என்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன? [தொடர்ச்சி]
[16–1–07 அன்று பாளையங்கோடை தூய சவேரியார் கல்லூரி தமிழ்துறை சார்பில் ஆற்றிய நினைவுச்சொற்பொழிவு]
ஜெயமோகன்.இன் ல் இருந்து
[வட கிழக்குப் பயணத்தின் போது. சிக்கிம் ]
சார்த்ரும் காம்யூவும் இருத்தலியத்தின் பிதாமகர்கள். முன்னர் நான் சொன்ன சொற்றொடர்கள் இருத்தலியத்தின் மூலவரிகள் போன்றவை. முன்னர் நான் சொன்ன படைப்பாளிகலின் வரிசையை ஒட்டுமொத்தமாக நவீனத்துவர்கள் என்று அடையாளம் காட்டலாம்.
நான் வாசிக்க வந்த காலத்தில் நவீனத்துவத்தின் கொடி பறந்தது. இருத்தலியமே எங்கும் முழங்கும் தத்துவமாக இருந்தது. இந்திய மொழிகளில் நம் உடனடி முன்னோர்கள் அனைவருமே நவீனத்துவர்களாக இருந்தனர். அசோகமித்திரன் சுந்தர ராமசாமி சா கந்தசாமி இந்திரா பார்த்த சாரதி … மலையாளத்தில் ஓ.வி.விஜயன், எம் டி வாசுதேவன் நாயர் ,எம் முகுந்தன் ,புனத்தில் குஞ்ஞப்துல்லா கன்னடத்தில் யு ஆர் அனந்தமூர்த்தி, பி.லங்கேஷ், வங்காளத்தில் சுனில் கங்கோபாத்யாய அதீன் பந்த்யோபாத்யாய…
ஆனால் நம்முடைய நவீனத்துவம் அப்படி உள்ளார்ந்த பெரும் வெறுமையைச் சென்றடைந்ததா? சார்த்ரின் கதாநாயகனின் அந்த சிரிப்பு இங்கே ஒலித்ததா?
ஓ.வி.விஜயனின் புகழ்பெற்ற சிறுகதை நினைவுக்கு வருகிறது. ‘கடல்கரையில்’ என்ற அக்கதையை நான் மஞ்சரி இதழில் முன்பு மொழியாக்கம் செய்திருக்கிறேன்.
வெள்ளாயியப்பன் தன் சிற்றூரிலிருந்து அதிகாலையிலேயே கால்நடையாகக் கிளம்புகிறான்.கையில் வழியில் சாப்பிட ஒரு பொட்டலம் சோறு அவன் மனைவியால் கட்டி கொடுக்கப்படுகிறது.
கண்ணீர் கனத்த முகத்துடன் நிற்கும் மனைவியடம் அவன் விடைபெறுகிறான் .நடக்கிறான் . வழியில் எதிர்பட்ட ஊரார் அவனிடம் துயரத்துடன் நகரத்திற்கா செல்கிறாய் என்கிறார்கள். ஆமாம் கூடாளிகளே நான் சென்றுவருகிறேன் எனக்கு விடை கொடுங்கள் என்கிறான்
ஊரின் மரங்களும் பாறைகளும் சிற்றோடைகளும் அவனிடம் துயரமாக கேட்கின்றன. ‘நகரத்திற்கா செல்கிறாய்?’ ஆமாம் எனக்கு விடைகொடுங்கள் என்று அவன் சொல்கிறான்
நீண்ட செம்மண் பாதை வழியாக அவன் நடக்கிறான். கால்களில் புழுதிபடிகிறது. உடல் வியர்த்து களைக்கிறது. அந்த சோற்று பொட்டலம் கனக்கிறது. வெயிலில் தும்பிகளும் சிறுபறவைகளும் நீந்திக் களிக்கின்றன. கவலையே அறியாத வானம் ஒளியுடன் கண்நிறைத்து விரிந்திருக்கிறது. வெள்ளாயியப்பன் அதைக் கண்டு மனம் உருகிக் கண்ணீர் விடுகிறான்.
மாலை வெள்ளாயியப்பன் நகரத்தை அடைகிறான். நகர் நடுவே ஒரு கோட்டை. அதற்குள் ஒரு சிறை. சிறை வாசலில் பொட்டலத்துடன் அவன் காத்து நிற்கிறான். காவலர் அவனை அனுதாபமாகப் பார்க்கிறார்கள். அவன் மேலும் மேலும் பல வாசல்களில் நிற்கவேண்டியுள்ளது.
கடைசியில் அவன் தன் ஒரே மகனை இரும்புக்கம்பிகளுக்கு அப்பால் காண்கிறான். அவன் வெளுத்துப்போய் நடுங்கிக்கொண்டே இருக்கிறான். ”அப்பா நீ வந்தாயா?” என்கிறான். ”மகனே நான் வரவேண்டுமல்லவா?”என்கிறான் வெள்ளாயியப்பன்
”இனி நான் இருக்கமாட்டேனே அப்பா.. அம்மாவை இனி என்னால் பார்க்க முடியாதே” என்கிறான் மகன். ”மகனே நீ தவறு செய்தாய் என்றல்லவா அவர்கள் சொல்கிறார்கள்?” என்கிறான் வெள்ளாயியப்பன்
”நான் எந்த தவரும் செய்யவில்லை அப்பா” மகன் சொன்னான். ” அதை அவர்கள்தானே தீர்மானிக்கிறார்கள்?” என்கிறான் வெள்ளாயியப்பன். அந்த சோற்றை மகனுக்குக் கொடுக்கிறான். அவன் வேண்டாம் என மறுத்துவிடுகிறான்.
அன்றிரவு முழுக்க வெள்ளாயியப்பன் தூங்காமல் சிறை வாசலில் அமர்ந்திருந்தான். வானம் இருண்டது.நட்சத்திரங்கள் ஆழம் கானமுடியாத இருளில் மின்னிக் கொண்டிருந்தன.
மறுநாள் அதிகாலையில் அவன் மகன் தூக்கில் இடப்பட்டான். அதை அவன் பார்க்கவில்லை. ”உன் மகனின் சடலத்தை நீ பெற்றுக்கொள்ளலாம்”என்கிறார் சிறையதிகாரி. ”இல்லை எஜமானே. ஊருக்குக் கொண்டுபோக எனக்கு வசதி இல்லை. ”என்கிறான் வெள்ளாயியப்பன் ”நீங்களே அடக்கம் செய்யுங்கள்”
விடிய ஆரம்பிக்கிறது. சோற்றுப்பொட்டலத்துடன் வெள்ளாயியப்பன் கடல்கரைக்குச் செல்கிறான். வெண்நீலப்பட்டு விதானம் போல வானம் காலை ஒளிகொண்டிருக்கிறது. அலை ஓயாத அமைதியில்லாத கடல் தொலைவில்.
வெள்ளாயியப்பன் மகனை எண்ணினான். அவனுக்குக் கண்ணீர் வரவில்லை. என் மூதாதையருடன் நலமாக இரு மகனே என்று எண்ணிக் கொண்டான்.அந்த சோற்றுப்பொட்டலத்தை கடற்கரையில் வீசினான். ஒளிமிக்க வானிலிருந்து காக்கைகள் வடிவில் மூதாதையர் கூட்டம் கூட்டமாக இறங்கிவந்தனர் அந்த பலிச்சோற்றை உண்ண.
நண்பர்களே, இந்தக்கதை ஒரு இந்திய இருத்தலியல் கதை. அரசு, தர்மநியாயங்கள் எல்லாமே தனிமனிதனை மீறி அவனை பந்தாடுவதை இது காட்டுகிறது. இக்கதையிலும் தனிமனிதன் தன் விதியுடன் அகண்ட காலத்தின் முன் தன்னந்தனியாக நிற்கிறான். அந்தக்கடல்தான் அலைபுரளும் முடிவிலியாகிய காலம் , இல்லையா?
ஆனால் எந்த மேலைநாட்டு இருத்தலியல் கதையிலும் இல்லாத ஒரு கனிவு இதில் உள்ளது . அதை நான் மேலும் விளக்க விரும்பவில்லை. வெள்ளாயியப்பன் எதிர்கொள்ளும் காலம் இரக்கமற்ற விரிவு கொண்டதுதான். ஆனால் அவன் தன் மூதாதையர் வரிசை மூலம், தன் வாரிசுவரிசை மூலம் அந்த முடிவிலியை எதிர்கொள்கிறான். அவன் முன் வாழ்க்கையின் பொருளாக அது விரிந்து கிடக்கிறது. தன் தந்தையும் தானும் தன் மகனும் கொள்ளும் அறுபடாத அன்பின் சங்கிலி அது. அவனைப்பொறுத்தவரை அது உண்மை. அதுவே சாரம். அதுவே மையம். அது அவனுக்கு நிறைவை அளிக்கிறது.
உக்கிரமான வெறுமையின் சாரத்திலும் கனிவைக் கானூம் இக்கதையை இந்திய நவீனத்துவத்தின் உச்சம் என்று நான் எண்ணுகிறேன்.
ஆம் மனித மனத்தை அதன் திரைகளை விலக்கிப் பார்த்தால் தெரிவது காமம் வன்முறை அகங்காரம் ஆகியவைதான். நம் மரபு இதை ‘காமகுரோதமோகம்’ என்றது. திரைவிலக்கி அதை காட்டுவதுடன் திருப்தியடைகிறது ·ப்ராய்டியம். ஆனால் அதுவும் ஒரு திரை. அதையும் நாம் விலக்க முடியும். அதர்கும் அப்பால் தெரிவது என்ன?
ஏன் மனிதன் காமகுரோதமோகம் கொள்கிறான்? இன்பத்திற்காக. ஓயாது ஒழியாது இன்பத்திற்காக தவித்தபடியே இருக்கிறது மனிதமனம். அழியாத இந்த ஆனந்த வேட்கையே மனதின் இயல்பான நிலை. ஏன் மனம் ஆனந்தத்தை நாடுகிறது? ஏனெனில் மனித மனம் ஆனந்தத்தால் ஆனது. ஆனந்தமே அதன் சகஜ நிலை. எதனாலும் தீண்டபப்டாதபோது அது ஆனந்தமாகவே இருக்கிறது . தன் இயல்புநிலைக்குச் செல்ல அது எப்போதும் ஏங்கியபடியே உள்ளது
எப்படி தன் ஆனந்தநிலையை மனித மனம் இழக்கிறது? தன்னை தனித்துணரும்போது. தான் வேறு என உணரும்போது. இப்பிரபஞ்சம் முழுக்க உயிராக உடல்களாக பொருட்களாக நிறைந்திருப்பதில் இருந்து எப்போது வேறுபட்டு உணர்கிறதோ அப்போது மனிதமனம் துயரம் கொள்கிறது
மனிதமனம் ஆனந்தம் கொள்ளும் கணங்களை எண்ணிப்பாருங்கள். உணவின் ருசியில், உடலுறவில், இயற்கைக்காட்சியன்றை பார்க்கையில், கலைகளில் ஈடுபடுகையில் மனிதமனம் ஆனந்தம் கொள்கிறது. இவ்வாவனந்தத்தின் உச்சநிலைகளில் எல்லாம் அது ‘தன்னை இழந்து’ விடுகிறது. மெய்மறக்கிறது. தான் இல்லாத நிலையையே அது பேரின்பமாக உணர்கிறது. கரைந்து அழிதலையே அது இருத்தலின் உச்சமாக உணர்கிறது’
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நாம் கலையின் இலக்கியத்தின் சாரமாகக் கண்டது இதுதான். கலை என்பது ஆனந்தத்தின் வெளிப்பாடு. ஆனந்தத்தை நிகழ்த்துவது. எழுதுபவனும் வாசிப்பவனும் தன் அகங்காரத்தை இழந்து கரைந்து ஒன்றாகும் பெருநிலை அது. கலையின் பணியே அதுதான். தன் அகங்காரத்தால் சுயநலத்தால் தன்னை வேறிட்டு உணர்ந்து துயருறும் மனிதமனத்துக்கு தன்னை உதறி விரிந்து எழும் பேரனுபவத்தை அளிப்பதே அதன் நோக்கம்.
மனிதனுக்கு இந்தியப் பேரிலக்கியங்கள் விடுக்கும் செய்தி என்று இதையே சொல்லமுடியும். உன் அகங்காரத்தின் எல்லைக்கோடுகள் அழியும்போது நீ உணரும் எல்லையற்ற தன்மையே உன் இருப்பின் சாரம். அப்போது நீ உன்னையே மானுட இனமாக, வரலாறாக, முடிவிலாத காலமாக உணர்வாய். வெள்ளாயியப்பன் கடற்கரையில் காலத்தின் முடிவிலாத அலைவெளிமுன் நின்று உணர்ந்த சாரம் அதுதான்.
நண்பர்களே இந்திய இலக்கியம் அதன் செவ்வியல்தளத்தில் உணர்ந்ததும் இதையே. நவீன இலக்கியமாக மாரியபோது அதன் பெரும்படைப்புகள் வழியாக அது அறிந்ததும் இதையே. மீண்டும் மீண்டும் அது சொல்லிக்கொண்டிருப்பதும் இதையே.
பிரேம்சந்தின் ஒரு இந்திக் கதை. ‘லட்டு’ என்று பெயர். கதா நாயகிக்கு தொண்ணூறு வயது. திரும்பவும் குழந்தை ஆகிவிட்டாள். நடக்க முடியாது, தவழ்வாள். பொக்கைவாயில் மழலைச்சொல்தான் பேசுவாள். காது சரியாகக் கேட்காது. பெரும்பாலும் சிரிப்புதான் அவள் மொழி.
வீட்டில் அவள் மகனும் மருமகளும் பேரப்பிள்ளைகளும் உள்ளனர். மருமகளுக்கு இந்தக்குழந்தையை பராமரித்து அலுத்துவிட்டது. கண்ணும்கருத்துமாக பார்த்துக்கொள்ளவேண்டும். சாப்பாடு ஊட்டிவிடவேணும். மலஜலம் கழிக்க கொண்டுபோகவேண்டும். படுக்கவைத்து போர்த்திவிடவேண்டும். கொஞ்சம் கண்ணசந்தால் எங்காவது போய்விடும். விழுந்து அடிபட்டு வந்துசேரும். எதையாவது எடுத்து வாயில் போட்டுக்கொள்ளும். இது செத்து ஒழிந்தால்தான் எனக்கு வாழ்க்கை என்று வைகிறாள் மருமகள்
பேத்திக்குக் கல்யாணப்பேச்சு அடிபடுகிறது. கல்யாணம் என்ற சொல் எப்படியோ காதில் விழுந்ததும் கிழத்துக்கு லட்டு நினைவு வந்துவிட்டது. அதன் கல்யாணத்தன்றைக்கு தேங்காயளவுக்கு லட்டு செய்தார்கள். லட்டு வேண்டும் லட்டு என்று கிழவி முனக ஆரம்பித்தாள். ‘எப்போது கல்யாணம், கல்யாணத்துக்கு லட்டு உண்டா ?’ என்று வாய் ஓயாமல் நச்சரிக்க ஆரம்பித்தாள்.
சும்மாகிட .உனக்கு இந்தவயசில் லட்டு ஒரு கேடா என்றாள் மருமகள். திட்டெல்லாம் கிழத்துக்கு பொருட்டே அல்ல. லட்டு லட்டு என ஒரே ஜபம். வேரு நினைப்பே இல்லை. ‘கல்யாணத்துக்கு லட்டு செய்வேன். உனக்கு ஒரு கூடை லட்டு தருவேன் தின்றுவிட்டு செத்துத்தொலை என்ன ?’ என்கிறாள் மருமகள்.
கல்யாணம் நெருங்குகிறது. ஊரையே அழைத்துவிட்டார்கள். ஆயிரம் லட்டு தேவை. கொல்லைப்பக்கம் அடுப்புமூட்டி லட்டு செய்கிறாள் மருமகள். கைவலிக்க லட்டு உருட்டுகிராள். மூன்றுநாள் லட்டு சேய்யும் வேலை. நடுவே கிழவி லட்டு வெறியேறி அலைகிறாள். எங்காவது அடுப்பில் விழுந்துவிடப்போகிறது என்று மருமகள் அவளை அறையிலேயே வைத்திருக்கிறாள். கல்யாணம் முடிந்தபின் உனக்கு லட்டுதருவேன் என்கிறாள்
கல்யாணம். விருந்தினர்கள் வந்தபடியே இருக்கிறார்கள். கிழவி நடுவே லட்டு லட்டு என்று தவழ்கிறாள். யாரோ சிரிக்கிறார்கள். மருமகளுக்கு அவமானமாக இருக்கிறது. கிழவியை இழுத்துச்சென்று ஒரு அறையில்போட்டு பெரிய பூட்டால் பூட்டிவிடுகிறாள். லட்டு லட்டு என்கிறாள் கிழவி. கல்யாணம் முடிந்தபின் உனக்கு லட்டுமலையே இருக்கிறது சும்மா கிட என்கிறாள் மருமகள்.
கல்யாணத்தில் பயங்கரமான கூட்டம். சாப்பாடும் பலகாரங்களும் போதவில்லை. உபசரித்து முதுகு ஒடிகிறது. களைத்து சோர்ந்து எழ முடியாமல் மருமகள் உட்கார்ந்துவிடுகிறாள். வந்தவர்கள் எல்லாரும் போய்விடுகிறார்கள். மிச்சபேர் தூங்கிவிட்டார்கள். வீடே சூனியமாக கிடக்கிறது. எங்காவது அப்படியே விழுந்து தூங்கினால்போதும் என்றிருக்கிறது.
யாரோ கதவைத்திறந்துவிட்டார்கள். கிழவி ஆவேசமாக தவழ்ந்து சென்று பந்தி போட்ட இடத்தில் சிதறிக்கிடந்த லட்டுத்துளிகளை பொறுக்கிச்சேர்க்கிறாள். ‘லட்டுலட்டு”என மகிழ்ச்சிப்பரவசத்துடன் சொல்லியபடியே தின்கிறாள். மருமகள் தற்செயலாக அப்படி வந்தவள் அதைக் காண்கிறாள். கிழவியின் முகத்தில் குழந்தையின் தூய சிரிப்பு. ”லட்டு பார்த்தாயா? நிறைய இருக்கிறது”
அப்படியே அலறியபடி கிழவி காலில் விழுகிறாள் மருமகள். ”என் தாயே உனக்கு ஒரு லட்டு கொடுக்கத் தோன்றவில்லையே!”என்று கதறுகிறாள். நள்ளிரவில் அடுப்பு மூட்டி லட்டுசெய்ய ஆரம்பிக்கிறாள்.
நண்பர்களே, மகத்தான ஏதோ ஒன்று பேரிலக்கியங்களில் உள்ளது. அது மனிதாபிமானமா அன்பா என்ன என்று நான் சொல்ல விரும்பவில்லை. மனிதன் தன் வாழ்க்கையின் சாரமாக மீண்டும் மீண்டும் கண்டடையும் ஒன்று. நம்மை கன்னீஈர் விடவைக்கும் ஒன்று. அதைக் காணும்போது மனிதமனம் ஆனந்தம் நிறைந்து ததும்புகிறது. அந்த ஆனந்தமே இலக்கியத்தின் மையம்.
பல்லாயிரமாண்டுகளுக்கு முன் நம் பேரிலக்கியங்கள் அந்த சாரத்தைக் கண்டுகொண்டன. மீண்டும் மீண்டும் நம் இலக்கியங்கள் அந்த சன்னிதிமுன்னர் சென்று தலைவணங்கி நிற்கின்றன. லட்சியவாதமோ நவீனத்துவமோ பின் நவீனத்துவமோ எதுவானாலும்.
நன்றி
[16–1–07 அன்று பாளையங்கோடை தூய சவேரியார் கல்லூரி தமிழ்துறை சார்பில் ஆற்றிய நினைவுச்சொற்பொழிவு]