விஷ்ணுபுரம் பற்றி பா.ராகவன்

விஷ்ணுபுரம் பற்றி பா.ராகவன்

பா.ராகவன்

நன்றி சிலிகான் ஷெல்ஃப்

ஆங்கிலத்தில் மிக அதிகம் பேரால் வசை பாடப்பட்ட நாவல், சாங்சுவரி (Sanctuary). வில்லியம் ஃபாக்னருடைய நாவல் இது. உன்னதமான இலக்கியப் படைப்பு என்று ஒரு சாரார் இதைத் தொடர்ந்து சொல்லி வந்தாலும், இந்நாவலில் ஃபாக்னர் விதைத்திருக்கும் குரூரமும், வக்கிரமும், வன்முறையும் வெறியும் வேகமும் சராசரி மனிதர்கள் சகித்துக் கொள்ளவே முடியாதவை என்று இன்றும் சொல்பவர்கள் உண்டு. சாங்சுவரி நாவலைத் திட்டித் தீர்த்த அத்தனை பேருமே அதன் சுடும் உண்மையை எதிர்கொள்ள முடியாமல்தான் திட்டினார்கள். இப்படியெல்லாமுமா அப்பட்டமாக எழுதுவது என்று சபித்தார்கள். எல்லா சாபங்களையும் மீறி சாங்சுவரி சாகாவரம் பெற்றதொரு படைப்பானது சரித்திரம்.

தமிழிலும் இப்படி எல்லாத் தரப்பினராலும் வசை பாடப்பட்ட நாவல் ஒன்று உண்டு. சாங்சுவரிக்கு இல்லாத ஒரு சிறப்பு என்னவென்றால் இந்த நாவலைப் படித்தவர்களும் திட்டினார்கள், படிக்காதவர்களும், கேள்விப்பட்டதை வைத்துக்கொண்டு திட்டினார்கள்! இந்த நாவலைத் திட்டினால்தான் நமக்கு ஒரு இலக்கிய அங்கீகாரம் கிடைக்கும் போலிருக்கிறது என்று நினைத்துக் கூடத் திட்டினார்கள். திட்டுவதற்கு இதில் என்னென்ன அம்சங்கள் இருக்கின்றன என்று பூதக்கண்ணாடி வைத்துத் தேடித் தேடியும் திட்டினார்கள்.

Continue reading

2. விஷ்ணுபுரம் – வரலாறு

2. விஷ்ணுபுரம் – வரலாறு

எழுதியவர் :  விசு

சிலிகான் ஷெல்ஃப்

“வரலாறு என்பதே காவியம் உருவாக்குவதுதானே” – கோபிலபட்டர்

நம்மை ஆண்டு கொண்டிருக்கும் கழக ஆட்சியாளர்களின் துதிபாடிகள் அவர்களைப் பற்றி மிகையாகப் புகழ்கிறார்கள். சில நூற்றாண்டுகள் கழித்து நம் எதிர்கால சந்ததியினர் இந்தத் துதிகளைப் படித்து இவர்களை தமிழினம் காத்த தாரகை என்றும், செம்மொழி காத்த வீரன் என்றும் நினைத்தால்? நினைத்தாலே சிரிப்பாக இல்லை? சரி, இதே லாஜிக்கின்படி நாம் நம்மை ஆண்ட மன்னர்களைப் பற்றியும் புராணங்களைப் பற்றியும் யோசித்தால்? ஆழமான அதிர்ச்சி ஏற்படுகிறது. (நன்றி : நாஞ்சில் நாடன்). [ “இல்ல, அப்படி இல்ல.. நாம லெமூரியாவுல..” ]

இந்தியா புராணங்களின் விளை நிலம். எத்தனை கோடி கடவுள்கள் நம்மிடையே உண்டோ அத்தனை கோடி புராணங்கள், தொன்மங்கள் (Myths) உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவை திரைக்காவியங்களாகவும், தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்து நம் மனதை கொள்ளை கொண்டன. பின்னர், அவற்றில் நடித்தவர்கள் அரசியல்வாதிகளாக வந்து நம் கஜானாவை கொள்ளை கொண்டார்கள். புராணங்கள் கடவுளால் அருளப்பட்டவை, அவை ஆராய்ச்சிக்கு உரிவை அல்ல, அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள் என்று ஒரு தரப்பு. புராணம் எல்லாம் வெறும் கட்டுக்கதை, பிராமண தந்திரம், இவற்றையெல்லாம் அழித்தால்தான் நமக்கு விடிவு என்று இன்னோரு தரப்பு. இவைகளுக்குள் ஓயாத சண்டை, அதுவே ஒரு தனி காவியம். இந்த இரண்டிற்கும் மாற்றாக, நம் வரலாறை தொன்மங்களைக் கொண்டு ஆராயலாம் என்றார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். டி.டி. கோசம்பி மார்க்ஸிய முரணியக்கத்தை அடிப்படையாக வைத்து தொன்மங்களை ஆராய்ந்து இந்திய வரலாறை பற்றி எழுதிய நூல்கள் முக்கியமானவை. (youtube-இல் ஒரு டாக்குமெண்டரி இருந்தது, தற்போது காணவில்லை.) ஆனால் மார்க்ஸிய முரணியக்கத்தின் வரலாற்றுப் பார்வை முழுமையான பார்வை அல்ல, அதனால் சமூக பொருளியல் கட்டுமானத்தை விளக்கமுடியுமே தவிர, காந்தி போன்ற தனிமனிதரின் சிந்தனைகள் சமூகத்தின் கூட்டுமனத்தின் மேல் செலுத்திய ஆதிக்கம், அதன் மூலம் சமூகம் அடைந்த மாற்றம் போன்றவற்றை விளக்க முடியாது என்கிறார்கள் அறிஞர்கள். எது எப்படியோ, ஐதீகங்களை ஆராயவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.

Continue reading

3. விஷ்ணுபுரம் – தத்துவம்

3. விஷ்ணுபுரம் – தத்துவம்

எழுதியவர் :  விசு

சிலிகான் ஷெல்ஃப்

“நிறுவப்படும் தோறும் உண்மை பொய்யாகிறது. நிறுவப்படாத உண்மையை யாரும் அறிவதில்லை” – விஷ்ணுபுரத்தில் யாரோ.

இந்தப் பகுதியை எழுத எனக்குப் போதாமைகள் பல உண்டு. தெரிந்த வரை எழுதுகிறேன்.

மார்க்ஸிய தத்துவங்களின் தாக்கம் நாவலில் நிறையவே இருக்கிறது.

  1. “இந்த நகரம் மாற்றங்களை வெறுக்கிறது. எல்லா மாற்றங்களையும் அது ஐதீகங்களாக மாற்றி தன்னுள் இழுத்துக் கொள்ளும்.”
  2. தந்திர சமுச்சயம் விஷ்ணு வேறு, நாராயணன் வேறு என்கிறது.
  3. காட்டில் செங்கழல் கொற்றவையாக இருக்கும் தாய் தெய்வம், நிலத்திற்கு வரும்போது பத்தினித் தெய்வமாகிறது.
  4. உள்ளூர் பண்டிதர்கள், ஞானம் என்றால் வைகைக் கரை நாணல் போல என்று நினைத்துக் கொள்கிறார்கள். பார்த்தான் பாண்டியன், அக்னிதத்தனை குலகுருவாக ஏற்று, விஷ்ணுபுரத்தை கட்ட ஆனையிட்டு, மற்ற பாண்டியர்களின் அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டான்.

Continue reading

4.விஷ்ணுபுரம் – கவித்துவம், காவிய மரபு

4.விஷ்ணுபுரம் – கவித்துவம், காவிய மரபு

எழுதியவர் :  விசு

சிலிகான் ஷெல்ஃப்

“வெண்பனி படர்ந்த இமயமலைச் சிகரங்களை கண்டபோது, விஷ்ணுவின் விஸ்வரூபத்தைக் கண்டேன்” – சங்கர்ஷணன்

சிந்தனைகளில் கணிதம், நியாயம் (லாஜிக்) ஒரு முனை என்றால், கவிதை அதற்கு நேரெதிர் முனை. எதையும் தர்க்கரீதியாக ஆராயும் கணித மூளை உடையவர்களுக்கு, கவிதைகள் என்றுமே எட்டாக்கனி. மேலும் லாஜிக்கை ஒருவர் விளக்கி நாம் புரிந்து கொள்ள முடியும். ஆனால் கவித்துவத்தை விளக்கிப் புரிய வைக்க முடியாது, அது உணரப்பட வேண்டும் என்கிறார்கள். எனக்கு கவிதைகள் இப்போதைக்கு புரியாது. விஷ்ணுபுரம்  நாவலில் உள்ள கவித்துவத்தை கவிஞர்கள் யாராவது விளக்குவதுதான் சரியாக இருக்கும். இருப்பினும், காலத்தையும், இருப்பையும் பற்றிய கவிதையில் உள்ள இந்த வரிகள் அபாரமான மனக்காட்சியை அளிக்கிறது.

ஓய்வெனும் மரணம்
இரவெனும் இடைவெளி
ஒரு நூறு பாதங்கள் ஊன்றி
வானாகிக் கவிழ்ந்து
வெளியில் தலைதூக்கி
எண்ணற்ற முலை நுனிகளால்
அமுதூட்டும் கருணை.

தோத்திரப் பாடல்கள், வேதப் பாடல்கள், சித்தர் பாடல், பழங்குடிப் பாடல் என பல பாடல்கள், கவிதைகள் நாவலில் வருகின்றன.

Continue reading

5.விஷ்ணுபுரம் – மாய யதார்த்தவாதம்

5. விஷ்ணுபுரம் – மாய யதார்த்தவாதம்

எழுதியவர் :  விசு

சிலிகான் ஷெல்ஃப்

மிகைக்கற்பனை (fantasy), யதார்த்தவாதம் (realism), மாய யதார்த்தவாதம் (Magical Realism), நவீனத்துவம் (modernism), பின் நவீனத்துவம் (post-modernism) என்றால் ‘வைகைக்கரை நாணல் போல ஏதோவொன்று’ என்றுதான் நினைத்திருந்தேன். பல காலகட்டங்களைச் சேர்ந்த நாவல்களைப் படித்ததன் வாயிலாகவும், ஜெயமோகனின் இணையதளம் வாயிலாகவும் இப்போது ஓரளவு புரிகிறது. (‘மார்க்ஸிய வரலாற்று பொருள்முதல்வாத முரணியக்கம்’ தான் ரொம்ப படுத்துது :-)). இந்த இலக்கிய கலைச்சொற்ககளை, நான் புரிந்துகொண்டவரை கீழ்கண்டவாறு சொல்வேன்.

யதார்த்தவாதத்தில் கதை சித்தரிப்பு தர்க்கரீதியானது (லாஜிக் மீறாது) என்றால் மிகைக் கற்பனை அதற்கு நேரெதிர் (லாஜிக்கெல்லாம் யோசிக்கக்கூடாது). இவை இரண்டும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைவது மாய யதார்த்தவாதம். (மாய நிகழ்வுகள் யதார்த்தம் போலவே இருக்கும். இதை நம்பகத்தன்மையோடு சொல்வது எழுத்தாளனின் திறனைப் பொறுத்து). நவீனத்துவம் கதை சொல்லியின் குரலாகவோ, ஒரு காலகட்டத்தின் குரலாகவோ ஒலிக்குமென்றால், பின் நவீனத்துவம், பல தரப்புகளின், பல காலகட்டத்தின் குரல். எவ்வகையிலும் ஒற்றைப்படைத்தன்மை அற்றது.

Continue reading

6. விஷ்ணுபுரம் – மொழி

6. விஷ்ணுபுரம் – மொழி

எழுதியவர் :  விசு

சிலிகான் ஷெல்ஃப்

இந்நாவலின் நடை, நமக்கு பரிச்சயமான யதார்த்த உரையாடல்களின் நடை மற்றும் பரிச்சயமில்லாத எண்ண ஓட்டங்களின் விரிவான காட்சி சித்தரிப்புகளின் நடை என்று இரு வகைப்பட்டது. (விஷ்ணுபுரத்தில் முதல் ஐம்பது பக்கங்கள் இரண்டாம் வகையைச் சேர்ந்தது. அதனால்தான் அது கடினமாக இருந்தது என்று சொல்லியிருந்தேன். கொஞ்சம் பழகிய பின், அது ஒன்றும் கடினமில்லை.) விஷ்ணுபுரத்தை ஜாலியாக படிக்க முடியவில்லையே என்று யாரோ கேட்ட கேள்விக்கு ஜெயமோகன் அளித்த பதிலுடன் உடன்படுகிறேன். அதில் எனக்கு பிடித்த வரிகள்:

இலக்கியத்தின் நோக்கம் வாழ்க்கையை அறிதலே. வரலாறாக, ஆழ்மனமாக, இச்சைகளாக, உணர்ச்சிகளாக, தத்துவமாக, மதமாக விரிந்துகிடக்கும் வாழ்க்கையை அறிதல். தத்துவம் அனைத்தையும் தர்க்கப்படுத்தி அறிய முயல்கிறது. இலக்கியம் சித்தரித்துப்பார்த்து அறிய முயல்கிறது. அறிய விழைபவர்களே என் வாசகர்கள்.

இப்போது, இலக்கிய எழுத்திற்கும் vs பொழுதுபோக்கு எழுத்திற்கும் உள்ள அடிப்படையான வேறுபாடு பரவலாகவே எல்லோருக்கும் புரிந்திருக்கிறது. இலக்கிய ஆக்கங்கள் கவனம் பெறுவது போலவே, பொழுதுபோக்கு/கேளிக்கை எழுத்துக்களின் காலகட்டம் முடிந்து அதை சினிமா, தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் Youtube ஆக்கிரமித்து வருடங்கள் பல ஆகின்றன. சுஜாதா போல ஜாலியாக, interesting ஆக எழுத இன்னொருத்தர் இல்லையே என்று நினைத்து வருத்தப்பட்டிருக்கிறேன். யோசிக்கும்போது, அதற்கான தேவை இன்று வேறு வழிகளில் நிறைவேறிவிட்டது, இனி ‘interesting’ எழுத்தாளர்கள் தேவைப்படமாட்டார்கள் என்று தோன்றுகிறது. (ஆனால் தமிழ் சினிமாவில் சுஜாதா போல ஒரு interesting வசனகர்த்தா மிஸ்ஸாகிறார்).

Continue reading

7.விஷ்ணுபுரம் – கதை மாந்தர்கள்

7.விஷ்ணுபுரம் – கதை மாந்தர்கள்

எழுதியவர் :  விசு

சிலிகான் ஷெல்ஃப்

விஷ்ணுபுரத்தில் இருநூறு கதை மாந்தர்களாவது வருகிறார்கள். முதல் பகுதியில் வரும் கதை மாந்தர்கள் கடைசி பகுதியில் தொன்மங்களாக வருகிறார்கள். (பிரம்மராயர், சித்திரை…); இரண்டாம் பகுதியில் வரும் கதை மாந்தர்கள் முதல் பகுதியில் தொன்மங்களாகவும், மூன்றாம் பகுதியில் பெரும்பாலும் மறக்கப்பட்டுவிடுகிறார்கள் (அஜிதன்); கவனமாகப் படித்தாலன்றி, இவற்றை நாம் தொடர முடியாது. ஒவ்வொருவரும் அவர்கள் சில பக்கங்களே வந்தாலும், மிக நுண்மையாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். சிலர் யுகங்கள் தாண்டி வேறு பெயர்களில் மீண்டும் வருகிறார்கள். (மறுபிறவி?) கதை மாந்தர்கள் மட்டுமல்லாது நிகழ்வுகளும் அந்தந்த காலத்திற்கேற்ப திரிபடைகின்றன. நாவலில் எண்ணற்ற பண்டிதர்கள், கவிஞர்கள், குரு-சீடர்கள், யானைகள், தெருக்கள், சிலைகள் வந்தாலும், ஒன்றுடைய சித்தரிப்பு போல இன்னொன்று இல்லை. ஒரு உதாரணம்: கடலூர் சீனு ஜெயமோகனுக்கு எழுதிய கடிதத்தில் பொழுது புலர்வதை விவரிக்கிறார். (எப்படியெல்லாம் வாசிக்கறாங்கப்பா!!)

Continue reading

விஷ்ணுபுரம் ஆச்சரியங்கள்

விஷ்ணுபுரம் ஆச்சரியங்களை அளிக்கத் தவறுவதே இல்லை!

எழுதியவர் R.கோபி

R.கோபி தளம்

விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல் நாவல்களைப் படித்துக் கொண்டிருந்தபோது, அவற்றைப் பற்றிய பதிவுகள் எழுதியபோது எனக்குத் தோன்றிய ஒரே விஷயம் இதுதான். இது முழுமையான வாசிப்பு இல்லை. இந்த நாவல்களில் மேலும் பல விஷயங்கள் உள்ளன. காலப்போக்கில் ஒவ்வொன்றாக எனக்குப் பிடிபடலாம். இவை வாலியைப் போல வரம் வாங்கி வந்தவை. நம் பலத்தில் பாதியை எப்போதுமே எடுத்துக்கொள்பவை. எந்தக் காலக் கட்டத்திலும் நூறு சதவீதம் புரிந்துகொண்டு விட முடியாது.

வேரை மறுத்தலும் சார்ந்திருத்தலும்
சமீபத்தில் புதுக்கோட்டை சென்றுவந்தேன். அப்பாவின் சொந்த ஊர். நாங்கள் பிறக்குமுன் அப்பா கும்பகோணம் வந்துவிட்டார். பின்னர் தொடர்புகள் அற்றுப்போய் இப்போது அங்கே யார் இருக்கிறார்கள் என்பதுகூடத் தெரியாமல் இருக்கிறது. வருடத்திற்கு ஒருமுறையாவது குலதெய்வமான தண்டாயுதபாணி குடிகொண்டிருக்கும் குமரமலைக்குப் போய் வந்திருக்கவேண்டும். பல்வேறு நிர்ப்பந்தங்கள் காரணமாகக் கும்பகோணத்திற்கு அருகிலிருக்கும் சுவாமிமலையிலேயே எல்லா வேண்டுதல்களையும் செய்து வந்துகொண்டிருந்தோம்.

Continue reading

விஷ்ணுபுரம் – R.கோபி

விஷ்ணுபுரம்

எழுதியவர் R.கோபி

R.கோபி தளம்

ஜெமோவின் படைப்புகளைப் படிக்கச் சொல்லித் தொடர்ச்சியாக என்னை வற்புறுத்துபவரும், மணிக்கணக்கில் என்னிடம் விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல் நாவல்கள் குறித்துத் தொலைபேசியில் உரையாடுபவருமான நண்பர் ஜெய் கணேஷிற்கு இந்தக் கட்டுரையைச் சமர்ப்பிக்கிறேன்.
*
இந்தக் கட்டுரையை விஷ்ணுபுரம் நாவல் பற்றிய என்னுடைய முழுமையான வாசிப்பனுவம் என்ற வகையில் பார்க்கலாகாது. தொலைவில் தெரியும் மலைச் சிகரத்தைப் காணும்போது மனதிற்குள் அதைப் பற்றி ஒரு சித்திரம் எழும். அது நிச்சயம் முழுமையானதன்று. நுட்பமான விஷயங்கள் தூரத்திலிருந்து நிச்சயம் கண்களுக்குப் புலப்படாது. அதற்கொப்பானதுதான் இந்தக் கட்டுரை. ஒருவேளை நான்கைந்து முறை திரும்பத் திரும்ப வாசித்தால் இந்த நாவலைப் பற்றிய தெளிவு ஓரளவிற்காவது கிடைக்கும். நாவலிலேயே வருவது போல விஷ்ணுபுரத்தின் ராஜகோபுரம் முப்பது நிலைகளுக்கு மேல் சாமான்யர்களுக்குத் தெரிவதில்லை.

படித்த தருணத்திற்கும் அதைப் பற்றி எழுதும் தருணத்திற்கும் இடையேயுள்ள உள்ள இந்தக் குறைந்த நேரத்திலும் சித்திரம் கலைந்து புதிதாக வேறொன்று தோன்றிவிடுகிறது.
*
நாவலைப் படிக்கும்போதோ அல்லது படித்து முடித்தவுடனோ ‘பிரமாண்டம்’ என்று ஒருமுறையேனும் வாசகர் பிரமிப்படையவில்லை எனில் அந்த வாசகர் பொய் சொல்கிறார் என்று அர்த்தம்.

விஷ்ணுபுரம் கோவிலின் ஒரு பகுதி எப்போதுமே பாழடைந்திருக்கும் என்பதாக வருகிறது. கோவிலின் பிரமாண்டத்தை இது மறைமுகமாகச் சுட்டுகிறது. முழுக்கோவிலையும் பொலிவுடன் வைத்திருப்பது மனித முயற்சிக்கு அப்பாற்பட்ட விஷயம்.

Continue reading

ஜெயமோகனின்-“விஷ்ணுபுரம்”

எழுதியவர் : RV

சிலிகான் ஷெல்ஃப்

விஷ்ணுபுரத்தை பல விதத்தில் படிக்கலாம். அமைப்புகளின் குரூரம், தொன்மங்கள் தோன்றி மறையும் விதம், ஹிந்து தத்துவங்களைப் பற்றிய அறிமுகம் என்றெல்லாம் படிக்கலாம். ஒரு fantasy என்ற விதத்தில் கூட படிக்கலாம். படிக்கும்போது இப்படி பல கூறுகள் எனக்குத் தெரிந்தது. ஆனால் உண்மையைச் சொல்லப் போனால் பட்டிக்காட்டான் மிட்டாய்க்கடைக்கு போன மனநிலையில்தான் நான் இருந்தேன். பக்கத்துக்குப் பக்கம் ஏதாவது கவனத்தைக் கவர்ந்தது. பல சமயம் மேலே படிப்பதை நிறுத்திவிட்டு இரண்டு நிமிஷம் மூச்சு வாங்கிக்கொண்டு படித்ததை ஒரு மாதிரி absorb செய்துகொண்டு பிறகுதான் மேலே படிக்கவே முடிந்தது. ஒரு மாபெரும் ஓவியம் அல்லது சிற்பத்தைப் பார்க்கும் உணர்வு தோன்றிக் கொண்டே இருந்தது. மாமல்லபுரத்தில் பகீரதன் தவம் பார்த்திருப்பீர்கள். விவரங்களைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் இல்லையா? குயர்னிகா என்ற ஓவியத்தைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். எவ்வளவு முறை பார்த்தாலும் புதிது புதிதாக ஏதாவது கண்ணில் பட்டுக் கொண்டே இருக்கும். பார்த்து முடித்துவிட்டோம் என்ற எண்ணமே எனக்கு வருவதில்லை. அதைப் போலத்தான் இந்தப் புத்தகத்தைப் பற்றியும் உணர்ந்தேன்.

சுருக்கமாகச் சொன்னால் இந்தப் பதிவு விமர்சனமோ புத்தக அறிமுகமோ இல்லை. இங்கே கதைச்சுருக்கம் எல்லாம் எழுதப் போவதில்லை. வழக்கமாக பத்து வரியில் கதைச்சுருக்கம் எழுதுவது போல இதற்கு எழுதிவிடவும் முடியாது. படித்தபோது எனக்கு ஏற்பட்ட பிரமிப்பை பதிவு செய்யும் முயற்சி, அவ்வளவுதான்.

Continue reading