8. விஷ்ணுபுரம் கதைக்களம் vs கம்போடியா/ தாய்லாந்து – ஓர் ஒப்பீடு
எழுதியவர் : விசு

சிலிகான் ஷெல்ஃப்
விஷ்ணுபுரம் என்றொரு ஊர் இருந்தால், அது எந்த ஊராக இருக்கும்? காசியா? ஶ்ரீரங்கமா? திருவட்டாரா? அங்கோர் வாட்டா? பதில் எல்லாம்தான். கிட்டத்தட்ட விஷ்ணுபுரம் நாவலை, இந்து/பௌத்த மதங்கள் பரவிய அனைத்து நிலங்களுக்கும் பொருத்திப் பார்க்கலாம். ஒரு ஒப்பீட்டிற்காக, நாவலின் கதைக்களத்தை கம்போடியாவில் பொருத்திப் பார்ப்போம். (சமீபத்தில், வரலாறில் ஆர்வமுள்ள இரு நண்பர்களுடன் கம்போடியாவிற்கும் தாய்லாந்திற்கும் பத்து நாட்கள் சென்று வந்தேன். படங்கள் இங்கே. அருகருகே விஷ்ணுபுரத்தையும், பின் தொடரும் நிழலின் குரலையும் நேரில் கண்டது போல இருந்தது.)
கம்போடியாவில் பல நூற்றாண்டுகள் வைதீக மதம் தழைத்திருந்தது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். பதிமூன்றாம் நூற்றாண்டுவரை வைதீகம், பின்பு ஐம்பதாண்டுகளுக்கு பௌத்தம், மீண்டும் வைதீகம், பின்பு பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து பௌத்தம் ஓங்கியிருக்கிறது. பழைய கம்போடியாவில் அரச அதிகாரத்தின்/மதத்தின்/தத்துவத் தளத்தின் மொழி சம்ஸ்கிருதம். மக்களின் மொழி குமெர். குமெரையும், வடமொழியையும் எழுத அவர்கள் பயன்படுத்திய எழுத்துரு பல்லவ கிரந்தம். வைதீகம் எப்படி அங்கே வந்தது? கம்போடியர்களின் தொன்மத்தின்படி, சோமா என்ற நாக வம்சத்து இளவரசியும், கௌடின்யர் என்ற பிராமணனும் காதல் வயப்படுகிறார்கள்; பின்பு அவர்களுக்கு பிறந்தவர்கள்தான் கம்போஜ தேசத்தை சேர்ந்தவர்கள். (விஷ்ணுபுரத்தில் செம்பி-அக்னிதத்தன் கதை). ஆங்கில, பிரெஞ்சு ஆய்வாளர்கள், இந்து மதம் வணிகர்களின் மூலம் வந்தது என்கிறார்கள். இடிபாடுகளில் சூழ்ந்திருந்த அங்கோர் கோவில்களை, மீட்டெடுத்து புனரமைத்தது ஐரோப்பிய அறிஞர்கள். அதற்காக அவர்களை பாராட்டத்தான் வேண்டுமென்றாலும், அவர்களது ஆய்வுகளை நான் ஏற்கவில்லை. குமெர்களின் இலச்சினை நாகம். ஒரு சில கோவில்களைத் தவிர, பெரும்பாலானவற்றில் உள்ள சிலைகள் நாகங்களும், யட்சிகளும்தான் (அப்சரஸ்).
Continue reading →