8.தரிசனங்களின் பின்னணி – தரிசன, அவைதீக மதங்களின் காலகட்டம்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

தரிசனங்களின் பின்னணி

தரிசன மற்றும் அவைதீக மதங்களின் காலகட்டம்

தரிசன காலகட்டம்

உபநிஷத காலகட்டத்தில் தருக்கப் பிரக்ஞை வலுவடைந்தது. ஞான தரிசனங்கள் விரிவாக விவாதிக்கப்படவேண்டும் என்ற எண்ணம் எற்பட்டது. இதன் விளைவே தரிசனங்களின் காலகட்டமாகும்.

அவைதீக மதங்களின் காலகட்டம்

இந்திய ஞான மரபினை வைதிகம், அவைதிகம் என்று இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்துவிடலாம். வேதங்கள்ளை மூலநூல்களாக கருதும் மரபு வைதிகம். அப்படிக் கருதாமல் வேதங்களை மறுக்கும் மரபு அவைதிகம்.

இந்த இருபாற் பிரிவினையை நிகழ்த்துவதில் பல சிக்கல்கள் உள்ளன என்பதை இங்கு குறிப்பிட்டு பேசவேண்டும். வேதங்கள் ஒற்றைப்படையான ஒரு தரப்பை முன் வைப்பவை அல்ல. பிற்காலத்தில் வளர்ந்து வந்த எல்லா ஞான மரபுகளின் மூல விதைகளும் அவற்றுக்குள் உள்ளன. உதாரணமாக சார்வாக மரபு வேதங்களை மறுப்பது; புரோகித மரபுக்குப் பரம எதிரி; முழுமையான உலகியல் தன்மை உடையது. இம்மரபின் தொடக்கப்புள்ளியும் வேதங்களில் தான் உள்ளது. வேதரிஷிகளான ‘பிரகஸ்பதி’, ’அஜித கேசம்பளன்’ முதலியோர்தான் இம்மரபின் ஆதிகுருநாதர்கள்.

ஆகவே இந்தியாவில் உள்ள எந்த ஒரு ஞானமரபினையும் முற்றிலும் வேதம் சாராதது என்று கூறிவிட முடியாது. அப்படி என்றால் வைதிகம், அவைதிகம் என்ற பிரிவினை எதனடிபடையில் நடத்தப்படுகிறது.? Continue reading

7.தரிசனங்களின் பின்னணி – உபநிஷத காலகட்டம்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

தரிசனங்களின் பின்னணி

உபநிஷத காலகட்டம்

உபநிஷதம் (உபநிடதம்) என்றால் அருகே அமர்ந்து கொள்ளுதல் என்று அர்த்தம். இந்நூல்கள் பெரும்பாலும் குரு சிஷ்யனுக்குக் கூறியவையோ குருசீட விவாதங்களாகவோ அமைந்திருப்பதே இவற்றுக்கு இப்பெயர் உருவாகக் காரணம் என்று ஊகிக்கலாம். நேரடியான தத்துவச் சிந்தனை, இந்திய ஞான மரபில் உபநிஷதங்களில்தான் தொடங்குகிறது. எனவே இந்து ஞான மரபின் எல்லாத் தத்துவ மரபுகளுக்கும் உபநிஷங்களில் வேர்கள் உண்டு.

வேதங்களில் எழுப்பபட்ட அடிப்படை கேள்விகளும்  கண்டடையப்பட்ட அடிப்படையான தரிசனங்களும் மேலும் விரிவாகவும் தருக்கப்பூர்வமாகவும் விவாதிக்கப்பட்டது உப நிடதங்களில்தான். அத்துடன் உப நிடதங்கள் வேத ஞானத்தை மறுதலித்தும் தாண்டியும் செல்கின்றன. இந்த முரண்பாட்டை நாம் தெளிவாக புரிந்துகொள்ளுதல் அவசியம்.

ஒரு சிந்தனை மரபோ ஞான மரபோ அடுத்த கட்டத்துக்கு எப்படிச் செல்கிறது?. அம்மரபில் உள்ள சாராம்சமான சில கூறுகள் விரிவாக வளர்த்தெடுக்கப்படுகின்றன. அம்மரபில் உள்ள சாரமற்ற பல கூறுகள் விமர்சித்து ஒதுக்கப்படுகின்றன. இரண்டும் ஒரே சமயம் நிகழுகின்றன. வளர்ச்சி என்பது இதுவேயாகும்.

உபநிஷதங்களில் வேததரிசனங்கள் பல வளர்ச்சியடைந்து காணப்படுகின்றன. அதை வைத்து டாக்டர் ராதாகிருஷணன் முதலிய ஆன்மிக பார்வை உடைய தத்துவ ஆய்வாளர்கள், வேதங்களின் தொடர்ச்சிதான் உபநிஷதங்கள் என்கிறார்கள். வேதங்களை கடுமையாக மறுக்கக்கூடிய, எள்ளி நகையாடக் கூடிய பல பகுதிகள் உபநிஷதங்களில் உள்ளன. அவற்றைச் சுட்டிக்காட்டி, தேவி பிரசாத் சட்டோபாத்யாய முதலிய உலகியல் பார்வை கொண்ட தத்துவ ஆய்வாளர்கள், உபநிஷத காலகட்டம் வேதங்களை மறுத்து எழுந்தது என்கிறார்கள்.

எது உண்மை? இரண்டுமே உண்மைதான். உபநிஷதங்கள் வேதங்களின் தத்துவார்த்த பார்வையாகவும், ஆதி தரிசனங்களையும் ஏற்று வளர்த்தெடுக்கின்றன. Continue reading

6. தரிசனங்களின் அடிப்படைகள் – தரிசனங்களின் பின்னணி

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

தரிசனங்களின் அடிப்படைகள் 

தரிசனங்களின் பின்னணி

இந்து ஞான மரபுக்கு ஒரு எளிய வரைபடத்தினை உருவக்கிக் கொண்டோமெனில் அதில் ஆறு தரிசனங்களையும் அடையாளப்படுத்தி அறிவது மிகவும் எளிதாக இருக்கும். பொதுவாக ஒரு சூழலின் சிந்தனைத் தளத்தில் செயல்படுபவர்கள் அச்சூழலின் சிந்தனை மரபு, வரலாற்று மரபு ஆகியவை குறித்து ஒரு மன வரைபடத்தினை கொண்டிருப்பது மிக அவசியம்.

இந்து ஞான மரபுக்கு தொன்மையான காலம் தொட்டு ஒரு பாடத்திட்டம் இருந்துள்ளது. புராதன நூல்களில் அந்த வைப்புமுறை மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படுகிறது. வேதங்கள், ஆறுதரிசனங்கள், ஆறு மதங்கள், மூன்று தத்துவங்கள் ஆகியவைதான் அந்த பாடத்திட்டம்.

வரலாற்று ரீதியாக நாம் இந்து ஞான மரபை வேறு வகையான பகுத்துப் பார்க்கலாம். இது வேத காலம் முதல் இன்றுவரை உள்ள ஒட்டு மொத்த மரபை வகுத்துப் புரிந்துகொள்வதற்கு உதவும். இப்பிரிவினை சிந்தனைப் போக்குகளையும் அவை உருவான கால கட்டங்களையும் இணைந்து பார்க்கும்போது உருவானது.

இந்து ஞான மரபினை எட்டு கால கட்டங்களாகப் பிரிக்கலாம். (1) வேத காலகட்டம் (2) உபநிடத  காலகட்டம் (3) தரிசன காலகட்டம் (4) அவைதிக மதங்களின் காலகட்டம் (5) பக்தி கால கட்டம் (6) பிற்கால வேதாந்தங்களின் கால கட்டம் (7) இந்து மறுமலர்ச்சிக் கால கட்டம் (8) இந்து நவீனப் போக்குகளின் காலகட்டம்

இவற்றில், பல பழங்கால மரபுகளின் வரலாற்றுக் காலகட்டங்களைத் தெளிவாக அறுதியிட்டு கூற முடியாது. எனவே அவற்றை கால வரிசைப்படி அடக்க முடியாது. சிந்தனையின் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையிலேயே அடுக்க முடியும். எனினும் இவ்வரிசை மூலம் நம் மரபு எப்படி வளர்ந்து வந்துள்ளது என்பதை அறியலாம். Continue reading

5.தரிசனங்களின் அடிப்படைகள் – தரிசனங்களின் அமைப்பு முறை

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

தரிசனங்களின் அடிப்படைகள்

தரிசனங்களின் அமைப்பு முறை

ஒரு தரிசனத்தின் பொதுவான அமைப்பு முறை எப்படிப்பட்டது? இந்து மரபின் ஆதி தரிசனங்கள் நன்கு வளர்ந்து மேம்பட்ட நிலையில் உள்ளன. பெரும்பாலான தரிசனங்களை நாம் மதங்களின் ஒரு பகுதி என்ற நிலையிலேயே காணமுடிகிறது. வேறு பல தரிசனங்களைப் பல்வேறு துறைகளில் அவை பிரதிபலிப்பதை வைத்து ஊகித்து அறியவேண்டியுள்ளது. ஆகவே இந்து மரபின் ஆறு தரிசனங்கள் எப்படி உள்ளன என்பதை வைத்து இந்த நிர்ணயத்தினை நடத்துவதே உசிதமானது.

ஒரு தரிசனம் பெரும்பாலும் ஒர் ஆதி குருவின் மொழியிலிருந்து தொடங்குகிறது. உதாரணமாக சாங்கியத் தரிசனம் கபிலரின் கூற்றுகளிலிருந்தே தொடங்குகிறது. ஆகவே கபிலர் சாங்கியக் குரு என்று அழைக்கப்படுகிறார். ஆனால் உண்மையில் அத்தரிசனம் அவரால் சூனியத்தில் இருந்து உருவாக்கப்பட்டது அல்ல. உலகத்தில் இதுகாறும் உருவான எந்த தரிசனமும் அப்படி ஒரு தனி நபரால் திடீரென்று கண்டடையப்பட்டது அல்ல என்று உறுதிபடக் கூறிவிட முடியும்.

தரிசனங்களின் விதைகளை நாம் நம் மொழியில் சாதாரணமாகவே காண முடியும். நாட்டுப்புறப் பாடல்கள், பழமொழிகள்,பழங்கதைகள் முதலியவற்றில் அவை புதைந்து கிடக்கும். அதேபோல புராதனமான சடங்குகள், தெய்வ வடிவங்கள் ஆகியவற்றிலும் அவை உறைந்திருக்கும். அவை மனித மனத்திலிருந்து இயல்பாகவே உருவாகி மொழியிலும் கலையிலும் வெளிப்பட்டவை ஆகும்.

ஒரு விழிப்புற்ற மனம் அந்தத் தரிசனத்தைக் கண்டுபிடிக்கிறது அவ்வளவுதான். விதையை அந்த மனம் பெரிய மரமாக ஆக்குகிறது. உதாரணமாக சாங்கியத் தரிசனத்தின் சாராம்சம் என்ன? Continue reading

4.தரிசனங்களின் அடிப்படைகள் – தரிசனம் என்றால் என்ன?

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

தரிசனங்களின் அடிப்படைகள்

தரிசனம் என்றால் என்ன?

இந்து மெய்ஞான மரபு என்பது இந்துத் தரிசங்களின் வரிசையே. அவற்றை அறிவதற்கு முன்பாக ‘தரிசனம்’ என்றால் என்ன என்று அறிந்தாகவேண்டிய அவசியம் உள்ளது.

’தரிசனம்’ என்ற வார்தையானது சமஸ்கிருதத்திலே பலவாறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே அதற்கு பொருள்மயக்கம் அதிகம். சரியானபடி மொழிபெயர்த்தால்  தரிசனம் என்பதற்குக் ‘காட்சி’ என்று மட்டும்தான் பொருள் வரும். அப்பொருளில் தான் அது சாதாரணமாக பயன்படுத்தப்படுகிறது.

பக்தி மரபில், இறைவனைக் காண்பதைத் தரிசனம் என்கிறார்கள். தன் அகத்தில் இறைவனைத் தரிசிப்பதையும் ஆலயத்திற்குப் போய் வணங்குவதையும் தரிசனம் என்றே கூறுவார்கள்.

மெய்ஞான மரபில் இச்சொல்லுக்கு இரு அர்த்தங்கள் உண்டு. அன்றாட வாழ்வில் நாம் புழங்கும்போது நமக்கு தேவைக்கு ஏற்பவும், நமது இயல்புக்கு ஏற்பவும்தான் ஒவ்வொன்றும் நமக்கு காட்சி அளிக்கின்றன. இக்காட்சிகள் குறையுடையவை. முழுமை இல்லாதவை. அன்றாட வாழ்வின் தளத்திலிருந்து விடுபட்டு நமது மனம் தன்னைத்தானே முழுமையாக காணும் நிலையில் இருப்பதை அகவிழிப்பு  நிலை என்கிறோம். இதை ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு வகையில் விளக்குகிறது என்பதை நாம் அறிவோம். அத்துடன் விளக்கத்துக்கு அப்பாற்பட்ட ஓர் ஆழ்நிலை இது என்பதையும் நாம் அறிவோம்.

இந்த சூழ்நிலையில் நாம் அனைத்தையும் ஒட்டுமொத்தமாகவும், முழுமையாகவும் பார்ப்பதையும் ‘தரிசனம்’ என்று மெய்ஞான மரபு குறிப்பிடுகிறது. அதாவது, தரிசனம் என்பது வேறு, பார்வை என்பது வேறு. பார்வை, சாதாரணமாகப் பார்த்து அறிவது. தரிசனம், அகவிழிப்பு நிலையில் பார்த்து அறிவது.

இவ்வாறு அகவிழிப்பு நிலையில் வாழ்க்கையும் பிரபஞ்சத்தையும் ஒட்டுமொத்தமாகவும் முழுமையாகவும் பார்த்து அறிந்த விஷயங்களைத் தர்க்கப்பூர்வமாகக் கூற முடையும் போதுதான் தத்துவ தரிசனங்கள் உருவாகின்றன. ஆகவே தத்துவ ரீதியாகப் பார்த்தால் தரிசனம் என்பது வழ்க்கை மற்றும் பிரபஞ்சம் குறித்த ஒட்டு மொத்தமான ஒரு பார்வை ஆகும். Continue reading

3.தரிசனங்களின் அடிப்படைகள் – மெய்ஞானமரபு என்பது என்ன?

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

தரிசனங்களின் அடிப்படைகள்

மெய்ஞானமரபு என்பது என்ன?

இந்து மெய்ஞான மரபு என்றால் என்ன என்னும் கேள்வியினை மிக விரிவாகவும் தெளிவாகவும் நாம் எழுப்பியாகவேண்டிய தேவை இன்று உள்ளது. இம்மரபின் உள்ளேயுள்ள விஷயங்களைப் புரிந்து கொள்ள இது அவசியம்.

முதலில் இது குறித்து நமக்கிடையே உள்ள பிழையான புரிதல்கள் சிலவற்றைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். பொதுவாக இந்து மெய்ஞானமரபு என்று கூறும்போது இந்து மதத்தையே நாம் குறிப்பிட்டுகிறோம். சிலர் பெளத்த மதத்தையும் சமண ( ஜைன ) மதத்தையும் சேர்த்துக்கொள்வார்கள்.

இந்து மதம் என்றால் என்ன? இப்போது நாம் இந்து மதம் என்று குறிப்பிடுவது உண்மையில் சைவம், வைணவம், சாக்தேயம், கெளமாரம், காணபத்யம், செளரம் என ஆறு வழிபாட்டுமுறைகைளின் தொகுப்பு ஆகும். நமது பழைய வழக்கப்படி ஒரு மதம் என்பது ஒரு குறிப்பிட்ட இறைவனை வணங்கும் வழிபாட்டு மறபே.

இந்த பட்டியலில் சேர்க்கப்படாத ஏராளமான சிறு வழிபாட்டு முறைகளும் இந்துமதம் என்ற அமைப்புகுக்குள் காணப்படுகின்றன. பல்வேறு பிராந்திய வழிபாட்டு  முறைகள் படிப்படியாக இந்து மதத்தில் சேர்வது இப்போதும் தொடர்ந்து நடக்கிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு பழங்குடி மக்கள் மற்ற மக்களுடன் தொடர்புகொள்வது அதிகரித்தது. அவர்களுடைய வழிபாட்டு முறைகள் இந்து மதத்தில் சேர்ந்தன. இது சமீப காலத்து உதாரணம். Continue reading

2.தத்துவம் – ஒரு எளிய அறிமுகம்: பழங்கால தத்துவம் இன்றைக்கு எதற்கு?

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

பழங்கால தத்துவம் இன்றைக்கு எதற்கு?

பரவலாக கேட்கப்படும் கேள்வி இது. ’சரி, புதிய தத்துவம் என்று எதைச் சொல்கிறீர்கள்?’ என்று நான் கேட்பேன். அவர்கள் மார்க்ஸியம் என்றோ, அணுக்கொள்கை என்றோ பதில் கூறுவார்கள். இத்தத்துவங்களின் நடைமுறை சார்ந்த அம்சங்கள், சில தருக்க முறைகள் மட்டுமே புதியவை. அடிப்படைகள் முழுக்க புராதன கிரேக்க சிந்தனையில் இருந்து பெறப்பட்டவை என்று நான் விளக்குவேன்.

தத்துவம் என்பது தொழில்நுட்பம் அல்ல. புதியது வந்ததும் பழையது போய்விடாது. ஒவ்வொன்றும் பிறிதின் தொடர்ச்சியாகவே எழமுடியும். தத்துவம் என்பது தருக்கங்களின் தொகுப்பு என்றேன். அத்தருக்கங்கள் எங்கிருந்து வருகின்றன? மனித மூளை செயல்படும் விதங்களில் இருந்து அல்லவா? மனித மூளை அன்றும் இன்றும் ஒன்றுதான். புறச் சூழல்தான் மாறிக் கொண்டே இருக்கிறது.

ஆகவே கலையிலும் தத்துவத்திலும் அடிப்படைகள் மாறுவதே இல்லை. அவற்றை எடுத்துரைக்கும் முறையும், புரிந்து கொள்ளப்படும் சூழலும் மட்டும் மாறியபடியே இருக்கும். மிகப்புராதனமான தத்துவ சிந்தனையின் அடிப்படைகள் இன்றைய நவீனச் சிந்தனைகளில் தொடர்வதைக் காணலாம்.

ஆகவேதான் அதி நவீன சிந்தனைகள் பெருகி வந்தபடியே இருக்கும் மேற்கத்திய அறிவுச் சூழலில் கூட அதிபுரான கிரேக்க சிந்தனையாளர்கள் முதற்கொண்டு எவருமே புறக்கணிக்கப்படுவதில்லை. ஒவ்வொருவரும் திரும்பத் திரும்ப வேறு வேறு கோணங்களில் வாசிக்கப்படுகிறார்கள். மறுகண்டுபிடிப்புச் செய்யப்படுகிறார்கள். Continue reading

1.தத்துவம் – ஒரு எளிய அறிமுகம், “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்”

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

தத்துவம் – ஒரு எளிய அறிமுகம்

தத்துவம் எதற்காக ?

 சிந்திக்கும் பழக்கம் உடையவர்களில் கூட ஒரு சாரார் தத்துவத்தில் தங்களுக்கு ஆர்வமில்லை என்று கூறுவது வழக்கம்.

தத்துவ பழக்கமற்றவர்களின் சிந்தனை தெளிவற்றதாகவும், அகவய அபிப்ராயமாகவும் இருப்பதை காணலாம்.

தத்துவத்தின் மீதான இந்த வெறுப்புக்கு என்ன காரணம்? தத்துவம் வெறும் தருக்கங்களில் போட்டி ஆட்டம்தான் என்ற மனச்சித்திரம் உருவாவது தான்.

எளிமையாக கூறப்போனால் தத்துவம் என்பது அனைத்து அறிவுத் துறைகளிலும் உள்ள தருக்கங்களின் தொகுப்பு. இத்தருக்க நிலைகளை அந்தந்தத் துறைகளை சார்ந்த நிதரிசனக்களுடன் பொருத்திப் பார்த்து விரித்தெடுத்துக்கொள்வது தத்துவ மாணவனின் வேலை. அப்படி விரித்து எடுக்காமல் தருக்கங்களை வெறும் சதுரங்கக்காய்களாக மட்டும் பார்க்கும் போதுதான் மேற்குறிப்பிட்ட சலிப்பு ஏற்படுகிறது.

Continue reading