அயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறு-3 [தொடர்ச்சி]

அயோத்திதாசரின் மாற்று ஆன்மீகவரலாறு-3[தொடர்ச்சி]

ஜெயமோகன்.இன் ல் இருந்து

jm-3

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலம் முதல் நம்முடைய வரலாறு நவீன நோக்கில் எழுதப்படும் பணி தொடங்கியது. அவ்வாறு வரலாறு தொகுது நவீனப்படுத்தி எழுதப்பட்டபோது அதன் விளைவாக நம்முடைய ஆன்மீகமும் மறுஆக்கம் செய்யப்பட்டது.சைவம் வைணவம் போன்றவற்றில் நிகழ்ந்த மறுமலர்ச்சி என்பது இதுதான். அதாவது அவற்றின் ஆன்மீகமானது மறுவரலாற்றுவிளக்கம் பெற்றது.

ஏறத்தாழ இதேகாலகட்டத்தில்தான் பௌத்தமும் மறுவிளக்கம் பெற்றது. ஆல்காட், ரைஸ் விலியம்ஸ், பால் காரஸ் போண்ற மேலைநாட்டறிஞர்களாலும் அநாகரிக தம்மபால போன்ற கீழை அறிஞர்களாலும். சைவமும் வைணவமும் எப்படி நவீனகாலகட்ட்டதுக்காக மறு ஆக்கம் செய்யபப்ட்டனவோ அதேபோலவே பௌத்தமும் மறு ஆக்கம்செய்யப்பட்டது.

இந்த மறுஆக்கத்தை இப்படி விளக்கலாம். இவை ஒருவகை சுத்தப்படுத்தல்கள். பல்வேறுசல்லடைகள் வழியாக மதமும் பண்பாடும் அரிக்கப்படுகின்றன. முதலில் புறவயத்தன்மை என்ற சல்லடை. அதன்பின் தத்துவத்தர்க்கம் என்ற சல்லடை. அதன்பின் நவீன அறிவியலால் உருவாக்கப்பட்ட பகுத்தறிவு என்ற சல்லடை. பொதுநாகரீகம் என்ற சல்லடை.

இப்படி அரித்து எடுக்கப்பட்ட தூய அம்சங்களைக்கொண்டு ஒரு மையம் கட்டப்படுகிறது. அதன்பின் அந்த மையம் எப்படி வரலாற்றில் உருவாகி வளர்ந்துவந்தது என்று விளக்கப்படுகிறது. இங்கே சைவம் வைணவம் எல்லாம் அப்படித்தான் விளக்கப்பட்டன. அதற்காகவே நூல்கள் எழுதிக்குவிக்கப்பட்டன.

அயோத்திதாசர் அவர்களின் அணுகுமுறை இதற்கு நேர் எதிரானது. அவரிடம் நவீனகாலகட்டம் உருவாக்கிய எந்தச்சல்லடையும் இல்லை. அவருக்கும் அவரதுசமகாலத்தவரும் தோழருமான பேரா லட்சுமிநரசுவுக்கும் இடையேயான வேறுபாடே இதுதான். லட்சுமிநரசு முன்வைப்பது சல்லடைகளால் சலிக்கப்பட்ட பௌத்தத்தை. அயோத்திதாசர் முன்வைப்பது அபப்டியே மண்ணில் இருந்து அள்ளப்பட்ட ஒஉ பௌத்தவரலாற்றை, லட்சுமிநரசுவின் பௌத்ததில் மக்களின் நம்பிக்கைகளுக்கும் தொன்மங்களுக்கும் இடமில்லை. தமிழின் நீண்ட பாரம்பரியமே அதில் இல்லை. அவர் சொல்வது தத்துவார்த்தப்படுத்தப்பட்ட புறவயமாக ஆக்கப்பட்ட பகுத்தறிவுக்கு உகந்த ஒரு பௌத்தத்தை. அதுவல்ல அயோத்திதாசர் முன்வைப்பது.

அயோத்திதாசர் ரும் பௌத்தத்தையே பேசுகிறார், ஆனால் அவர் அடியிலிருந்து பேசுகிறார். லட்சுமிநரசு மேலிருந்து பேசுகிறார். அவரது சமகாலத்துச் சிந்தனையாளர்கள் அனைவரும் மேலிருந்து பேசியவர்களே.பிற அனைவரும் ஆன்மீகத்தின் வரலாற்றை உச்சங்களைக்கொண்டு புனைகிறார்கள். சிறந்தபுள்ளிகளைக்கொண்டு கட்டுகிறார்கள். அயோத்திதாசர் எல்லாவற்றையும் அப்படியே அள்ளி வைக்கிறார். அதில் ஒரு ’பண்படாத தன்மை’ இருக்கிறது. ஆனால் அதுவே அவரது பலம், சிறப்பம்சம். அதையே நான் அவரை முன்னோடி என்று சுட்டுவதற்கான காரணமாக கருதுகிறேன்.

அந்த ‘பண்படாததன்மை’ காரணமாக பிறவழிமுறைகளில் தடுக்கப்பட்டு வெளியே நிறுத்தப்பட்ட பல்வேறு வரலாற்றுக்கூற்றுகள் உள்ளே வந்துவிடுகின்றன. அடித்தள மக்களின் குரல்கள் வரலாற்றுக்குள் ஒலிக்கமுடிகிறது. வேறுவகையான வரலாற்று மொழிபுகளுக்கான வாய்ப்புகள் கிடைக்கின்றன. அணைகட்டி நிறுத்தப்பட்ட நம்முடைய வரலாற்றுக்களத்தில் குப்பையும்கூளமும் மலர்களும் மண்மணமுமாக புதுவெள்ளம் ஒன்று நுழைய முடிகிறது.

*

என் முதிரா இளமையில் வரலாற்று ரீதியான ஆன்மீகம் என்று பி.கெ.பாலகிருஷ்ணன் சொன்ன சொல் என்னுடைய ஆழத்தில் கிடந்திருக்கவேண்டும். பின்னர் விஷ்ணுபுரம் எழுதியபோது நான் முயன்றது அதற்காகவே. அந்நாவல் நம்முடைய ஆன்மீகத்தேடலை பிரம்மாண்டமான வரலாற்றுப்பின்னணியில் நிறுத்தி ஆராய்வதற்கான ஒரு முயற்சி. அந்நாவலைப்பற்றி நான் இங்கே விரிவாகச் சொல்லவேண்டியதில்லை. வெளிவந்தபோது மிகப்பெரும்பாலான ஆய்வாளர்களால் மேலோட்டமான அபிப்பிராயத்துடன் கடந்துசெல்லப்பட்ட நாவல் அது. இன்றுதான் அதற்கான மிகச்சிறந்த வாசிப்புகள் வந்துகொண்டிருக்கின்றன

அந்நாவலில் முதன்மையாக நான் உருவாக்கியது ஒரு பின்னலைத்தான். அந்நாவலில் வரும் விஷ்ணு முதல் ஆறுகள் மலைகள் சிறுதெய்வங்கள் வரை அனைத்துக்கும் மூன்று முகங்கள் உண்டு. ஒரு வைதிகமுகம். ஒரு ஆதிக்கத்தமிழ் முகம். ஒரு ஆதிச்சமூகத்தின் முகம். ஒவ்வொரு நிகழ்வுக்கும் மூன்று விளக்கங்கள் உண்டு. ஏன் ஒவ்வொரு சொல்லுக்கும் மூன்று முகம் உண்டு. அந்த மூன்று அடுக்குகள் நடுவே நிகழும் ஒரு நுட்பமான ஊடுபாவுதான் அந்நாவல்.

மொத்த விஷ்ணுபுரத்தையே பாண்டியனும் மகாவைதிகனும் சேர்ந்து தொல்தெய்வமான நீலியின் முன் காலடியில் கொண்டுவைக்கும் ஒரு பெரும் காட்சி சித்தரிப்பு அந்நாவலில் உண்டு. அந்த அத்தியாயத்தை எழுதியபோது நான் உண்மையிலேயே ஒரு புதிய வாசலைத் திறந்ததாக உணர்ந்தேன். மூர்க்கமாக தட்டித்தட்டி ஒரு சிறு இடுக்கைக் கண்டுகொண்டிருக்கிறேன். ஆம், விஷ்ணுபுரம் ஒரு மாற்று வரலாறு.

அப்போது நான் அயோத்திதாசரைப்பற்றி கேள்விப்பட்டதில்லை. ஆச்சரியமென்னவென்றால் விஷ்ணுபுரம் சம்பந்தமான ஒரு விவாத அரங்கில்தான் முதல்முறையாக ஒருவர் அயோத்திதாசர் பற்றி என்னிடம் சொன்னார். இன்று அவர் சொன்னது எனக்கு ஆச்சரியமளிக்கிறது. ‘தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் விஷ்ணுபுரம் நாவலில் எழுதிய விஷயங்களை நீங்களே புரிந்துகொள்ளவேண்டுமென்றால் அயோத்திதாசர் நூல்களை வாசிக்கவேண்டும்’ என்றார் அவர். அவருடன் சென்று நான் அன்பு பொன்னோவியம் அவர்களைச் சந்தித்தேன்

கொற்றவையை எழுதும்போது நான் அயோத்திதாசர் நூல்களை வாசித்துவிட்டிருந்தேன். அவரது மாற்றுப் ’புராணவரலாற்றெழுத்து’ முறையால் உற்சாகமும் அடைந்திருந்தேன். கொற்றவையில் ஒரு வாச்கான் அயோத்திதாசர் தன் நூல்கள் வழியாக காட்டிய மூன்று வழிகளும் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். விஷ்ணுபுரத்தில் அறியாமல் அவற்றைக் கையாண்டவன் அதைப்பற்றிய தெளிவுடன் கொற்றவையில் அந்த வழிமுறைகளை பயன்படுத்தினேன்

கொற்றவை ஒரு மாற்றுத்தமிழ்வரலாறு. மேலிருந்தும் கீழிருந்தும் அதில் வரலாறு எழுதப்பட்டுள்ளது அதிலும் நீலி வருகிறாள். வரலாறு அவளுக்கு வெளியே ஒன்றாகவும் அவள்வழியாக இன்னொன்றாகவும் அந்நாவலில் ஓடிச்செல்கிறது. அதில் ஒட்டுமொத்த தமிழ்த் தொன்ம உலகும் மறுவிளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சொற்கள் மறுஆக்கம்செய்யப்பட்டு அதன் வழியாக இன்னொரு வரலாறு உருவாக்கப்பட்டுள்ளது. கொற்றவையில் சாம்பவர் பற்றிய தொன்மக்கட்டுமானம் போன்றவற்றை அயோத்திதாசர் அவர்களின் முன்னுதாரணம் இல்லையேல் எழுதியிருக்கமுடியாது. அயோத்திதாசர் அவர்கள் கையாண்ட பல சொற்கள் பல தொன்மங்கள் அந்நாவலில் கையாளப்பட்டுள்ளன.

*

ஊழ்கத்தில் நாம் கண்மூடி அமர்கையில் என்ன நிகழ்கிறது? முதலில் நாம் சொற்களை நம் அடியிலா ஆழம் நோக்கி ஏவுகிறோம். நமக்குள் ஒரு ராணித்தேனீ இருந்து சொற்களை முட்டையிட்டு குஞ்சுபொரித்து அனுப்பிக்கொண்டே இருப்பதை அறிகிறோம். இது முடியவே முடியாதா என சலிக்கிறோம். சொற்கள் வழியாக ஒரு படிக்கட்டை அமைத்து அதில் கால்பதித்து அந்த இருளுக்குள் இறங்கிச் செல்கிறோம்

அச்சொற்களெல்லாம் தீர்ந்தபின் நாம் படிமங்களை ஏவ ஆரம்பிக்கிறோம். நமக்குள் இருக்கும் ஒரு சில அச்சுகளுக்குள் நம் கற்பனை சென்றமைந்து படிமங்களை உருவாக்கிக்கொண்டே இருப்பதை உணர்கிறோம். அலைகளை அனுப்பிக்கொண்டே இருக்கும் முடிவில்லா பெருங்கடலென அதை அறிகிறோம். ஏதோ ஒருபுள்ளியில் நாம் கடலை கண்டுவிட்டால் அலைகள் இல்லாமலாகிவிடுகின்றன.

அதன்பின் நாம் நமக்கான ஒரு படிமத்தைக் கண்டுகொள்கிறோம். அந்தப்படிமத்தின் கடைசிப்படியில் நின்று நாம் நம் ஆழத்து இருளுக்கு அப்பால் திறக்கும் ஒரு வாசலை சென்றடைகிறோம்.

இந்தப்யணத்தில் நாம் கையாளும் சொற்களும் படிமங்களுமெல்லாம் இந்த பண்பாட்டுவெளியிலிருந்து நமக்களிக்கப்பட்ட்டவை என்னும்போது அவற்றை அறியாமல் நாம் ஒருபோதும் நம் ஆன்மீகத்தை உணர்ந்துவிடமுடியாது. ஒலியோ சொல்லோ பொருளோ சித்திரமோ நாம் அதை ஆழ்ந்தறியாமல் அதை சரியாகப் பயன்படுத்துவது முடியாது. ஆகவேதான் வரலாற்றுரீதியான ஆன்மீகம் என்று பி.கே.பாலகிருஷ்ணன் சொன்னார்

நாம் கையில்வைத்திருக்கும் சொற்களும் படிமங்களுமெல்லாம் பதினெட்டாம் நூற்றாண்டுவரை வரலாற்றின் பல ஓடைகள் வழியாக பல வழிகளில் பலவற்றைக் கரைத்துக்கொண்டு ஓடிவந்து சேர்ந்தவை. பதினெட்டாம்நூற்றாண்டுக்குப்பின் அவை பல்வேறு மதங்களாக அணைகட்டி கால்வாய்கள் வழியாக ஒழுங்குபடுத்தப்பட்டு அனுப்பப்பட்டு நம்மிடம் வந்துள்ளன. அவற்றை மேலும் மேலும் பின்னகர்ந்து சென்று அறியாமல் அவற்றுக்குள் நாம் நுழைய முடியாது.

நம்மிடமிருப்பவை எல்லாமே மேலிருந்து பார்க்கப்பட்டவை. மேற்பரப்பிலிருந்து எடுத்துத் தொகுக்கப்பட்டவை. கிளையிலிருந்தும் இலையிலிருந்தும் மலரில் இருந்தும் எடுக்கப்பட்டவை. அவை அளிக்கும் அர்த்தத்துக்கு மிகப்பெரிய எல்லை உண்டு. இவையனைத்தையும் அடியிலிருந்து பார்க்கமுடியும். வேரிலிருந்து அணுகமுடியும். அதற்கான ஒரு வழியை அயோத்திதாசர் அவர்களின் அணுகுமுறை திறந்துவைக்கிறது.

நான் நாட்டுப்புறப்பாடல்களை சேர்த்துவைப்பதில் ஆர்வமுடையவன். கடையில் ஒரு நாட்டுப்புறப்பாடலை வாங்கினேன். புலைச்சியம்மன் தோற்றம் பாட்டு. நாட்டுப்புறப்பாட்டு என்று சொல்லமுடியாது, எண்சீர்கழிநெடிலடி ஆசிரியமும் நடுவே பயின்று வருகிறது. அந்நூலை பிரசுரித்தவரின் தொலைபேசி எண் இருந்தது. அவரிடம் பேசினேன். அம்மன் அருள்வாக்கு சொன்னதனால் அந்தப் பாடலை பாடியதாகச் சொன்னார். புலைச்சியம்மன் ஒரு கிழவியில் சன்னதமாகி வந்து ‘என் சரித்திரத்தைப் பாடுடா’ என்று ஆவேசமாக ஆணையிட்டாளாம்.

என் சரித்திரத்தப்பாடு என ஆணையிடும் நூற்றுக்கணக்கான தெய்வங்கள் உறங்கும் மண் இது. அவர்களுக்கெல்லாம் இடமுள்ள ஒரு வரலாற்றை நாம் உருவாக்கியாகவேண்டியிருக்கிறது

[ 8-12-2012 அன்று மதுரை அயோத்திதாசர் ஆய்வுமையத்தின் சார்பில் நிகழ்ந்த கருத்தரங்கில் ஆற்றிய உரையின் எழுத்துவடிவம்]

பின்னூட்டம்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s