சுசீந்திரம் கோயில் – அ கா பெருமாள்

சுசீந்திரம் கோயில் – அ கா பெருமாள்

நூல் அறிமுகம் by ஜெயமோகன்

[ஜெயமோகன்.இன் இல் இருந்து தொகுத்தது]

பலவருடங்களுக்குமுன் என்னுடன் ஒரு நண்பர் சுசீந்திரம் தாணுமாலைய சாமி கோயிலைப் பார்க்க வந்திருந்தார். கோயிலுக்குள் நாங்கள் நடந்துகொண்டிருந்தபோது நண்ப சட்டென்று ”இந்தக் கோயில் ஒரு மாபெரும் புத்தகம் அல்லவா” என்று ஆச்சரியப்பட்டார். நான் சற்று வேடிக்கையாக ”இல்லை, ஒரு மாபெரும் பத்திரப்பதிவாளர் அலுவலகம்” என்றேன். அவர் சிரித்தார். ஆம் சுசீந்திரம் ஒரு பிரம்மாண்டமான சமூக ஆவணக்குவியல்

குமரிமாவட்டத்தின் பிரம்மாண்டமான கோயில்களில் ஒன்று சுசீந்திரம். கன்யாகுமரிப்பாதையில் இது இருப்பதனால் பொதுவாக இங்கே வந்திருக்கக் கூடியவர்கள் அதிகம். பெரும்பாலானவர்கள் பயணத்தின் நடுவே புயல் வேகமாக கோயிலைக் கடந்துசென்றிருப்பார்கள். சற்றே கூர்ந்து கவனிப்பவர்கள் தென்தமிழ்நாட்டின் வரலற்றையே இந்த ஒரு கோயிலில் இருந்து அறிந்துகொள்ள முடியும்.

கன்யாகுமரி-நாகர்கோயில் சாலையில் நாகர்கோயிலில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது சுசீந்திரம். சுசீந்திரம் கோயில் அமைந்திருக்கும் இடம் வரலாற்றுரீதியாக முக்கியத்துவம் கொண்டது. கடலில் இருந்து சுசீந்திரம் வரை விரிந்து கிடக்கும் மணக்குடி காயல் ஒரு காலத்தில் சிறிய துறைமுகம் போலவே இயங்கியது. அதனருகே உள்ள கோட்டாறு பழங்காலம் முதலே முக்கியமான ஒரு சந்தைத்தலம். ஆகவே வணிகமுக்கியத்துவம் கொண்ட இடத்தில் அமைந்த பெரும் கோயில் இது.

 

தென்னாட்டின் முக்கியமான நெல்லுற்பத்தி மையமாக இருந்த நாஞ்சில்நாட்டின் நிர்வாகத்தலைமையகமாக இக்கோயில்தான் நெடுங்காலமாக இருந்துள்ளது. இக்கோயிலைச்சுற்றியிருக்கும் வேளாள ஊர்கள் 12 பிடாகைகளாக [வருவாய்ப்பகுதிகளாக] பிரிக்கபப்ட்டிருந்தன. அவர்கள் அனைவருமே தங்கள் ஆலோசானைகளை சுசீந்திரம் கோயிலில் சுப்ரமணியசாமிகோயிலின் முன்புள்ள செண்பகராமன் முற்றத்தில் கூடித்தான் தீமானிப்பது என்ற வழக்கம் இருந்தது. இது சுதந்திரம் கிடைக்கும் காலம் வரை இப்படியே நீடித்தது. Continue reading

15. ஆறு தரிசனங்கள்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

ஆறு தரிசனங்கள்

[இந்தியாவின் வடகிழக்குப் பயணத்தில் கவிஞர் யுவனுடன்]

ஆதி தரிசனங்கள் ஆறு. அவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்திய மெய்ஞான மரபின் அடிப்படைகள் அடைத்தும் உருவாகியுள்ளன. அந்த ஆறு தரிசனங்களின் சாயல் சிறிதேனும் இல்லாத எந்த மதமும் தத்துவமும் இந்து மெய்ஞான மரபில் பிற்பாடு உருவானதில்லை.

தரிசனங்களின் ஒட்டு மொத்தமான பங்களிப்பு  என்ன? வேதங்களில் கவித்துவவீச்சுடன் கூறப்பட்ட அகவெளிச்சங்களை திட்டவட்டமான தத்துவ விவாதத் தளத்துக்குக் கொண்டு வந்தவை தரிசனங்களே. இதன் மூலம் அருவமான (  abstract ) விஷயங்களை புறவயமாக விவாதிக்கும் தருக்க உபகரணங்களை அவை உருவாக்கி அளித்தன.

பல்வேறு விதமான ஞானத்தேடல்கள் நடக்கும் ஒரு பொதுப்பரப்புதான் இந்து மெய்ஞானம் என்பது. ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்ட ஞான வழிகள் உண்டு. வழிபாடுகள் மற்றும் சடங்குகளை மட்டும் சார்ந்து இயங்குபவை உண்டு. முழுக்க முழுக்க அறிவார்ந்த தளத்தில் இயங்குபவை உண்டு.

இந்த ஒவ்வொரு ஞான மார்க்கமும் பிறிதுடன் உரையாட வேண்டியுள்ளது. அந்த உரையாடல் மூலம்தான் ஒவ்வொரு தரப்பும் தன்னை முழுமை செய்துகொள்ள முடியும். அவ்விவாதத்துக்கு எல்லாத் தரப்புக்கும் பொதுவான ஒரு இடம் அவசியம் தேவை.

இந்தப் பொது இடத்தில் நான்கு விஷயங்கள் அனைவருக்கும் பொதுவாக வரையறுக்கப்பட்டிருக்கவேண்டும். அவை முறையே பேசு பொருள், பேசும் விதம், அடிப்படையான சொற்கள் மற்றும் பேசுவதன் நோக்கம்.

எதைப்பற்றி பேச வேண்டும் என்பது முதன்மையான பொது வரையரையாகும். பிரபஞ்சத்தின் பிறப்பு, முடிவு, வாழ்வின் இயங்குமறை, வாழ்வின் நோக்கம் முதலியவையே பேசு பொருட்கள் என்று பொதுவாக வரையறுக்கப்பட்டிருப்பதை இப்போது காணலாம். மாறுபட்ட தரப்புகள் கூடி விவாதிக்கும்போது அனைத்திலும் பொதுவாக உள்ள இவ்வம்சங்களே விவாதிக்கப்பட்டன. Continue reading

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் ஆலயம்- ஒரு வரலாறு

[திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் ஆலயம்,கன்யாகுமரி மாவட்டம்]

வாழ்க்கையில் செய்வதற்கு ஏதுமில்லை என்கிற முடிவு ஏற்பட்டு எண்பதுகளின் தொடக்கத்தில் ஒரு நாள், துறவியாகி விடலாம் என்ற யோசனையுடன் வீட்டைவிட்டுக் கிளம்பி வந்த ஜெயமோகன், இந்தக் கோயிலின் மண்டபத்தில் இரவுப் பொழுதைக் கழிக்க படுத்தார். வேறு சிலரும் அந்த மண்டபத்தில் ஏற்கனவே படுத்திருந்தார்கள். நல்ல இருட்டு. பக்கத்தில் இருப்பவர் முகம் தெரியாதபடிக்குக் கவிந்திருந்த இருட்டு. அந்த இருட்டில் ஒரு வயதானவர் கோயிலைப் பற்றியும், ஆதிகேசவப் பெருமாளைப் பற்றியும் பேசியிருக்கிறார். “ஒரு யுகம் முடியும் போது ஆதிகேசவன் புரண்டு படுப்பார்.”

இது கற்பனையா, ஏற்கனவே சொல்லப்பட்ட கதையா, புராணத்தில் இருக்கிறதா எதுவுமே தெரியாது. ஆனால், பிரம்மாண்டமான ஆதிகேசவப் பெருமாள் சிலை ஒரு முறை புரண்டு படுப்பது என்கிற படிமம், அங்கு படுத்திருந்த ஜெயமோகனைத் தாக்கியது. அதற்குமேல், அவரால் அன்றைய இரவு உறங்கக்கூட முடியவில்லை.

ஏழெட்டு வருடங்கள் அலைந்து திரிந்து புராண இதிகாசங்கள், பவுத்த தத்துவங்கள், மேலைத் தத்துவங்கள் என்று கிடைத்த அனைத்தையும் படித்து அறிந்து, பல ஞானியருடன் தொடர்பு கொண்டு விவாதம் மேற்கொண்டு, தனக்குக் கிடைத்த படிமத்தை ஒரு கலைவடிவமாக்குவதற்கான ஆயத்தங்களைச் செய்துகொண்டு, அதன் பிறகே இந்த நாவலை அவர் எழுத ஆரம்பித்திருக்கிறார்.

விஷ்ணுபுரம் குறித்து எழுத்தாளர் பா. ராகவன் சிலிகான் ஷெல்ஃப் தளத்தில் எழுதிய கட்டுரையில் இருந்து. Continue reading

14. தரிசனங்களைப் பற்றிய சில அடிப்படைப் புரிதல்கள் – 2

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

தரிசனங்களைப் பற்றிய சில அடிப்படைப் புரிதல்கள் – 2

[இந்தியாவின் வடகிழக்குப் பயணத்தின் போது]

அதே சமயம் பிற்பாடு சாங்கியத் தரிசனம் புருஷன் என்ற கருத்துருவத்தை உருவகம் செய்து கொண்டது. அவனுடைய பார்வையினாலேயே இயற்கையின் குணமாறுதல்கள் அறியப்படுகின்றன என்றது. சித்த விருத்தியை நிறுத்தி அதிதூய நிலையில் நம் பிரக்ஞையை வைத்திருந்தால் மட்டுமே நம்மால் பிரபஞ்ச உண்மையை அறிய முடியும் என்றது யோகம். நுண்ணணுக்களின் தனித்தன்மைகள் தன்மாத்திரைகள் என்றும் அவற்றை உணர்பவனே அவற்றின் இயல்பினைத் தீர்மானிகின்றான் என்றும் கூறியது வைசேஷிகம். நாம் அறிய விரும்பும் பொருளைத் தருக்கப்பூர்வமாக வகுத்து அறிவதன் மூலமே அப்பொருளுக்கு அர்த்தம் உண்டாகிறது என்கிறது நியாயம். யோகாசார பெளத்த மரபு நாம் அறிவது எல்லாம் நம்முடைய மனத் தோற்றங்களையே என்றும் நாம் அறியும் விதத்தில் ஒரு போதும் இயற்கை இருப்பதில்லை என்றும் கூறியது. நம் அறிதலுக்கு அப்பாற்பட்டவற்றை சூனியம் என்றது. சமணத் தத்துவம் பிரபஞ்சம் எப்படி நிரந்தரமாக இருந்துகொண்டே இருக்கிறதோ அப்படித்தான் ஆத்மாவும் இருந்துகொண்டே இருக்கிறது என்றது.!

ஆக இவை பெளதீக வாத அடிப்படையில் தொடங்கி மெல்ல ஆன்மிகவாத்தையும் இணைத்துக்கொண்டிருப்பதைக் காணலாம். இதைப்போலவே ஆன்மிகவாதச் சிந்தனைகளையும் அராய்ந்து பார்க்கலாம். பிரபஞ்சம் என்பது மந்திரவடிவமானது. பருமையான பிரபஞ்சம் மந்திரத்தின் வெளிப்பாடு மட்டும்தான் என்று நம்பியது பூர்வமீமாம்சம். உரிய முறையில் மந்திரங்களை ஒதுவதன் மூலம் பிரபஞ்சத்தை மாற்றிவிடலாம் என்றது அது. காணும் பிரபஞ்சம் பொய்யானது, பிரம்மமே மெய்யானது என்று கூறியது வேதாந்தம். Continue reading

‘குரு’ என்ற கருத்துநிலை by ஜெ

குருஎன்றகருத்துநிலை

by

ஜெயமோகன்

[ஆசிரியர் ஜெயமோகன் குரு நித்யாவுடன்]

ஜெயமோகன்.இன் ல் இருந்து தொகுக்கப்பட்டது. மூலக் கட்டுரையை வாசிக்க இங்கே சொடுக்கவும்

ஆன்மீகம் சார்ந்த குழப்பங்களுக்குக் காரணமாக அமையும் இன்னொரு தளம் ‘குரு’ என்ற கருத்துநிலை சார்ந்தது. சாதனா என்பது  குரு இன்றி முழுமைகொள்ள முடியாது. குரு என்பவர் நம்மை வழிகாட்டி அழைத்துச்செல்லும் ஒரு மனிதர். நம்முடைய அறியாமையை நாம் அவர்முன் வைக்கிறோம். அவரது ஞானத்தை பெறுவதற்காக நம்மை திறந்துகொள்கிறோம். இதில் ஒரு சுயசமர்ப்பணம் உள்ளது. இந்தச் சுயசமர்ப்பணத்தை பக்தியாக உருமாற்றிக்கொள்கையில் குருவாக நாம் எண்ணும் மனிதரை அதிமானுடராக ஆக்கிக்கொள்கிறோம்.

சில வருடங்களுக்கு முன்னர் நான் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் ஒரு நவீனச் சாமியாரை தன் குரு என்று சொன்னார். குரு தனக்களித்த ‘ஞான’த்தைப் பற்றிச் சொல்லிக்கொண்டே வந்தவர் தனக்கு வந்த கடுமையான வணிக நெருக்கடியை குரு தீர்த்து வைத்தார் என்றார். ‘அது குருவின் வேலையா’ என்று நான் கேட்டேன். ‘நான் எல்லாவற்றையும் குருவிடம் ஒப்படைத்துவிட்டேன். அவர் பார்த்துக்கொள்வார்’ என்றார் அவர்.

இங்கே நிகழும் பிழை என்ன? குருவையும் கடவுளையும் இவர் குழப்பிக்கொள்கிறார். கடவுளின் இடத்தில் குருவை வைக்கிறார். விளைவாக அந்த குரு மானுடக்கடவுளின் இடத்துக்குக் கொண்டுசெல்லப்படுகிறார்.

பக்திவழியையும் ஞானவழியையும் குழப்பிக்கொள்ளும் அறியாமையில் இருந்து இந்தச் சிக்கல் உருவாகிறது. பக்தி என்பது எந்த வினாவும் இல்லாமல் தன்னை முழுமையாக சமர்ப்பணம் செய்துகொள்வது. அந்த வழியில் வினாவற்ற பணிதலுக்கு முதல்மதிப்பு உள்ளது. ஆனால் அந்த சுயசமர்ப்பணம் இப்பிரபஞ்சத்தை உருவாக்கி நடத்தும் சக்தியிடம் மட்டுமே நிகழவேண்டும். அதை அறியமுடியாதென்பதனால் அதற்கு தன்னை ஒப்புக்கொடுத்தல்தான் பக்தி என்பது. Continue reading

13.தரிசனங்களைப் பற்றிய சில அடிப்படைப் புரிதல்கள்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

தரிசனங்களைப் பற்றிய சில அடிப்படைப் புரிதல்கள்

தரிசனங்களைப் பற்றி ஆராயப் புகுவதற்கு முன்பு சில அடிப்படைத் தெளிவுகளை நாம் அடைந்தாக வேண்டும். இந்திய ஞானமரபு குறித்து நம் அனைவருக்கும் உள்ள ஒரு பொதுவான புரிதல், இது ஒர் ஆன்மிக மரபு என்பதாகும். இந்த எண்ணத்தை நவீன இந்திய சிந்தனையில் ஆழமாக நிறுவியவர் டாக்டர்.ராதாகிருஷ்ணன். இந்தியாவின் அடிப்படையான சிந்தனைகள் எல்லாமே ஆன்மிகமானவை என்றும் இந்த ஆன்மிக அடிப்படையே இந்தியாவின் உள்ளார்ந்த வலிமைக்குக் காரணம் என்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் தன் இந்திய தத்துவ ஞானம் என்ற நூலில் ( Vol. pp 24-25) கூறுகிறார்.

ஆன்மிகம், பெளதிகம் என்பதை முதலில் தெளிவு படுத்திக் கொள்வோம். புலன்களால் அறியப்படக் கூடிய பொருட்களினால் ஆனதுதான் இந்த பிரபஞ்சமும் இங்குள்ள வாழ்கையும் என்று நம்புவது பெளதிக வாதம். வாழ்வின் சாராம்சத்தை அறியவும் இந்தப் பொருள்களையே ஆராய வேண்டுமென அது கூறுகிறது. மாறாக இந்தப் பொருள்மய உலகம் அதற்கு அப்பால் உள்ள ஏதோ ஒரு சக்தியின் வெளிப்பாடு மட்டுமே என்று நம்புவது ஆன்மிகவாதம்.ஆன்மா என்றால் சாரம். ஆன்மிகம் என்றால் சாராம்சத்தை அடிப்படையாகக் காணும் பார்வை. மனிதனின் சாரம் ஆத்மா. பிரபஞ்சத்தின் சாரம் பரமாத்மா. வெளியே தெரிவது பொய் அல்லது மனமயக்கம் என நம்புகிறவர்கள் ஆன்மிகவாதிகள். Continue reading

12. தரிசனங்களின் பின்னணி – இந்து நவீனப் போக்குகளின் காலகட்டம்.

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

தரிசங்களின் பின்னணி

இந்து நவீனப் போக்குகளின் காலகட்டம்

[ஊட்டி முகாம் 2012, குரு நித்யா ஆய்வரங்கு]

நவீன தகவல் தொடர்பு முறைகள், கல்வி ஆகியவற்றின் மூலம் உலகமே ஒரே அறிவுத்தளமாக மாறிவிட்ட காலகட்டமே நவீன கால கட்டம் ஆகும். விஞ்ஞானம் மனித அறிவின் அடிப்படையாக ஆயிற்று. மனித வாழ்க்கையின் நோக்கம்  இன்பமாக இக உலக வாழ்வே என்று கூறப்பட்டது. இந்தக் காலகட்டத்தின் தேவையை ஒட்டி இந்து மெய்ஞான மரபின் பல அம்சங்கள் புது வடிவங் கொண்டு பிறந்து வந்தன. இதை நவீனக் காலகட்டம் என்று கூறலாம்.

உதாரணமாக ஓஷோ (ரஜனீஷ்) உலக ஞான மரபினை முழுமையாகக் கற்றுத் தேர்ந்தவர். சடங்குகளையும் வழிபாடுகளையும் மத நிறுவனங்களையும் நிராகரித்தவர். அவர் நவீன மனிதனின் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பொருட்டு ஒரு சில வழி முறைகளை உருவாக்கினார். கூர்ந்து பார்த்தோமென்றால் நாம் ஓஷோவை தாந்த்ரீக மரபின் தொடர்ச்சி என்று காணமுடியும். அதேபோல ஜே. கிருஷ்ணமூர்த்தி கூறுவது பதஞ்சலி கூறும் யோக மரபின் புதுவடிவையே என்றும் அறியலாம்.

இவ்வாறு பல்வேறு புதிய போக்குகள் உருவாகி வளர்ந்தபடியே உள்ளன. இதற்குக் காரணம் இந்து மெய்ஞானமரபு என்பது ஒரு மத நிறுவனம் அல்ல. திட்ட வட்டமான கொள்கைகள் இதற்கு இல்லை. திட்டவட்டமான தத்துவமும் இல்லை. வாழ்வின் அர்த்தத்தை தேடி ஆயிரம் ஆயிரம் வருடங்களாக மனித மனம் செய்த பெரும் பயணங்களின் தொகுப்புதான் இந்து ஞான மரபு. எந்த பயணத்தையும் இன்று நாம் புதிதாக மேலும் தொடர முடியும். எல்லா நதிகளும் கடலையே சென்று சேர்கின்றது என்று இதைப்பற்றி சாந்தோக்ய உபநிஷதம் கூறுகிறது.

அடுத்து வருவது…

தரிசனங்களைப் பற்றிய சில அடிப்படை புரிதல்கள்

11. தரிசனங்களின் பின்னணி – இந்து மறுமலர்ச்சிக் காலகட்டம்

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலில் இருந்து…

தரிசங்களின் பின்னணி

இந்து மறுமலர்ச்சிக் காலகட்டம்

பதினெட்டாம் நூற்றாண்டு முதல் இந்தியா மீது வெளியே உள்ள நாகரிகங்களின் நேரடியான பாதிப்பு ஏற்பட ஆரம்பித்தது. பிரிட்டிஷ் ஆட்சியும் ஆங்கிலக் கல்வியும் இந்து மரபின் சிந்தனைகளை உலகளாவிய தத்துவப் போக்குகளுடன் ஒப்பிட்டு ஆராயவேண்டிய நிர்பந்தத்தை எற்படுத்தின.

அத்துடன் பதினாறாம் நூற்றாண்டு முதலே இந்தியா முழுக்க நிலையான அரசுகளோ, ஒழுங்கான நிர்வாக முறையோ இல்லாத அராஜக சூழல் நிலவி வந்தது. முகலாய ஆட்சியில் இந்து மரபு மீது தொடுக்கப்பட்ட தொடர்தாக்குதல்களின் காரணமாக இந்து மரபு தன்னை இறுக்கமான விதிகள் அடங்கிய, மாறாத அமைப்பாக மாற்றிக்கொண்டிருந்தது. அந்த இறுக்கம் காரணமாக அது பலநூறு வருடம் மாறாமல் அப்படியே இருந்து வந்தது.

ஆகவே இந்து ஞான மரபினை காலத்திற்கு ஏற்பச் சீர்திருத்தி அமைக்கவேண்டும் என்ற தேவையை சில அறிஞர்கள் உணர்ந்தார்கள். இந்து ஞான மரபில் உள்ள தொன்மையான விஷயங்கள் பல காலப்போக்கில் முக்கியமிழந்து பின்னகர்ந்து விட்டிருந்தன. அவற்றை மீட்க வேண்டிய தேவையையும் சில அறிஞர்கள் உணர்ந்தார்கள். Continue reading

குரு சிஷ்ய உறவு – விஷ்ணுபுரத்தை முன் வைத்து – 3 by ஜாஜா

குரு சிஷ்ய உறவு – விஷ்ணுபுரத்தைமுன் வைத்து – 3

[ நிறைவுப் பகுதி]
by
ஜாஜா (எ) ராஜகோபாலன் ஜானகிராமன்

இக்கட்டுரையின் முந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும்

குரு சிஷ்ய உறவின் பிரதான அம்சமே இருவரிடையேயும் நிகழும் உரையாடல்களே. இன்றளவிலும் இந்த முறை தொடர்ந்து வருகிறது. குரு முதலில் ஒரு சிறு வினாவை அல்லது கருத்தினை எழுப்பி தனது சீடனின் பதிலை அல்லது கருத்தினை அறிய விழைகிறார். சீடன் தரும் பதிலில் இருந்து அவன் அறிந்த எல்லையை உணர்ந்து அங்கிருந்து அவனறியா எல்லைக்கு அவனை இட்டுச் செல்கிறார். அறியா இடம் நோக்கி குருவின் உரை பற்றி நகரும் சீடன் தெளிவு வேண்டி அவரிடம் மேலும் கேள்விகளைக் கேட்டு அறிகிறான். குரு, சிஷ்ய உறவின் முதற்படியான ஆச்சார்ய, வித்யார்த்தி உறவு இன்றுவரை அப்படித்தான்.

விஷ்ணுபுரத்தில் ஆயுர்வேத ஞானி கணதேவர் தன் சீடர்களுக்கு பவதத்தரின் உடல் நிலை குறித்து விளக்கும் இடம் சிறந்த உதாரணம். மரணத்தை ஆயுர்வேதம் அறிந்து கொண்ட விதம், உடல் தோன்றும் விதம், வளரும் முறை, செயல்படும் விதம், உடல் மீது மரணத்தின் சாயல் படியும் விதம், உடல் விட்டு படிப்படியாக உயிர் பிரியும் விதம், மரணம் உணர்ந்த நொடி மனித மனம் அடையும் மாற்றங்கள் என ஒரு ஆயுர்வேதிக்குத் தேவையான மொத்தத்தையும் அள்ளித்தருகிறார். இந்த இடம் வரை ஆசிரியராக எண்ணப்பட வேண்டியவர் அதனைத் தாண்டிய நிலைக்குப் போவது இந்த விஷயங்களை விளக்கும் விதத்தில் தனது அனுபவங்களை, தனது தடுமாற்றங்களை , தனது புரிதல்களை தன் சீடர்களறியத் தரும் இடத்தில்தான். Continue reading

குரு சிஷ்ய உறவு – விஷ்ணுபுரத்தை முன் வைத்து – 2 by ஜாஜா

குரு சிஷ்ய உறவு – விஷ்ணுபுரத்தைமுன் வைத்து – 2
by
ஜாஜா (எ) ராஜகோபாலன் ஜானகிராமன்

இக்கட்டுரையின் முந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும்

குரு நிலை என்பது கை விளக்கோடு கூடிய ஒருவனின் பயணமே. சீடன் கைவிளக்கற்று, குருவின் கால் தடம் பற்றித் தொடர்கிறான். பேரன்புடன் குரு தன் கைவிளக்கின் ஒளியால் பாதையினை அவனுக்கும் காட்டியபடியே தொடர்கிறார். ஞானத்தின் பாதையில் குருவும் சக பயணிதானோ?

கை விளக்கின் ஒளி எல்லை, சிறிது தொலைவை மட்டுமே புலனாக்குவது. எல்லை எது வரை என்பதை கைவிளக்கு காட்டுவதில்லை. இந்திர பதவியின் முயற்சிக்கு இடையே ஊர்வசி, மேனகை, ரம்பை உண்டெனில் ஞானத்தின் பாதையில் குரு பீடம். கை விளக்கின் ஒளி எல்லையை , அறிதலின் எல்லையாக்கி பீடம் ஏறி நிற்கும் குருட்டு குருமார்கள்.

தழலாய் மாறத் துடித்து நிற்கும் கற்பூரக் கட்டி போன்ற சிறுவனை , அவனது அறிவின் வீச்சினைக் கண்டு அசூயை கொள்ளும் குரு பீடம். அவனது தகுதியை , படிப்பினை, அறிவினை, வயதினை நிந்தித்துப் பேசும் ஜம்பம். தேடலின் தாகம் கொண்டு நிற்போரை கானல் நீர் காட்டி விரட்டி விடும் குரூரம். தன் அகந்தையைத் தடவி நிற்பவனைத் தழுவி ஏற்று அவனையும் குருடனாக்கப் போகும் நிர்மூடம். அறிந்ததாய் எண்ணி, அடைந்ததாய்க் காட்டி மரணத்தின் முன் கெஞ்சிக் கதறப் போகும் அவல நிலையில் நிற்கும் விஸ்வகரும் குருவாகவே அறியப்படுகிறார். அவரால் குரு பீடத்தை மட்டுமே உருவாக்க இயலும். குரு, சிஷ்ய உறவு அவருக்கு சாத்தியமே இல்லை.

விளக்கின் ஒளியில் பாதை காண மறந்து, திரியின் ஒளியில் பார்வையை லயிக்க விட்டு வெளிச்சக் குருடுகளாய் திரியும் குரு பீடங்கள் முமுட்சுவாய் நிற்பவனுக்கு நிழல் தருமா என்ன? திரும்பி நடந்து போகும் சிறுவன் சுடுகாட்டுச் சித்தனால் ஆட்கொள்ளப்படுகிறான். சீடனின் தகுதி குருவினை இட்டு வருமோ ? சீடன் சரியாய் இருக்கையில் குருவும் தகுதியானவராகவே வந்து அமைவது தற்செயலா என்ன? Continue reading