விவசாயி சொன்ன வசனம் காதில் விழுந்தது ”…அப்பாலே சடங்கு சாங்கியம்லாம் செஞ்சு பொண்ணைக் கூட்டிட்டு வந்தாச்சு…” நண்பர் கேட்டார், ”சடங்கு சரி, அதென்ன சாங்கியம்?” ஜெயமோகன்.இன் ல் இருந்து

§§§

இங்கிருந்து தொடங்குவோம்

by

ஜெயமோகன்

[மேகமலையில் நண்பர்களுடன்]

இந்து ஞான மரபில் பரிச்சயம் உள்ள ஒருவருக்கு சாங்கியம் என்ற சொல் மிக அறிமுகமானதாகவே இருக்கும். அது நம் சிந்தனை மரபில் உள்ள ஒரு முக்கியமான பிரபஞ்ச தரிசனத்தின் பெயர். சாங்கிய தரிசனத்தை கபில ரிஷி தொகுத்தளித்தார். அவர் எழுதிய நூல் சாங்கியகாரிகை.

சாங்கிய தரிசனம் கடந்த காலத்தில் மிக முக்கியமான சிந்தனையாக இருந்திருக்கிறது. ‘முனிகளில் நான் கபிலன்’ என்று பகவத் கீதையில் கிருஷ்ணன் சொல்கிறான். கபிலர் பிறந்த ஊர் கபில வாஸ்து. அந்த ஊரில்தான் புத்தர் பிறந்தார். பௌத்த சிந்தனையில் சாங்கியத்தின் செல்வாக்கு அதிகம். சாங்கியத்தின் துணைத் தரிசனமாகத்தான் யோகம் உருவாகி வந்தது. இன்று யோகம் இந்து,சமண,பௌத்த மதங்களுக்கு பொதுவான ஒரு ஞான வழிமுறையாக உள்ளது.

சாங்கியம் என்ற சொல்லுக்கு என்ன பொருள்? ஜெக்கோபி என்ற இந்தியவியல் அறிஞர் ‘சங்கிய’ என்ற சொல்லில் இருந்து வந்தது என்று ஊகிக்கிறார். கறாரான கணிதத் தன்மை கொண்ட ஒரு சிந்தனை என்ற பொருளில் வந்திருக்கலாம் என்கிறார். அது ஒரு ஊகம்தான். Continue reading

17. சாங்கியத்தின் தத்துவ மையம்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

ஆறு தரிசனங்கள்

சாங்கியத்தின் தத்துவ மையம்

[மலையாளக் கவிஞர் கல்பற்றா நாராயணனுடன். மேகமலை.]

சாங்கியத் தரிசனத்தின் தத்துவ மையம் என்பது அது முன் வைக்கும் விடுதலைக்கான வழியேயாகும். சாங்கிய காரிகையில் உள்ள முதல் சுலோகமே மானுட துக்கத்தை தீர்ப்பதே சிந்தனையின் நோக்கம் என்று கூறுகிறது. துக்கமிலாத வாழ்வே விடுதலை. துக்கம் அறியாமையிலிருந்து உருவாகிறது. ஆகவே அறிவே விடுதலை தருவது என்கிறது சாங்கியம்.

அத்யாத்மீகம், ஆதி பெளதிகம், ஆதி தெய்வீகம் எனும் மூவகைத் துயரங்களுக்கு இரையாகக் கூடியவன் மனிதன். அகத்துயரம், புறத்துயரம், இயற்கை நியதி தரும் துயரம் என்று இம்மூன்றையும் தமிழ்ப்படுத்தலாம். மனக்குழப்பங்கள், காமம், குரோதம், மோகம் போன்ற தீங்குதரும் இச்சைகள், நோய்கள் முதலியவை அகத்துயரங்கள். சமூக அமைப்பு மூலமோ இயற்கைப் பொருட்களின் மூலமோ விளையும் துயரங்கள் புறத்துயரங்கள். இயற்கை விதிகள், பிரபஞ்ச இயக்கம் முதலிய, மனிதனுக்கு முற்றிலும் அப்பாற்பட்ட காரணங்களிலிருந்து வரும் துயரம் இயற்கைத்துயரம்.

இம்மூன்று துயரங்களையும் மனிதன் எதிர் கொண்டே ஆகவேண்டும். இவற்றை தடுக்க அவனால் முடியாது. ஆனால் இவற்றை காரண காரிய ரீதியாக புரிந்துகொண்டான் என்றால் அவனுக்கு அச்சமோ பதற்றமோ பரிதவிப்போ ஏற்படுவதில்லை. இவை தரும் துயரங்களில்லிருந்து அவன் தன்னை விடு விடுவித்துக்கொள்ள முடியும். சாங்கியம் தரும் அடிப்படைப் புரிதல் அவ்விடுதலைக்கு உதவும். அதைச் சாங்கிய மரபு ‘ வியக்த அவியக்த விஞ்ஞானம்’ என்கிறது. இதைத் ‘தெரிந்தது தெரியாதது குறித்த அறிவு” என்று விளக்கலாம். நமக்கு தெறிவது இயற்கை. தெரியாதது மூல இயற்கை. மூல இயற்கை இயற்கையாக மாறி இயங்கும் விதமே நாம் அறிய வேண்டியது. Continue reading

16. ஆதி இயற்கை வாதம் – சாங்கியம்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

ஆறு தரிசனங்கள் 

ஆதி இயற்கை வாதம் – சாங்கியம்

[பூட்டான் புலிக் கூடு மடாலயம் முன்பு]

ஆறு தரிசனங்களில் முதன்மையானதாகவும் காலத்தால் முற்பட்டதாகவும் கருதப்படுவது சாங்கியமேயாகும். சாங்கியத்திற்குத் தமிழில் ’ஆதி இயற்கைவாதம்’ என்று சாராம்சப்படுத்தி பெயர் சூட்டலாம். சாங்கியத்தின் முதன்மையான மையக்கருத்து, முக்குணங்களும் பரிபூரணச் சமனிலையில் இருக்கும் ஆதி இயற்கையைப் பற்றிய அதன் கணிப்புதான். புராதன இந்தியாவில் சாங்கியம் அறிஞர்கள் மத்தியில் மிகுந்த புகழ் பெற்றிருந்தது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.

‘சங்கிய’ என்ற சமஸ்கிருதச் சொல்லில் இருந்து சாங்கியம் என்ற சொல்லாட்சி உருவாயிற்று என்று கூறப்படுகிறது. எண்ணிக்கை, தருக்க ஞானம், பயன்பாடு சார்ந்த பொருள் ஆகிய பொருளில் பயன் படுத்தப்படும் சொல்தான் சங்கிய என்பது. தருக்கத்தை அடிப்படையான மெய்ஞான மார்க்கமாகக் கொண்டிருந்தமையால் சாங்கியம் இப்பெயர் பெற்றது போலும். சாங்கியம் என்ற சொல் தமிழில் வட்டார வழக்கில் குலச்சடங்கு என்ற பொருளில் பயன் படுத்தப்படுகிறது. Continue reading

15. ஆறு தரிசனங்கள்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

ஆறு தரிசனங்கள்

[இந்தியாவின் வடகிழக்குப் பயணத்தில் கவிஞர் யுவனுடன்]

ஆதி தரிசனங்கள் ஆறு. அவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்திய மெய்ஞான மரபின் அடிப்படைகள் அடைத்தும் உருவாகியுள்ளன. அந்த ஆறு தரிசனங்களின் சாயல் சிறிதேனும் இல்லாத எந்த மதமும் தத்துவமும் இந்து மெய்ஞான மரபில் பிற்பாடு உருவானதில்லை.

தரிசனங்களின் ஒட்டு மொத்தமான பங்களிப்பு  என்ன? வேதங்களில் கவித்துவவீச்சுடன் கூறப்பட்ட அகவெளிச்சங்களை திட்டவட்டமான தத்துவ விவாதத் தளத்துக்குக் கொண்டு வந்தவை தரிசனங்களே. இதன் மூலம் அருவமான (  abstract ) விஷயங்களை புறவயமாக விவாதிக்கும் தருக்க உபகரணங்களை அவை உருவாக்கி அளித்தன.

பல்வேறு விதமான ஞானத்தேடல்கள் நடக்கும் ஒரு பொதுப்பரப்புதான் இந்து மெய்ஞானம் என்பது. ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்ட ஞான வழிகள் உண்டு. வழிபாடுகள் மற்றும் சடங்குகளை மட்டும் சார்ந்து இயங்குபவை உண்டு. முழுக்க முழுக்க அறிவார்ந்த தளத்தில் இயங்குபவை உண்டு.

இந்த ஒவ்வொரு ஞான மார்க்கமும் பிறிதுடன் உரையாட வேண்டியுள்ளது. அந்த உரையாடல் மூலம்தான் ஒவ்வொரு தரப்பும் தன்னை முழுமை செய்துகொள்ள முடியும். அவ்விவாதத்துக்கு எல்லாத் தரப்புக்கும் பொதுவான ஒரு இடம் அவசியம் தேவை.

இந்தப் பொது இடத்தில் நான்கு விஷயங்கள் அனைவருக்கும் பொதுவாக வரையறுக்கப்பட்டிருக்கவேண்டும். அவை முறையே பேசு பொருள், பேசும் விதம், அடிப்படையான சொற்கள் மற்றும் பேசுவதன் நோக்கம்.

எதைப்பற்றி பேச வேண்டும் என்பது முதன்மையான பொது வரையரையாகும். பிரபஞ்சத்தின் பிறப்பு, முடிவு, வாழ்வின் இயங்குமறை, வாழ்வின் நோக்கம் முதலியவையே பேசு பொருட்கள் என்று பொதுவாக வரையறுக்கப்பட்டிருப்பதை இப்போது காணலாம். மாறுபட்ட தரப்புகள் கூடி விவாதிக்கும்போது அனைத்திலும் பொதுவாக உள்ள இவ்வம்சங்களே விவாதிக்கப்பட்டன. Continue reading

14. தரிசனங்களைப் பற்றிய சில அடிப்படைப் புரிதல்கள் – 2

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

தரிசனங்களைப் பற்றிய சில அடிப்படைப் புரிதல்கள் – 2

[இந்தியாவின் வடகிழக்குப் பயணத்தின் போது]

அதே சமயம் பிற்பாடு சாங்கியத் தரிசனம் புருஷன் என்ற கருத்துருவத்தை உருவகம் செய்து கொண்டது. அவனுடைய பார்வையினாலேயே இயற்கையின் குணமாறுதல்கள் அறியப்படுகின்றன என்றது. சித்த விருத்தியை நிறுத்தி அதிதூய நிலையில் நம் பிரக்ஞையை வைத்திருந்தால் மட்டுமே நம்மால் பிரபஞ்ச உண்மையை அறிய முடியும் என்றது யோகம். நுண்ணணுக்களின் தனித்தன்மைகள் தன்மாத்திரைகள் என்றும் அவற்றை உணர்பவனே அவற்றின் இயல்பினைத் தீர்மானிகின்றான் என்றும் கூறியது வைசேஷிகம். நாம் அறிய விரும்பும் பொருளைத் தருக்கப்பூர்வமாக வகுத்து அறிவதன் மூலமே அப்பொருளுக்கு அர்த்தம் உண்டாகிறது என்கிறது நியாயம். யோகாசார பெளத்த மரபு நாம் அறிவது எல்லாம் நம்முடைய மனத் தோற்றங்களையே என்றும் நாம் அறியும் விதத்தில் ஒரு போதும் இயற்கை இருப்பதில்லை என்றும் கூறியது. நம் அறிதலுக்கு அப்பாற்பட்டவற்றை சூனியம் என்றது. சமணத் தத்துவம் பிரபஞ்சம் எப்படி நிரந்தரமாக இருந்துகொண்டே இருக்கிறதோ அப்படித்தான் ஆத்மாவும் இருந்துகொண்டே இருக்கிறது என்றது.!

ஆக இவை பெளதீக வாத அடிப்படையில் தொடங்கி மெல்ல ஆன்மிகவாத்தையும் இணைத்துக்கொண்டிருப்பதைக் காணலாம். இதைப்போலவே ஆன்மிகவாதச் சிந்தனைகளையும் அராய்ந்து பார்க்கலாம். பிரபஞ்சம் என்பது மந்திரவடிவமானது. பருமையான பிரபஞ்சம் மந்திரத்தின் வெளிப்பாடு மட்டும்தான் என்று நம்பியது பூர்வமீமாம்சம். உரிய முறையில் மந்திரங்களை ஒதுவதன் மூலம் பிரபஞ்சத்தை மாற்றிவிடலாம் என்றது அது. காணும் பிரபஞ்சம் பொய்யானது, பிரம்மமே மெய்யானது என்று கூறியது வேதாந்தம். Continue reading

13.தரிசனங்களைப் பற்றிய சில அடிப்படைப் புரிதல்கள்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

தரிசனங்களைப் பற்றிய சில அடிப்படைப் புரிதல்கள்

தரிசனங்களைப் பற்றி ஆராயப் புகுவதற்கு முன்பு சில அடிப்படைத் தெளிவுகளை நாம் அடைந்தாக வேண்டும். இந்திய ஞானமரபு குறித்து நம் அனைவருக்கும் உள்ள ஒரு பொதுவான புரிதல், இது ஒர் ஆன்மிக மரபு என்பதாகும். இந்த எண்ணத்தை நவீன இந்திய சிந்தனையில் ஆழமாக நிறுவியவர் டாக்டர்.ராதாகிருஷ்ணன். இந்தியாவின் அடிப்படையான சிந்தனைகள் எல்லாமே ஆன்மிகமானவை என்றும் இந்த ஆன்மிக அடிப்படையே இந்தியாவின் உள்ளார்ந்த வலிமைக்குக் காரணம் என்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் தன் இந்திய தத்துவ ஞானம் என்ற நூலில் ( Vol. pp 24-25) கூறுகிறார்.

ஆன்மிகம், பெளதிகம் என்பதை முதலில் தெளிவு படுத்திக் கொள்வோம். புலன்களால் அறியப்படக் கூடிய பொருட்களினால் ஆனதுதான் இந்த பிரபஞ்சமும் இங்குள்ள வாழ்கையும் என்று நம்புவது பெளதிக வாதம். வாழ்வின் சாராம்சத்தை அறியவும் இந்தப் பொருள்களையே ஆராய வேண்டுமென அது கூறுகிறது. மாறாக இந்தப் பொருள்மய உலகம் அதற்கு அப்பால் உள்ள ஏதோ ஒரு சக்தியின் வெளிப்பாடு மட்டுமே என்று நம்புவது ஆன்மிகவாதம்.ஆன்மா என்றால் சாரம். ஆன்மிகம் என்றால் சாராம்சத்தை அடிப்படையாகக் காணும் பார்வை. மனிதனின் சாரம் ஆத்மா. பிரபஞ்சத்தின் சாரம் பரமாத்மா. வெளியே தெரிவது பொய் அல்லது மனமயக்கம் என நம்புகிறவர்கள் ஆன்மிகவாதிகள். Continue reading

12. தரிசனங்களின் பின்னணி – இந்து நவீனப் போக்குகளின் காலகட்டம்.

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

தரிசங்களின் பின்னணி

இந்து நவீனப் போக்குகளின் காலகட்டம்

[ஊட்டி முகாம் 2012, குரு நித்யா ஆய்வரங்கு]

நவீன தகவல் தொடர்பு முறைகள், கல்வி ஆகியவற்றின் மூலம் உலகமே ஒரே அறிவுத்தளமாக மாறிவிட்ட காலகட்டமே நவீன கால கட்டம் ஆகும். விஞ்ஞானம் மனித அறிவின் அடிப்படையாக ஆயிற்று. மனித வாழ்க்கையின் நோக்கம்  இன்பமாக இக உலக வாழ்வே என்று கூறப்பட்டது. இந்தக் காலகட்டத்தின் தேவையை ஒட்டி இந்து மெய்ஞான மரபின் பல அம்சங்கள் புது வடிவங் கொண்டு பிறந்து வந்தன. இதை நவீனக் காலகட்டம் என்று கூறலாம்.

உதாரணமாக ஓஷோ (ரஜனீஷ்) உலக ஞான மரபினை முழுமையாகக் கற்றுத் தேர்ந்தவர். சடங்குகளையும் வழிபாடுகளையும் மத நிறுவனங்களையும் நிராகரித்தவர். அவர் நவீன மனிதனின் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பொருட்டு ஒரு சில வழி முறைகளை உருவாக்கினார். கூர்ந்து பார்த்தோமென்றால் நாம் ஓஷோவை தாந்த்ரீக மரபின் தொடர்ச்சி என்று காணமுடியும். அதேபோல ஜே. கிருஷ்ணமூர்த்தி கூறுவது பதஞ்சலி கூறும் யோக மரபின் புதுவடிவையே என்றும் அறியலாம்.

இவ்வாறு பல்வேறு புதிய போக்குகள் உருவாகி வளர்ந்தபடியே உள்ளன. இதற்குக் காரணம் இந்து மெய்ஞானமரபு என்பது ஒரு மத நிறுவனம் அல்ல. திட்ட வட்டமான கொள்கைகள் இதற்கு இல்லை. திட்டவட்டமான தத்துவமும் இல்லை. வாழ்வின் அர்த்தத்தை தேடி ஆயிரம் ஆயிரம் வருடங்களாக மனித மனம் செய்த பெரும் பயணங்களின் தொகுப்புதான் இந்து ஞான மரபு. எந்த பயணத்தையும் இன்று நாம் புதிதாக மேலும் தொடர முடியும். எல்லா நதிகளும் கடலையே சென்று சேர்கின்றது என்று இதைப்பற்றி சாந்தோக்ய உபநிஷதம் கூறுகிறது.

அடுத்து வருவது…

தரிசனங்களைப் பற்றிய சில அடிப்படை புரிதல்கள்

11. தரிசனங்களின் பின்னணி – இந்து மறுமலர்ச்சிக் காலகட்டம்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

தரிசங்களின் பின்னணி

இந்து மறுமலர்ச்சிக் காலகட்டம்

பதினெட்டாம் நூற்றாண்டு முதல் இந்தியா மீது வெளியே உள்ள நாகரிகங்களின் நேரடியான பாதிப்பு ஏற்பட ஆரம்பித்தது. பிரிட்டிஷ் ஆட்சியும் ஆங்கிலக் கல்வியும் இந்து மரபின் சிந்தனைகளை உலகளாவிய தத்துவப் போக்குகளுடன் ஒப்பிட்டு ஆராயவேண்டிய நிர்பந்தத்தை எற்படுத்தின.

அத்துடன் பதினாறாம் நூற்றாண்டு முதலே இந்தியா முழுக்க நிலையான அரசுகளோ, ஒழுங்கான நிர்வாக முறையோ இல்லாத அராஜக சூழல் நிலவி வந்தது. முகலாய ஆட்சியில் இந்து மரபு மீது தொடுக்கப்பட்ட தொடர்தாக்குதல்களின் காரணமாக இந்து மரபு தன்னை இறுக்கமான விதிகள் அடங்கிய, மாறாத அமைப்பாக மாற்றிக்கொண்டிருந்தது. அந்த இறுக்கம் காரணமாக அது பலநூறு வருடம் மாறாமல் அப்படியே இருந்து வந்தது.

ஆகவே இந்து ஞான மரபினை காலத்திற்கு ஏற்பச் சீர்திருத்தி அமைக்கவேண்டும் என்ற தேவையை சில அறிஞர்கள் உணர்ந்தார்கள். இந்து ஞான மரபில் உள்ள தொன்மையான விஷயங்கள் பல காலப்போக்கில் முக்கியமிழந்து பின்னகர்ந்து விட்டிருந்தன. அவற்றை மீட்க வேண்டிய தேவையையும் சில அறிஞர்கள் உணர்ந்தார்கள். Continue reading

10. தரிசனங்களின் பின்னணி – பிற்கால வேதாந்தங்களின் காலகட்டம்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

தரிசனங்களின் பின்னணி

பிற்கால வேதாந்தங்களின் காலகட்டம்

பெளத்த, சமண மதங்களின் வெகுஜனத்தன்மைக்கு எதிரான பேரியக்கமாக பக்தி காலகட்டம் உருவாயிற்று என்றோம். பெளத்த சமண மதங்களின் தத்துவார்த்தமான அறைகூவலுக்கு எதிராக உருவான வைதிகத் தத்துவ தரிசனங்கள்தான் பிற்கால வேதாந்தங்கள். இவை அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்ட்வைதம் என்று மூன்று தனிப்போக்குகளாக உள்ளன.

வேதாந்தம் என்ற சொல்லுக்கு வேதத்தின் இறுதி என்று பொருள். வேதங்களின் விரிவாக்கமான உபநிஷதங்களே உண்மையில் வேதாந்தங்கள். அவை முற்காலக் கட்ட வேதங்கங்கள் எனலாம். இவை தருக்கப்பூர்வமானவை. வேதாந்தம் என்ற சொல் தருக்கம் என்ற பொருளில் அன்றாட வழக்கில் பயன்படுத்தப்படுகிறது.

பெளத்த, சமண மதங்கள் தருக்க முறையை பிரம்மாண்டமாக வளர்த்தெடுத்தன. குறிப்பாக பெளத்த மெய்ஞானம் நியாய மரபின் தருக்க முறைகளை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டது. நாகார்ச்சுனர், அசங்கர், வசுபந்து, திக்நாகர், தர்ம கீர்த்தி முதலிய முக்கியமான பெளத்த ஞானிகள் அனைவருமே நியாய இயலுக்கு உரை எழுதியுள்ளனர். Continue reading

9.தரிசனங்களின் பின்னணி – பக்தி காலகட்டம்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

தரிசனங்களின் பின்னணி

பக்தி காலகட்டம்

அவைதிக மதங்களான பெளத்தமும் சமணமும் இந்தியா முழுக்கப் பரவின. அவற்றை எதிர்த்து வைதிக மதங்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டன. அதன் விளைவாக அவை தங்கள் அமைப்பை மாற்றி அமைத்துக்கொண்டன. இதன் விளைவாக உருவானதே பக்தி காலகட்டமாகும்.

பெளத்த, சமண மதங்களுக்கு முன்பு வைதிக மதம் என்பது வேள்வி முதலிய சடங்குகளிலானதாக இருந்தது. அது மன்னர்கள், வணிகர்கள் பிராமணர்கள் சம்பத்தப்பட்டதாக இருந்தது. அதற்கும் கீழே உள்ள மக்கள் தங்கள் குல மரபுக்கு உரிய தெய்வங்களைத் தங்கள் வழக்கப்படி வணங்கினர். அவர்களுக்கும் வைதிக மரபுக்கும் உறவே இருக்கவில்லை.

பெளத்த, சமண மதங்கள் முதலில் ஏழை, எளிய மக்கலுக்கு இடையே ஊடுருவிச் சென்றன. புத்த பிச்சுக்களும் சமண முனிகளும் ஊருக்குள் தங்கக்கூடாது என்ற விதியே இருந்தது. ஆகவே அவர்கள் விலக்கபட்ட எளிய மக்களை அணுகினார்கள். அவர்கள் பள்ளிகள் அமைத்து கல்வி கற்பித்தனர். Continue reading